சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Sept 2015

வெள்ள துரையா... வெள்ளக்கார துரையா?

போலீசை பற்றி யார் அநாகரீகமான முறையில் பேசினாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஒழுக்கமான காவல் துறையை தவறாகப் பேசினால் கட்டாயம்  நீதிமன்றத் தண்டனை கொடுத்தே தீர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தேதுமில்லை.
  
அதே நேரத்தில் சக பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு, லாக் அப் பலாத்காரம், வேண்டுமென்றே விசாரணையின் போது துப்பாக்கியால் சுடுவது என அநாகரீகமாக நடந்து கொள்ளும் போலீசார் பற்றி உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் பத்திரிகைகள், நீதிமன்றங்கள், நேர்மையான காவல் துறை உயர் அதிகாரிகள், எப்படி நாகரீகமாக காவல் துறையை பற்றி சொல்ல முடியும்?

மக்கள் அடையாளம் காட்டும் நேர்மை இல்லாத போலீசை உங்களால் கைது செய்து சிறையில் தள்ள முடியுமா என்பதே கேள்விக்குறியதாக இருக்கும் போது, போலீஸ் மீதான    விமர்சனத்திற்கு சிறை என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. பிடிக்காதவர்களை சிறைக்கு அனுப்பவும், பிடித்தவர்களை வெளியே விடச் சொல்லி சிபாரிசு செய்யும் அரசியல்வாதியை சிறைக்கு அனுப்புவேன் எனச் சொல்ல முடியுமா?

சுடுவேன், கைது செய்து சிறைக்கு அனுப்புவேன் என நேர்மை அற்ற போலீசை, சமூக விரோதிகளை, அரசியல்வாதிகளை பார்த்து சொல்லுங்கள்... சமூக நோக்கத்துடன் நேர்மையான விமர்சனம் செய்யும் அப்பாவிகளைப் பார்த்து சொல்லாதீர்கள். உங்கள் வீரம் இலங்கை கடற்படைக்கு எதிராகவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் இருக்கட்டும். உள்ளூர்  அப்பாவிகளிடம் வேண்டாம்.

நேர்மையான காவல் அதிகாரி, போலீசார் லஞ்சம் வாங்கினால் என்னிடம் சொல்லுங்கள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த காவலர்களை சிறைக்கு அனுப்புகிறேன், அடாவடி அரசியல்வாதியைப் பற்றி சொல்லுங்கள், ஊழல் செய்யும் அரசியல்வாதியை அடையாளம் காட்டுங்கள் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறேன், ஜாதி மத மோதலை ஏற்படுத்துபவர்களை என்னிடம் சொல்லுங்கள், குற்றவாளிக்கு அதரவாக பேசும் அரசியல்வாதியை பற்றி ஆதாரத்துடன் சொல்லுங்கள் சிறைக்கு அனுப்புகிறேன்    என்று சொல்லி இருந்தால் ஒட்டு மொத்த தமிழகமும் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

நேர்மையான போலீசை தவறாகப் பேச வேண்டும் என்ற வரம் யாரும் வாங்கவில்லை. தவறாக நடக்கும் அனைத்து துறைகளையும் மக்கள் தவறாகத் தானே பேசுவார்கள்.
காட்டில் வாழும் மிருகங்களை வாழ வைக்க வீரப்பனுக்கு முடிவு கட்டிய வெள்ளத்துரை, நாட்டில் வாழும் மக்களை வாழ வைக்க காவல் துறையில் லஞ்சம், அடாவடி அரசியல், ரௌடிகளின் ஆதிக்க  அரசியலுக்கு முடிவு கட்டாமல், காவல்துறை பற்றிய விமர்சனத்திற்கே சிறைக்கு அனுப்புவோம் என்று மக்களை மிரட்டுவது போல  பேசுவது துரதிஷ்டமே.  

அநாகரீகமாக திண்டுக்கல் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த எஸ்.ஐ. மீது  நாகரீகமான விமர்சனத்தை எதிர்பார்க்க முடியுமா? கண்பார்வை இல்லாதவர்களை சுடுகாட்டில் இறக்கி விட்ட காவல் துறையை யார் தான் விமர்சனம் செய்யாமல் இருக்க முடியும்? விமர்சித்தால் சிறை அனுப்புவேன் என்று சொன்னால், நாளை நீதிமன்றம் காவல் துறையை விமர்சித்தால், இதே நிலை நீதிமன்றத்திற்கும் வருமா? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் போலீஸ் உயர் அதிகாரி நடு நிலையோடு செயல்படாமல், ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் செயல்பட்டதை  மக்கள் எப்படி விமர்சிக்காமல் இருப்பார்கள்?

காவல் துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களது தற்கொலைக்கான உண்மைக் காரணம் அறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிறையில் தள்ள முடியுமா?

நீங்கள் சட்டம் ஒழுங்கைக் காக்க யாரையாவது சுட்டுக் கொல்ல  வேண்டும் என்று நினைத்தால் இந்த நாட்டில் துப்பாக்கி குண்டுகள்   சத்தம் ஓயாது. பல கோடிப்பேரின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவல் துறை ஒழுக்கச் சீரழிவை தடுத்து காவல் துறையின் புகழை நிலை நிறுத்துவது, பல கோடி ரௌடிகள் மேலும் உருவாகாமல் தடுத்து நிறுத்த உதவும். துப்பாக்கி தூக்கி காவல் துறை புகழை நிலைநாட்டுவதை விட, நாம் இருக்கும் துறையை சுத்தம் செய்தாலே விமர்சனங்கள் குறைந்து போலீஸ் மீது மதிப்பு கூடும்.


'அறம் செய விரும்பு' திட்டத்தில் களத்தில் 100 இளைஞர்கள் உள்ளது போல, லஞ்சம் ஒழிய 100 பேரை போலீஸ் துறையில் ஒன்று சேருங்கள். சமூகத்தில் நேர்மையானவர்கள் ஒன்று சேர்ந்தால் விமர்சனத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் விடிவு காலம் உண்டு.   போலீஸ் சங்கம் அமைக்கத்தான் தடை உள்ளது நேர்மையானவர்கள் ஒன்று சேர, சாதனை செய்ய தடை ஏதுமில்லை. அரசியலுக்கு, லஞ்சத்திற்கு அடிபணியாத நேர்மையான   போலீசுக்கு மக்கள் என்றும் உங்கள் நண்பன் தான்.


No comments:

Post a Comment