சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 May 2015

அமேசானின் மூன்று நாள் சம்மர் சேல்ஸ்: எதிர்கால விற்பனை உத்தியா?

-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 'கிரேட் இந்தியன் சம்மர் சேல்ஸ்' என்ற பெயரில் மூன்று நாள் ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விற்பனை துவங்க உள்ளது. இது ஏற்கனவே ஃப்ளிப்கார்ட் நடத்திய 'பிக் பில்லியன் டே' போன்ற விற்பனைதான் என்றாலும், இதிலும் ஒரு புதிய விற்பனை உத்தியை கையாண் டுள்ளது அமேசான். 

மிந்த்ரா நிறுவனம் ஏற்கெனவே இணையதள சேவையை நிறுத்திவிட்டு, ஆப்ஸ் மூலம் மட்டும் விற்பனையை தொடர்ந்து வருகிறது. இதேபோல் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் ஆப்ஸ் மூலம் மட்டும் பொருட்களை விற்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.


மொபைல் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்பதாலும் தங்களது விற்பனையை ஆப்ஸ்கள் மூலம் தொடர முடிவு செய்து அதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஃப்ளிப்கார்ட் ஆப்ஸ் பர்சேஸ் டே என்றெல்லாம் ஆஃபர்களை வழங்கி, தங்களது ஆப்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தியது.

அமேசான் சம்மர் சேல்

இந்நிலையில் அமேசான் நிறுவனமும் மற்ற நிறுவனங்களுடனான போட்டியை சமாளிக்க கிரேட் இந்தியன் சம்மர் சேல்ஸ் என்ற பெயரில் மூன்று நாள் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரை நீங்கள் ஆப்ஸ் மூலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி ஸ்டேட் பேங்கின் கார்டை பயன்படுத்தி கூடுதல் 15 சதவிகித கேஷ் பேக் ஆஃபரை ஆப்ஸ் பயன்பாட்டாளர்கள் பெறலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. இந்த ஆஃபரை பிரபலபடுத்த சமூக வலைதளங்களில் #Whatteydeal என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தி வருகிறது.

விற்பனை உத்தியை கையாளுகிறதா அமேசான்?

மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே ஆப்ஸை பிரபலப்படுத்தி ஆப்ஸில் மட்டுமே இனி விற்பனை செய்ய போகிறோம் என கூறிய நிலையில் அமேசான் இந்த ஆஃபர் மூலம் தன் ஆப்ஸை பிரபலப்படுத்தியது மட்டுமின்றி இணையதளம் மூலமாகவும் தங்களது சேவையை தொடருகிறது. இந்த ஆஃபரில் ஆப்ஸ் மூலம் வாங்குபவருக்கு 15 சதவிகிதம் கேஷ் பேக் ஆஃபர் வழங்கியது போல், இணையதளம் மூலமாக வாங்குபவருக்கு 10 சதவிகித கேஷ் பேக் ஆஃபரை வழங்கியுள்ளது அமேசான். 

பிற்காலத்தில் ஆப்ஸ் தான் எல்லாம் எனும் போது ஆப்ஸிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் வாடிக்கையாளர் விவரங்களை பெறவும் இந்த ஆஃபர் உதவியாக இருக்கும் என்ற உத்தியில் இந்த ஆஃபரை அணுகியுள்ளது அமேசான். உங்களது இணைய வேகம் எந்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ப இயங்கும் விதத்தில் இந்த ஆப்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பது இதில் கூடுதல் தகவல்.

இந்த ஆப்ஸை ஒருவர் டவுன்லோட் செய்து விட்டால் அவருக்கு தொடர்ந்து இந்த ஆப்ஸிலிருந்து பொருட்களுக்கான தவல்கள் வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளரை தொடர்ந்து இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தோடு இணைப்பில் வைத்திருக்க முடியும் என்பதே இந்த நிறுவனங்களின் கணிப்பு.



மூன்று நாட்கள் ஆஃபரில் விற்பனை மற்றும் இன்றி மிகப்பெரிய எதிர்கால விற்பனை உத்தியையும் கையாண்டுள்ளது அமேசான். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர் “அவர்கள் எத்தனை முறை எங்களுக்கு ஆஃபரை அளித்தாலும் நாங்கள் தேவை இருந்தால்தான் வாங்குவோம்" என்கின்றனர். 

இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்த ஆஃபர் இம்பல்ஸிவ் பர்சேஸை அதிகரிக்கும் என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளன.



மூடப்பட்ட திரை அரங்கங்களும், மூழ்கிப்போன தயாரிப்பாளர்களும்!

தோ டூ வீலரில் போறாரே, எங்கோ பார்த்த மாதிரி இருக்குதே 'என காயலான் கடைக்கு  போகும் நிலையில்  உள்ள டூ  வீலரில்   சிலரை சென்னையில் பார்த்தீர்கள் என்றால் அவர் படம் எடுத்து பிச்சை  எடுக்கும் நிலைக்கு வந்து விட்ட சில தயாரிப்பாளர்கள் ஆக  இருக்கக் கூடும். தயாரிப்பாளர்களின் இன்றைய நிலைக்கு ஆஸ்கார்  ரவிச்சந்திரனின் சொத்து முடக்கம் செய்தி ஒரு ஆதாரம்.

ஏவிஎம் ,சூப்பர் குட் பிலிம்ஸ் போன்றவை இன்று எங்கு உள்ளன என தேடி பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பல திரை அரங்குகள்`மூடப்பட்டு விட்டன.சென்னையில் பழமையான தியேட்டர்கள் மூடப்பட்டு வணிக வளாகங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன  வசந்தி, நடராஜ், காமதேனு, பைலட், ஆனந்த், பாரகன், ராஜ குமாரி, நாகேஷ் என 50-க்கும் மேற்பட்ட பிரபலமான தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.  


திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்டார் தியேட்டர் மூடப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஜெயலலிதா குழந்தையாக இருந்தபோது தாய் சந்தியாவுடன் இந்த தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததாக சொல்லி 'பெருமை'ப்பட்டுக்கொள்வார்கள் இதன் ரசிகர்கள். 
 
இனி படம் எடுத்தால் திருவோடுதான் என அறிந்து  காலமாற்ற சுனாமியால் பாதிக்கப்படாத சூத்திரம் தெரிந்த  சில தயாரிப்பாளர்கள், சில இயக்குனர்கள்  படம் எடுக்காமல், அப்பா கேரக்டர்களிலும், காமெடி கேரக்டர்களிலும் நடித்து தங்களை காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்களில் டைரக்டர் சுந்தர்ராஜன், அன்பாலயா பிரபாகரன், மனோபாலா போன்றவர்களை குறிப்பிடலாம். 

அனைத்து திறமைகளையும் கொண்ட சிலர் படம் எடுக் காமல் 'அம்மாடி ஆத்தாடி' என டிவி க்களில் தோன்றி சில்லறை தேத்தி கொண்டும் ,சினிமாவில் கெஸ்ட் ரோல் பாடல்களில் காசு பண்ணிகொண்டும் காலத்தை ஓட்டுகின்றனர்.

சினிமா உலகின் இன்றைய மோசமான நிலைக்கு  காரணம் cd ,dvd என காரணம் சொல்லப்பட்டாலும், இவையெல்லாத்திற்கும் காரணம்  கால மாற்றம். இப்போது 45 வயதுக்கு மேற்பட்டோர் தியேட்டருக்கு போவதில்லை. இளைய தலைமுறைதான் ஒவ்வொரு படத்தின் ஓட்டத்தையும் நிர்ணயிக்கிறார்கள்.  

அவர்கள்  உதிர்க்கும் 'நல்லா இல்ல , நல்லாவே இல்லை 'முதல் பாதி சப்ப - இரண்டாம் பாதி மொக்க '. ''இசை இம்சை ' -இப்படி பல கமெண்ட்களும் 'பாக்கெட் மணிக்கு பங்கம் -பணத்தை  வேஸ்ட் பண்ணாதீங்க ' என்ற இலவச அட்வைஸ்களாக முகநூல், டிவிட்டர்.  வாட்ச் அப் களில் முன்கூட்டியே  எச்சரிக்கை மணி அடித்துவிட,  பலர்  படம் பார்ப்பதில்லை . 

அவர்கள் மேல் சினிமாக்காரர்கள்  பாய்வதில் அர்த்தமில்லை. அடிக்கும் கமெண்ட்களும் பெரும்பாலும்  சரியாகத்தான் இருக்கின்றன. கோடிக்கணக்கில் நடிகர்களுக்கு கொட்டி அழுது விட்டு, தங்கள் தலையில்  துண்டு போட்டுக்கொண்ட நிலைக்கு  வந்துள்ளார்கள் விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் .

சினிமா என்னும் சதுரங்க வேட்டையில் ராஜா ராணிகளாக நடிக, நடிகைகள் .இவர்கள் தங்கள் சம்பளத்தை  கோடிகளில் கூட்டிக்கொண்டு வெளியில் மக்களுக்கு ஆபத்பாந்தவர்களாகவும், மக்களை காப்பாற்ற வந்த ரட்சகர் களாகவும்  நடிக்கிறார்கள் .
ஆனால் இந்த வேட்டையில் தயாரிப்பாளர்கள் வெட்டப்படும் சிப்பாய்களாக மாறிப்போனதுதான் பரிதாபம் !!



தென்மாவட்டங்களின் ஏக்கம் தீருமா?

டக்கு வாழ்கிறது தெற்கு  தேய்கிறது 'என பேரறிஞர் அண்ணா சொன்னார். அது தென் மாநிலங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு பொருந்தும். தமிழ்நாட்டின் எந்த வளர்ச்சி திட்டங்கள் வந்தாலும் சென்னையிலோ அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கோத்தான் படை எடுக்கின்றன.
தென் மாவட்டங்களில் 68 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் (யூனிட்டுகள்) இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சென்னையை சுற்றிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் உள்ளன.
 

தென் மாவட்ட மக்கள் தம்முடைய தனித்தன்மையை இழந்து வருகிறார்கள். மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் போன்றவற்றில் தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. விவசாயமும் பொய்த்தது. தொழிற்துறையும் கைவிடப்பட்டது. கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக தென் மாவட்ட மக்களின் இடப்பெயர்வை எந்த அரசும் தடுக்கவில்லை. தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் தொழில் துறையில் மிகவும் பின்தங்கி உள்ளன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்ற தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்ட நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவின் கதி அதோகதியான நிலையில்தான் உள்ளது. இதுதான் இப்படி என்றால், தொடர்ந்து மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் அதற்கான வழிகள் காணப்படவில்லை. அதுமட்டுமின்றி, தென் மாவட்டங்களில் மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றும் திட்டம், கடந்த பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்டிருந்தது. அது பற்றியும் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின் தங்கி இருப்பதால்தான் சாதி மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன. அரசு இந்த அபாயத்தை உணர்ந்து தென் மாவட்டம் ஒவ்வொன்றிலும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கவேண்டும். தென் மாவட்டங்களில் புதிய தொழில் தொடங்குவோருக்கு சலுகைகள் தர வேண்டும்.
மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில்,  தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்

மருத்துவ வசதி மேம்பட மத்திய அரசின் AIIMS மருத்துவ கல்லூரியை தென் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.

இப்படி செய்தால்தான் ஒரு பக்கம் வளர்ச்சி, இன்னொரு பக்கம் வீக்கம் என்ற நிலைமாறும்; தென் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய மக்களின் ஏக்கமும்  தீரும்! 


மே 6: கல்வியாளர் மரியா - நினைவு தினம்


மரியா மாண்டிசோரி : குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே பெரும்பாலும் இருக்கிறது.  ஆனால்,கல்விக்கூடங்கள் குழந்தைகள் ஆனந்தமாக வந்து சேர்ந்து கற்றுத்தேர்கிற இடமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்டிசோரி. மருத்துவப்படிப்பு படிக்கப்போனார் அவர்.

அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர். இருந்தாலும் மருத்துவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.
கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,அடிப்பதோ  பிடிக்காத அன்பான நபர் அவர். அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார்.
நோட்டு புத்தகங்களுக்கு பதில் பொம்மைகளை அவர்களின் கையில் கொடுத்தார். எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர் அவற்றை உணர்கிற வகையில் பொருட்களை காட்டினார். வீட்டில் குழந்தைகள் வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய  வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார்.
மாணவர்கள் ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம் முயலக்கூடாது,ஆசிரியர் மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள  வேண்டும் என்று சொன்னவர் அப்படியே பிள்ளைகளை நடத்தினார். வண்ண அட்டைகள்,ஒலி எழுப்பும்கருவிகள்,ஓவியங்கள்,வண்ணத்தாள்கள், புட்டிகள் என்று குழந்தைகளின் கற்றலை வண்ணமயமானதாக இந்த வகுப்புகள் மாற்றின. அவரின் கல்விமுறையில் படித்து சாதித்தவர்கள் தான்  கூகுள் மற்றும் அமேசான் நிறுவனர்கள் ஆகியோர் இவரின் கல்விமுறையில் படித்தவர்களே. இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம்  பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது இல்லையா?.



இந்த வாரம் பாமக யாருடன் கூட்டணி? திமுக நக்கல்!

"பாமக இந்த வாரம் யாருடன் கூட்டணி என்பது பற்றி உங்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற நிலைமைதானே இன்றைக்கு இருக்கிறது? நீங்கள் கூட்டணி வைக்காத தமிழக கட்சி ஒன்றை சொல்ல முடியுமா?" என்று திமுக பொருளாளர் ஸ்டாலினை விமர்சித்த அன்புமணிக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது திமுக.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக எம்.பி. அன்புமணி எழுதிய கடிதத்துக்கு தருமபுரி தொகுதி முன்னாள் திமுக எம்.பி. இரா.தாமரைச்செல்வன் பதில் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதற்கு இதுவரை முதலமைச்சரிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அழைப்பே இல்லாமல் திருமணத்திற்கு ஆஜராகியிருக்கும் அன்புமணி குறிப்பாக திராவிட இயக்கம் வளர்த்த தொட்டிலில் வளர்ந்து டாக்டர் பட்டம் பெற்ற அன்புமணி, இன்றைக்கு பதில் சொல்கிறேன் என்ற போர்வையில் திக்குத் தெரியாமல் பாய்ந்திருக்கிறார்.

அன்புமணிக்கு பழைய அரசியல் தெரியாமல் போயிருக்கலாம். குறைந்த பட்சம் அவர் தனது தந்தையிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். "தேர்தல் திருடர்கள் பாதை" என்றும் "தேர்தலை புறக்கணிப்போம்" என்று கூறித்தானே இந்த சமுதாயத்தை வளைத்துப் போட நினைத்தீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய பிறகு "என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவிக்கு போட்டியிடமாட்டோம்" என்றுதானே உரக்கக் குரல் எழுப்பி நலிவடைந்து கிடந்த வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றினீர்கள்?


ஆனால் எங்கள் தலைவர் கலைஞர் அப்படியல்ல. வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு கிடைக்காமல் தவித்த போது கை தூக்கி விட தலைவர் கலைஞர்தான். அன்று கூட அவர் தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கலாம். ஆனால் அன்புமணியின் தந்தையை அழைத்துப் பேசி வன்னியர் சமுதாயத்திற்காக முதன் முதலில் 20 சதவீத இட ஒதுக்கீட்டும் மத்திய அரசில் வன்னியர் ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவியும் கொடுத்தவர்தான் கருணாநிதி. இல்லையென்று அன்புமணியால் மறுக்க முடியுமா?

இப்படி ஏதாவது ஒரு சாதனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக கோலோச்சிய அன்புமணி தன் துறையில் வன்னிய சமுதாயத்திற்காக செய்ததாகக் கூற முடியுமா? அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டால் அரசு பணிகளிலும், தலைமைச் செயலகங்களிலும் இன்று வன்னியர் சமுதாயத்தினர் முக்கிய பதவிகளுக்கு வந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் அதை அன்புமணியின் தந்தை மறக்கவில்லை. இட ஒதுக்கீடு வழங்கிய தலைவர் கருணாநிதியை இதே விழுப்புரம் மாவட்டத்திற்கு அழைத்து வந்து கூட்டம் போட்டு, தனியாக நாற்காலி ஒன்றுப் போட்டு "கருணாநிதி முதல்வராக வந்தால்தான் சமூக நீதி காப்பாற்றப்படும்" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

அன்புமணிக்குத் தெரியவில்லை என்றால் தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏன் சமீபத்தில் கூட தன் பேத்தியின் திருமண விழாவில் பேசிய அன்புமணியின் தந்தை, "1989 ஆம் ஆண்டு ஆலிவர் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இடஒதுக்கீடு பற்றி பேசிய நாள் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது" என்று கூறியதை ஏனோ அன்புமணி மறந்து விட்டது விந்தையாக இருக்கிறது.

அன்புமணி தன் பதவிக்காக எதையும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால் இந்த சமுதாயத்திற்காக தி.மு.க. ஆற்றிய பணிகளை கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வன்னிய சமுதாயத்தின் காவலனாக தொன்று தொட்டு நின்று வரும் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை குறை சொல்ல இந்த சமுதாயத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத அன்புமணி சொல்வதற்கு தார்மீக உரிமை இல்லை. மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார் அன்புமணி. மத்திய அரசு பணியில் வன்னியர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பற்றி என்றைக்காவது அவர் கோரிக்கை வைத்தது உண்டா? அது போகட்டும் வன்னியர் சமுதாய நலனிற்காக என்றைக்காவது ஒரு நாள் நாடாளுமன்றத்தில் இவர் பேசியதுண்டா?

தமிழுக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்கிறார் அன்புமணி. இதோ அவரது தந்தை, கலைஞர் சமச்சீர் கல்வி கொண்டு வந்த போது பாராட்ட வில்லையா? அக்கல்வியை அடித்தட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்று கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சி என்பது அன்புமணிக்கு ஞாபகம் இல்லையா?

ஏன் அவரது தந்தை “செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. கலைஞர் முதலமைச்சராக அதை நல்ல முறையில் செய்தார்” என்று பாராட்டினாரே அதையும் அன்புமணி மறந்து விட்டாரா? ஏன் அன்புமணி ராஜ்ய சபா சீட் பெறுவதற்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வருவதற்கும் உதவி செய்தவர் கலைஞர்தான். தி.மு.க.வை விமர்சிக்கும் முன்பு அதை தன் நெஞ்சில் கைவைத்து ஒரு முறை யோசித்துக் கொள்ள வேண்டும். அப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரானவர் என்ன செய்தார்? இந்தூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இன்றைக்கு டெல்லி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருக்கும் அன்புமணி ஊழல் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது. ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிக் கொண்டிருக்கும் அன்புமணி இன்றைக்கு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுவது விந்தையிலும் விந்தை.

உங்கள் தந்தை பா.ம.க.வை துவங்கும் போது என்ன சொன்னார்? "என் கட்சியில் உள்ளவர்கள் அல்லது நானே கூட ஊழல் அல்லது தவறு செய்தால் மக்கள் மன்றத்தின் முன்னாள் பகிரங்கமாக விசாரணை நடத்தி, அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து என்னை சவுக்கால் அடியுங்கள்" என்று பிரகடனப்படுத்தினார். அவருக்குப் பிள்ளையாகி, மத்திய அமைச்சராகி நீங்கள் இன்றைக்கு சாதித்துள்ளது என்ன? சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறீர்கள்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து நீங்கள் தமிழகத்தின் நலனுக்காக என்ன செய்துள்ளீர்கள் என்று நீங்களே பட்டியலிட எண்ணினாலும் அது வெற்று காகிதமாகத் தான் இருக்க கூடும். ஏன் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நீங்கள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை பேரை டாக்டராக்கினீர்கள்? உங்களால் பட்டியலிட முடியுமா?

“சமூக நீதி காப்பவர்” என்று கூறி தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பீர்கள். “அன்பு சகோதரி பார்த்துக் கொள்வார்” என்று கூறி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள். ஏன் வாழப்பாடி ராமமூர்த்தி துவங்கிய ராஜீவ் காங்கிரஸுடன் கூட கூட்டணி வைத்தீர்கள். “என் வழக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள்.

“ஒரு சில கேள்விகளுக்கும், ஒரு சிலரைப் பற்றியும் நான் பதில் அளிப்பதில்லை” என்று உங்கள் தந்தை கூறிய பிறகும், விஜயகாந்தை தேடிச் சென்று சால்வை அணிவித்து “என் தொகுதியில் உங்கள் கட்சிக்காரர்களை வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று கெஞ்சியது யார்?

நியூ உட்லன்ட்ஸ் ஹோட்டலில் தனியாக இருந்த விஜயகாந்தை அவரது அறைக்கே சென்று சந்தித்து சால்வை போட்டது எதற்காக? அது என்ன வன்னிய சமுதாயத்தை மேம்படுத்தவா?. நீங்கள் நாடாளுமன்றத்திற்குப் போகத்தானே கெஞ்சி கூத்தாடினீர்கள். நீங்கள் கூட்டணி வைக்காத தமிழக கட்சி ஒன்றை இன்றைக்கு உங்களால் சொல்ல முடியுமா? தி.மு.க.வுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் போது கருணாநிதி பற்றி தெரியவில்லையா? ஸ்டாலினின் நிர்வாகத் திறமை பற்றி அறியவில்லையா? கின்னஸ் ரிக்கார்டுகளை முறியடிக்கும் வகையில் மாறி மாறி கூட்டணி வைத்த போது தெரியவில்லையா? எத்தனை முறை கூட்டணி மாறினோம் என்பது உங்கள் கட்சி தலைமைக்கே கணக்கிட முடியாமல் போயிருக்கும். இந்த வாரம் யாருடன் கூட்டணி என்பது பற்றி கட்சி தொண்டர்களுக்கு அறிவிக்க நீங்கள் உங்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற நிலைமைதானே இன்றைக்கு இருக்கிறது.

இன்றைக்கு சென்னை மேம்பாலங்கள் நிறைந்த மாநகரமாக இருக்கிறது என்றால், போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஸ்டாலின்தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இன்றைக்கு குடிநீர் கிடைக்கிறது என்றால் அதற்கு ஸ்டாலின் வகுத்துக் கொடுத்து, நிறைவேற்றிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்தான். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அப்போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நிதியுதவி செய்து, அவர்களை தியாகிகள் என்று அறிவித்து அவர்களுக்கு பென்ஷனும் கொடுத்து கௌரவித்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்.

இதை வன்னிய சமுதாயம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. தயவு செய்து உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பதவி ஆசைக்காக இந்த சமுதாய மக்களை அடகு வைக்காதீர்கள்.

தும்மினால் உடனே மதுவிலக்கு என்கிறீர்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள்தானே சுகாதாரத்துறை அமைச்சராகத்தானே இருந்தீர்கள். நாடு முழுவதும் ஒரே மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த என்றைக்காவது உங்கள் துறையின் சார்பில் ஒரு மசோதா கொண்டு வர வேண்டும் என்று கருதியது உண்டா?

மக்களின் சுகாதாரத்தின் மீது இவ்வளவு போலி அக்ககறை காட்டும் நீங்கள் ஏன் மத்திய அரசில் இருந்த போது முன்னெடுத்துச் செல்லவில்லை. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூட திருநங்கைகளுக்காக தனி நபர் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். ஆனால் ஏன் உங்களால் மதுவிலக்கு தொடர்பாக ஒரு தனி நபர் மசோதாவாவது கொண்டு வர முடியவில்லை? அதை விடுத்து தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு எப்படி அனுமதி வழங்குவது என்று சட்டத்தை வளைப்பதில்தானே குறியாக செயல்பட்டீர்கள்.

அது போகட்டும் அய்யாவின் தோட்டத்திற்கு அருகில் உள்ள பாண்டிச்சேரியில் மதுவிலக்கு வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை? அங்கு வேறு முதல்வர் வேட்பாளரை வன்னியர் சமுதாயத்திலிருந்து முன்னிறுத்த நீங்கள் தயங்குவதுதான் காரணமா?


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை, சிப்காட் தொழில் பூங்கா என பல திட்டங்கள் கொண்டு வருவோம் என்றீர்களே. அதற்கு ஏதாவது சிறு நடவடிக்கையாவது எடுத்தீர்களா? நிர்வாகம் பற்றி கிழக்கு மேற்கு தெரியாத உங்களுக்கு பேராசை இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் உங்கள் பேராசைக்கு வன்னியர் சமுதாயத்தையும், அந்த சமுதாயத்திற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிகழ்த்திய சாதனைகளையும் கொச்சைப் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு உங்கள் பதவி வெறி முக்கியமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு, எங்கள் இயக்கத்திற்கு இந்த வன்னியர் சமுதாய நலன் முக்கியம். ஏனென்றால் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சர்களாக, டி.ஜி.பி.க்களாக, தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவராக, துணை வேந்தர்களாக அமர வைத்து அழகு பார்த்த இயக்கம் தி.மு.க. அந்த இயக்கத்தின் வழிகாட்டியாக, தியாக விளக்காக, எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஸ்டாலினை குறை சொல்வதை நிறுத்தி விட்டு அவர் உழைப்பில் ஒரு சதவீதத்தையாவது மக்களுக்காக- குறிப்பாக இந்த வன்னியர் சமுதாயத்திற்காக செய்யுங்கள்.

ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தமிழகத்தை மருத்துவர் என்ற முறையில் என்னால் மீட்க முடியும் என்று கூறியிருக்கிறீர்கள்.

பணம் வாங்கிக் கொண்டு தரமற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினீர்களே அந்த கல்லூரிகளில் இருந்து மருத்துவரைக் கொண்டு வந்து வைத்து மீட்கப் போகிறீர்களா? அ.தி.மு.க. கஜானாவை சுரண்டியது போக மிச்சமிருப்பதை சுரண்டுவதற்கு திட்டத்தை தீட்டியிருக்கிறீர்களா? கடமை உணர்வும் நேர்மையும் இல்லாத உங்களை, டெல்லி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் ஆஜராகிக் கொண்டிருக்கும் உங்களை மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் எப்படி கருதமுடியும்? ஆகவே தமிழகம் என்பது தைலாபுரம் தோட்டம் அல்ல. நீங்கள் நிர்வகிப்பதற்கு. அதே போல் இந்த வன்னியர் சமுதாயம் ஒன்றும் உங்கள் ஏமாற்றுப் பேச்சுக்களை நம்பி மோசம் போவதற்கு தயாராகவும் இல்லை.

தி.மு.க.வும், கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கும் இந்த சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை அவ்வளவு எளிதில் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்தால் முறியடித்து விட முடியாது. தங்களையும், தங்கள் கட்சியையும் மக்கள் நம்புவார்கள் என்ற தங்களின் கனவு பகல் கனவாகவே இருக்கும். தாங்கள் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஸ்டாலினின் உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள். அவர் செய்த தியாகத்தைப் படியுங்கள். 

“வெட்டியாக கடிதம்” எழுதி இப்படி உங்கள் நேரத்தை மட்டுமின்றி தமிழக மக்களின் நேரத்தையும் வீணடிக்காமல், அரசியலில் அரிச்சுவடியை தளபதியின் புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் அவரது தியாகத்தில் ஒரு சதவீதமாவது செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். கூடவே வன்னியர் சமுதாயத்தை “வசனம்” பேசியே வஞ்சிக்காமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு திட்டங்களால் முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த சமுதாயத்தை தொந்தரவு பண்ணாமல் தயவு செய்து விட்டு விடுங்கள். 

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது



பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டோம்: மாவோயிஸ்டுகள் திடுக் தகவல்!

பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக திடுக்கிடும் தகவல்களை கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்டுகள் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

மேற்கு வங்கம், பீகார், சத்தீஷ்கார், ஒடிசா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி-அன்னூர் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் நேற்று முன்தினம் மாலை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிலர் டீ குடித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. அதிரடியாக கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர்கள், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த ரூபேஷ் (43), அவரது மனைவி சைனா (37), திருச்சூரை சேர்ந்த அனூப் (40), மதுரையை சேர்ந்த கார்த்தி என்கிற கண்ணன் (39) மற்றும் கடலூரை சேர்ந்த ஈஸ்வரன் என்கிற வீரமணி (42) ஆவார்கள். இதில், ரூபேஷ் ஒரு சட்ட பட்டதாரி; தகவல் தொழில் நுட்ப டிப்ளமோவும் படித்தவர். ஆந்திரா, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 4 மாநில மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவர். ‘மாவோயிஸ்டு’, ‘வசந்தத்திலே பூமரங்கள்’ என்ற இரு நாவல்களை அவர் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.


இவரது மனைவி சைனா, கேரள உயர் நீதிமன்றத்தில் கிளார்க்காக வேலை பார்த்தவர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு மாயம் ஆனவர். இவர் கணவர் ரூபேசுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்திருக்கிறார். இவர்களுக்கு 2 மகள்கள். இவர்கள் தங்களது பாட்டியுடன் திரிச்சூர், வளப்பாடில் வசித்து வருகின்றனர்.

கைதான 5 பேரிடமும் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் உள்ள மாவட்ட கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது. தமிழக கியூ பிரிவு டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கோவை மாநகர துணை கமிஷனர் பிரவேஷ்குமார், ஆந்திர மாநில நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, கேரள மாநில நுண்ணறிவு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சதானந்தா, வாகேஷ் ஆகிய 3 மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் போது அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளனர். அதில், ''தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களில் 193 மலைக்கிராமங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. எங்கள் இயக்கத்தினர் தினமும் ஒவ்வொரு மலைக்கிராமத்துக்கும் தலா 4 பேர்வீதம் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டினோம். மலைவாழ் மக்களுக்கு வழங்கிய நிலங்களை, நலத்திட்ட உதவிகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பறித்துக் கொண்டார்கள் என்று கூறி, அவர்கள் மத்தியில் போராட்ட உணர்வை தூண்டினோம்.

நீலகிரி மாவட்டத்தையொட்டிய கேரள ஆதிவாசி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததால், அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களை தகர்க்க சதித்திட்டம் தீட்டினோம். ஆதிவாசி மக்களை மூளைச்சலவை செய்து, எங்கள் ஆதரவாளர்களாக மாற்றினோம். ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் எங்கள் இயக்கத்தினரை ஒழிக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருவதால், அங்கு சென்றால் பிடிபட்டு விடுவோம் என்பதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காகத்தான் கோவையை அடுத்த கருமத்தம்பட்டிக்கு வந்தோம்.

ஆந்திராவில் செம்மர கட்டைகள் கடத்தியதாக அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு படையினர் சுட்டுக்கொன்றதால், ஆந்திர போலீசார் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். அதற்கான வியூகங்களை வகுக்கவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் உங்களிடம் வசமாக மாட்டிக் கொண்டோம்" என்று திடுக்கிடும் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.


அதன்பின் 5 மாவோயிஸ்டுகளும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதையடுத்து, போலீசார் அவர்கள் 5 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.


5 May 2015

சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்ட பிராவோவின் 'மேஜிக்' ரன்அவுட்

சென்னையில் நேற்று நடைபெற்ற  பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியை அற்புதமான முறையில் பிராவோ ரன்அவுட் செய்ததுதான் சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 148 ரன்களையே எடுத்தது. எளிய இலக்கு என்பதால்  பெங்களூரு அணி வீரர்கள் எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றையை ஆட்டத்தில் சென்னை அணி வீரர்களின் பீல்டிங் அருமையாக இருந்தது. பிரென்டன் மெக்கல்லம், பிராவோ, டுப்லெசிஸ் ஆகியோர் திறமையாக செயல்பட்டு ஒற்றை ரன்களை கட்டுப்படுத்தினர். 

பெங்களூருஅணியின் கேப்டன் விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் பொறுப்பை உணர்ந்து அணியை வெற்றிபாதைக்கு அழைத்து போய்க்கொண்டிருந்தார். கோலி இருந்த வரை வெற்றி பெங்களூரு அணியின் பக்கம்தான் இருந்தது. விராட் கோலி 44 பந்துகளை சந்தித்து 48 ரன்களை எடுத்திருந்த சமயத்தில் பிராவோ பந்துவீச வந்தார்.
பிராவோ வீசிய பந்தை அவருக்கு நேரே விராட் கோலி அடித்து விட்டு ரன் எடுக்க முன்னால் ஓடி வந்தார். ஆனால் அதற்குள் பந்தை மிக நேர்த்தியாக பிடித்த பிராவோ, விராட் கோலி கிரீசுக்கு வெளியே இருப்பதை கவனித்தார். அந்த சமயத்தில் மிக சமயோசிதமாக செயல்பட்டு பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்து விராட் கோலியை அவுட் செய்தார். விராட் கோலியை பிராவோ ரன் அவுட் செய்யவில்லையென்றார்  பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்க கூடும்.
விராட் கோலி அவுட் ஆகும் போது பெங்களூரு  அணி 97 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து வந்த வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெறியேறிவிட பெங்களூரு அணியால் 124 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.



எகிப்து பிரமிடுகள் முன்பு ஆபாச படம் எடுத்த நடிகை: கோபத்தில் எகிப்து!

எகிப்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற கிஸா பிரமிடு முன்பாக ஆபாச பட நடிகையை நிழற்படம் மற்றும் வீடியோ  எடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுச் சின்னத்தை அவமதித்த ஆபாச பட நடிகையின் மீது எகிப்து நாட்டினர் கடும் கோபத்தில் உள்ளனர். 

கிஸா பிரமிடு என்று அழைக்கப்படும் இதுதான்  எகிப்தின் பெரிய பிரமிடு ஆகும். மிகத் தொன்மையானதும், பழமையானதுமான கிஸா,  உலக அதிசயங்களில் ஒன்று  ஆகும்.  கால மாற்றங்களாலும் இயற்கை சீற்றங்களாலும் சிதைவடையாமல் இந்தப் பிரமிடு இன்னமும் எகிப்தால் அப்படியே பராமரிக்கப்பட்டும் வருகின்றது.

கடந்த 4500 ஆண்டுகளுக்கு முன்பு,  'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்தக்  கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னமும்  வரலாற்று ஆய்வாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்புப்  பாறை கற்களால் எழுப்பப்பட்டது .


உலகப் புகழ் பெற்ற பிரமிடு பகுதியில் தற்போது ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தற்போது பலத்த சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.இது எகிப்து நாட்டவரைக்  கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

பிரமிடு முன்பு எடுக்கப்பட்டுள்ள இந்த ஆபாச படம் ஆங்கில சப் டைட்டிலுடன் எடுத்து உள்ளனர். இதனை ரஷ்யர்கள் எடுத்து உள்ளனர். இந்த வீடியோக்கள் 3 ஆபாச இணையதளங்களில் இடம்பெற்று உள்ளன. ஆபாச நடிகை நாட்டின் வரலாற்றுச்  சின்னமாக விளங்கும் இடங்களில் உடையில்லாமல் ஆபாச நடமாடி உள்ளார் அதுவும் படமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  எகிப்து அரசு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

சர்ச்சைக்குரிய  இந்த ஆபாச படத்தில் நடித்த  நடிகையான கார்மன் டி லுஸ்  ’எகிப்து வரவேற்கிறது’ என பெயரிட்டு  ஓட்டகத்தில் அமர்ந்து,  தனது ஆடை இல்லாத பின்பகுதியை காட்டி  போட்டோ எடுத்து உள்ளார். அதுவும் அந்த படங்கள் பிரமிடு முன் எடுக்கபட்டுள்ளது. இந்தப்  படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இடம் பெற்று உள்ளன.இது இன்னும் பிரச்னையை பெரிது படுத்தியுள்ளது.

இதனால் எகிப்திய அதிகாரிகள் மேலும் ஆவேசம் அடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர் அதில் நடிகை  சுற்றுலா பகுதியான அந்தப் பகுதியில்,  பார்வை நேரம் முடிந்தும் அங்கேயே இருந்து உள்ளார். அப்போது தான் அந்த படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது என்பதைக் கண்டறிந்து உள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் கிஸா பிரமிடு முன் நடக்கும் 2 வது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து டி லுஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் "ஆடை இல்லாமல் இருந்த போது அங்கு செல்ல வில்லை. நான் மக்களின் புனித தலமாகக் கருதப்படும் இடத்தில் ஆபாச படம் எடுக்கவில்லை. நான் மட்டுமே  அங்கு பயணம் செய்தேன் ஏனெனில் நான் எகிப்தை நேசிக்கிறேன்" என கூறி உள்ளார்.


புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்!

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச் சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து வைரலாக பரவி, இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணரக்கூடிய ஃபேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து, புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. கணித்துச்சொல்வது என்பதே சரியாக இருக்கும்.


இந்த தளத்தின் திறனை இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் பரிசோதித்துப் பார்க்கலாம். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் புகைப்படத்தை இந்த தளத்தில் சமர்பித்து, எங்கே என் வயதை சொல்லுப்பார்க்கலாம் என கேட்பது தான். உடனே இந்த தளம் உங்கள் வயதை கணித்துச்சொல்லும். ஆனால், இந்த கணிப்பு எல்லா நேரங்களிலும் துல்லியமாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சரியாக இருக்கும். சில நேரங்களில் தவறாக இருக்கும். தவறு எனில் அடுத்த படத்தை சமர்பிக்கவும் என இந்த தளமே சொல்லி விடுகிறது. 

வயது விஷயத்தில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்றால் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை சமர்பிக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் நீங்கள் இளமையானவராக இருந்து இந்த தளம் உங்கள் வயதை 50க்கு மேல் குறிப்பிட்டால் உங்கள் மனது லேசாக முறிந்துப்போகலாம். சொந்த புகைப்படத்தை சமர்பிக்க தயங்குபவர்களும் தாராளமாக இந்த தளத்தை சோதித்துப்பார்க்கலாம். அத்ற்கும் ஒரு வழி இருக்கிறது. அதாவது, இணையத்தில் உள்ள புகைப்படங்களை சமர்பித்து இந்த தளத்தை கணிக்கச்சொல்லலாம். இதற்காக மைக்ரோசாஃப்டின் பிங் தேடியரத்தின் புகைப்பட சேவையில் இருந்து படங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வசதி தான் இந்த தளத்தை பிரபலமாக்கியுள்ளது. பலரும் இணையத்தில் கிடைக்கும் பிரபலங்களின் புகைப்படத்தை இந்த தளத்தில் சமர்பித்து அது தரும் கணிப்பை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஹாலிவுட் நடிகை, அரசியல் தலைவர்கள் என நன்கு அறியப்பட்ட நபர்களின் புகைபப்டங்களை சமர்பித்து, அவர்களின் வயது கணிப்பை, அது எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதை லேசான கிண்டலுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த தளம் யாருடையை வயதை எல்லாம் சரியாக சொல்கிறது, யாருடைய விஷ்யத்தில் கோட்டை விடுகிறது போன்ற விவரங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த சுவாரஸ்ய அம்சமே இந்த தளத்தை ஹிட்டாகி இருக்கிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இந்த தளம் இந்த அளவு ஹிட்டாகும் என்பதை மைக்ரோசாஃப்டே எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நடத்திய டெவலப்பர் மாநாட்டில் தான் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டது.

மைக்ரோசாஃப்டின் அஸ்யூர்  மெஷின் லேர்னிங் பிரிவைச் சேர்ந்த இரண்டு வல்லுனர்கள் சோதனை முறையில் இந்த தளத்தை உருவாக்கினர். முகங்களை கண்டுணரும் சாஃப்ட்வேரின் ஆற்றலை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக மிக எளிமையான முறையில் புகைப்படம் பார்த்து வயதை சொல்லும் வகையில் தளத்தை அமைத்தனர். முதலில் 50 பேருக்கு தான் மெயில் அனுப்பியிருந்தன்ர். ஆனால், இந்த மெயில் வைரலாகி 35,000 பேர் இந்த தளத்தை பார்த்து பயன்படுத்தினர். இதனால், மீடியாவின் கவனத்தை ஈர்த்து இப்போது இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது.

மெஷின் லேர்னிங் என்று சொல்லப்படும் தொழில்நுட்பத்தின் எதிர்கால ஆற்றல் மற்றும் போதாமைகளின் அடையாளமாக இந்த தளம் விளங்குகிறது. நீங்களும் தாராளமாக இந்த தளத்தை பயன்படுத்திப் பார்த்துச் சொல்லுங்கள். ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், இந்த தளத்தில் சமர்பிக்கப்படும் புகைப்படங்கள் பயன்படுத்தப்படக்கூடிய விதம் குறித்த ஒரு சர்ச்சை இருக்கிறது. இந்த புகைப்படங்களை மைக்ரோசாஃப்ட் விரும்பிய வகையில் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மைக்ரோசாஃப்டோ புகைப்படங்களை சேமித்து வைத்துக்கொள்ளவில்லை என சொல்கிறது. கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த தளத்தின் பின்னே இருக்கும் மைக்ரோசாஃப்ட் பொறியாளர்களில் நம்மவரான சந்தோஷ் பாலசுப்பிரமணியமும் ஒருவர்!

இணையதள முகவரி; http://how-old.net/





ஒரு நிஜ 'சுந்தரா டிராவல்ஸ்' பேருந்து!

மிழகத்தின் கிராம்ப்புறங்களில் அரசுப் பேருந்துகளின் நிலை எப்படி இருக்கிறது என்பதை பட்டவர்த்த னமாக படம்பிடித்துக் காட்டுகிறது தொப்பம்பட்டியிலிருந்து பழனி வரை செல்லும் 5 ம் நம்பர் பேருந்து. 

பழனி டிப்போவைச் சேர்ந்த அப்பேருந்து வெளிப்பார்வைக்கு சுமாராக இருந்தாலும், பேருந்தின் உட்புறம் அப்பட்டமாக 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தை நினைவுபடுத்துகிறது. வழக்கத்துக்கு மாறாக பேருந்தின் வலதுபுறத்தில் சில இருக்கைகள் நீக்கப்பட்டு பொருட்களை வைப்பதற்காக ஒரு அடுக்கு உருவாக்கப்பட் டிருந்தது. அந்த அடுக்கு வலுக்குறைந்த இரும்புக் கம்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடத்துனரிடம் பேசியபோது, அப்பேருந்து தேனி, கம்பம் போன்ற ஊர்களில் முன்னர் ஓடியபோது காய்கறி கூடைகளை கொண்டு செல்வதற்கு வசதியாக அந்த அடுக்கு அமைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.

ஆங்காங்கே ஒட்டடை,  பேருந்தின் தரையில் உள்ள ஓட்டை வழியாக சக்கரத்தின் தரிசனம், சில இடங் களில் உடையும் நிலையிலும் பல இடங்களில் உடைந்த நிலையிலும் கைப்பிடி, குப்புற கவிழ்ந்து கிடந்த சீட்டுகள் என பேருந்தின் எந்தப் பகுதியும் பயணிக்க தகுதியற்றதாக இருந்தது. 

பாழடைந்த பங்களாவை கேள்விபட்டிருப்போம். ஆனால் முதன்முறையாக ஒரு பாழடைந்த பேருந்தை அப்போதுதான் பார்த்தோம்.
கீழே விழாமல் இருக்க பயன்படும் கைப்பிடியே உடைந்து, ஏதோ ஒரு அபாயத்தை வரவேற்பது போல் இருந்தது. பேருந்தின் கீழ்தளம் மிகவும் பழுதடைந்து இருந்தது. முதல்முறை பார்க்கும்போது, கீழ்தளத்தில் அதிகமான எடைகொண்ட பொருட்களை வைத்தால் உடைந்துவிடும் என்பதற்காகத்தான் அடுக்கு போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்களோ என்று நினைத்தோம். ஆனால் அது அப்படி இல்லை என நடத்துநர் சொன்னபின்தான் தெரிய வந்தது.

அந்த அடுக்கு அமைப்பில் உள்ள கம்பிகளும் உடைந்திருந்து பின் வெல்டு வைக்கப்பட்டிருந்தது. அவ்வ மைப்பின் பின்புறத்தில் ஒரு கம்பியே இல்லை. பெரும்பாலான இருக்கைகளில் சில நட்டுகள் காணாமல் போயிருந்தது. அதனால் பேருந்து ஓடும்போது எல்லா இருக்கைகளும், அந்த அடுக்கு அமைப்பும் கிடுகிடு வென ஆடி, பெரிய சத்தத்தை ஏற்படுத்திய வண்ணமிருந்தது. 

மொத்தத்தில் அந்த பேருந்தில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டாலே மிகப்பெரிய அளவில் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணமிருந்தது.
இதுவரையிலும் அப்பேருந்தை எந்த விபத்தும் ஏற்படாமல் ஓட்டியதே ஓட்டுநரின் மிகப்பெரிய சாதனை யாக இருக்கும். இதுபோன்ற பேருந்துகளுக்கு எப்படி எப்.சி தருகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. நடத் துனர் சரவண ராஜபாண்டியன், ‘’நான் 25 வருடங்களாக நடத்துனராக இருக்கிறேன். பேருந்தில் பழுதுகள் இருந்தால் டிப்போவில் எழுதி வைப்போம். நான் தொடர்ந்து எழுதி வைத்திருக்கிறேன். எப்.சி காட்டும் போது எல்லா பழுதுகளையும் நீக்கி எப்.சி வாங்கிக் கொள்வோம்’’ என்றார்.
இது போன்ற பேருந்துகளை நகரங்களில் இயக்கினால் பயணிகள் அடுத்த நாளே புகார் செய்திருப்பார்கள். கிராம்ப்புறங்களில் மக்கள் எந்தவித கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணமே இது போன்ற பேருந்துகள் கிராமப்புறங்களில் இயக்கப்பட காரணம். 

தமிழக பேருந்துகளின் நிலை இப்படி இருக்க, ஆட்சியாளர்கள் சம்பிரதாயமாக வருடம் ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி, மக்களிடம் வசதிநிலவரம் கேட்பதுபோல் சில நிமிடங்கள் பேசிவிட்டு புகைப்படங்கள் எடுத்தவுடன் இறங்கி சென்றவிடுகிறார்கள்.

பயணம் செய்ய தகுதியற்ற இம்மாதிரி பேருந்துகளில் அவர்கள் ஏறி இறங்குவார்களா என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.
மக்களின் உயிர்களைக் கொண்டு அரசு விஷப்பரீட்சை நடத்துவதை யாராலும் ஏற்க முடியாது.


தமிழ்நாட்டிலும் இருக்கிறது மத்திய பல்கலைகழகம்..!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் அடுத்த என்ன படிக்கலாம் என பெற்றோர்களும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதை பிள்ளைகளும் இணையத்தையும், சுற்றத்தாரையும் நாடி தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
“இந்த கல்லூரி சிறந்தது, அந்த கல்வி நிறுவனம் சூப்பர்...இங்கே படித்தால் உடனே வேலை கிடைக்கும், அங்கு படித்தால் எல்லோரும்  கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகலாம்...' என விளம்பரங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, நாம் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது.  

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வழக்கம்போல் அதிகம் பேரின் விருப்பம் டாக்டர், என்ஜினியர் கோர்ஸ்கள்தான். ஆனால், இவற்றையும் தாண்டி பட்டப்படிப்பு என ஒன்று இருக்கிறது அல்லவா ? அதற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது - தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகம் ( CUTN - Central University of Tamil Nadu ).  

அப்படின்னா என்ன...அதுல என்ன ஸ்பெஷல் ? 

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 42 மத்திய பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT போன்ற முக்கிய கல்விநிறுவனங்கள் வரிசையில் மத்திய பல்கலைகழகமும் இடம் பெறுகிறது.  இதில் படித்து நாம் பெறுகிற பட்டம் என்பது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய பல்கலைகழகம் தமிழகத்தில் அமைந்திருப்பது பலரும் அறியாததாக இருப்பதுதான் அறியாமையின் உச்சம். ஏனெனில், தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது தமிழக மக்கள் கல்வியில் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிற காரணத்தினால். ஆனால், இங்கு படிக்கக் கூடிய தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  மற்ற மாநில மாணவர்கள் அதிகம் படித்தாலும் அவர்களோடு போட்டி போட்டு படிக்கும் திறன் படைத்த தமிழ் மாணவர்கள் இதை பற்றி அறியாமலே பல்வேறு வகையில் தங்கள் வட்டத்தை சுருக்கி கொள்கின்றனர்.


விவசாயத்தை பெரும்பாலும் நம்பி இருக்கக் கூடிய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடியது தான் இந்த மத்திய பல்கலைக்கழகம் (CUTN - Central University of Tamil Nadu ) . திருவாரூருக்கு செல்லக் கூடிய மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றாங்கரை ஓரம் அமைந்திருக்கக் கூடியது சியுடிஎன். திருவாரூர் மாவட்டத்தில் நீலக்குடி, நாகக்குடி எனும் இரு கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது சியுடிஎன். சுற்றுப்புற பகுதிகளுக்கு ஒத்துவராத, உயர் தர வடிவமைப்பிலான கட்டடங்கள், சியுடிஎன் என காட்டுகின்றன.
சுற்று வட்டாரத்தில் இப்படி ஒரு வடிவமைப்பு எங்கும் காணப்படவில்லை. செக் போஸ்ட் தாண்டி நேரே உள்ளே சென்றால், அங்கே பறந்து நிற்கிறது நிர்வாக அலுவலகம். அதை சூழ்ந்து நிற்கும் கட்டடங்கள் என்ன? அங்கே என்ன படிக்கலாம்? அதனால் என்ன வாய்ப்புகள் கிடைக்கிறது?
ஹாஸ்டல் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? போன்ற முழு விவரங்களையும் அறிந்துகொள்ள உதவினர் இதன் துணைவேந்தர் (பொ) முனைவர் பேராசிரியர் செங்கதிர் மற்றும் ஊடகம் & தகவல் தொடர்பியல் துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜமும் வந்தார்.

பல்கலைகழகத்தில் ஹாஸ்டல் வசதி உள்ளது.  இதில் இரண்டு பேருக்கு ஒரு அறை எனும் விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், வெந்நீர் குளிர் நீர் என வகைபடுத்தி தண்ணீர் தாரளமாக கிடைக்கிறது.  உணவுக்கு தட்டுப்பாடு இல்லை.  ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு மெஸ் தனியாக வைக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் வாசிகளுக்கு உணவுக்குத் தான் கொஞ்சம் செலவாகிறது. மற்றபடி செலவு இங்கு குறைவாக இருக்கிறது. பிஹெச்டி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு தனித் தனியாக வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திருமணம் ஆனவர்கள் தங்கள் துணைகளுடன் இருந்தும் படிக்கலாம் என்ற ஒரு முறையும் பின்பற்றப்படுகிறது.

சியுடிஎன் கேம்பஸ்ஸில் வைபை இணைய வசதி  தரப்பட்டுள்ளது. பல்கலை முழுமையும் வெளிச்சமான காற்றோட்டமான அறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் முறை பின்பற்றப்படுகிறது. அறிவியல் ஆய்வகங்கள் முழு வசதிகளுடான் தரப்பட்டுள்ளன. இலவச இணைய வசதி நூலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடம் தொடர்பான புத்தகங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு உள்ளன. இரவு பகல் என வித்தியாசம் பாராது ஏதேனும் ஒரு நிகழ்வு பல்கலை வளாகத்தினுள் நடந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. 'அல்லைட்' எனும் துணைப் பாடங்களை தானே தேர்ந்தெடுக்கும் முறையும் இங்கு மாணவர்களுக்கு தரப்பட இருக்கிறது. இன்னும் பல்கலைகழகத்தில் பொறியியல் கொண்டு வரவில்லையே என கேட்டதற்கு, அதுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறதே என பதில் வருகிறது. இந்த வருடத்திலிருந்து எம்.டெக் கோர்ஸ்கள் கூட ஆரம்பமாகிறது.

பல்கலைகழகம் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குவதால் ஏராளமான வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பெறும் செம்மொழி தமிழ் எம் ஏ படிப்பிறகு குறிப்பிட்ட அளவு ஸ்டைபண்ட் வழங்கப்பெறுகிறது. இது மட்டுமில்லாமல் ஆய்வக வசதிகள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. எம் ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் துறைக்கு அதிகமான தொழில் நுட்பபொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மாணவர்களால் இலகுவாக கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. கேமரா, வீடியோ மிக்சர் என பல வகைகளிலும் இந்த துறை மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜம் தெரிவித்தார்.

தினமும் ஏதாவது கருத்தரங்கம் (கான்பரன்ஸ்) நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு இருக்கக் கூடிய பேராசிரியர்கள் அனைவரும் கல்வியில் முதன்மை இடம் பிடித்துள்ளவர்கள். வெளி நாட்டில் பிஎஹ்டி க்கு மேலே படித்தவர்களும் இங்கு வேலை பார்கின்றனர். வெளி நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எளிதில் கிட்டுகிறது.  எல்லா மாநிலத்து மாணவர்களும் இங்கு படிப்பதால் கலாச்சார ஒற்றுமை மேம்படுகிறது. பயிற்று மொழி ஆங்கிலமாக உள்ளது.

இதில் என்ன கோர்ஸ் இருக்கிறது பார்க்கும் போது, ஐந்து வருட எம்.எஸ்ஸி இன்டக்ரேட்டட் பிரிவும், இரண்டு வருட எம்.ஏ பிரிவும் இரண்டு வருட எம்.எஸ்ஸி பிரிவும் பிஎஹ்டி படிப்பும் இருக்கிறது. சியுடிஎன் பின் வரும் நிறுவனங்களுடன் சில கற்றல் நிலைகளை ஒப்பந்த முறையில் கொண்டு சில படிப்புகளை வழங்குகிறது, அவை: Madras School of Economics (MSE) , Central Institute of Classial Tamil   (CICT) National Law School of India (NLSIU) and Tamil Nadu Agricultrual University (TNAU).

 
என்னவெல்லாம் கோர்ஸ்கள் இருக்கின்றன? 


Five Years M.Sc  Integrated Courses (after 10+2)

                Integrated MSc. Chemistry

                Integrated MSc. Economics *

                Integrated MSc. Life Sciences

                Integrated MSc. Mathematics

                Integrated MSc. Physics

 
Two Year M.Sc Couses (after graduation)

               MSc. Chemistry

               MSc General Economics**

               MSc Financial Economics**

              MSc Acturarial Economics**

              MSc Environmental Economics**

              MSc Aplied Quantitative Finance **

 

Two Year M.Tech Courses *** ( after graduation)

M.Tech Material Science & Nano Technology

M.Tech Energy & Environmental Technology

 

Two Year M. A Courses ( after graduation)


M.A English Studies

M.A HIndhi

M.A Media & Communication

M.A Social Work

M.A Tamil

 

Ph D ( after post graduation)

Ph D in Chemistry

Ph D in Economics

Ph D in English

Ph D in Lifescience

Ph D in Mathematics

Ph D in Physics

Ph D in Tamil

    

*Academic Mentoring by Madras School of Economics, Chennai

**  Conducted at Madras School of Ecoonomics (MSE) Chennai

*** Programmes provisionallu proposed from the academic year 2015-2016

 

 இங்கு படிக்கும் அனுபவம் எப்படி என சில மாணவர்களிடம் கேட்டபோது...

பிந்துஜா ( எம்.ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் இரண்டாமாண்டு, கேரளா)

கேரள மத்திய பல்கலை கழகத்தில் படிக்க முயற்சி செய்தேன்.  ஆனால், சியுடிஎன் சீட் கிடைச்சது. கிட்டத்தட்ட மலையாளம் தமிழ் போல, ஆகவே, இங்கே எனக்கு ஒத்து வரும் என்று தோன்றியது. எல்லாரும் நல்லா பழகுவாங்க. நாமேளே எல்லா பொருட்களையும் இலகுவாக உபயோகப்படுத்தலாம். இங்கே படிக்கறது கொஞ்சம் ஜாலிதான் என கொஞ்சும் குரலில் முடித்தார்.

 
அருண் குமார் ( எம்.ஏ தமிழ் இரண்டாமாண்டு, திருவண்ணாமலை) 


நான் சென்னையில் ஜர்னலிசம் படித்தேன். பின் அச்சு ஊடகம் மீது ஆர்வம் இருந்ததால் எனக்கு தமிழ் படிக்க ஆசை. அதனால் இங்க தமிழ் தேர்ந்தெடுத்தேன்.  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முடிச்சிட்டு தில்லியில் எம்.பில் பண்ணப் போறேன்.  இங்க படிப்பதால் நிறைய அறிஞர்களின் தொடர்புகள் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் ஸ்டைபன்ட் வேற உண்டு. நல்ல காற்றோட்டமான வகுப்பு, ஹாஸ்டல் ரூம் இதை தவிர வேற என்ன வேணும் பாஸ்.

 
ஜெய்கரன் ( கணிதம் மூன்றாமாண்டு, உ.பி.) 

நான் நாலைந்து இடங்களில் விண்ணப்பம் போட்டிருந்தேன். இங்க வந்து மூன்று வருடம் முடியப் போகுது. ஹாஸ்டல் வசதி எல்லாம் பரவாயில்லை. நல்ல செமினாரெல்லாம் கண்டக்ட் பண்ணுவாங்க.பயனுள்ளதாக இருக்கும். இப்போதுதான் வளர்ந்து வரதால சியுடிஎன்-க்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாணவர்கள் நிறைய கற்றுக் கொள்ள இங்க இருக்க உபகரணங்கள் உதவும்.

வெங்கடேஸ்வரி (வேதியியல் இரண்டாமாண்டு, தஞ்சாவூர்) 

நான் ப்ளஸ் டூவில் 75%க்கு மேல  மார்க் எடுத்தேன். இங்க படிச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னங்க. இருந்தாலும், 'ஹாஸ்டல் ஒத்துக்குமா? அஞ்சு வருடம் தொடர்ந்து படிக்கணுமே...?'ன்னு  கேள்வி வந்துச்சு. சேர்ந்ததுக்கு அப்புறம் அந்த கவலை இல்லை. நான் சேர்ந்தப்ப 3௦ சீட் ஒரு கிளாசுக்கு.  Sc/St 15 பேர்,  Obc 8 பேர்,  General Quota 7 பேர் என்ற முறையில்தான் சேர்த்தாங்க. இப்பவும் அந்த சிஸ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் மூணு வருசத்துக்கு படிப்பு சம்பந்தமா கவலை இல்லை.

நுழைவுத் தேர்வில் தேர்வாகிற நபர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதில் தேர்வாகிற நபர்கள் இங்கு படிக்க தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒருகிணைந்த முதுகலை படிப்பில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்" என்றார். 

ஏப்ரல் ஆறாம் தேதி துவங்குகிற ஆன்லைன் விண்ணப்பம் மே ஐந்தாம் தேதியோடு முடிவடைகிறது.  நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டு 21.௦5.2௦15 முதல் தரப்படுகிறது. மத்திய பல்கலை கழகத்துக்கான நுழைவுத் தேர்வு ஜூன் ௦6 & ௦7 தேதி. ஜூன் 2௦ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு. இந்த தேர்வு முறை  பெரும்பாலும் அப்ஜெக்டிவ் டைப் தேர்வாகவே இருக்கும். 

 மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைகழகம் இருந்தாலும் அங்கே போட்டி அதிகம் காணப்படும். அங்கே நுழைவு தேர்வு எழுதி மாணவர்கள் இங்கு வந்து படிக்கலாகின்றனர். அவர்களுக்கு போட்டியாக நாளைய தமிழகத்தை தாங்கப் போகிற, இந்தியாவை வலுப்படுத்தப் போகிற தமிழகத்து மாணவர்களும் நிறைய பேர் இதற்கு விண்ணபித்து சியுடிஎன்-னை நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கையில் அந்த வளாகத்தை விட்டு வெளி ஏறினோம். சவாலை சந்தியுங்கள்.

 மத்திய பல்கலை நுழைவுக்கான இணையதளம் : http://www.cucet2015.co.in/





உத்தம வில்லன்களுக்கு தடை வருமா?

ற்போதைய  தமிழர் வாழ்வில் தினமும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும், கட்சி பொதுக்கூட்டமும் , நடைபெறாத நாட்களை விரல் விட்டு என்னும் அளவிற்கு அன்றாடம் மாவட்ட வாரியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள்  (மக்களுக்காகவாம்) போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அதிகமாகவே இருக்கும் என மக்களுக்குத் தெரியும். உலகிலேயே அதிகமான ஆர்ப்பாட்ட  அரசியலாளர்கள் தமிழகத்தில்தான் இருக்க வேண்டும். விமானத்தில் இருப்பவர்கள் கூட தமிழக எல்லைக்கு வந்து விட்டோம் என சொல்லும் அளவிற்கு வானுயர வைக்கப்படும் ப்ளெக்ஸ் போர்டுகளும், ஆர்ப்பாட்ட அரசியலும் தமிழகத்திற்கே சொந்தம்.

போராட்டமும், ஆர்ப்பாட்டமும்,  வன்முறையும், போலீஸ் அத்துமீறலும், துர்மரணங்களும் அரங்கேறி போராட்டத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளி விடுகின்றன. மக்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துப்  போராட்டம் என்ற பெயரில் இம்சிக்கும் `உத்தமவில்லன்`களாக மாறும் போராட்ட அரசியல்வாதிகள் என்றைக்குத்தான் திருந்துவார்களோ?!

இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கும் மறியல் போராட்டம் செய்யலாம், மாலையில் போலீஸ் பாதுகாப்போடு வீடு திரும்பலாம் என்பது எழுதப்படாத சட்டமாகவும், பொது மக்களுக்கு சொல்லப்படாத துக்க செய்தியாகவும் உள்ளது.  ஆனால்  மாற்றுத் திறனாளிகள்,கண் பார்வை அற்றோர் போராட்டம் நடத்தியது தமிழக வரலாற்றில் எழுதக்கூடாத கொடூரமான போராட்டம் ஆகும்.

போராட்டம் செய்த கண்பார்வை இல்லாதவர்களை, சுடுகாட்டிலும், திக்குத் தெரியாத காட்டிலும் இறக்கி விட்டு, அரசியல்வாதிகளிடம்  காட்ட முடியாத  வீரத்தை  அப்பாவிகளிடம் காட்டினார்கள் போலீஸார். 'தேர்தல் வரும் பின்னே... போராட்டம் வரும் முன்னே!' என அனைத்துக் கட்சிகளும் நாங்களும் `ரவுடி தான்யா`  என வடிவேலு சொல்வது போல, ஆர்ப்பாட்ட அரசியலில் நாங்களும் இருக்கிறோம் என வரிந்து கட்டி வருகின்றன. 

உலகில் எந்த மூலையில் தமிழன் கஷ்டப்பட்டாலும், இங்கிருக்கும் தமிழர்கள் கஷ்டப்பட வேண்டும் என்ற மன நிலையிலேதான் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நடத்துவதாக மக்கள் நினைக்கிறார்கள். எதிலும் அரசியல் விளம்பரம்  தேடும்  நம் அரசியல்  கட்சித்தலைவர்கள், இன்றைய போராட்டம் என நாள் குறித்து விடுவதால்  அன்றாடம் அலுவலகம் , அவசர வேலைக்கு செல்வோர் காலை  செய்தித்தாளில் எந்த இடத்தில் பேருந்து, எந்த ரயிலை மறிப்பார்களோ என பார்த்து விட்டுதான் வேலைக்கு செல்லும் அவல நிலை உள்ளது. 

அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர்,  பல மணி நேரம் பயணம்  செய்து, மிதிபட்டு, இடி பட்டு , தப்பி ஒரு வழியாக அலுவலகம் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. அலுவலக பிரச்னை,குடும்ப   வருமான பிரச்னை போன்றவற்றை எல்லாம் கடந்து அலுவலகம் வருவதற்குள், அரசியல் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் நடு ரோட்டில் பேருந்தை நிறுத்துவது, ரயிலை மறிப்பது , கப்பலை கவிழ்ப்பேன், விமானத்தை பறக்க விட மாட்டேன் என்ற  வீர வசனத்தோடு போக்குவரத்தைப் போர்க்களமாக மாற்றி, பொது மக்களுக்கு  அரசியல்வாதிகள் கொடுக்கும்  மன அழுத்தம் மிக அதிகமாகும். 

இந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கெல்லாம், தனியாக ராஜ மரியாதையோடு இருபது காரில் நகரே அதிரும் அளவிற்கு ஒலி எழுப்பி,  போலீஸ் பாதுகாப்போடு வீட்டிற்கு செல்ல முடியும். ஆனால் அப்பாவி பொதுமக்களுக்கோ,  இவர்கள் நடத்தும் போராட்டத்தால் வீடு செல்வது  மிகவும் சிரமமாகி விடும்.
ஆந்திராவில் வெறித்தனமாக கொல்லப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அதற்காக  பல்லாயிரம் பேர் பயணம் செய்யும் ரயிலை  மறிப்பதால் போன உயிர் திரும்பி விடுமா என்ன?  சென்னை, கிண்டியில் 20 தமிழர்களின் உயிருக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் 21 வயதான  வினோத்  என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இனி வினோத் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டாலும் ஆச்சர்யப்படத் தேவை இல்லை. இறந்த வினோத் குடும்பத்திற்கு இந்தக்கட்சியினர் இழப்பீடு தொகை கொடுத்தாலும், உயிர் கொடுத்து அவர் தம் குடும்பத்தினரை மகிழ்விக்க முடியுமா?
அன்றாட  இயல்பு வாழ்க்கையை   பாதிக்கும் எந்த  ஒரு கட்சியையும் மக்கள் விரும்புவதில்லை. இது வரை நடந்த ஆர்ப்பாட்டம்,மாநாடு என  கலந்து கொண்ட பொதுமக்கள்,கட்சியினர் பலர் விபத்தில் சிக்கி இறந்து போயுள்ளனர். அவர்களுக்கெல்லாம் பணம் மட்டுமே இழப்பீடாக   வழங்கி உயிருக்கு விலை கொடுத்து விட்டனர்.
இவர்கள் இருந்த சமயத்தில் தீவிரவாதிகள் சென்ட்ரல் நிலையத்தில் வைத்த குண்டு போல குண்டு வைத்தால் பாதுகாப்பு குறைவிற்கு யார் பொறுப்பு?. ஏற்கெனவே தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் இது போன்ற போராட்டம் நடத்த இந்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டது சரியா?? .  

சுமார் முப்பது வருடத்திற்கு முன் போராட்டம் என்றால், முன் வந்து நிற்கும் பொது மக்கள் இன்று….. இவர்கள் அரசியல் செய்ய நம்மை கஷ்டப் படுத்த வேண்டுமா?? என புலம்பும் நிலையிலும், மற்றொரு பிரிவினர் காசு கொடுத்தால் கொடி பிடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இது தானா போராட்டத்தின் மதிப்பு?.  
சமீபத்தில் வெளியான 'உத்தம வில்லன்' படம் வெளி வர தாமதம் ஆனதற்கு சாலை மறியல்  போராட்டம் நடத்தி  ரசிகர்கள்,  பொது மக்களுக்கு "வில்லனாகி"   விட்டார்கள். படம் தாமதமாக வெளிவர பொது மக்கள் ஏதும் காரணமாக இருந்தார்களா? பொது மக்கள் படம் வெளி வர தடை கோரினார்களா? சம்பந்தமே இல்லாமல் நடு ரோட்டில்  மறியல் செய்து மக்களை எங்களாலும் கஷ்டப்படுத்த முடியும் என ரசிகர்கள் நிரூபித்து விட்டனர்.
எந்த ஒரு கட்சியும்  கண்டனக்கூட்டம் ,"சாதனை" விளக்க கூட்டம், போராட்டம்  நடத்தினாலும் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனைப்பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வணிகப்பகுதி ,ரயில், பேருந்து நிலையம் போன்றவற்றையே குறி வைத்து தாக்கி மக்களை நிம்மதி இழக்கச் செய்கின்றனர்.   

போராட்டம்தான் என்றில்லை.... கட்சி பிரமுகர்  திருமணத்திற்கு வந்து சென்றால் கூட  போராட்டம் போலவே கட்சிகொடிகளும், ப்ளெக்ஸ் பேனரும், காது கிழிய வைக்கப்படும் கட்சிப்பாடல்களும்,  போராட்டமே தேவலை என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் "புகழை" நிலை நிறுத்தும். 
அரசு ஊழியர்களின் சங்க மாநாடுகளும் கட்சிகளையே தோற்கடித்து விடும் அளவிற்கு ஆடம்பரமாக நடக்கிறது.  மக்களின் குறைக்கு தீர்வு சொல்லும் நீதி மன்றங்கள் கூட போராட்டக் களமாக மாறியதும், அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களும் போராட்டத்திற்கு எதிராக போராட, நீதிமன்றம் இன்னமும் ஏன் வரவில்லை?  என்று மக்கள் நினைக்கிறார்கள்.  

போராட்டம் நடத்துவதற்கு பதில் சம்பந்தப்பட்ட ஆந்திர போலீஸ் அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் மனு அளிக்கலாம். உச்ச நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லலாம். இன்றைக்குள்ள அதி நுட்ப தொழில் வசதிகாலத்தில் இங்கலாந்தில் இருமினால் கூட நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். ஆகவே கட்சித்தலைவர்கள் போராட்டம்,ஆர்ப்பாட்டம் செய்ய பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தை தேர்வு செய்யாமல்   கட்சி அலுவலகத்திலேயே எல்லா போராட்ட கதையையும் நடத்தி அதை மக்களுக்கு  நேரடியாக பெரிய திரையில்  நேரடி ஒளி பரப்ப செய்ய முடியும்.

மேலும் செய்தி நிறுவனத்திற்கு செய்தி கொடுத்தாலும் மக்களின் பார்வையில் தொடர்ந்து இருக்கும். அப்படியே நாங்கள் களத்தில்தான் நிற்போம் என்று விரும்பினால் கருவேல மர கண்மாயை சுத்தம் செய்து அங்கு போராட்டம் நடத்தலாம், கூவக்கரையை பயன்படுத்தலாம்,. வறண்ட ஆற்றுபகுதியில் நடத்தலாம். அதை விடுத்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதும்,தற்கொலைக்கு முயற்சிக்கும் இடமாகவும், விளம்பர அரசியல்வாதிகளின் புகலிடமாகவும் மாற்ற வேண்டுமா?

எனவே போராட்டம் நடத்துவதற்கு என தனி இடத்தை அரசு ஒதுக்க  நீதிமன்றம் ஆணையிட வேண்டும். மாவட்டம் தோறும் போராட்டம் செய்ய இடம் ,பொதுக்கூட்டம் நடத்துமிடம் ஒதுக்கி அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.  போராட்டத்தை நேரடியாக உலகின் பல மூலைகளில் மக்கள் பார்க்கும் வகையில் எல்.இ. டி நவீன பெரிய திரையில் பார்க்க வைக்க முடியுமே? அதை விடுத்தது மக்களின் இயல்பு வாழ்வை நரகமாகும் போராட்டம் எந்த அளவிற்கு மக்களிடம் பெயரும்,புகழும் பெற்றுத் தரும் ?. 

நகரில் அன்றாட இயல்பு வாழ்கை, மக்களை பாதிக்கும் போக்குவரத்து நெரிசலை கொடுக்காத வகையில் அணைத்து கட்சிகளும் முடிவெடுக்க வேண்டும். சாலை மறியல்,ரயில் மறியல் செய்வோர் ஜாமீனில்   வெளி வர முடியாதபடி சட்ட சீர்திருத்தம் தேவை. காலையில் கைது செய்து மதியம் போலீஸ் பிரியாணி சாப்பாடு   போட்டு  மாலையில் பாதுகாப்போடு அனுப்பும் என்ற நம்பிக்கையில் பலரும் இயல்பு வாழ்க்கையை இம்சிக்கின்றனர். 
யார் பலசாலி, பெரியவர் என்ற மோதலை  கட்சிகள்  காண்பித்தால் தேர்தல் வரும் போது  மக்கள்  பலத்தை காண்பித்து  5 வருடம்  அரசியலில் ,போராட்டத்தில் இருந்து விடுதலை கொடுப்பார்கள் என்பதே  உண்மை.
மக்களுக்காகத் தான் போராட்டம் என்று சொல்லும் இவர்கள், மக்களை கஷ்டப்படுத்தி யாரைத்தான் வாழ வைக்கப்போகிறார்கள் ?  போராட்டமும்,பொதுக்கூட்டமும் முடிவுக்கு வரட்டும். போராட்டத்தால் யாருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ, நஷ்டம் மக்களுக்குத் தான் .