சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jun 2015

கராத்தே வீரர் கையில் இந்திய கிரிக்கெட் அணியை ஒப்படைக்க காரணம் என்ன?

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் ஹர்பஜன் சிங் இருக்கையில் வெறும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானேவை இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்க பல காரணங்கள் இருக்கின்றன.

முதலில் ரஹானே அமைதியானவர். இவரை பற்றி எந்த சர்ச்சையும் கிடையாது. கோலியை போல அடாவடி கிடையாது. தோனியை போல் வாயையும் அடிக்கடி திறந்து சர்ச்சையில் சிக்கும் பழக்கம் கிடையாது. கூச்ச சுபாவம் கொண்ட ரஹானே, எதையும் பேட் மூலம்தான் எதிர்கொள்வார். சிறுவயது முதலே பெற்றோர்க்கு அடங்கிய பிள்ளை. இவரது கூச்ச சுபாவத்தை போக்க, அவரது தந்தை இளம் வயதில் கராத்தே வகுப்பில் சேர்த்து விட்டார். அதில், ஜுனியர் பிரிவில் 'பிளாக் பெல்ட்' வாங்கிய பின்னர் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த ரஹானேவின் வலுவான ஷாட்கள் பிரமிப்பை ஏற்படுத்தியவை. கடந்த ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையடினார். அந்த அணியின் ஆலோசகரான ராகுல் டிராவிட்டின் அறிவுரைகள், ரஹானேவை மேலும் மேலும் பட்டை தீட்டியது. ரஹானே அமைதியான குணம் கொண்டிருந்தாலும் கேப்டனாக சிறப்பாக பிரகாசிக்க முடியுமென்று நம்புகிறார். இது குறித்து ரஹானே கூறுகையில், ''கராத்தேவில் சேர்ந்த போதும் என்னை கேலியும் கிண்டலும் செய்னதர். அதில் சாதித்தது போல் கேப்டன் பதவியிலும் சாதிப்பேன்" என்கிறார்.

இந்திய அணியை பொறுத்த வரை விரைவில் தோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக் கூடும். அதற்கு பின், கோலி கையில் முழுமையாக கேப்டன் பொறுப்பு ஒப்படைக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது, கோலிக்கு நல்லதொரு துணை தேவை. அதற்கு தயார்படுத்தும் விதத்தில்தான் இந்த கராத்தே வீரன் கையில் இந்திய அணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஹர்பஜனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டால், ரஹானேவுக்கு கேப்டனாக தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஹர்பஜன் கிட்டத்தட்ட ஓய்வை நெருங்கி விட்டவர். அணிக்கே அவ்வப்போதுதான் அவர் தேர்வு செய்யப்படுகிறார். இந்திய அணிக்கு வருங்காலத்தில் நல்ல கேப்டனை உருவாக்கும் பொருட்டே மகராஷ்டிராவை சேர்ந்த 27 வயது ரஹானேவை தேர்வுக்குழுவினர் நியமித்துள்ளனர்.


பாகுபலியை மிஞ்சும் பிரமாண்டம், ஷங்கர், ரஜினி படம் பற்றிய புதிய தகவல்கள்.

இந்தியசினிமா வரலாற்றில் அதிகப்பொருட்செலவு மட்டுமின்றி மிகப்பிரம்மாண்டமாகவும் தயாரான படம் என்று பாகுபலியைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதை முறியடிக்கும் வண்ணம் தமிழ்த்திரைப்படம் ஒன்று தயாராகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழில் வேறுயார்? இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம்தான் அது என்று சொல்கிறார்கள். இந்தப்படத்தில் ரஜினி தவிர இன்னொரு பெரியநடிகரும் இருக்கிறார் என்றும் அவர்  இந்தியத்திரைப்படங்கள் எதிலும் இதுவரை நடிக்காதவர் என்றும் ஆனால் எல்லோருக்கும் அவரைத் தெரியும் என்றும் சொல்கிறார்கள். அவரிடம் இந்தப்படத்தில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

அவர் எப்படியும் சம்மதம் சொல்லிவிடுவார் என்றும் இப்போதே சம்மதம் சொல்லிவிட்டார் என்றும் இரண்டுகருத்துகள் இருக்கின்றன. அதேபோல் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவும் ஒரு இந்திநடிகையிடம் பேசிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை எந்தப்படத்திலும் இல்லாத வகையில் இந்தப்படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் சம்பளமே சுமார் நூறுகோடியைத் தொடும் என்று சொல்லப்படுகிறது. 

அதுமட்டுமின்றி இந்தப்படத்துக்காக ஒருவரை ஒப்பந்தம் செய்யும்போதே இது சுமார் இரண்டாண்டுகள் நடக்கவிருக்கும் படம். அதுவரைக்கும் நீங்கள் இந்தப்படத்தில்தான் இருக்கவேண்டும் என்று சொல்லியே ஒப்பந்தம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.
இயக்குநரின் ஷங்கருக்கான சம்பளமும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய சம்பளம் என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு தெரியுமா? இருபதுகோடி என்று சொல்லப்படுகிறது? இது உண்மையாக இருந்தால் இதுவே பெரிய சாதனைதான்.



'இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு...!' - டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதா

சிறு இடைவெளிக்குப்பின் ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் '36 வயதினிலே'. இதில் ஜோதிகாவிற்கு குரல் கொடுத்திருப்பவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதா.
'துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'குஷி', 'பஞ்ச தந்திரம்', 'தூள்', 'சில்லுனு ஒரு காதல்', 'சந்திரமுகி', 'தெய்வ திருமகள்',' வேலையில்லா பட்டதாரி' படங்களின் கதாநாயகிகளுக்கு குரல் இரவல் தந்து, தமிழக ரசிகர்களை தன் குரலால் கவர்ந்தவர் சவிதா.
அவருடன் ஒருவர் சந்திப்பு...

உங்களைப்பற்றி?


சொந்த ஊர் பாண்டிச்சேரி. ஆனால், படிச்சதெல்லாம் சென்னையில்தான். எத்திராஜ் கல்லூரியில என்னோட யூ.ஜி படிப்பை முடிச்சேன். வீட்ல படிப்புத்தான் முக்கியம்னு சொன்னதால, வீக் என்ட்ல மட்டும் டப்பிங்ல இருப்பேன். அதுக்கப்புறம், அண்ணாமலை யுனிவர்சிடியில எம்.பி.ஏ முடிச்சிட்டு, முழுக்க முழுக்க டப்பிங்கில் இறங்கிட்டேன். சங்கர் சாரோட 'ஜீன்ஸ்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசி நான் பெரிய அளவுல பாப்புலர் ஆனதும் இந்த படத்துலதான். 'வாலி' படம் மூலமா சிம்ரனுக்கு வாய்ஸ் கொடுத்து, இன்னும்  பல பேரோட பாராட்டை வாங்கினேன். 'ஜீன்ஸ்', 'வாலி' படம் பண்ணும்போது கல்லூரி படிச்சிட்டு இருந்தேன்.

சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது உங்களுக்கு?

கர்நாடக பாடகி பி.எஸ். பத்மாவதி என்னோட பாட்டி. அவங்களோட ஒருமுறை கச்சேரிக்கு போயிருந்தேன். கச்சேரிக்கு வந்திருந்த ஒருத்தர் அவங்க படத்துக்கு டப்பிங் கொடுக்க செலக்சனுக்கு கூப்பிட்டிருந்தாங்க. அப்போ நான் 3 - ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அங்கதான் என்னைப்பார்த்துட்டு படத்தில் வாய்ஸ் கொடுப்பதற்கான விருப்பத்தைக்கேட்டாங்க. அப்படித்தான் எனக்கு  'மந்திரப்புன்னகை' படத்துல குழந்தை நட்சத்திர வாய்ஸ் ஆர்ட்டிஸ்டுக்கான வாய்ப்பு கிடைச்சது.

வாங்கிய விருதுகள் ?

அதற்குப்பிறகு, 'காதல் பரிசு'  படத்துலயும் குழந்தை நட்சத்திர வாய்ஸ்க்கான வாய்ப்பு கிடைச்சது.  மூன்று முறை ஆந்திரப்பிரதேஷ் நந்தி அவார்டு, மூன்று தமிழ்நாடு அரசு விருதுனு நிறைய வாங்கியிருக்கேன். சந்திரமுகி, பிரியமானவளே, பல படங்கள் என்னால மறக்கமுடியாத படங்கள்.  பலதடவைப் பார்த்த படங்கள்ள 'சந்தோஷ் சுப்ரமணியம்' மற்றும் மணிரத்தினம் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா படங்களிலும், பஞ்சாபி, குஜராத்தி போன்ற பிற மொழி டாக்குமெண்ட் படங்களிலும் பேசியிருக்கேன்.
உங்கள் குடும்பம் பற்றி?

என்னுடையது காதல் திருமணம். வீட்ல பிரச்னைகள் இருக்கத்தான் செய்தது. இப்போ நாங்க கூட்டுக்குடும்பமா இருக்கோம். என் கணவர் பிசினஸ் பண்றார். எங்களுக்கு ஸ்ரீங்கா, ஷேனானு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க.

சினிமாவில் உங்கள் பாடல்?

நிறைய சினிமா பாடல்களில் இடையிடையில் பேசியிருக்கிறேன். 'என் சுவாசக்காற்றே' படத்தில் தீண்டாய் மெய் தீண்டாய்..'' பாடலில்

இடையிடையே கன்றும் உண்ணாது : கலத்தினும் படாது :
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு:
எனக்கும் ஆகாது : என் ஐ க்கும் உதவாது :
பசலை உணீ இயர் வேண்டும் :
 திதலை  அல்குல் என் மாமைக்  கவினே' என்கிற வார்த்தையைப் பேசியிருப்பேன். 

'மஜா' படத்தில்' சீச்சீ சீச்சீ சீச்சீ ...'என்னப்பழக்கமிது சின்னப்புள்ளப்போல...' என்ற பாடலிலும் பேசியிருக் கிறேன்.

உங்களுக்குப் பிடித்த நடிகர்கள்? 

தெலுங்கில் ராம்சரண், சாய் கபூர் பிடிக்கும். தமிழில் மாதவன், 'மெளனராகம்' கார்த்திக், 'இதயத்தை திருடாதே' நாகார்ஜூனா பிடிக்கும்.

டப்பிங் பேசுவதில் யாரிடமாவது திட்டுவாங்கிய அனுபவம்?

இதுவரைக்கும் என்ன வேஸ்ட்னு யாரும் திட்டினது இல்ல... என் கணவர் என்னை, 'நீ வீட்ல புலி வெளியில எலி என கிண்டலடிப்பார்.

வட்டார மொழிகளை வாய்சில் கொண்டுவர மெனக்கெடவேண்டுமே. அப்படி எப்போதாவது சிரமப்பட்டதுண்டா?

'டும் டும் டும்' , 'அழகி', 'பிதாமகன்'  போன்ற பல படங்கள்ள வட்டார மொழி பேசியிருக்கேன். 'பிதாமகன்' படத்தில் இலங்கை மட்டக்களப்பு பாஷை பேசினேன். ரொம்ப கஷ்டமா இருந்தது. இதுக்கென ஒரு மொழி டிரெயினரை அழைச்சிட்டு வந்தாங்க.  பொதுவா, ஷூட்டிங்கில் ஹீரோ யின் சாதாரண தமிழில்தான் பேசியிருப்பாங்க. அந்த லிப் மூவ்மெண்ட்டுக்குத் தகுந்த மாதிரி அவங்க பேசி முடிக்கிற அந்த நேரத்துக்குள் வார்த்தையை பேசி முடிச்சாகணும். இதுக்கு டிரெயினிங் எடுத்துட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பேன். அதெல்லாம் ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ்.'

நல்லா பேசுறீங்க... சமையல்ல எப்படி?

மாங்காய் சாம்பார் நல்லா சமைக்க வரும். சாப்பிட ரொம்ப பிடிக்கும்.

வெளிநாட்டு பயணம் பற்றி?

பயணம் என்கிறதைவிட 'ஸ்டே'னே சொல்லலாம். சில வருஷத்துக்கு முன்னாடி கிட்டத்தட்ட  மூணு வருஷம் அமெரிக்காவுலதான் இருந்தேன். இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு, அப்புறம்  பேக் டூ இந்தியா. எனக்கு இந்த சொர்க்கம்தான் பிடிச்சிருக்கு. ஐ லவ் இந்தியா!' ஸ்மைலோடு முடிக்கும் சவிதாவுக்கு நாட்டியம், ஓவியம், என இன்னும் சில விஷயங்களிலும் திறமையானவராக இருக்கிறார்.


இன்று மட்டும் 24 மணி நேரம் + 1 நொடி! பாதிப்பை ஏற்படுத்துமா லீப் செகண்ட் ?

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று மட்டும் 24 மணி நேரம் + ஒரு நொடி கூடிதலாக இருக்கும். அதை தான் லீப் செகண்ட் என்கிறோம். அதாவது இன்றைய நாளின் கடைசி நிமிடத்துக்கு மட்டும் 61 நொடிகள் என்ற அளவில் கணக்கிடப்படும். இதற்கு காரணம் நாம் ஒரு நாளை 84600 நொடிகள் என்று தான் கணக்கில் எடுத்து கொள்கிறோம். ஆனால் பூமியோ ஒரு நாள் என்பதை 84600.002 நொடியாக தான் ஒரு சுழற்சிக்கு எடுத்து கொள்கிறது. அதனால் இது போன்ற லீப் செகண்டை ஜூன் 30 அல்லது டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு ஆண்டில் சேர்க்கும் முறை 1972ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1972ம் ஆண்டு முதல் இதுவரை 25 நாட்கள் லீப் செகண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று சேர்க்கப்படுவது 26வது முறையாகும். இதில் ஜூன் 30ம் தேதி 10 முறையும், டிசம்பர் 31ம் தேது 15 முறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நொடி எப்படி சேர்க்கப்படுகிறது எனில் 23:59:59 என முடிந்து 00:00:00 என துவங்குவதற்கு இடையே ஒரு நொடி அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பாடு துவங்கவதன் மூலம் ஒரு நொடி பூமியின் சுழற்சியோடு ஒத்துப்போக வழிவகை செய்கிறது.
லீப் நொடியால் பாதிப்பா?
 1972ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப் நொடி கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியோடு சேர்க்கப்பட்டது. அந்த நாளில் பல பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தன.  மிகப்பெரிய நிறுவனங்களான மொஸில்லா, ரெடிட், ஃபோர் ஸ்கோயர், யெல்ப், லிங்க்டுஇன் மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி முடங்கிபோயின. லினெக்ஸ் செயல்பாடுகள் முடங்கிபோனது பாதிப்புக்கு காரணமாகின. மேலும் சில ஜாவாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் முடங்கின. 
 
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதற்கு காரணம் லீப் நொடியால் குவாண்டாஸ் செக் இன் செயலிழந்து போனது என கூறப்பட்டது.
இந்த வருடம் என்ன ஆகும்?
 2015ம் ஆண்டு தற்போது ஜூன் 30ம் தேதி இந்த லீப் செகண்ட் மீண்டு வருவதால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் நாங்கள் இந்த ஒரு நிமிடத்தை கடக்க புதிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு முன்னதாக கூகுள் அனைத்து சர்வர்களும் இணைய துவங்கும் இந்த செயல்பாடு முடியும் போது லீப் நொடி கடக்கப்பட்டிருக்கும் என கூகுள் கூறியுள்ளது. 
 
அதேபோல அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது என்பதால் அமெரிக்க பங்குச் சந்தை இந்த லீப் நொடியை மறுநாள் புதன்கிழமை சந்தை ஆரம்பிக்கும் நேரத்துக்கு முன்னதாக கணக்கில் சேர்த்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்டர்கான்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் இந்த லீப் நொடி எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் எங்கள் பங்கேற்பாளர்களுக்கு எங்களால் உத்ரவாதம் அளிக்க முடியாது என கூறியுள்ளது.
 அதனால் இந்த வருடம் சில நிறுவனங்களும், சில வர்த்தகங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. பூமியின் சுழற்சி சரியாக பிரிக்கப்படாததால் இந்த நொடியை சேர்த்தே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. இல்லையெனில் பூமியின் சுழற்சியில் நாம் ஒரு நொடியை நாம் இழக்க நேரிடும். அதனால் நாம் வாழ்க்கையில் ஒரு நொடி காணமல் போக வாய்ப்புள்ளது என்கின்றனர் அறிவியல் வல்லுணர்கள். இன்று சர்வதேச அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் இந்த லீப் நொடியில் செல்ஃபி எடுக்க தயாராக இருப்பதாக கூறுகிறது இன்னோரு கூட்டம். எப்படியோ இன்று மட்டும் ஒரு நாள் 24 மணி நேரம் இல்லை 24 மணி நேரம் + 1 நொடி.



இறக்கும் நேரத்திலும் இந்திய நுகர்வோரைப் பற்றி சிந்தித்த தேசிகன்!

'இப்போ என்னை கடவுள் கூப்ட்டுக்கிட்டாலும் போய்டுவேன். ஆனா நான் செய்ய வேண்டிய வேலைகள் சிலது இருக்கு. அது எல்லாம் என்னோட வேலை கிடையாது. இந்திய நுகர்வோருக்கு, நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தணும். இதுக்காக அரசுக்கு சில ப்ரோப்பசல்ஸ் எழுதியிருக்கேன். அத திங்கட்கிழமை போய் கொடுத்திடு' -இதுதான் என் கணவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள். கடந்த சனிக்கிழமை காலமான தேசிகனின் மனைவி நிர்மலா தேசிகன் தொடர்ந்து பேசுகிறார்.

"மொதல்ல மும்பையில இருந்தோம். திருமணமாகி சென்னை வந்த புதுசுல ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் புதிய அம்பாஸிடர் வாங்க ஆர்டர் கொடுத்து, டெலிவரி வாங்கச் சென்ற பொழுது, கார் கதவின் மேல் அவர் கை வைத்தார். அது பினிசிங் சரியில்லாததால் கூர்மையாக இருந்த பாகம் அவரின் கையை கிழித்து ரத்தம் கொட்ட துவங்கி விட்டது. கோபமாக டீலரிடம் கேட்டால், அவரோ அசால்ட்டாக, 'சார்... நீங்க கொடுத்துவச்சவங்க. உங்களுக்காவது கார் கதவுலதான் பிரச்னை. சில பேருக்கு இன்ஜின்ல பிராப்ளம் ஆகி, வண்டி ஸ்டார்ட் ஆகவேயில்ல தெரியுமா?' என்று கேட்டான். அன்றிலிருந்து நுகர்வோர் சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கியவர், தன் இறுதி மூச்சுவரை அதற்காகவே உழைத்தார்.


'சவுத் மெட்ராஸ்' என்ற நாளிதழை நடத்தினோம். அதே பெயரில் எஸ்.எம்.என். கன்ஸ்யூமர் ப்ரொடொக் ஷன் கவுன்சில் ஆரம்பித்தோம். அந்த நாளிதழில் கன்ஸ்யூமர் நியூஸை ஹைலைட் செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பின்னர் இந்த கவுன்சிலிருந்து ஒவ்வொருவராக விலக, மொத்தமாக மூடுவதற்கு பதிலாக அதனையே 'கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா' என்ற பெயரில் புதுப்பித்து தொடர்ந்தோம்.

இதை நாங்கள் ஆரம்பித்தன் முக்கிய நோக்கமே 'கன்ஸ்யூமர் ப்ரோடெக்ஸன் ஆக்ட்' என்ற சட்டம் வந்தது கன்ஸ்யூமர்களுக்கு தெரிய வேண்டும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய உரிமைகள் என்ன? எப்படி தங்களுக்கான தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்? எதற்கெல்லாம் போராடலாம்? எந்தெந்த வசதிகளை கேட்டு பெற உரிமையிருக்கிறது? என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். 

நிறைய செமினார், ட்ரைனிங் ப்ரோக்கிராம், வொர்க்ஷாப் போன்றவை எல்லாம் நடத்துவோம். கன்ஸ்யூமர் யாராவது பிரச்னை என்று கம்ப்ளைன்ட் செய்தால் அவர்களுக்கு உதவுவோம். ஆரம்பத்தில் நீதிமன்றத்துக்கும் சென்று கொண்டிருந்தோம். ஆனால், தற்போது செல்வதில்லை. நீதிமன்றத்துக்கு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், வழக்கறிஞர்கLai கான்டாக்ட் செய்து விடுவோம். இல்லையென்றால் நாங்களே எதிர்தரப்பிடம் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம்.

பேங்கிங், இன்ஸூரன்ஸ், ட்ராவல், பப்ளிக் யுட்டிலிட்டீஸ், பர்ச்சேசிங், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது, லோன் தொடர்பாக, வீடு வாங்குவது என்று நிறைய கம்ப்ளைன்ட் வரும்.  குறிப்பிட்டு சொல்ல முடியாது. விதவிதமான பிரச்னைகள் வரும். கடந்த 14 ஆண்டுகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான கம்ப்ளைன்ட்களை ஹேண்டில் செய்திருக்கிறோம்.

'கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா' வை ஆரம்பித்தது என் கணவர்தான். இதில் 12 பேர் கொண்ட ட்ரஸ்ட்டீஸ் இருக்கிறோம். நான் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி ரிட்டையர்ட் ஆகிவிட்டிருந்தேன். இந்நிலையில், நுகர்வோருக்காக, பெண்களின் முன்னேறத்திற்காக பல்வேறு இதழ்களை ஆரம்பித்து, பப்ளிஸ் செய்த அனுபவம் இருப்பதால் 'கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா' சார்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 'கன்ஸ்யூமர்  டைஜஸ்ட்' என்ற மேகஸின் தயாரித்து வெளியிட என்னை அழைத்தார்கள். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் வேலை செய்வேன் என்று கூறிய நான், இன்று ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை பணியாற்றுகிறேன்.

கன்ஸ்யூமர் ஆக்ட் குறித்து விழிப்புணர்வு இன்னும் அனைவருக்கும் ஏற்படவில்லை. எல்லா கன்ஸ்யூமர்களுக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும். அதையெல்லாம் கேட்டு வாங்க திறமை இருக்க வேண்டும். இதற்காக அரசாங்கத்திற்கும் பல்வேறு ஐடியாக்களை கொடுத்தோம்.

இப்போ கன்ஸ்யூமர் ப்ரோடக்சன் ஆக்ட்டினை திருத்தப்போகிறார்கள். அதில் 'கன்ஸ்யூமர் சேப்டி அத்தாரிட்டி' என்று கொண்டு வரப்போகிறார்கள். ஒருவருக்கு ஒரு ப்ராடெக்ட் சேப்டி இல்லை அல்லது ஆபத்தானது என்று தோன்றினால், அந்த ப்ராடெக்ட்டை தடை செய்வதற்கு உரிமையிருக்கிறது. இந்த ஐடியாவினை நாங்கள் 2006ஆம் ஆண்டு கொடுத்தோம். பார்லிமென்டில் விவாதித்த பிறகுதான் இந்த ஆக்ட் நடைமுறைக்கு வரும். மழைக்கால கூட்டத்தொடரில் எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நடைமுறைக்கும் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்'' என்றார்.



'பத்திரிகை, வாட்ஸ் அப்பெல்லாம் பார்க்காதீங்க மக்களே...!'- தொண்டர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் விட வலியுறுத்தி திருவாரூர் தெற்கு வீதியில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தன்னைப்பற்றி வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய விஜயகாந்த், வலைதளங்களை யாரும் பார்க்கவேண்டாம் என தொண்டர்களுக்கு தான் அறிவுறுத்தியிருப் பதாக கூறினார்.

சோழ நாடு சோறுடைத்து என்பார்கள், மாறிவரும் தட்ப வெப்பநிலையால்  பொய்த்து வரும் மழை காரண மாக குறைந்து வரும் ஆர்வம் காரணமாக விவசாயம் சரியான விளைச்சலை தராமல், உற்பத்தி அளவு குறைந்து கொண்டே செல்கிறது. அதுவும் காவிரியில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சராசரி விவ சாயிகளின் கனவு வானத்தைப் போல பொய்த்துப் போய் விடுகிறது. குறுவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் வருடா வருடம் ஜூன் மாதத்தில் திறக்கப்படும். 

ஆனால், சில ஆண்டுகளாக சரியான நேரத்தில் திறக்கப்படவில்லை  இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தம் கோரிக்கைகளை வலியறுத்தி திருவாரூர் மாவட்ட சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

இதுவரை காவிரி தண்ணீரை பெற்றுத் தராத தமிழக மாநில அரசை கண்டித்து கோஷம் போட்டனர். உரிமை யோடு கெட்டுப் பெற வேண்டிய தமிழக அரசாங்கம் கேட்க மறுக்கிறது. 2௦12 -13 ம் நிதி ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற வட்டியில்லா வேளாண் கடனுக்கு தற்போது 13 சதவீதம் வட்டி மற்றும் அபராத வட்டி கணக்கிடப்பட்டு விவசாயிகளிடம் கெடுபிடி வசூல் பணியில் ஈடுவடுவதும், கட்ட முடியாத விவசாயிகளை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு முதல் கடன் வழங்க மறுத்து வருவதும் வன்மையாக கண்டிக்கத் தக்கது என விவசாயிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், “ மக்கள் மனதை கொள்ளை கொள்ளனும், மக்கள் பணத்தை அல்ல. அந்தம்மாவுக்கு பால் குடம் எடுக்கிறாங்க, அபிஷேகம் செய்கிறாங்க, அங்கப் பிரதட்சணம் பண்ணுகிறாங்க. ஆனால் விவசாயிக்கு ஒன்றும் செய்வது இல்லை. தமிழகத்தில் சொல்லப்படாத மிசா நடைமுறையில் இருக்கிறது. பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி நடக்கப் போவுதுன்னு சொல்றாங்க, ஆனால், இங்கே ஊழல் புரட்சிதான் நடக்கிறது. ஏரி, குளம், ஆறு, போல மேட்டூர் அணையும் தூர் வாரப்பட வேண்டும். தேசிய நதி நீர் இணைப்பு முக்கியத்துவம் இப்போது புரிய வேண்டும் அரசுகளுக்கு என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “ இந்த பத்திரிக்கை, வாட்ஸ் ஆப், எல்லாம் நான் பாக்குறதும் இல்லை, என் தொண் டர்களிடமும் பார்க்கச் சொல்றது இல்லை. ஏன்னா, இதுல்லாம் ஒரு நாள் இருக்கும், ஒரு வாரம் இருக்கும். அதுக்கு அப்புறம் எல்லாம் மறைஞ்சுடும்.” எனச் சொல்லி இறுதியில் காய்ந்து போய் இருக்கிற நெற்கதிர் களை கையில் எடுத்து எல்லாருக்கும் காண்பித்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு விவசாயிகள் அதன் தலை வர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில்  நேரில் ஆதரவு தெரிவித்தனர். 

பன்னிரண்டு மணி உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சித் தொண்டர் கூட்டம் திரண்டிருந்தது. விஜயகாந்தின் உரையும் முடிந்த பின்பு கலைந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தையும் வாகன நெரி சலையும் போக்குவரத்தையும் காவல் துறை ஈரத் தொப்பியுடன், ஒழுங்குபடுத்தியது.

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத காரணத்தால் காவிரி டெல்டா விவசாயிகள் தவித்து வரும் நிலையில் எந்த அரசியல் கட்சியும், இது குறித்து அதீத ஆர்வம் காட்டாத நிலையில் தேமுதிக இதில் முழு மூச்சோடு இறங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் ஆதரவை அதிகரித்துள்ளது.



சென்னையை குறிவைக்கும் கொலம்பியா கொள்ளையர்கள்

'எக்ஸ்கியூஸ் மி சார்... இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது ?

வைர நகை கொள்ளை தொடர்பான எத்தனையோ தமிழ் சினிமாக்களைப் பார்த்து​விட்டோம். இதோ  இப்​போது அது நிஜத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 21-ம் தேதி சென்னை அண்ணா​சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஜூவல்லரி கண்காட்சியில் 38 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை கொள்ளை முயற்சி நடந்துள்ளது.  

ஜூவல்லரி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ‘யுனைடெட் எக்ஸ்சிபிசன்’ என்ற நிறுவனத்தின் திட்ட ஒருங்கி ணைப்பாளர் மனோஜிடம் பேசினோம். ‘‘இது எங்களுடைய  31-வது கண்காட்சி. முதல் தடவையாக இந்தக் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கண்காட்சியில் பங்கேற்கும் ஜூவல்லரி நிறுவனங்களுக்கு முழு அளவில் பாதுகாப்புகளை வழங்கியிருந்ததோடு  சி.சி.டி.வி கேமராவையும் பொருத்தியிருந்தோம். சுதாரிப்புடன் செயல்பட்டதாலேயே அந்தக் கொள்ளையனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம்’’ என்றார்.
தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ‘‘கண்காட்சியில் இருந்து அழைப்பு வந்தவுடன் போலீஸ் படையுடன் ஆஜராகி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒரு வெளிநாட்டுக்காரனைப் பிடித்து விசாரித்தோம். அவனது பெயர் ஜோஸ் ஒசாரியோ பர்க். கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவன். பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவனை சிறையில் அடைத்துவிட்டோம். ஜோஸுடன் இன்னும் சிலர் வந்துள்ளனர். அவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை’’ என்றார் சுருக்கமாக.
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்​தோம். ‘‘வைர, தங்க நகை கண்காட்சியில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நிகழ்வது   சாதாரணம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எழும்பூரில்கூட ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதிலும் சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். அதில் கொள்ளைப்போன வைர, தங்க நகைகளும், கொள்ளையனும் இதுவரை பிடிபடவில்லை. இதுதவிர ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
கண்காட்சி குறித்த விவரங்களை கூகுள் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளும் சர்வதேச கொள்ளைக் கும்பல், சம்பவ இடத்துக்கு வந்து நோட்டமிடுகிறார்கள். கண்காட்சி முடிந்து வைர, தங்க நகைகளை போதிய பாதுகாப்பில்லாமல் திரும்ப எடுத்துச் செல்லும்போது கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தற்போது நடந்திருக்கும் கொள்ளை முயற்சி சம்பவத்திலும் இதுபோன்றே கொள்ளையர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். கண்காட்சியில் கலந்துகொண்ட சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள அம்ரபாலிக் என்ற ஜூவல்லரி நிறுவனத்தின் வைரங்களை டிராவல்ஸ் பேக்கில் அடைத்து காருக்குள் ஏற்றிய டிரைவர் ஓட்டலிலிருந்து வெளியே வந்தார்.
அப்போது வெளிநாட்டுக்காரன் ஒருவன், டிரைவரிடம் ஒரு விசிட்டிங் கார்டை நீட்டி இந்த அட்ரஸ் எங்கு இருக்கிறது என்று முதலில் ஸ்பெயின் மொழியில் கேட்டுள்ளான். எதுவுமே புரியாமல் டிரைவர் முழிக்க... பின்பு அந்த வெளிநாட்டுக்காரன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில், ‘எக்ஸ்கியூஸ் மி சார்... இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டு இருக்கிறான். விசிட்டிங் கார்டை வாங்கி அதற்கு பதிலளித்த டிரைவர், யதேச்சையாக காரின் பின்பகுதியைப் பார்த்துள்ளார்.

அப்போது காருக்குள் இருந்த வைர நகை டிராவல்ஸ் பேக்கை இன்னொரு வெளிநாட்டுக்காரன் எடுக்க முயல... ‘திருடன், திருடன்’ என்று டிரைவர் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஹோட்டல் பாதுகாவலர்கள் வர... வெளிநாட்டுக் கொள்ளையர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். பிடிபட்ட கொள்ளையன் ஜோஸ், சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவன். இவர்கள் அனைவரும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து ஜூவல்லரி கண்காட்சி நடக்கும் இடங்களுக்கு வந்து கைவரிசை காட்டிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிவிடுகின்றனர். இதனால் இவர்கள் எளிதில் போலீஸில் சிக்குவதில்லை. மேலும் போலீஸில் சிக்காமலிருக்க ஒருமுறை கொள்ளையடித்தவனை அடுத்த சம்பவத்தில் இவர்கள் ஈடுபடுத்துவதும் கிடையாது. இதற்கென தனி நெட்வொர்க் ஒன்று செயல்படுகிறது. கொள்ளையடிப்பதற்கு என தனியாக டிரெயினிங்கும் கொடுக்கப்படுகிறதாம்’’ என்றனர்.
நகை வியாபாரிகளே உஷார்!


'

விமர்சனம் செய்த தம்பிகளை விரைவில் சந்திப்பேன்: நடிகர் சிவக்குமார்!

முகநூலில் என் பதிவுகளை விமர்சனம் செய்த தம்பிகளை விரைவில் சந்திப்பேன் என்று நடிகர் சிவக்குமார் தனது முகநூலில் தெரிவித்து உள்ளார்.

நடிகர் சிவகுமார், தனது முகநூலில் தந்தை பெரியார், ஜான்சி ராணி, வேலுநாச்சியார், முத்துவடுகநாதன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரை பற்றி தொடர்ந்து எழுதி வந்தார். இதை தொடர்ந்து தீரன் சின்னமலை பற்றியும் அவர் சமீபத்தில் எழுதினார்.

இந்நிலையில், அவரது முகநூலில் சாதி பற்றிய கருத்துக்களை சிலர் பரிமாறியதோடு நிற்காமல், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து, முகநூல் கணக்கில் இருந்து நடிகர் சிவகுமார் விலகிக்கொள்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.


அதுதொடர்பாக அவர் தனது முகநூலில், ''என்னை மனிதப் புனிதன் என்றோ, வழிகாட்டும் தலைவன் என்றோ, வாரி வழங்கும் வள்ளல் என்றோ, பேரறிவாளன் என்றோ, நடிப்புக்கலை, ஓவியக் கலையில் கரை கண்டவன் என்றோ, பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை. 70 வயதைத் தாண்டி, முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.

இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருந்த வன்மத்தை, சாதி வெறியை வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கவும், குடும்பத்தினரை குறைகூறவும், நானே களம் அமைத்துக்கொடுத்ததாக உணர்கிறேன். என் உலகம் சிறியது. அதில் என் வாழ்க்கை மிகவும் எளிமையானது. இது உங்கள் உலகம், உங்கள் சுதந்திரம். நீங்கள் நினைத்தபடி வாழுங்கள். எல்லாரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், போர்ப்படைத் தளபதி கருபன் சேர்வைத் தேவரை கையாள் என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இன்று தனது முகநூலில் கூறி உள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சிவக்குமார் தனது முகநூலில், ''வரலாற்று ஆய்வாளர் சகோதரி நிகிலா நிகி அவர்களும் மற்ற சகோதரர்களும் குறிப்பிட்டதுபோல போர்ப்படைத் தளபதி கருப்பன் சேர்வைத் தேவரை கையாள் என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் வரலாற்றை இன்னும் தெளிவாக படிக்க வேண்டும்.

முகநூலில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களையும் விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன். நன்றி!" என்று கூறி உள்ளார்.



தல Vs தளபதி

ச்சர்யம்... இந்திய கிரிக்கெட் அணிக்குள் இப்போது இரண்டு கேப்டன்கள்! 
'டீம் இந்தியா’வில் இது மிக அரிதான காட்சி. மகேந்திரசிங் தோனி (ஒரு நாள்), விராட் கோஹ்லி (டெஸ்ட்) என இரண்டு கேப்டன்கள், இப்போது ஒரு நாள் போட்டிகளில்  விளையாடுகிறார்கள். இருவரிடமும் எந்தவிதமான ஈகோ மோதல்களும் இல்லைதான். ஆனால், அவர்களை பகடைக்காய்களாக வைத்து ஓர் அரசியலை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி, விரைவில் பயிற்சியாளர் ஆகவிருக்கிறார். சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண் போன்ற சீனியர் வீரர்கள், அணியின் ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களின் வேலை என்ன என்ற தெளிவின்மை நிலவுகிறது. களத்துக்கு வெளியே நிலவும் அரசியல், இந்திய அணியைப் பாதிக்கும் சிக்னல்கள் அழுத்தமாக வெளிப்படுகின்றன!

களப் பலிக்குத் தயாராகும் தோனி !
இந்திய அணியின் கேப்டனாக தோனி எப்படி உருவாக்கப்பட்டாரோ, அதே ரூட்டில்தான் கோஹ்லியும் கேப்டன் ஆக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அதில் ஒரு சின்ன மாற்றம். 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. டெஸ்ட் அணிக்கு கும்ப்ளே கேப்டனாக இருந்தார். இப்போது ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
'ஓடும் லாரிக்கு முன்னால் போய் நில்லுங்கள்’ எனச் சொன்னால், தயங்காமல் போய் நிற்கக்கூடிய 16 பேர்தான் எனக்கு வேண்டும்’ என, ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதும் சொன்னார் தோனி. அப்போது இந்திய அணியில் சச்சின், கங்குலி, டிராவிட், ஷேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான்... என சீனியர்களின் படையே இருந்தது. சீனியர்களை தனக்கு ஆலோசகர்களாகவும், ஜூனியர்களை தன் நண்பர்களாகவும் வைத்துக்கொண்டு வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தார் தோனி.
2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டம், தோனிக்கும் இந்திய அணிக்கும் பொற்காலம். டி20 உலகக் கோப்பை வெற்றி, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை சுற்றுப்பயணங்களில் வெற்றி, உலகின் நம்பர்-1 டெஸ்ட் ரேங்கிங் எனக் குவிந்த வெற்றிகளின் உச்சமாக, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையையும் வென்றது இந்திய அணி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற உலகக் கோப்பையை, தோனியின் சாதனையாகவே கொண்டாடியது கிரிக்கெட் உலகம். ஆனால், அது வரை மெகா வெற்றிகளைக் குவித்த தோனி அணி, அதன் பிறகு எதிர்கொண்டது  மெகா சறுக்கல்கள்!
ஒரு கதை சொல்வார்கள். பிரான்ஸில் நடைபெற்ற ஒரு போரில் வெற்றிக்குப் பிறகு, போரைத் தலைமையேற்று நடத்திய பிரெஞ்சு ஜெனரலிடம், 'இந்த வெற்றிக்குக் காரணம், உங்கள் படையின் துணைத் தளபதிதானே?’ எனக் கேட்டார்களாம். அதற்கு அந்தத் தளபதி, 'நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். ஆனால், இந்தப் போரில் தோல்வியடைந்திருந்தால் நான் மட்டுமே அதற்கு முழுப் பொறுப்பாகி இருப்பேன். இந்தக் கேள்வியே எழுந்திருக்காது’ என்றாராம். தோனி கதையில் நடப்பதும் இதுதான். இந்திய அணி வெற்றி பெறும்போது, தோனி இருக்கும் இடமே தெரியாது. எந்த வெற்றிப் பேரணிகளிலும் தோனி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு முன்னால் நடந்தது இல்லை. கோப்பைகளுடன் வலம் வந்தது இல்லை. ஆனால், இந்திய அணி தோல்வியைச் சந்திக்கும்போது எல்லாம் முதல் ஆளாக முன்னால் வந்து நிற்பார்.
தோனி கேப்டனாக இருந்த கடந்த ஏழு ஆண்டுகளில், அணி வெற்றி பெற்றால் போட்டி முடிந்ததும் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு 'மேன் ஆஃப் தி மேட்ச்’ பட்டம் வென்றவரைத்தான் அனுப்பிவைப்பார் தோனி. ஆனால், தோல்வியடையும் போட்டிகளின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு தோனியைத் தவிர, வேறு யாரும் வந்தது இல்லை. 2007-2011-ம் ஆண்டு காலகட்ட வெற்றிகளுக்கு சச்சின், ஷேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான் எனப் பலருக்கும் பாராட்டுக்கள் பகிர்ந்து அளிக்கப்பட, 2011-2015-ம் ஆண்டு காலகட்டத் தோல்விகளுக்கு தோனி மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டார். அணியின் நட்சத்திர ப்ளேயர்களான கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ஜடேஜா... என யாருமே சீனில் இல்லை.
ரவிசாஸ்திரி ஏன்?
33 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய, அணி வீரர்களுக்குள் நல்ல நட்புறவு கொண்டிராத விராட் கோஹ்லி எப்படி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்? அதற்கும் ரவிசாஸ்திரியின் வருகைக்கும் முடிச்சுப்போடுகிறது கிரிக்கெட் வட்டாரம்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது கோஹ்லிக்கும் ஷிகர் தவானுக்கும் இடையே வெடித்த மோதல், தோனியை மிகவும் பாதித்ததாகச் சொல்கிறார்கள். தோனி தலைமையில் செயல்படத் தொடங்கியதில் இருந்து, அணி வீரர்களுக்குள் அப்படி ஒரு சண்டை வந்ததே இல்லை. கோஹ்லி - தவான் இடையிலான சண்டையில் கோஹ்லியை ஆதரித்திருக்கிறார் அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி. பின்னர் ஆஸ்திரேலியாவில் அணியினருக்கு விருந்து கொடுத்திருக்கிறார் ரவிசாஸ்திரி. அப்போது, 'அணிக்குள் இளம் வீரர்கள் முக்கியமான இடத்தைப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் இளம் வீரர்களின் பக்கம்தான் இருப்பேன். நீங்கள் நினைப்பதைவிடவும் நான் அணிக்குள் நீண்ட காலம் இருப்பேன்’ என வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் ரவிசாஸ்திரி.
இவரின் இயக்குநர் நியமனமே, தனக்கு எதிராகச் செயல்படும் மும்பை பி.சி.சி.ஐ-யின் லாபி என்பதைப் புரிந்துகொண்டார் தோனி. அதனால்தான் டெஸ்ட் தொடரின் இடையிலேயே டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல சர்ச்சை கிளப்பி விரைவில் ஒரு நாள் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்தும் தன்னை நீக்க முயற்சிப்பார்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறார்.
கங்குலிக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கேப்டனாக இருந்தவர் தோனி. 'நான் பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன். அதில் தோனிதான் சிறந்தவர்’ என, சச்சின் டெண்டுல்கராலேயே புகழப்பட்டவர் தோனி. அந்த அளவுக்குத் தலைமைப் பண்புகள் நிறைந்த தோனிக்கு, மாற்றாக முன்வைக்கப்படும் கோஹ்லியிடம் வேகமும் துடிப்பும் மட்டுமே இருக்கின்றன.
தலதளபதி... ஓர் ஒப்பீடு!
வெற்றி கிடைக்கும் வரை வியூகங்களை மாற்றிக்கொண்டே இருப்பதும், அணியினரின் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதிலுமே ஒரு கேப்டனின் பொறுப்பு வெளிப்படும். அதை கோஹ்லி சரியாகச் செய்வாரா என்பதற்கு, காலம்தான் பதில் சொல்லும்! 

எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு)


டிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.  

அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் -  சாண்டோ சின்னப்ப தேவர். 

கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்த சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று. மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர். 

ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்த தேவர், வறுமையான குடும்ப சூழலால் கோவையில் தனியார் மில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளி மற்றும் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என அடுத்தடுத்து பல வேலைகளில் ஈடுபட்டும், போதிய வருமானமில்லாத நிலையில் சோடா கம்பெனி ஒன்றையும்  கொஞ்ச காலம் நடத்தினார். 

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடைய சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். சின்னப்பா தேவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த உடற்பயிற்சிக் கூடம்தான். அங்கு ஓய்வு நேரத்தில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் தேர்ந்தவரானார்.

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. இதனால் திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். 

பிரபலமான ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தன. பிரபலமான கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
நடிப்புத்தொழில் கொஞ்சம் பிசிறடிக்கவும் நடிப்புத் தொழிலோடு,  சி.வி.ராமன் என்ற இயக்குநரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் குறைந்த காலம் பணியாற்றினார். அங்கு சினிமாத் தயாரிப்பு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து படத்தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டார். 

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதுபோல, தம்பி திருமுகம் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றியது, தனது சினிமா தயாரிப்பு அனுபவம், மனதில் படுவதை செயல்படுத்திக்காட்டும் இயல்பான துணிச்சல் இவை திரைத்துறையை விட்டு விலகியிருந்தாலும், தேவரை கோவையில் சும்மா இருக்கவிட வில்லை. சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார். 

முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான். 

திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 

மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங் கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார் தேவர். 

தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். விளைவு, பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்! 

தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை,  'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர். 

1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது. 

அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.

“சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.

தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள், படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாளில் முடியும் என்ற அறிவிப்போடு துவங்கும். இது அன்றைய திரையுலகில் ஆச்சரியமான விஷயம். 

காரணம், திரைத்துறை நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு துறை. ஆரவாரமாக துவங்கப்படும் எந்தப் படமும் வழக்கமான பல பிரச்னைகளை தாண்டி வெளியாகுமா? என்பதே நிச்சயமில்லாத விஷயம். அதில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டி வெளியீடு தேதி அறிவிப்பது என்பது, பெரிய நிறுவனங்களே சொல்லத் தயங்கு கிற விஷயம். தேவர் இந்த விஷயத்தில் பெரிய முதலாளிகளை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்தார். அறிவித்த தேதியில் படம் நிச்சயம் வெளியாகும்.

குறைந்த பட்ஜெட், குறுகிய கால தயாரிப்பு என்பதையும் தாண்டி தேவரிடம் திரையுலகம் வியந்த விஷயம் அவர் கலைஞர்களை மதித்த குணம். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்துவிடுவார்.  மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது.  படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவிக்க இதுவும் ஒரு காரணம். 

திரையுலகில் சிரமப்படும் கலைஞர்களுக்கு உதவி செய்தால், அவர்களிடம் அதை திரும்ப பெறமாட்டார். தன் கதையில் அவருக்கு ஒரு வேடம் அளித்து அதை சரிப்படுத்திக்கொள்வார். கடனை அடைத்தது போலவும் ஆகிவிட்டது, அவர்களுக்கு வேலை கொடுத்ததுபோலவும் ஆகிவிட்டது என திருப்தியடைவார். இப்படி ஒரு மனிதாபிமானியாகவும் விளங்கினார். 

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபின் 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் துவங்கி படங்கள் தயாரித்தார் தேவர். முருக பக்தரான தேவர், பக்தி கலந்த சமூகப்படங்களை தயாரித்து அவற்றை வெற்றிப்படமாக்கினார். திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார். 

முருக பக்தரான தேவர், தன் படங்களில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகன் கோவில் திருப்பணி களுக்கு வழங்கினார். காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கி விட்டுத்தான் வேலையை துவக்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார். திறமையானவர் களை எப்படியாவது தம் படங்களில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார். 

கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்கு களை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் அவற்றை நடத்துவார். படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறிவிட்டிருக் கும். 
'ஆட்டுக்கார அலமேலு' படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு  ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம். தம் வீட்டில் சில விலங்குகளையும் வளர்த்து வந்தார் அவர்.

நாள் முழுவதும் அவர் நாவில் 'முருகா..!' என்ற வார்த்தை எத்தனை ஆயிரம் முறை வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. பணியாளர்களையும், தெரிந்தவர்களையும் 'முருகா' என்றே அழைப்பார். வார்த்தைக்கு வார்த்தை 'முருகா... முருகா!' என உருகிப்போகும் பக்தனான அவர், அதே முருகனை வசைபாடும்போது அந்த வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க முடியாது. 

புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.


ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே மறுநாள் 7 -9-1978 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். 

தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது. தேவருக்கு மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடித்து பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர். 


சின்னப்பா தேவர் காலத்திற்குப்பின் சில ஆண்டுகள் வரை படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம்,  கால மாற்றத்தினால் திரையுலகில் தொடர்ந்து செயல்படுவதில் சுணங்கியது. தொடர் தோல்விகளால் சின்னப்பா தேவர் என்ற தனி மனிதரால் உருவான அந்நிறுவனம், படத்தொழிலிலிருந்து முற்றாக விலகி தம் திரைப்படங்களை மட்டும் ஆவணங்களாக்கி ஒதுங்கிக்கொண்டது. 

விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!   


‘தவறு செய்தால் எழுந்து வருவேன்!’ - லீ க்வான் யூ

சிங்கப்பூர் என்பது ஒரு நாடே அல்ல. ஒரு நாட்டுக்கு உரிய முக்கியமான அம்சங்கள் எதுவுமே அங்கு இல்லை. உலக வரைபடத்தில் சிங்கப்பூரைக் குறிப்பிட வேண்டும் என்றால், மலேசியாவின் காலடியில் பூமத்திய ரேகையில் ஒரே ஒரு புள்ளி வைத்தால் போதும். அதுதான் சிங்கப்பூர்!
இருந்தாலும், பொருளாதாரரீதியாக உலகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருக்கும் மிகச் செழிப்பான நாடு அது. ஆரம்பத்தில் சாதாரண மீன்பிடித் துறைமுகமாக இருந்து, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு வாழ்ந்து, பிறகு ஜப்பான் படையெடுப்பால் ரணகளமாகி, மலேசியாவால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, குறைமாதக் குழந்தைபோல பிறந்த சிங்கப்பூர், இன்று உலகுக்கே ஓர் உதாரணத் தேசமாக இருப்பதற்கு முக்கியக் காரணம், 'சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூ! ஊழலை வெறுக்கும் அனைவருக்குமே ஆதர்சமாக விளங்கியவர் என்பதால், லீ க்வான் யூ தன் 91-வது வயதில் கண்களை மூடியபோது உலகமே கண்ணீர் சிந்தியது.
சிங்கப்பூர் என்ற புதிய தேசம் உருவெடுத்த போது... அதற்கு என எந்தவித தனித்த அடையாளமும் இல்லை. மாண்ட்ரீன் எனப்படும் சீன மொழி பேசும் சீனர்கள், மலாய் எனப்படும் மலேசியா நாட்டின் வம்சாவழியினர், இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள்... என எந்தவித ஒருமித்த அம்சங்களும் இல்லாத வெவ்வேறு கலாசாரங்கள்கொண்ட வெவ்வேறு இனத்தினரின் கலவையாக அது இருந்தது. சிங்கப்பூரைவிட்டு இங்கிலாந்து வெளியேறியபோது, பனிப்பாறையில் மோதிய கப்பலைவிட்டு வெளியேறும் வேகத்தில், சிங்கப்பூரில் முதலீடு செய்திருந்த அயல்நாட்டு கம்பெனிகளும் வெளியேறின. அதனால், தொழிலாளர்கள் பலர் வேலை இழந்தனர். விலைவாசியும் வேலை இல்லாத் திண்டாட்டமும் அச்சமூட்டும் அளவுக்குப் பெருகின. அதனால், சீனாவின் புரட்சியாளர் மாசேதுங்கின் பெயரில் பல கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் தீவிரம் அடைந்தன.

அந்தக் காலகட்டத்தில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துவிட்டுத் திரும்பிய லீ க்வான் யூ என்கிற இளைஞர், ஆரம்பத்தில் எந்த கம்யூனிஸ்ட்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்தாரோ, அதே கம்யூனிஸ்ட்களோடு கைகோத்து அரசியல் செய்யும் அளவுக்கு வளர்ந்தார். பிறகு, அவர் ஆரம்பித்த 'மக்கள் செயல் கட்சி’ ஒருசில வருடங்களிலேயே வேகமாக வளர்ந்ததால்,லீ க்வான் யூ கைகளுக்கு ஆட்சிப் பொறுப்பு வந்தது.
குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் ஒரு தாயைப்போல, ஒரு நாட்டை ஒரு தலைவர் பொத்திப் பொத்தி வளர்த்தால் அதை ஆங்கிலத்தில் 'Nanny state' எனக் குறிப்பிடுவார்கள். 'ஆம்... சிங்கப்பூர் ஒரு ’Nanny state’-தான். அதற்கு வளர்ப்புத் தாயாக இருப்பவன் நான்தான்’ என்பது லீ க்வான் யூவின் பிரபல ஒப்புதல் வாக்குமூலம். 'வீதியில் எச்சில் துப்பாதீர்கள்’, 'குப்பைகளை வீதியில் வீசாதீர்கள்’, 'கழிவறைகளைப் பயன்படுத்தியவுடன் ஃப்ளஷ் அவுட் செய்யுங்கள்’... எனத் தொடங்கி 'சூயிங்கம் மெல்லத் தடை, சிங்கப்பூர் இளைஞர்கள், படித்த பெண்களைத் திருமணம் செய்யத் தயங்கக் கூடாது... என்பது வரை சிங்கப்பூர் குடிமகன்களுக்கு லீ க்வான் யூ சகல விஷயங்களையும் கண்டிப்போடு சொல்லிக்கொடுத்தார்.
ஒரு சமூகம் திருட்டு பயம், பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற செயல்கள் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட குற்றங்கள் செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். குற்றங்கள் புரியும் நான்கு பேரின் உரிமைக்காக நாட்டையே நாசமாக்கக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். 'நான் வகுப்புகளுக்குத் தாமதமாகச் சென்றபோதெல்லாம், என் ஆசிரியர்களிடம் பிரம்படி வாங்கியிருக்கிறேன். அதை நினைத்து நான் எப்போதுமே வருந்தியது இல்லை. இதுபோன்ற தண்டனைகள் சமூகத்துக்கு நன்மை செய்யும்’ எனச் சொல்லி ஒழுக்கமான தேசத்தை அவர் நிர்மாணிக்க முயன்றதை, 'போலீஸ் ஸ்டேட்’ அதாவது 'அடக்குமுறை நாடு’ எனப் பலர் கிண்டல் செய்தனர்.
இதில் விசித்திரம் என்னவென்றால்... இப்படிக்கூடவா ஒரு நாடு இருக்கும் என்பதைக் காண்பதற்காக சிங்கப்பூர் வந்தவர்கள், அந்த நாட்டின் சுத்தத்தைக் கண்டு முதலில் வியந்தார்கள். எந்தவித அச்சமும் இல்லாமல் சர்வசுதந்திரமாக அவர்கள் அங்கே தங்கி சிங்கப்பூரின் அழகை அனுபவித்தபோது, 'இங்கே பிசினஸ் செய்தால் என்ன என அவர்களில் சிலர், அரசாங்க அதிகாரிகளை அணுகினார்கள். லஞ்சம், ஊழல், சிவப்பு நாடா... என எந்தத் தடையும் இல்லாமல் அங்கே அரசு இயந்திரம் செயல்பட்டது அவர்களை மேலும் ஆச்சர்யப்படவைத்தது. வியாபாரத்தில் நம்பிக்கைதான் முக்கியம். அந்த நம்பிக்கையை அந்நிய முதலீட்டாளர்களுக்கு
லீ க்வான் யூ அரசு கொடுத்தது. அதையும் தாண்டி வரிச் சலுகைகள், உலகின் அற்புதமான துறைமுகம், விமான நிலையம் என்ற வியக்கத்தக்க கட்டுமான வசதிகள். ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்குச் செல்லும் பல கப்பல்களுக்கு, வாயிற்கதவுகள்போல அமைந்திருக்கும் அதன் பூகோள அமைப்பும் உதவியது. 'டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’, 'ஜெனரல் எலெட்ரிக்கல்ஸ்’, 'ஹூலெட் அண்ட் பெக்கார்ட்’ போன்ற சர்வதேச நிறுவனங்களையும் உலகின் முன்னணி வங்கிகளையும் சிங்கப்பூருக்கு ஈர்த்தது!
அரசு அதிகாரிகளை, அமைச்சர்களை, நீதிபதிகளை யாரும் பணத்தைக் காட்டி சபலப்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கத்தில், பன்னாட்டு நிறுவன உயர் அதிகாரிகளின் சம்பளத்தோடு ஒப்பிடும் அளவுக்கு, லீ க்வான் யூ அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினார். சிங்கப்பூரின் வளம் என்பது தன் நாட்டின் மக்கள்தான் என்பதை உணர்ந்திருந்த லீ க்வான்யூ, கல்விக்காகவும் ஆராய்ச்சி படிப்புகளுக்காகவும் அபாரமாகச் செலவு செய்ததால், நான்யாங் பல்கலைக்கழகம், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் என சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக வளர்ந்தது; கூடவே கல்வி நிறுவனங்களும் வளர்ந்தன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, திறமைவாய்ந்த பணியாளர்கள் போதுமான அளவுக்குக் கிடைத்தனர். மக்களிடம் தாராளமாகப் பணம் புழங்கியது.
மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தைவிட பொருளாதாரச் சுதந்திரம்தான் முக்கியம் எனக் கருதியவர் லீ க்வான் யூ. அதனால்தானோ என்னவோ, உள்நாட்டுப் பத்திரிகைகள் முதல் வெளிநாட்டுப் பத்திரிகைகள் வரை, தன் அரசை விமர்சித்து எழுதிய பல இதழ்கள் மீது ஆதாரங்கள் கேட்டு, அவர் வழக்குகள் போட்டு நீதிமன்றத்துக்கு இழுத்தார்.

சிங்கப்பூரில் பல கட்சி ஆட்சி முறை இருந்தாலும் முறையாகத் தேர்தல்கள் நடைபெற்றாலும், அங்கே பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் என்பதே இல்லை. இதற்கு காரணம், 'லீ க்வான் யூ அரசு மீது மக்கள் வைத்திருந்த அபாரமான நம்பிக்கையா... அல்லது எதிர்க்கட்சிகள் துளிர்விடும்போதே அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு, அவர்களை மஞ்சள் கடுதாசி கொடுக்கும் அளவுக்கு ஆக்கிவிடும் லீ க்வான் யூவின் அரசியலா..?’ என்ற கேள்விக்கு, 'இரண்டும்தான்’ என்பது நடுநிலையாளர்களின் பதில்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1981-ம் ஆண்டுதான் அவர்களின் நாடாளுமன்றத்துக்கு முதல் எதிர்க்கட்சி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப் பட்டார். 30 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக சர்வ அதிகாரத்துடன் ஆட்சி செய்த லீ க்வான் யூ, அடுத்த தலைமுறைக்கு வழிவிடும்விதமாக பிரதமர் பதவியில் இருந்து 1990-ம் ஆண்டு விலகினார். பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய பிறகும்கூட பலவிதமான கௌரவப் பதவிகளை லீ க்வான் யூ தன்னிடம் வைத்திருந்தது, நாட்டின் லகான் தன் வசம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான். 'லீ க்வான் யூதான் அதிகாரத்தில் இல்லையே என யாரும் தவறு செய்துவிடக் கூடாது என்பதால், பிரதமர் பதவியைவிட்டு விலகும்போதுகூட, 'சவக்குழியில் என்னை இறக்கும் தருணமாக இருந்தாலும் சரி... எங்கேயாவது தவறு நடப்பது தெரிந்தால், நான் எழுந்து வருவேன். ஜாக்கிரதை’ என ஆட்சியாளர்களை எச்சரித்திருந்தார்.
'யார் நீங்கள்... கம்யூனிஸ்ட்டா, சோஷியலிஸ்ட்டா, கேப்பிட்டலிஸ்டா அல்லது மக்கள் நலன் மீது அக்கறைகொண்ட மிதமான சர்வாதிகாரியா?’ என்ற கேள்விக்கு, லீ க்வான் யூ ஒரு முறை பதில் சொன்னார்... 'எனக்கு எந்தவிதமான இசமும் இல்லை. பிரச்னைக்குத் தகுந்த மாதிரிதான் முடிவுகள் எடுப்பேன். அப்படி நான் எடுக்கும் முடிவு, மக்களுக்கு நன்மை புரிந்தால், அதையே தொடர்ந்து பின்பற்றுவேன். நன்மை புரியவில்லை என்றால் அதை விட்டுவிடுவேன்.’
சிங்கப்பூரில் இப்போது நடப்பதும் ஒருவகையில் லீ க்வான் யூவின் ஆட்சிதான். அவரது மக்கள் செயல் கட்சிதான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறது. அவரது மகன் லீ சீன் லூங்-தான் பிரதமர். நாட்டின் கஜானாவாகத் திகழும் 'தெமசெக்’ நிதி நிறுவனத்தின் பெட்டிச் சாவியோ மருமகளிடம், விமானப் போக்குவரத்து இன்னொரு மருமகளிடம், தேசத்தின் மருத்துவக் கேந்திரமோ மூத்த மகளிடம். கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்தான் 87 உறுப்பினர்கள் கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக எதிர்க்கட்சியினர் ஆறு ஸீட்களைக் கைப்பற்றினர். மக்கள் மாற்றத்தை விரும்புவதை அறிந்துகொண்ட லீ க்வான் யூ, அந்தத் தேர்தலுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை!
'நான் செய்தது எல்லாமே சரி எனச் சொல்ல மாட்டேன். ஆனால், நான் எதைச் செய்திருந்தாலும் அதை நாட்டின் நன்மைக்காக மட்டுமே செய்தேன்’ என்பதுதான் லீ க்வான் யூவின் கடைசி வாக்குமூலம்!



27 Jun 2015

கார், பைக் பராமரிப்பு

காசு கொடுத்து வாகனம் வாங்கிவிட்டோம். அதை முறையாகப் பராமரித்தால்தான் நம் கைக் காசு கரையாமல் இருக்கும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்தால், கூடுதலாகச் செலவு வைப்பதுடன், நடு ரோட்டில் நம்மைத் தவிக்க வைத்துவிடும். மேலும், சரிவரப் பராமரிக்கப்படாத வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, உயிருக்கும் பணத்துக்கும் வேட்டுவைக்கும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஆபத்து. வாகனப் பராமரிப்பு என்பது தினசரி அதற்கு நேரம் ஒதுக்கி, படாதபாடுபட்டுச் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. சில விஷயங்களை அன்றாடம் முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே போதும். செலவு மிச்சமாவதுடன், நமது வாகனம் மதிப்புமிக்கதாக இருக்கும்.

கார் பராமரிப்பு என்பது குழந்தையை வளர்ப்பதுபோல. பார்த்துப் பார்த்துச் செய்தால்தான் பரவசமாக இருக்கும். அதோடு, காரின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இந்தக் கையேட்டைப் முழுவதுமாகப் படிக்கும்போது, கார் பராமரிப்பின் அவசியத்தை நீங்களே உணர்வீர்கள்.
இன்ஜின் டயர் மைலேஜ் பிரேக்ஸ் சஸ்பென்ஷன் உள்ளே வெளியே
இதயம் சொல்வதைக் கேளுங்கள்!
கார் பராமரிப்பின் முதல்படி, அது என்ன சொல்கிறது என்று பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பதுதான். கார் எப்படிப் பேசும் என்கிறீர்களா? பின்னால் வரக்கூடிய பல பிரச்னைகளை, கார் ஓடும்போது வரும் சத்தங்களை வைத்தே சொல்லிவிடலாம். காலையில், முதலில் காரை ஆன் செய்துவிட்டு, இன்ஜின் சத்தம் எப்படி இருக்கிறது என்று காது கொடுத்துக் கேளுங்கள். ஆரம்பத்தில் சில விநாடிகளுக்குக் குறிப்பிட்ட ஆர்பிஎம்களில் இருக்கும் இன்ஜின், தானாகவே இன்னும் கீழே இறங்கி ஐடிலிங் ஆர்பிஎம்மில் ஓடும். இப்படியே குறைந்தது 5 நிமிடங்களுக்கு ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். இப்போது இன்ஜின் சத்தம் தாறுமாறாக இருக்கிறதா எனக் கவனியுங்கள். ஏ.சி.யை இப்போது ஆன் செய்யக் கூடாது.
காலையில் முதன்முதலாக இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது இன்ஜினை 'ரெவ்’ செய்துகொண்டே இருக்க வேண்டும் என நிறைய பேர் நினைக்கிறார்கள். இது தேவை இல்லை. பெட்ரோல் காராக இருந்தாலும் சரி, டீசல் காராக இருந்தாலும் சரி, காலையில் காரை ஸ்டார்ட் செய்யும்போது, குறைந்தது 5 நிமிடங்களுக்காவது ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். முக்கியமாக, டர்போ சார்ஜர் இருக்கும் கார்களில் இது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இரவு முழுவதும் இன்ஜின் ஓடாமல் இருக்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக, இன்ஜினுக்குள் ஆயில் வழிந்து கீழிறங்கி இருக்கும். காரை ஸ்டார்ட் செய்தவுடன்தான் இந்த ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக இன்ஜின் முழுக்கப் பரவ ஆரம்பிக்கும். அதற்கு முன்பு, இன்ஜினை ரெவ் செய்தால், டர்போ சார்ஜர் பேரிங், இன்ஜின் ஹெட் போன்ற இடங்களில் ஆயில் சரியாகப் பரவாமல் இருக்கும். இதனால் ஏற்படும் உராய்வுகளில் அனைத்துமே பாதிக்கப்படும். டர்போ சார்ஜர் நீண்ட நாட்கள் உழைக்காது.
இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன், அதற்குச் சாதகமான வெப்ப நிலைக்கு (ஆப்டிமம் டெம்பரேச்சர்) வரும்வரை விரட்டாமல் காரை ஓட்டுங்கள். டர்போ சார்ஜர் இருக்கும் கார்களை ஆஃப் செய்யும்போது, சில நிமிடங்கள் ஐடிலிங்கில் ஓடவிட்டு பின்பு ஆஃப் செய்யுங்கள்.
இன்ஜின் ஆயில் என்பது, நம் உடலில் ஓடும் ரத்தம்போன்றது. இன்ஜினுக்குள் ஏற்படும் உராய்வுகள், வெப்பமடைதல் போன்றவற்றைக் குறைப்பதே இதன் வேலை. உடலின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், எப்படி ஹார்ட் அட்டாக் வருகிறதோ, அதேபோலத்தான் இன்ஜின் ஆயில் சீராகச் செல்லவில்லை என்றால், இன்ஜினுக்கும் 'அட்டாக்’ வந்து சீஸ் ஆகிவிடும்.
ஆனால், கார் வைத்திருக்கும் பெரும்பான்மையினர், இந்த இன்ஜின் ஆயில் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் கார் ஓட்டுவதைத் தவிர, கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம், இன்ஜின் ஆயிலைச் சோதனை செய்வது. உங்கள் கார் மேனுவலில் 'டிப்-ஸ்டிக்’ வைத்து ஆயில் அளவை எப்படிச் சோதிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஆயில் அளவைச் சோதிக்கும்போது, அதன் தரத்தின் மீது ஒரு கண்வைத்து வாருங்கள்.
ஆயிலை மாற்ற வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கு இப்போது இருக்கிறது. கார் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கி.மீ/சர்வீஸ் இடைவெளிகளில் இன்ஜின் ஆயில் மாற்றினாலே போதும்.
பெரும்பாலும் ஒவ்வொரு 10,000 கி.மீ-க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்றுவது நல்லது. சர்வீஸ் செய்யும்போதே பெரும்பாலான  சர்வீஸ் சென்டர்களில் ஆயிலை டாப்-அப் செய்துவிடுகிறார்கள்.
ஆயில் மாற்றும்போது வரும் இன்னொரு குழப்பம், வழக்கமான மினரல் ஆயிலைப் பயன்படுத்துவதா அல்லது சிந்தெடிக் ஆயிலை மாற்றுவதா என்பது. முதல் 20,000 கிமீ வரை சிந்தெடிக் ஆயில் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பின்பு, உங்கள் காருக்கு ஏற்ற சிந்தெடிக் ஆயிலைத் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். சிந்தெடிக் ஆயில் விலை அதிகம் என்றாலும், அதன் பயன்களும் அதிகம்.
ஸ்பார்க் ப்ளக்குகளை சர்வீஸ் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளிகளில் மாற்றிவிடுங்கள். ஃப்யூல் இன்ஜெக்டர்களை 'அல்ட்ராசானிக் க்ளீனிங்’ மூலம் சுத்தப்படுத்துவது மைலேஜையும் அதிகரிக்கும்.
இன்ஜின் திடீரென்று ஓவர்ஹீட் ஆனால் என்ன செய்வது? இந்தக் குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. ஓவர்ஹீட் ஆவதை காரின் டெம்பரேச்சர் மீட்டரை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அப்படி ஓவர்ஹீட் ஆனால், முதல் வேலையாக காரை பத்திரமாக சாலையோரம் நிறுத்துங்கள். ஏ.சியை மட்டும் ஆஃப் செய்துவிட்டு, காரின் இக்னீஷனை ஆன் மோடில் வையுங்கள். இதனால், காரின் கூலிங் ஃபேன் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும். கூலிங் ஃபேன் ஓடும் சத்தம் கேட்கவில்லை என்றால், ஒன்று ஃபேனின் ஃப்யூஸ் போயிருக்கும் அல்லது ஃபேன் ரிப்பேர் ஆகியிருக்கும். கூலிங் ஃபேன் இயங்காமல், காரைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் மெதுவாக இயக்கலாம். ஆனால், டிராஃபிக்கில் இயக்கினால், இன்ஜின் மிக வேகமாகச் சூடாகும்.
ஏ.சி.யை ஹீட்டரில் செட் செய்தால், அதற்கான வெப்பத்தை இன்ஜினில் இருந்துதான் உங்கள் கார் எடுத்துக்கொள்ளும். காரின் ஏ.சி-யை ஃப்ரெஷ் ஏர் மோடில் வைத்துவிட்டு, ஏ.சி-யை அதிகபட்ச வெப்பநிலைக்கு செட் செய்யுங்கள். இப்போது ஏ.சி-யை ஆன் செய்யாமல், ப்ளோயரை மட்டும் ஆன் செய்யுங்கள். வென்ட்டுகளில் இருந்து சூடான காற்று வரும் என்பதால், எல்லா ஜன்னல்களையும் கீழிறக்கி விடுங்கள். இதன் மூலம் இன்ஜினின் வெப்பத்தை ஓரளவு குறைக்க முடியும்.
ரேடியேட்டரைச் சோதனை செய்ய வேண்டும் என்றால், காரை நிறுத்திய பின்பு, குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ரேடியேட்டர் கேப்பைத் திறக்காதீர்கள். இந்த நேரத்தில் அருகில் யாராவது மெக்கானிக் இருக்கிறார்களா எனத் தேடிப் பார்க்கலாம். கூலன்ட் டாப்-அப்தான் என்றால், மெக்கானிக் மற்றும் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல கவனமாக டாப்-அப் செய்யலாம். இதெல்லாம் சின்னப் பிரச்னைகள். ரேடியேட்டர் லீக் ஆனால், உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்கு டோ செய்ய வேண்டும். பெரிய அளவில் லீக் இல்லாமல் இருந்தால், எம்-சீலை லீக் ஆகும் இடத்தில் ஒட்டிவிட்டு, காரை நிதானமாக சர்வீஸ் சென்டருக்கு ஓட்டிச் செல்லுங்கள்.
இன்ஜின் ஓவர்ஹீட் ஆவதற்கு மேலே கூறப்பட்டுள்ளது போன்ற செல்ஃப் ரிப்பேர்களை செய்ய யோசனையாகவோ, பயமாகவோ இருந்தால், சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படலாம்.
டயர்... உயிர்!
டயர் பராமரிப்பு பற்றிய விழிப்புஉணர்வு, இப்போது அதிகமாகவே இருக்கிறது. வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங், டயர் ரொட்டேஷன் போன்ற அம்சங்களை இப்போது பலரும் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கின்றனர். திறமை வாய்ந்த ஒரு டயர் எக்ஸ்பெர்ட்டால், ஒரு காரின் டயரைப் பார்த்தே அந்த காரின் சஸ்பென்ஷன் சிஸ்டம் எப்படி இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்.
மோசமான வீல் அலைன்மென்ட்/பேலன்ஸிங், முதலில் காரின் சஸ்பென்ஷனையும் ஸ்டீயரிங்கையும் பதம் பார்க்கும். ஸ்டீயரிங்கை நேராக வைத்தாலும் கார் தொடர்ந்து நேர்கோட்டில் செல்லாமல், இடது அல்லது வலது பக்கம் இழுத்துக்கொண்டு போனால், அலைன்மென்ட்டில் பிரச்னை என்று அர்த்தம்.
எவ்வளவு வேகமாக இழுத்துக்கொண்டு போகிறதோ, அவ்வளவு மோசமாக அலைன்மென்ட்இருக்கிறது என்று பொருள். உங்கள் காரில் இப்படி இருந்தால், மேனுவலில் இருக்கும் டோ, கேம்பர், காஸ்டர் வால்யூக்களுக்கு ஏற்றபடி முதலில் வீல் அலைன்மென்ட் செய்துவிடுங்கள்.
இரண்டாவது, வீல் பேலன்ஸிங். எந்த ஒரு காரின் வீலுமே 100 சதவிகிதம் சரியான பேலன்ஸிங் இருக்காது. வீல் பேலன்ஸிங் செய்த பின்பு, சாலையில் ஓடத் துவங்கிய முதல் விநாடியில் இருந்தே, பேலன்ஸ் மாற ஆரம்பித்துவிடும். அதனால்தான், அடிக்கடி வீல் பேலன்ஸிங் செய்ய வேண்டும். காரின் வீல் பேலன்ஸ் செய்தே ஆக வேண்டும் என்பதற்கான அறிகுறி, சீரான டயர் உராய்தல் இல்லாததும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு டயரில் இருந்து அதிர்வுகள் எழுவதும்தான். இது தொடர்ந்தால், வீல் பேரிங்கை பாதிக்கும். அதனால், அலைன்மென்ட் செய்யும்போதே, வீல் பேலன்ஸிங் செய்து விடுங்கள்.
மூன்றாவது, டயர் ரொட்டேஷன். காரின் 5 டயர்களும் (ஸ்டெப்னி சேர்த்து) சமமான அளவில் தேய்மானம் அடைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது. ஃப்ரன்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் கார்களுக்கு ஏற்ப ரொட்«டஷன் முறை மாறுபடும்.
காரில் புது டயர்களைப் பொருத்தினால், குறைந்தது 500 கிமீ வரை, காரை மிக வேகமாக ஓட்டாதீர்கள். அப்போதுதான் புதிய டயர்கள் சாலையில் தேய்ந்து செட் ஆகி, நல்ல க்ரிப் கிடைக்கும்.
டயர் பாலீஷ் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதை வைத்து பாலீஷ் செய்தால், பழைய டயர்கள்கூட பளபளவென்று புதிய டயர்கள்போலக் காட்சியளிக்கும். இதை டயரின் ட்ரெட்டுகளில் போடக் கூடாது. டயர் பாலீஷ் போட்டுவிட்டு வெயிலில் காரை நிறுத்தினால், பாலீஷ் உருகி டயரின் ட்ரெட்டுகளுக்குள் சென்றுவிடும்.
உங்கள் டிரைவிங்... உங்கள் மைலேஜ்!
மைலேஜ் அதிகம் கிடைக்கச் சிறந்த வழி, அதற்கு ஏற்றதுபோல நீங்கள் காரோட்டும் விதத்தை மாற்றிக்கொள்வதுதான். பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டரை மென்மையாகக் கையாளும் வகையில் உங்கள் ஓட்டுதல் இருந்தால், மைலேஜ் அதிகரிக்கும்.
மிதமான வேகத்தில் செல்லும்போதுதான், சாலையை முழுவதுமாக அனுமானித்து ஓட்ட முடியும். ஷார்ப்பான வளைவு ஒன்று சாலையில் இருக்கிறது என்றால், அதை நெருங்கும்வரை வேகமாக ஓட்டிவிட்டு, அதிக பிரேக் அழுத்தி காரின் வேகத்தை மொத்தமாகக் குறைத்து ஓட்டுவதற்குப் பதிலாக, சீரான வேகத்துடன் வளைவைக் கடப்பதுதான் சிறந்த முறை.
இதனால், தேவையில்லாமல் எரிபொருள் வீணாவது தடுக்கப்படும். தேவையில்லாமல் கிளட்ச்சை மிதித்துக்கொண்டே ஓட்டுவதைக் குறைத்தாலும் நிறைய எரிபொருள் வீணாவதைத் தடுக்கலாம். கிளட்ச் பிளேட்டும் தேவையில்லாத தேய்மானத்தில் இருந்து தடுக்கப்படும். காரில் இருந்து தேவையற்ற எடையைக் குறைப்பதன் மூலம் மைலேஜ் மட்டுமல்லாமல், காரின் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸும் கூடும்.
காரின் இன்ஜினை நாம் ஆக்ஸிலரேட்டர் மட்டுமில்லாமல், கியர்பாக்ஸ் மூலமும் கையாள்கிறோம். கியர்களை நாம் மாற்றும் விதத்திலும் கச்சிதமாக இருந்தால், நிறைய மைலேஜ் கிடைக்கும்.
வழக்கத்தைவிட கொஞ்சம் கியரை சீக்கிரமாக மாற்றிப் பாருங்கள். மிகவும் குறைந்த ஆர்பிஎம்-லேயே கியரை மாற்றினால், பின்னர் இன்ஜின் திணற ஆரம்பித்துவிடும். அதனால், இன்ஜினை அதிக ஆர்பிஎம்-ல் ரெவ் செய்து பின்னர் மாற்றுவதற்குப் பதிலாக, கொஞ்சம் குறைந்த ஆர்பிஎம்-ல் மாற்றுவதன் மூலம் நிறைய எரிபொருளை மிச்சம் செய்யலாம்.
ஆனால், 2,000 ஆர்பிஎம்-க்குக் கீழ் இருக்கும்போது, அப் ஷிஃப்ட் செய்யக் கூடாது. அதேபோல், அதிக ஆர்பிஎம்-ல் இன்ஜின் இயங்கிக்கொண்டிருக்கும்போது, தெரியாமல்கூட டவுன் ஷிஃப்ட் செய்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டாக, சிலர் மூன்றாவது கியரில் இருந்து நான்காவது கியருக்கு மாற்றுவதற்குப் பதிலாக, தெரியாமல் இரண்டாவது கியருக்கு மாற்றுவது. இதை 'மணிஷிஃப்ட்’ என்று கிண்டலாக அழைப்பார்கள். இப்படிச் செய்வதால், ஏற்படும் கியர்பாக்ஸ் சேதாரச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், அதை அப்படிச் சொல்கிறார்கள்.  
டயர்கள் எப்போதும் சரியான காற்றழுத்தத்தில் இருந்தால், மைலேஜ் நிறைவாகக் கிடைக்கும் என்பது பொதுவான தகவல். ஆனால், இப்போதைய ட்ரெண்ட் நைட்ரஜன்தான். பலருக்கும் டயர்களில் நைட்ரஜன் நிரப்புவதா அல்லது சாதாரண காற்றையே நிரப்புவதா என்ற குழப்பம் இருக்கிறது.
நைட்ரஜன் நிரப்புவதால், டயர்களில் உள்ள அழுத்தம் விரைவில் குறையாது. மேலும், தொடர்ந்து ஓடும்போது டயரின் வெப்ப அளவு குறைவாகவே இருக்கும். நைட்ரஜனைப் பொறுத்தவரை, சாதாரண காற்றைவிட சற்றே அதிகமான நன்மைகளையே அளிக்கிறது.
நாம் நிரப்பும் சாதாரண காற்றிலேயே 78 சதவிகிதம் நைட்ரஜன்தான் இருக்கிறது. மீதம் இருப்பதில் 20 சதவிகிதம்தான் ஆக்ஸிஜன். டயர்களில் நைட்ரஜன் நிரப்புவதால் கிடைக்கும் நன்மைகளை முழுவதும் அனுபவிக்க, நாம் நிரப்பும் நைட்ரஜன் மிக சுத்தமானதாக இருக்க வேண்டும். செலவு செய்ய முடியும் என்பவர்கள் தாராளமாக நைட்ரஜன் நிரப்பலாம்.
சடர்ன் பிரேக்...
காரின் பிரேக்குகளை ஒவ்வொருமுறையும் சர்வீஸுக்கு விடும்போதும் செக்கப் செய்தாலே போதும்.
ஆனால், நீங்கள் ஓட்டும்போது வழக்கமான பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸில் இருந்து சின்ன மாறுதல் இருந்தால், உடனே சர்வீஸ் சென்டரில் சோதனை செய்துவிடுவது அவசியம். ஹேண்ட் பிரேக் எடுக்காமலேயே காரை ஓட்டினால், காரின் பின்பக்க பிரேக் லைனிங் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
அதேபோல், மலைச் சாலையில் கீழே இறங்கும்போது இன்ஜின் பிரேக்கிங்கைப் பயன்படுத்திக்கொள்ளாமல், பிரேக்குகளையே பயன்படுத்தி வந்தால், பிரேக்குகள் ஏகத்துக்கும் சூடாகி அதன் செயல்திறன் குறைந்துவிடும். குறிப்பாக, முன் பிரேக்குகள் இதில் அதிகமாகப் பாதிக்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் காரை எடுக்கும்போது, பிரேக்குகள் சரியாக இருக்கிறதா என்று பிரேக் பிடித்து சோதனை செய்துவிட்டு பயணத்தைத் தொடர்வது நல்லது.
சும்மா அதிருதுல்ல!
காரின் சஸ்பென்ஷனை சிறப்பாகக் கவனித்து பராமரிக்கத் தேவை இல்லை. கார் ஓட்டும்போது சஸ்பென்ஷனில் இருந்து விநோதமான சத்தம் வந்தால், கவனிக்க வேண்டும். மோசமான சாலைகளில், வேகமாக ஓட்டாமல் இருப்பது சஸ்பென்ஷனைப் பாதிக்காமல் இருக்கும்.
கார் ஓட்டும்போது, அதிர்வுகள் எந்தப் பக்கம் இருந்து எழுகிறது என்று கவனியுங்கள். காரின் ஸ்டீயரிங் வீல் அதிர்ந்தால், காரின் முன் பக்கத்தில் பிரச்னை இருக்கலாம். பெரும்பாலும் மோசமான வீல் பேலன்ஸிங்/அலைன்மென்ட்தான் இதற்குக் காரணமாக இருக்கும்.
இருக்கையில் அதிர்வுகள் இருந்தால், காரின் பின்பக்க சஸ்பென்ஷன் அல்லது வீலில் பிரச்னை இருக்கலாம். காரின் மீது, ஒவ்வொரு வீலின் மேல் பகுதியில் அழுத்தி விட்டுப்பாருங்கள். ஒரு தடவை கார் கீழே இறங்கி மேல் ஏறி நிற்கும். அதற்குப் பதிலாக சிறிது அதிகமாகக் குலுங்கினாலும், சஸ்பென்ஷனில் பிரச்னைதான். ராக் அண்டு பினியன் ஸ்டீயரிங் சிஸ்டம் இல்லாத கார்களில், ஒவ்வொரு முறை டயர்கள் ரொட்டேஷன் செய்யப்பட்ட பிறகு, சஸ்பென்ஷனில் க்ரீஸ் வைக்க வேண்டும்.
புதிய அலாய் வீல் பொருத்தினாலோ, காரின் டயரையும் வீலையும் அப்-சைஸ் செய்தாலோ, மிக அகலமான டயர்களைப் பொருத்தினாலோ, சஸ்பென்ஷன் செயல்பாட்டில் மாற்றம் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
சஸ்பென்ஷன் அடிவாங்கும் என்றால், எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸ்டைலுக்காக வீல்களிலும் டயர்களிலும் கைவைக்க வேண்டாம். காருக்கு அடியில் அண்டர்சேஸி கோட்டிங்கை ஒவ்வொரு மழைக் காலத்துக்கு முன் செய்வது, முக்கிய பாகங்கள் துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கும்.
இம்சிக்காத இன்டீரியர்!
காரின் இன்டீரியரில் என்ன பராமரிப்பு வேண்டியிருக்கிறது என சிலர் நினைத்தால், அது முற்றிலும் தவறு. காருக்குள் அமர்ந்து சாப்பிடுவது, பானங்கள் அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தாலே, கார் இன்டீரியர் பராமரிப்பு விஷயத்தில் நீங்கள் பாஸ் மார்க் வாங்கிவிடலாம். இதனால், இருக்கைகளில் படியும் தேவையற்ற, சிரமமான கறைகளைத் தவிர்க்கலாம்.
ஸ்டீயரிங் வீலையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், ஓரளவுக்கு மேல் அழுக்கு படிந்தபின், ஸ்டீயரிங் வீல் வழுக்க ஆரம்பித்துவிடும். இதனால், எதிர்பாராத சமயங்களில், வழுக்கி ஆபத்துக்கு வழி வகுத்துவிடும்.
காரின் இன்டீரியரில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், தூசு. இருக்கைகளிலும் இன்டீரியர் பாகங்களிலும் படிந்திருக்கும் இது, உங்கள் பயணத்தின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும். லெதர் சீட்களை எளிதாகச் சுத்தம் செய்துவிடலாம். ஆனால், ஃபேப்ரிக் சீட்களைச் சுத்தம் செய்வது சிரமமான காரியம். தவறாகச் செய்தால், தூசியும் அழுக்கும் இன்னும் ஆழமாக இருக்கையில் படிந்துவிடும். பெரும்பாலும் காரின் இன்டீரியரை நாம் சுத்தம் செய்வதைவிட, கார் டீட்டெயிலிங் சென்டரில் சுத்தம் செய்வது நலம்.
காரின் ஏ.சி-யில் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் ஃபில்ட்டர். சென்னை போன்ற பெருநகரங்களில் ஓடும் கார்களின் ஏ.சி ஃபில்ட்டர், மிக விரைவில் அசுத்தமாகி அடைத்துக்கொள்ளும். இதனால், ஏ.சி-யின் செயல்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த நிலையை அடையும் பலரும், ஏ.சி கேஸ் தீர்ந்து விட்டது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது ஏ.சி ஃபில்ட்டரைச் சுத்தம் செய்தாலே போதும். கார் ஏ.சி ரிப்பேர் செய்யும் கடைகளில் குறைந்த விலையிலே இதைச் செய்து கொடுப்பார்கள்.
கார் டேஷ்போர்டின் முன் பகுதியில் உள்ள தூசியை பெரும்பாலும் நாமே துடைத்துவிடுவோம். ஆனால், கண்ணாடிக்குக் கீழ் இருக்கும் டீஃப்ராஸ்டர் வென்ட்டை பலரும் மறந்துவிடுவர். திடீரென்று என்றாவது அதைப் பயன்படுத்தும்போது, நீண்ட நாட்களாக அதில் படிந்திருந்த தூசுகள் வெளியேறி காரின் உள்ளே படிந்துவிடுவதோடு, மட்டுமல்லாமல், நம் மூக்கிலும் ஏறி தும்மலை வரவைக்கும். எனவே, டீஃப்ராஸ்டர் வென்ட்டை அடிக்கடி கவனியுங்கள்.

ஃப்ளோர் மேட்டுகளையும் அடிக்கடி துடைத்துவிடுவது அவசியம். நம் காலணியில் உள்ள அழுக்கு அத்தனையும் ஃப்ளோர் மேட்டுகளில்தான் படியும். இதைக் கவனிக்காமல் விட்டால், நாளடைவில் ஃப்ளோர் மேட்டைச் சுத்தம்கூட செய்ய முடியாமல், புதிதாக மாற்றவேண்டியிருக்கும். எனவே, வாரத்துக்கு ஒருமுறை ஃப்ளோர் மேட்டைச் சுத்தம் செய்யுங்கள்.
'க்ளீன்’ போல்டு!
காரின் வெளிப்புறத் தோற்றம் தான் உங்களுடைய அக்கறையை எடுத்துக் காட்டும். காரைச் சுத்தமாக, பளபளவென்று வைத்திருப்பது சமூகத்தினிடையே உங்களுக்கு மதிப்பைப் பெற்றுத்தரும்.
டிரைவர் இல்லாத பட்சத்தில், காரை தினம் தினம் கழுவிக் கொண்டிருப்பது சிரமமான காரியம்தான். வாரம் ஒருமுறை காரை குடும்பத்துடன் இணைந்து கழுவிப் பாருங்கள். இது கேட்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் குடும்பத்துடன் சிறிது நேரம் ஜாலியாக செலவு செய்த மாதிரியும் ஆச்சு! காரை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினருக்குப் புரியவைத்த மாதிரியும் ஆச்சு! தாங்களே கைப்பட கழுவிய கார் என்பதால், குழந்தைகளும் இனி காரில் எந்த அசுத்தத்தையும் செய்ய மாட்டார்கள்.
விண்ட்ஷீல்டு துடைப்பதற்கு ஃபைபர் கிளாத்தையும், நியூஸ் பேப்பரையும் பயன்படுத்துங்கள். பழைய துணியை மறந்தும் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத துகள்களால் விண்ட்ஷீல்டில் ஸ்கிராட்சுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
சில கார் உரிமையாளர்கள் கார் கழுவுவதை உடற்பயிற்சி போலச் செய்கிறார்கள். இதுவும் நல்லதுதான். உங்களால் இந்த வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், கவலையே தேவையில்லை. எல்லா ஊர்களிலும் இப்போது கார் டீட்டெயிலிங் சென்டர்கள் வந்துவிட்டன. அங்கு காரை எடுத்துக் கொண்டுபோய் பாலிஷ், வாக்ஸ், ப்ரஷர் வாஷ், இன்டீரியர் க்ளீனிங் என காரை கச்சிதமாகச் சுத்தம் செய்துவிட்டு வாருங்கள். விலை அதிகம்தான். ஆனால், காரை புத்தம் புதிய காரைப்போல் மாற்றி விடுவார்கள்.
பைக்
பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் பைக்கை முறையாகப் பராமரிக்காவிட்டால், பாக்கெட்டில் இருக்கும் பணத்துக்குப் பங்கம் வந்துவிடும். வாரத்தில், மாதத்தில் சில மணிநேரங்களை ஒதுக்கினாலே பைக் எந்தப் பிரச்னையும் கொடுக்காது. செலவும் வைக்காது.
வாரம் ஒருமுறை சுத்தம்...
வாரம் ஒருமுறையாவது பைக்கைச் சுத்தம் செய்வது அவசியம். சர்வீஸ் ஸ்டேஷன் சென்றுதான் வாட்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லாதது. பைக்கில் சேறு படிந்திருந்தால், வீட்டிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா என்பதைக் கவனிக்க முடியும். பேட்டரியில் டிஸ்டில்ட் வாட்டர் அளவு சரியாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இரண்டு வீல்களிலும் காற்று சரியான அளவு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும்.
 செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிறதா?
காலையில் முதல்தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட் செய்வதுதான் சிறந்தது. ஏனெனில், இரவு முழுதும் சும்மா நின்றிருந்த இன்ஜின் குளிர்ந்திருக்கும். அப்போது செல்ஃப் ஸ்டார்ட் செய்தால், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், சிலமுறை கிக் செய்துவிட்டு செல்ஃப் பயன்படுத்தலாம் அல்லது கிக் ஸ்டார்ட்டையே பயன்படுத்தலாம். இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும். மேலும், செல்ஃப் ஸ்டார்ட்டரை ஒருமுறை பயன்படுத்தும்போது, பேட்டரியின் பெருமளவு சக்தி செலவாகிறது. அது மீண்டும் சார்ஜ் ஆவதற்கு, குறைந்தது 20 கி.மீ தூரமாவது பயணிக்க வேண்டும். அதனால், குறைவான தூரம் பயணிப்பவர்கள் அடிக்கடி செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்துவதில் கவனம் கொள்வது நல்லது.
அதேபோல், காலையில் ஸ்டார்ட் செய்த பிறகு, ஒருசில நிமிடங்களாவது ஆயில் இன்ஜின் முழுவதும் பரவ ஐடிலிங்கில் ஓட அனுமதியுங்கள். ஆக்ஸிலரேட்டரை முறுக்காதீர்கள். அப்படிச் செய்தால், இன்ஜின் பாதிக்கப்படும். கிக் ஸ்டார்ட் இல்லாத பைக்குகளில், சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.
 இன்ஜின் ஆயில்
ஆயிலின் மசகு(Viscosity)தன்மைதான் இன்ஜினை அதிகம் சூடாக்காமலும் உராய்வில் தேய்ந்துபோகாமலும் காக்கிறது. எனவே, வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கி.மீ தூரம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (எது முந்துகிறதோ அதன்படி) இன்ஜின் ஆயில் மாற்றுவது இன்ஜினின் ஆயுளை நீட்டிக்கும். பரிந்துரைத்த கிரேடு ஆயில் பயன்படுத்துவது முக்கியம். ஆயில் குறைந்துவிட்டது என்பதால், வேறு ஏதாவது ஆயிலை ஊற்றுவது தவறு.
    டயர்
பொதுவாக, இரு சக்கர வாகனங்களின் டயர்கள் 35,000 - 40,000 கி.மீ தூரம் வரை மட்டுமே உழைக்கும். சில பைக்குகளில் 20,000 கி.மீயிலேயே மாற்ற வேண்டிவரும். அடிக்கடி பஞ்சர் ஆவதுதான் டயர் பலவீனமடைந்துவிட்டது என்பதற்கான அறிகுறி. டயர்களின்  பட்டன்கள் தேய்ந்து சமதளமாக டயர் மாறும்வரை ஓட்டுவது ஆபத்து. பட்டன்களின் ஆழம் குறைந்ததுமே மாற்றிவிடுவதுதான் பாதுகாப்பு. ஏனெனில், வளைவுகளில், மணற்பாங்கான சாலைகளில், வழுக்கும் தண்மைகொண்ட இடங்களில் தேய்ந்துபோன டயர் வாகனத்தை ஸ்கிட் ஆக்கிவிடும். மேலும், பிரேக்கைப் பிடிக்கும்போது ஸ்கிட் ஆவதுடன், பைக் தாறுமாறாக வளைந்து நெளிந்து சுழல்வதும் நடக்கும். அதேபோல், குறிப்பிட்ட தூரத்தில் பைக் நிற்காது. எனவே, டயர் விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 கிளட்ச்
கிளட்ச் லீவரை கியர் மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது கிளட்ச் லீவரைத் தொடுவதால்கூட இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தி முழுமையாக வீலுக்குச் செல்லாமல் விரயமாகும். அதனால், மைலேஜ் பெருமளவு குறையும். கிளட்ச் பிளேட்டின் தேய்மானத்துக்கு ஏற்ப லீவர் கேபிள் அட்ஜஸ்ட் செய்யப்பட வேண்டியது அவசியம். இதை மாதம் ஒருமுறை செக் செய்வது நல்லது. தேய்ந்துபோன கிளட்ச்சைத் தொடர்ந்து பயன்படுத்துவது பெட்ரோல் விரயத்துக்கு வழி வகுப்பதுடன், கியர்பாக்ஸைப் பாதித்து செலவை எகிறவைத்துவிடும். மேலும், டிராஃபிக் சமயங்களில் நம்மைத் தள்ளாட வைத்துவிடும்.
 செயின் ஸ்பிராக்கெட்
இன்ஜினையும் விலையும் இணைக்கும் செயின் ஸ்பிராக்கெட், மிக முக்கியமான பாகம். இதன் செயின் அதிக இறுக்கமாகவோ அல்லது மிகத் தளர்வாகவோ இருக்கக் கூடாது. ஓட ஓடத் தேயும் செயினை மாதம் ஒருமுறை சோதித்து அட்ஜஸ்ட் செய்வது அவசியம். செயினில் தூசு இருந்தால் சுத்தம் செய்வது, ஆயில் விட்டுப் பராமரிப்பது நீண்ட நாள் உழைக்க வழிவகுக்கும். நேக்கட் பைக் சிலவற்றில் செயின் வெளியே தெரியும்படி இருக்கும். இதில், ஆயிலுக்குப் பதில் ஸ்ப்ரே பயன்படுத்தவேண்டும். மேலும், ஸ்பிராக்கெட்டில் இருக்கும் பற்கள் தேய்ந்துபோகாமல் இருக்கிறதா எனக் கவனிப்பதும் அவசியம். அட்ஜஸ்ட் செய்ய முடியாத அளவுக்குத் தேய்ந்திருந்தால் செயின் ஸ்பிராக்கெட்டை மாற்றி விடுவது நல்லது. பொதுவாக, செயின் ஸ்பிராக்கெட் 30,000 - 35,000 கி.மீ வரை உழைக்கும்.
 ஸ்பார்க் ப்ளக்
இன்ஜின் இயங்க மிக முக்கியமான பாகம் ஸ்பார்க் ப்ளக். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யும்போது தவறாமல் இதையும் மெக்கானிக் சோதித்துப் பார்ப்பார் என்றாலும், அதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. சரியாக தீப்பொறி வராத ஸ்பார்க் ப்ளக்கால் பைக்கின் பெர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுவதுடன், பெட்ரோலும் வீணாகும். மேலும், எப்போதும் ஒரு ஸ்பேர் ஸ்பார்க் ப்ளக் உங்கள் பைக்கிலேயே வைத்திருங்கள். 50 ரூபாய் முதல் 100 ரூபாய் விலை கொண்ட இது பழுதடைந்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். இரீடியம் ஸ்பார்க் ப்ளக் எனும் வகை ஒன்று உண்டு. இது விலை அதிகம் என்றாலும், நீண்டநாள் உழைப்பதுடன் சீராக இயங்கி நல்ல பெர்ஃபாமென்ஸை அளிக்கும்.
 சஸ்பென்ஷன்
வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடையேற்றினால், முதலில் பாதிக்கப்படுவது சஸ்பென்ஷன்தான். சஸ்பென்ஷன் பழுதடைந்தால், பைக்கின் பெர்ஃபாமென்ஸ், பிரேக், செயல்பாடு, மைலேஜ் என அனைத்துமே பாதிக்கும். மேலும் சஸ்பென்ஷன் சரியாக இயங்கவில்லை என்றால் கழுத்து வலி, முதுகு வலி, கை வலி வர வாய்ப்பு உண்டு. எனவே, சஸ்பென்ஷன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. ஷாக் அப்ஸார்பரைப் பொறுத்தவரை ரீ-கண்டிஷன் செய்து பொருத்துவது கூடாவே கூடாது. புதிதாக மாற்றுவதே நல்லது. முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் பழுதடைந்து ஆயில் கசிந்தால் உடனே சரிசெய்வதுதான் நல்லது. ஏனெனில், அதில் உள்ள ஆயில் முழுவதும் வெளியேறி ஆயில் இல்லாத நிலையில் இயங்கினால், ஃபோர்க் வளைந்துவிடும். ஃபோர்க்கைச் சரிசெய்வது என்பது நன்றாக இருந்த கையை உடைத்து மாவுக்கட்டு போடுவது போன்றதுதான்.
 வீல்
சரியான காற்றழுத்தத்தை எப்போதும் கடைப்பிடித்தால், வீல் பெண்ட் ஆகாமல் இருக்கும். வீல் பஞ்சர் ஆனது தெரியாமல் பைக்கை ஓட்டும்போதுதான் பெரும்பாலும் வீல் பெண்ட் ஆகிறது. அலாய் வீல் சுலபத்தில் பெண்ட் ஆகாது என்றாலும், பெண்ட் ஆனால் சரிசெய்ய முடியாது. ஸ்போக் வீலைச் சரி செய்யலாம் என்றாலும், கவனமாக இருப்பது நல்லது. பெண்ட் ஆன வீலுடன் வாகனத்தை ஓட்டினால், செயின் ஸ்பிராக்கெட் பாதிக்கப்படும். டயர் ஏறுக்கு மாறாகத் தேயும். பைக்கின் பெர்ஃபாமென்ஸ், செயல்பாடு என ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும்.
 எலெக்ட்ரிகல்
முடிந்தவரை மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் பைக்கைப் பாதுகாத்தால் எலெக்ட்ரிகல், பெயின்ட் போன்றவற்றில் பிரச்னைகள் வராது. ஹெட்லைட் பல்பை அதிக வெளிச்சம் தருவது போல மாற்றுவதாக இருந்தால் அல்லது அதிகச் சத்தம் தரும் ஹாரன் பொருத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட வாட்ஸ் அளவுள்ளதுதான் பொருத்த வேண்டும். மாற்றிப் பொருத்தினால், எலெக்ட்ரிகல் பாகங்கள் பாதிப்பதுடன் எலெக்ட்ரிக் ரெகுலேட்டரும் சேதமாகும். எனவே, எலெக்ட்ரிகல் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருங்கள்.
பிரேக்
பிரேக்கில் கால் வைத்துக்கொண்டே அல்லது பிரேக் லீவரைப் பிடித்தவாறு பைக் ஓட்டுவது தவறு. அப்படி ஓட்டினால், பிரேக் பேட் விரைவில் தேய்ந்துபோகும். மேலும், பிரேக்கை அழுத்தியவாறு ஓட்டுவதால், அதிக வெப்பம் உருவாகும். இதனால், பிரேக் ட்ரம் தேய்ந்துவிடுவதுடன் மைலேஜும் கணிசமாகக் குறையும். எனவே. தேவை ஏற்படும்போது மட்டுமே பிரேக் பெடலில் கால் வைப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
மேலும், இன்ஜினும் ஒரு பிரேக்தான் என்பது பலருக்குப் புரிவது இல்லை. அவசரமாக பிரேக் பயன்படுத்தும்போது, கிளட்ச்சையும் பயன்படுத்துவது தவறு. கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜின் ஆஃப் ஆகி விடாதா எனக் கேள்வி எழும். கிளட்ச்சையும் சேர்த்துப் பிடிக்கும்போது, பைக் ஸ்டெபிளிட்டி பாதிக்கப்படும். மேலும், பைக் நிற்கும் தூரமும் அதிகரிக்கும்.
கிளட்ச் பிடிக்கவில்லை என்றால், இன்ஜினும் வீலும் நேராக இணைந்திருக்கும். ஆக்ஸிலரேட்டர் குறைவதும் பிரேக் பெடல் அழுத்தப்படுவதும் ஒரே சமயத்தில் நிகழும்போது, நீங்கள் திட்டமிட்ட தூரத்துக்கு முன்பாகவே பைக் நின்றுவிடும். அதேபோல், முன்-பின் இரு பிரேக்குகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்துவதும் அவசியம். டிஸ்க் பிரேக்கைப் பொறுத்தவரை அதில் நாமாகச் செய்ய எதுவும் இல்லை. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், பிரேக் ஃப்ளூயிட் லெவல் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். அளவு குறைந்தால், உடனே சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசெல்வது நல்லது. அதேபோல், பிரேக் டிஸ்க்கில் சேறு படியாமல் சுத்தமாகப் பராமரித்து வரவேண்டியது அவசியம்.
 ஏர் ஃபில்ட்டர்
ஏர் ஃபில்ட்டர் அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியமான பாகம். இன்ஜினுக்குள் செல்லும் காற்றைச் சுத்தமாக்கி அனுப்பும் வேலையைச் செய்யும் இது சேதம் அடைந்திருந்தாலோ அல்லது நீண்டநாள் பயன்படுத்தியதால் தூசு அதிகம் சேர்ந்திருந்தாலோ பிரச்னைதான். காற்றில் உள்ள தூசு இன்ஜினுக்குள் சென்றால், சிலிண்டரில் ஸ்க்ராட்ச் ஏற்படும். இதனால், இன்ஜின் விரைவாகத் தேயும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏர்ஃபில்ட்டரைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏர் ஃபில்ட்ட்ரையே மாற்றுவதும் அவசியம்.
 கார்புரேட்டர்
காற்றும் பெட்ரோலும் கலக்கும் இடம் கார்புரேட்டர். இதில், பல ஸ்க்ரூ-க்கள் இருக்கும். சில சமயங்களில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், இதில் இருக்கும் ஏதாவது ஒரு ஸ்க்ரூவைத் திருக்குவது சிலருக்குப் பழக்கமாக இருக்கிறது. அப்படிச் செய்யவே கூடாது. ஏனெனில், காற்றும் பெட்ரோலும் என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த ஸ்க்ரூ-க்கள் அட்ஜஸ்ட் செய்யப்பட்டிருக்கும். இதில் ஏதாவது ஒன்றைத் திருகினால், ஏறுக்குமாறாக மாறிவிடும். இதில் கைவைக்காமல் சுத்தமாகப் பராமரிப்பது மட்டுமே சிறந்தது. இதில் உள்ள 'சோக்’-கை அதிகாலை நேரத்தில் ஸ்டார்ட் செய்யும்போது அல்லது ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற சமயத்தில் சோக் ஆன் ஆகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஓட்டுவது நல்லது. ஏனெனில், சோக் அமைப்பு அதிக பெட்ரோல், குறைவான காற்று இன்ஜினுக்குச் செல்வதுபோல வடிவமைக்கப்பட்டது. கவனிக்காமல் ஓட்டினால், டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் காலியாகிவிடும்.
 அவசியம் இல்லாத ஆக்சஸரீஸ்

புதிதாக பைக் வாங்கிய உடனே பல்வேறு ஆக்சஸரீஸ் வாங்கி அழகுபடுத்துவார்கள். அது தவறு இல்லை. ஆனால், இதில் ஹேண்ட் கிரிப், சீட் கவர், இன்ஜின் கார்டு போன்றவை அவசியமற்றவை என்பதுடன் பைக்குக்கு பாதுகாப்பானதும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால், பைக்கில் ஏற்கெனவே இருக்கும் ஹேண்ட் கிரிப் மனித கைகளின் அளவுக்கு ஏற்ப திட்டமிட்டு டிஸைன் செய்தவை. அதன் மீது வேறு க்ரிப் பொருத்தும்போது, அளவு மாறுபடும். அளவு மாறினால், வாகனத்தின் செயல்பாடும் மாறுபடும். அதேபோல், பைக்கில் இருக்கும் ஒரிஜினல் சீட் கவர் கிரிப்புடன் இருக்கும் வகையில் டிஸைன் செய்யப்பட்டது. அதாவது, பைக் ஓட்டுபவர் திடீரென பிரேக் பிடிக்கும்போது சீட்டில் இருந்து நழுவாமல் இருக்க வேண்டும். அதன் மீது வழுக்கும் தன்மைகொண்ட கவரைப் போட்டால், அதன் நோக்கம் நிறைவேறாது.