சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Sept 2015

கோவில் வருமானம் முக்கியம்.....கோவில் குளங்கள் ?

மிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுமார் 33,000 கோவில்கள் உள்ளன. இந்தியாவில் கோவில் மாநிலம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு ஆன்மிகத்தின் வேர்களாக தமிழகம் திகழ்கிறது. சுமார் 1586 கோவில்களில் கோவில் தீர்த்தம், திருக்குளங்கள் எனப் பெயர் பெற்ற குளங்கள் சுமார் 2359 உள்ளன. 

கடவுள் இல்லை என்று சொல்பவரின் வீட்டுக் கிணற்றுக்கும், ராட்சச குழாய் அமைப்பிற்கும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் நீராதார அமைப்பாக பாதுகாத்து வருவது திருக்குளங்களே என்றால் மிகையாகாது. 


பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்த பல்வேறு அந்நியர்கள் படை எடுப்பு , இயற்கைச் சீற்றத்திற்கு பின்னரும் கூட தலை நிமிர்ந்து நிற்கும் நம் திருக் கோவில்கள்,  தெய்வத்தின் பலம் என்ன என்பதை  நிருபித்துக் காட்டி வருகிறது.  

உண்டியலின் மேல் கண்காணிப்பு காமிரா வைத்து கண்காணிக்கும் அரசு, பல லட்சம் பேரின் தாகம் தீர்க்கும் நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கு காரணமான தீர்த்தக் குளங்களை   கண்டுகொள்ளாமல் போய் விட்டது. கோவில் குளங்களின் முன் உண்டியல் வைத்தால் மட்டுமே, கோவில் குளங்களும் அரசின் கண்காணிப்பில் வரும் என்றே தோன்றுகிறது. கோவில் மூலம் கிடைக்கும்  நில குத்தகைப்  பணம், உண்டியல் வருமானம்,  நன்கொடைகள் , கடை வாடகை போன்றவற்றின் ஒரு பகுதியை கோவில் குளங்களுக்கு செலவு செய்திருந்தால் கூட இன்றைக்கு குளங்கள் நம்மை வறட்சியில் இருந்து காத்திருக்கும்.  

கோபுரத்திற்கு வர்ணம் பூசவும், பராமரிப்பிற்கும், கும்பாபிஷேகத்திற்கும் பல லட்சம் கணக்கு காட்டும் அரசு அதிகாரிகள், குளங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையானது.

தமிழகம் நீர் நிலைகளின் சொர்க்க பூமி. கோவில்களில் கூட குளங்களை அமைத்து நீரின் மகத்துவத்தை உணர்த்தி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது அரசை பற்றி கணித்த தீர்க்கதரிசிகள்  எப்படியும் தமிழக அரசு ஏரி, கண்மாய்களை  அரசு கட்டடமாக மாற்றும் எனக்  கணித்து கோவில்களில் குளத்தை அமைத்திருக்கிறார்கள்.  பல லட்சம் நீர் நிலைகளின் இருப்பிடமாக இருந்த தமிழகத்தில் இன்று 39,000 நீர் நிலைகள் மட்டுமே இருக்கின்றன. அதுவும் கருவேல மர ஆக்கிரமிப்பிலும்,  எப்போது கண்மாயை    பேருந்து நிலையமாக   மாற்றலாம் அல்லது அதில் அரசு  கட்டடம் கட்டலாம் என்ற அரசின்  'தீவிர கண்காணிப்பில்' உள்ள நீர் நிலைகள் நிம்மதி இல்லாமல் தவித்து வருகின்றன.   
கோவில் குளங்கள் இருந்தும் அவற்றில் நீர் இல்லாமல் வறண்டு கிடப்பதும், கிரிக்கெட் விளையாடும் மைதானமாகவும்,  கோவிலில் கடை வைத்திருப்பவர்கள் கூட  குப்பை கொட்ட சிறந்த இடமாகவும், சிறு நீர் கழிக்கும் இடமாகவும் அசுத்தப்படுத்தி வருவது  பல பிறவிக்கும் தொடரும் பாவமாகும். சில கோவில் குளங்களில் நீர் இருந்தாலும், அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அசுத்தமும், இ.கோலி, வைரஸ் போன்ற கிருமிகளின் ஆதிக்கத்தால் குளங்கள் பயனற்றும் போய் விட்டன. குளத்தில் குளித்தால் பாவம் போகும் என்ற ஐதீக வாக்கு நடக்குமோ என்னவோ. ஆனால் கட்டாயம் தோல் வியாதிகள் வரும் என்று சொல்லுமளவிற்கு மோசமான நச்சுக்கள் கலந்துள்ளன.

கட்சி மாநாடு என்ற பெயரில் பல கோடிகள் செலவு செய்கிறார்கள். அதே பணத்தில் கோவில் குளங்களை தூர் வாரினால் புண்ணியமும், மக்களுக்கு பயனும், கட்சிக்கு நற்பெயரும் கிடைக்கும். எங்கோ இருக்கும் மக்கள் நடமாட்டம் இல்லாத, யாரும் எளிதில் சென்று பார்க்க முடியாத வனப்பகுதியில் பண்ணைக் குட்டைகள்  அமைக்க  பல லட்சங்கள் செலவிடும் அரசு, கண்முன்னே தெரியும் திருக்குளங்களை தூர் வாரி நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்யலாமே?

திருக் குளங்களின்  இந்த அவல நிலைக்கு மக்களும், அரசு அதிகாரிகளும் ஓர்  காரணம். குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாயை அடைத்து விடும் "பக்தியுள்ள நன்றிக்  கடன் " செய்யும் மனிதர்களும், அந்த மனிதர்களை கண்டுகொள்ளாமல் சட்டத்தின் முன் நிறுத்தாமல் இருக்கும் அலட்சியமான அரசு அதிகாரிகளுமே  காரணம். பக்தர்கள் குடிநீர் குடிக்க வரும் தொட்டியில் கூட கயிறு, சங்கிலி கட்டி குடிநீர் எடுக்க வைக்கும் அதிகாரிகள் பல கோடி லிட்டர் நீர் சேகரிக்கும் குளங்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்க முடியாமல் இருப்பது அரசுப்பணியின் லட்சணத்தை காட்டுகிறது.
திருக்குளங்கள் பாதுகாப்பிற்கு.....

சுற்றுலாத் துறைக்கு பல கோடி திட்டம் தீட்டும், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விளம்பரம் செலவு செய்யும் அரசு, கொஞ்சம் மனது வைத்தால் கோவில் குளங்களை தூர்வாரி, நீர் நிரப்பி  அதிலேயே படகு சவாரி  மூலம் வருமானம் ஈட்ட முடியும். நீதிமன்றம் தானாகவே திருக்குளங்களின் அவல நிலையை நினைத்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும். 

ஆக்கிரமிப்பில் உள்ள வரத்துக் கால்வாய்கள் தூர் வாரப்பட வேண்டும். கோவிலின் மேல்தளத்தில் விழும் மழைநீரை நேரடியாக கோவில் குளங்களில் தேக்க வசதி வேண்டும். குளங்களை ஆழப்படுத்த , அசுத்தம் செய்யாமல் இருக்க நிரந்தர திட்டம் கொண்டு வர வேண்டும். பொது மக்களில் பலர் குளத்தை தூர் வார யாரிடம் அனுமதி பெறுவது, நடைமுறை என்ன என்பதை விபரமாக விளம்பரம் செய்தால் குளங்கள் கண்களுக்கு அழகாகுமே.

மதுரை தெப்பக் குளம், திருவாரூர் குளம், மகாமகக் குளங்களை தூர் வாரி,  மழை நீர் சேமிக்கப்படுவதுடன்  அங்கும் சுத்தகரிப்பு செய்யும் குடிநீர் நிலையம்  அமைத்து, தண்ணீரை குறைந்த விலைக்கு  அல்லது இலவசமாக கொடுக்க வேண்டும். மாநகராட்சியில், விவசாய பொறியியல் துறையில் உள்ள தூர் வாரும் எந்திரங்களை வைத்தே கோவில் குளத்தை தூர் வாரலாம்.

மழை வேண்டி கோவில்களில் ஜலகண்டேஸ்வரருக்கு யாகம் நடத்துவது போல மழை  நீரை சேகரிக்கவும், திருக்குளத்தை தூர் வாரவும் சிறப்பு யாகம் நடத்தினால்தான் அரசு மனம் வைக்குமோ.
"சிவன் சொத்து குல நாசம்,பெருமாள் சொத்து பெருத்த நாசம்"  என்பது கோவில் சொத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு மட்டுமல்ல.....கோவில் சொத்துக்களான நீர் நிலைகளை பாதுகாக்கத் தவறியவர்களுக்கும்தான்.

No comments:

Post a Comment