சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2015

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -2 ( புதிய தொடர்)

ன்னுடைய பதின்ம வயதின் தொடக்கத்தில் சென்னையில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக சென்னை மின் வாரியக் கட்டடம் இருந்தது. அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அதில் என் அப்பா வேலை பார்த்தார். என் தந்தை பாலகிருஷ்ணன் அப்போது மின்வாரியத்தின் சென்னை செயலகத்தில் நல்ல பொறுப்பில் இருந்தார். இப்போதிருக்கும் 10 மாடி மின்வாரியக் கட்டடம் அப்போது இல்லை. அதற்கு அருகே ஒரு நான்கு மாடிக் கட்டடம் மட்டும். அதில்தான் மின்வாரிய செயலகம் செயல்பட்டது. அப்படி அவரைப் பார்க்கச் சென்றபோது எனக்கு அந்தக் கூவம் படகுப் பயணம் வாய்த்தது. 

அது 1975-ம் வருடம். சீருடை அணிந்த படகோட்டிகள் படகில் இருந்தனர். நான், 'படகில் போகலாம்பா...!' என்று அப்பாவிடம் அடம்பிடித்தேன். அவர் படகையும், என்னையும், கூவத்தையும் மாறி மாறிப் பார்த்தார். ஒரு முடிவுக்கு வந்தவராகப் படகுத் துறையை நோக்கி நடந்தார். டிக்கெட் வாங்கிக்கொண்டு படகில் ஏறினோம். அந்தப் படகோட்டியும் என்னைப் போலவே சந்தோஷப்பட்டதை என்னால் மறக்கவே முடியாது. இருவரையும் ஏற்றிக்கொண்டு அந்தத் துடுப்புப் படகு, மெல்ல அசைந்து அசைந்து அந்த கரிய நீரில் மிதந்தது. படகில் ஏறியதும் எல்லோரையும்போல தண்ணீரில் கையைவைக்க நினைத்தேன். அப்பா,  'தண்ணீரைத் தொட்டுவிடாதே...!' என்று தடை உத்தரவு போட்டார். தண்ணீரைத் தீண்டாமல் எப்படி பயணிப்பது? கைகளைக கட்டிவிட்டு நீந்தச் சொல்வது, ஹாண்டில் பாரைத் தொடாமல் பைக் ஓட்டுவது போன்ற சிரமம்தான் நீரில் கைபடாமல் படகில் பயணிப்பது. கூடவே அதிர்ச்சிகரமான முடிவை அப்பா எடுத்தார். 'அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிடலாம்!' என்றார். 
 
மின்வாரியத்துக்குப் பின்னால் படகில் ஏறி, கெயிட்டி திரையரங்கு அருகில் இறங்கிவிட்டதாக நினைவு. அவ்வளவு சிறிய பயணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் அப்பா போதும் என்று சொல்லிவிட்டார். 

கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே, கூவத்தின் சகிக்க முடியாத வாசனையைப் பொறுத்துக்கொண்டு அதில் அப்பா பயணித்தார் என்பதை வெகு நாட்களுக்குப் பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் பொறுத்தவரை படகில் பயணிக்க சந்தோஷம் மட்டும்தான். அரசியல் பாசமோ, வாசமோ எதுவும் அப்போது தெரியவில்லை. அப்பாவுக்கு தி.மு.க மீது இருந்த பாசத்தையும் மீறி, படகில் ஏறிய அடுத்த நிறுத்தத்திலேயே இறங்க வைத்துவிட்டது கூவத்தின் நாற்றம். அது மட்டும் அல்ல; கூவம் படகுப் பயணத்துக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. படகில் ஏறிச் செல்பவர்களையும் பலரும் விநோதமாகப் பார்த்தனர் என்றே இப்போது உணர்கிறேன்.
அந்தப் படகுத் துறைகள் ஸ்பெர்டாங்க் ரோடு, கிரீம்ஸ் ரோடு, காயிதே மில்லத் கல்லூரி, கெயிட்டி தியேட்டர் என நான்கு அல்லது ஐந்து இடங்களில் சிலகாலம் இயங்கியது. கூவத்துக்கு வரும் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதில் பெருத்த சிரமம் இருந்ததால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. சீருடை அணிந்த படகோட்டிகள் என்ன ஆனார்கள், அந்தப் படகுகள் எங்கே... ஒரு மாபெரும் முயற்சியின் அத்தாட்சியாக அந்தப் படகுத் துறைகளின் சிதலங்கள் இப்போதும் இருக்கின்றன. மீண்டும் கூவத்தைக் குளிப்பாட்ட அடிக்கடி ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வரும்போதெல்லாம் இந்த ஆற்றின் அழுக்காற்றை சீர்படுத்தி அழுக்காறு (பொறாமைகொள்ளுதல்) ஏற்படுத்துவார்களா? என என் நெஞ்சம் பதைக்கும்.
இந்தத் தொடரை வரவேற்று பலரும் கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் குமார் என்பவரின் கடிதம் எனக்கும் கூவத்தில் மீன் பிடிக்கச் சென்ற நினைவுகளை ஏற்படுத்தியது. மழை நாளில் அமைந்தகரைக்கு (ஆற்றங்கரையில் அமைந்த அந்த ஊருக்கு என்ன அழகான பெயர்?) அந்தப் பக்கத்தில், கூவத்தில் நல்ல நீர் ஓடும். துணி சலவை செய்பவர்களுக்கு அதுதான் இடம். இல்லாவிட்டால் சைதாப்பேட்டை ஆற்றில் தோய்ப்பார்கள். அமைந்தகரை ஆற்றின் ஓரத்தில் சுரப்பு நீர் எடுத்துக் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். மழை நாட்களில் மீன்கள் எதிர் திசையில் துள்ளும். என் வயது பையன்களோடு வந்து மீன்பிடிக்கும் பெரியவர்களை பார்த்துக்கொண்டிருப்போம். மீன் சிக்கிவிட்டால் எங்களுக்கே கிடைத்துவிட்டது மாதிரி திருப்தி. இன்னொரு வாசகர் கூவம் உருவாகும் இடத்தில் அதன் பெயர் கூபம் என்று தெரிவித்திருந்தார். உண்மைதான். கூபம் என்றால் ஆழமான நீர்நிலை என்று அர்த்தம். 

இப்போது ஸ்கை வாக் மால் இருக்கும் இடத்தில் அப்போது அருண் ஓட்டல் இருந்தது. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் வடபழனி கோயில் கோபுரம் நன்றாகத் தெரியும். இடையில் பெரிய அளவில் வீடுகள் இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். நெல்சன் மாணிக்கம் சாலையை, லயோலா கல்லூரியோடு இணைக்கும் அந்த அண்டர் கிரவுன்ட் பாலம் அப்போது கட்டப்படவில்லை. ஒரு ரயில்வே கேட் மட்டும் இருக்கும். அதை திறக்கும் சிறிய இடைப்பட்ட நேரத்தில் வாகனங்களும் ஆட்களும் எதிரும் புதிருமாகக் கடப்பார்கள். ஒரு நகரம் வளர்வதற்கு சாலைகளும் பாலங்களும் எத்தனை அவசியம்...? சென்னையில் ரயில்வேக்களுக்குக் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள் அத்தனையும் அந்த வளர்ச்சியின் அடையாளங்கள். கூவத்தின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்களுக்கு அடுத்து ரயில் குறுக்கிடும் இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டன.

சென்னையில் எழும்பூரில் உள்ள ரயில்வே பாலமும் சென்னை ஈகா தியேட்டருக்கு எதிரே இருக்கும் பாலமும் என் வயதுக்கு மூத்தவை. அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. பிரிட்டீஷார் காலத்தவை. மற்ற பாலங்கள் பெரும்பாலும் 1970-களுக்குப் பிறகு கட்டப்பட்டவை. அதற்கு முன்னால்? ரயில்வே கேட்டுகள்தான். நேரு பார்க் அண்டர் கிரவுண்ட் பாலம், துரைசாமி பாலம், மாம்பலம் பாலம் எல்லாமே 70-களுக்குப் பிறகு கட்டப்பட்டவைதான். மக்கள் கேட்டுகளுக்குள் புகுந்து ரயில் வருவதற்கு முன் கிராஸ் செய்வார்கள். சைக்கிளை, மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். கோடம்பாக்கம் பாலம் 1965-ல் கட்டி முடிக்கப்பட்டது. அதுவரை அந்தச் சாலை கேட்டைக் கடந்துதான் எல்லா நடிக, நடிகைகளும் ஸ்டுடியோக்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். கேட் திறக்கிற வரை காரில் அவர்கள் அமர்ந்திருப்பார்கள். தங்கள் அபிமான நட்சத்திரங்களை மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். 

அதன்பிறகு ஏற்பட்ட மக்கள் நெரிசல் இன்னொரு தேவையை உணர்த்தியது. இரண்டு சாலை சந்திக்கும் இடங்களிலேயே ஒரு பாலம் கட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. அப்படி முதன்முதலில் சென்னையில் கட்டப்பட்ட பாலம்தான் ஜெமினி பிரிட்ஜ் (எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஜெமினி ஸ்டூடியோவுக்கு அருகில் இருந்ததால் இந்தப் பெயர்). அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்
இந்த மேம்பாலம் 1973-ல் கட்டி முடிக்கப்பட்டது. சாலையைக் கடக்க சாலையின் குறுக்கே ஒரு பாலம் கட்டுவது கடந்த 10, 15 ஆண்டுகளில் சென்னையின் அபரிமிதமான வேகத்துக்கு ஈடுகொடுத்தது எனலாம். அண்ணா மேம்பாலத்தைக் கட்டி முடித்து அதை திறந்து வைத்தபோது அன்றைய முதலமைச்சர் இன்னொரு மாற்றத்தையும் கொண்டுவந்தார். அண்ணா மேம்பாலம் திறப்பு விழா 1.7.1973 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சாதிக்பாட்சா தலைமை தாங்க, அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மேம்பாலத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள எல்லா பாலங்களுக்கும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

அன்று கலைஞர் பேசியது இது:

''சென்னை மாநகருக்கு புதிய எழில் ஊட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை.

ஏனென்றால் அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு, அதை ஏன் வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால், நம்முடைய சமுதாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால், இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.
அந்த வகையில்தான் இன்று இந்தப் பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயரை நாம் வைத்திருக்கிறோம். இந்தச் சாலையின் பெயர் அண்ணாசாலை; இந்தச் சாலையில்தான் அண்ணா சிலை இருக்கிறது. இந்தச் சாலை முடிந்த பிறகு அங்கேயிருந்து சென்றால் அண்ணா அவர்களுடைய கல்லறை இருக்கிறது. "மர்மலாங்" பாலத்தில் இருந்துதான் அண்ணா சாலை ஆரம்பமாகிறது.

மர்மலாங் என்ற பெயர்கூட ஒரு டச்சுக்காரருடைய பெயர் என்று கேள்விப்பட்டேன். மர்மலாங் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில்தான் மறைமலை அடிகளார் வாழ்ந்தார். ஆகவே மர்மலாங் பாலம் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் இனிவரும் காலத்தில் "மறைமலை அடிகளார் பாலம்" என்று மாற்றப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

அடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரால் அழைக்கப்படும். வாலாஜா பாலத்திற்கு "காயிதே மில்லத்" அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டு, அந்தப் பாலம் காயிதே மில்லத் பாலம் என்று அழைக்கப்படும். காமராஜருடைய சிலைக்கு அருகாமையிலே இருக்கிற வெலிங்டன் பாலம் பெரியார் அவர்களுடைய பெயரால் அழைக்கப்படும்.

அதைப்போல "ஆமில்டன்" பாலத்திற்கு ஏதேதோ பல பெயர்கள் மாற்றப்பட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும். (இன்றும் சிலர் அதை அமட்டன் வாராவதி என்பார்கள்) அந்தப்பாலம் அம்பேத்கார் பாலம் என்று அழைக்கப்படும். பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள். பெயரில் தமிழ் இருக்கிறது; தமிழ் உணர்வு இருக்கிறது; சமுதாய எழுச்சி இருக்கிறது'' என்று பெருத்த கரகோஷங்களுக்கு இடையே பேசி முடித்தார்.

ஒரு பாலம் அன்று பல தலைவர்களின் பெயர்களில் புதிய பாலங்கள் பிறக்க வழி செய்தது. சரியாக 60 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ட்ராம் ஓடிய காலம் ஒன்று இருந்தது. நிதானமாக தண்டவாளத்தில் ஓடிய ஒரு பேருந்து அது. டிங் டின் என மணி அடித்துக்கொண்டு அது சென்னை சாலைகளில் போகும். பத்தடி தூரத்தில் வரும்போதும் மக்கள் அதை அலட்சியமாகக் குறுக்கில் கடந்து போவார்கள். 

என் அப்பா சொல்லுவார். ட்ராம் வண்டி முடிவுக்கு வந்த நேரத்தில், தந்தை பெரியார் ஒரு முடிவெடுத்தார்.  அது அடுத்த அத்தியாயத்தில்...


No comments:

Post a Comment