சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 May 2013

தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர்...

கடந்த இரண்டு வாரங்கள் முன்பு  கேன் தண்ணீர்  உற்பத்தியாளர்களுக்கு பசுமை தீர்ப்பாயம்  சில வரைமுறைகளை வகுத்தது. அது தவறு என்றும், எங்களால் பசுமை தீர்ப்பாயத்தின் விதிகளை பின்பற்ற முடியாது என்றும்  கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள்  போராட்டத்தில் இறங்கினர். சென்னை உள்பட பல இடங்களில் தண்ணீர் ( கேன் தண்ணீர் தான் ) தட்டுபாடு ஏற்ப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும்  கேன் தண்ணீரை தடையில்லாமல் வழங்க வேண்டும் என்றும் அங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                                    


 இது யாருடைய தவறு என்று அறிந்து கொள்வதற்கு முன் கேன் தண்ணீர் எப்படி தயாரிக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன். இந்த தொழிலில் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பது லோக்கல் அரசியல்வாதிகள் தான். கவுன்சிலர், வார்டு மெம்பர், ஒன்றிய கவுன்சிலர், வட்ட செயலாளர், போன்ற சிறு தலைகள் தான் இந்த தொழிலை நடத்துகின்றனர். சரி இவர்களுக்கு தேவையான தண்ணீர் எப்படி கிடைக்கிறது? இவர்கள் ஏதாவது இயந்திரம் வைத்திருக்கிறார்களா?  என்றால் இல்லை. போர் தண்ணீர், கிணற்று நீர்  போன்றவற்றை உறிஞ்சியது பத்தாது என்று இப்போது ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரினை எடுத்து தங்கள் நிறுவனத்துக்கு பயன்படுத்துகின்றனர். சரி இதில் என்ன தவறு ? என்று நீங்கள் நினைக்கலாம்... தண்ணீர் என்பது இயற்க்கை கொடுத்த வரம். அது அனைவருக்கும் சமமானது. ஆனால் அதை இவர்கள் தவறாக பயன்படுத்தி கொள்ளை அடிக்கின்றனர்.


அடுத்து ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர்  நம் வீட்டில் வரும் நீரின் நிறத்தில் இருக்காது. செந்நிறமாக இருக்கும். அதை அப்படியே பாட்டில்களில் அடைத்து கொடுத்தால் யார் குடிப்பார்கள். எனவே அந்த நிறத்தை போக்க பலவகையான கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டு " நிறமில்லாத நீர் " உருவாக்க படுகிறது. அடுத்து சுவைக்காக இன்னும் சில கெமிக்கல்கள் சேர்க்க படுகின்றன. இத்தனை கெமிக்கல்கள் சேர்க்க பட்ட பின்புதான் நீங்கள் விரும்பும் " நல்ல சுத்தமான குடிநீர் " உங்களுக்கு கிடைக்கிறது.

அடுத்த விஷயம் என்னவென்றால்  கெமிக்கல்கள்  சேர்ப்பதற்கும் அதன் அளவுகளுக்கும் சில வரை முறைகள் உள்ளன. குறிப்பிட்ட கெமிக்கல்களை குறிப்பிட்ட அளவுதான் கலக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதே அளவு கலந்தால் நீங்கள் விரும்பும் சுத்தமான , சுவையான குடிநீரை கம்பெனிகள் தயாரிக்க முடியாது. அதனால் கம்பெனிகள் சில விஷயங்களில் மீறி செயல்படுகின்றன. அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று குடிப்பவர்களுக்கு தெரியுமா?

                              

ஒரு சிறு நிகழ்வினை சொல்கிறேன். என் நண்பர் ஒருவர் இதுமாதிரியான கம்பெனிகளின் தண்ணீரை சோதிக்கும் தரக்கட்டுபாட்டு ஆய்வாளராக உள்ளார். ( தனியார் நிறுவனம் தான் )ஒரு கம்பெனியின் நீரை பரிசோதிக்க சென்ற பொழுது அந்த கம்பெனியில் பயன்படுத்த படும் ஒரு கெமிக்கலை ( கால்சியம் கார்பனேட் என்று நினைவு ) அவர் பிட்யூட்டரியில் எடுக்கும் போது தவறி சிறிது நண்பரின் வாய்க்குள் சென்றுவிட்டது.அவரும் அதிர்ச்சியில் அதை விழுங்கி விட்டார். அதன்பின்பு 20 நாட்கள் அவரால் சரியாக பேசவோ, சாப்பிடவோ முடியவில்லை. அதை தினமும் குடிக்கும் மக்களின் நிலை என்னவென்று யோசித்து பாருங்கள்.

அடுத்து தண்ணீர் தயாரிப்பவர் நேரடியாக மக்களிடம்  சேர்ப்பதில்லை. அவர்க்கு ஒரு டீலர் இருப்பார்.அவருக்காவும் விலை குறைப்பு நடவடிக்கைகளில் சில தகிடுத்தத்தங்கள் நடக்கின்றன. ஒரு முறை பயன்படுத்திய கேனை மறுமுறை பயன்படுத்தும் பொது சரியாக கழுவாமல் தண்ணீர் நிரப்புவர். இப்படி சில காரியங்கள் நடக்கிறது. அடுத்து பெரிய நிறுவனங்களான' டாட்டா, பிஸ்லேரி, அக்வோபினா, போன்றவைகளின் பாட்டில் தண்ணீர் தான் சுத்தமானது என்று கூறுகிறார்கள். ஆனால் அதே பாட்டிலில் அச்சடிக்க பட்டிருக்கும் வார்த்தைகளை படித்து பாருங்கள்." வெயில் படக்கூடாது, குடித்து முடித்ததும் அந்த பாட்டில்களை பயன்படுத்த கூடாது"  என்று போட்டிருப்பார்கள்

இதைவிட முக்கியமான ஒன்று அனைத்து கம்பெனிகளும் தங்களின் தண்ணீர் " மினரல் வாட்டர்" என்று சொல்கின்றனர். என்னென்ன மினரல்கள் இருக்கின்றன என்று எந்த கம்பெனிகளின் பாட்டில்களில் அச்சடிக்க பட்டிருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?இயற்கையாக கிடைக்கும் தண்ணீரில் மட்டுமே பல விதமான மினரல்கள் உள்ளன. இவர்கள் கொடுப்பதில் இல்லை.

                            

அதே போல வீடுகளில் ஆரோ பயன்படுத்துவோருக்கு ஒரு சின்ன செய்தி. உங்கள் ஆரோ சுவை இல்லாத நீரை சுவையானதாகவும், சுத்தமில்லாத தூசுகள் கலந்த நீரை சுத்தமானதாகவும்  மாற்றுகிறது என்று பெருமை பட்டு கொண்டு இருப்பீர்கள். அது தவறு.உண்மை என்னவெனில் இயற்கையாக கிடைக்கும் நீரில் உள்ள அனைத்து சத்துகளையும் எடுத்து விட்டு ஒரு சத்துமில்லாத நீரை குடித்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.இது எப்படி என்றால் கரும்பு தின்ன ஆசை பட்டவன் கரும்பை அடித்து பிழிந்து விட்டு வெறும் சக்கையை சாப்பிடுவது போல்தான். என்னை கேட்டால் நம் வீட்டு பைப்பில் வரும் நீரை சிறிது காய்ச்சி ஆறவைத்து குடித்தாலே போதுமானது.

இது எல்லாவற்றையும் விட தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் மக்கள் நிறைய பேர் இருக்க யாரோ சில பேர் காலம் காலமாக கொள்ளயடித்டு சொத்து சேர்க்கின்றனர்.

தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை.  அது இயற்கையின் கொடை.  அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.

பாட்டில் தண்ணீர்சுட்டெரிக்கும் கத்திரி வெயில் கொளுத்தும் கோடைக்காலம் தான் தண்ணீர் வியாபாரிகளுக்கு அடைமழைக் காலம். பாக்கெட் தண்ணீர், பாட்டில் தண்ணீர், கேன் தண்ணீர், வாட்டர் மெஷின் என்று தண்ணீர் வியாபாரம் கோடிகளில் கொழிப்பது இந்த கோடைக்காலத்தில் தான். சென்னையில் மட்டும் ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் தண்ணீர் வியாபாரம் நடக்கிறது.

தண்ணீர் என்கிற அற்புதத்தை யாராவது உற்பத்தி செய்ய முடியுமா ? முடியாது, ஆனால் விற்கலாம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலையில் முதலாளி எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சுருட்டுகிறாரே என்று கேட்டால், அவர் மூளை உழைப்பில் ஈடுபடுகிறார் என்று கூறுவார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். அது ஒரு பொய். எனினும் அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அந்த மூளை உழைப்பு கூட இந்த தண்ணீர் வியாபாரத்தில் இல்லை. தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையின் கொடை. அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.

தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையுடையது. அத்தகைய நீரை, அனைவருக்கும் உரிமையுள்ள இயற்கையை முதலாளிகள் கடைச்சரக்காக்கி காசு பார்ப்பது எவ்வளவு பெரிய கொள்ளை? அந்த கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பது எத்தகைய அயோக்கியத்தனம்!

மக்களுக்கு தரமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மக்கள் சாவிலும் கூட வரியை பிடுங்க மறக்காத அரசு, தனது கடமைகள் ஒவ்வொன்றில் இருந்தும் விலகிக்கொண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இலாபவெறி பிடித்த முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்து வருகிறது. அப்படித்தான் மக்களின் அடிப்படை உரிமையான குடிநீர் பெறும் உரிமையும் தனியார் முதலாளிகளின் கைகளில் கிட்டத்தட்ட ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இதே போல அனைவரும் கேன் தண்ணீருக்கு அடிமையானால் நெருக்கடியான நேரங்களில் எல்லாம் ஒரு கேன் நூறு ரூபாய் என்றால் கூட இவர்கள் வாங்கத் தயங்குவதில்லை. தண்ணீரை முற்றிலும் தனியார்மயமாக்கிவிடும் ஆளும் வர்க்கத்தின் கொள்கை எந்த பிரச்சினையும் இன்றி மக்களாலேயே ஏற்று அங்கீகரிக்கப்பட்டு அமுலாக்கப்படுவதை நாம் இதில் பார்க்கலாம்.

தண்ணீரை தனியார்மயமாக்கும் கொள்கை எவ்வளவு வக்கிரமானது, கொடூரமானது, அநீதியானது என்பதை உணரமுடியாதபடி தண்ணீர் தனியார்மயத்தை எந்த வன்முறையும் இன்றி அரசும் முதலாளிகளும் கடந்த இருபது ஆண்டுகளில் சிறிது சிறிதாக மக்களை ஏற்க வைத்துவிட்டனர். தண்ணீர் என்றாலே தனியார் தண்ணீர் தான் என்பதை மூளையில் பதிய வைப்பதில் உண்மையில் அவர்கள் வெற்றி கண்டுவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

மெட்ரோ வாட்டர் சுத்தமானது இல்லை என்று கூறுபவர்கள் டாடா வாட்டர் பிளஸ் சுத்தமானது மட்டுமல்ல சத்தானதும் கூட என்று அங்கீகரித்து அதற்காக பிரச்சாரமும் செய்கிறார்கள். தனியார் தண்ணீர் தான் தரமானது என்கிற கருத்து எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதையும், அதை எத்தனை இலட்சம் பேர் பயன்படுத்துகின்றனர் என்பதையும் தற்போது ஏற்பட்ட தண்ணீர் (கேன்) தட்டுப்பாட்டின் போது நாம் காண முடிந்தது.

சென்னை நகரில் கணிசமான மக்கள் தனியார் நிறுவனங்களின் குடிநீரையே பயன்படுத்துகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இருபது லட்சம் வீடுகளில் இதுபோன்ற பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீரைத் தான் பயன்படுத்துகிறார்கள். குடிநீர் வாரியத்தின் நீர் சுகாதாரமற்றது என்பதால் தான் இது போன்ற தனியார் தண்ணீரை வாங்குகிறோம். இது கூடுதல் செலவு தான் ஆனால் வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். இவர்களைத் தவிர கை நிறைய சம்பாதிக்கும் பிரிவினருக்கு இது ஒரு காரணம். இதைவிட பெரிய காரணம் கை கொள்ளாத அளவுக்கு காசு இருக்கும் போது நம்ம ஸ்டேட்டசை காட்ட வேண்டாமா. மற்றவர்களும் நாமும் ஒன்றா. நாம் எதற்காக மெட்ரோ வாட்டரை குடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அக்வாஃபினாஇவர்கள் மோசமான குடிநீர் என்று கூறும் மெட்ரோ வாட்டரைத் தான் பெரும்பாலான மக்கள் அருந்துகின்றனர். அரசிடம் குடிநீரை வழங்குவதில் பல குறைபாடுகள் இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் மெட்ரோ வாட்டரில் சேர்க்கப்படும் குளோரினின் அளவு சரியாக இருந்தால் நீரில் உள்ள அனைத்து நோய்க்கிருமிகளும் செத்து விடும் என்பது நிச்சயம். ஆனால் சுத்தமான தண்ணீர் என்று கருதப்படும் தனியார் கம்பெனிகளின் தண்ணீர் உண்மையில் சுத்தமாகவா இருக்கின்றன ? கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை வியாபாரம் செய்வதால் இவர்கள் கேன்களையே முறையாக கழுகுவதில்லை. பாசியும் அழுக்கும் படிந்த நிலையிலேயே அடுத்த கேனை நிரப்பி வண்டிகளில் ஏற்றுகின்றனர். இது கூட பெரிய பிரச்சினை இல்லை. இதற்கடுத்ததுதான் முக்கியமானது.

நீரின் சுவையை செயற்கையான முறையில் கூட்டுவதற்காக இந்த தண்ணீர் கொள்ளையர்கள் பல்வேறு தாதுப் பொருட்களையும் அளவுக்கு அதிகமாக நீரில் கலக்கின்றனர். இத்தகைய தாதுப் பொருட்கள் அதிகமாக சேர்க்கப்பட்ட நீரை குடிப்பவர்களுக்கு நிச்சயமாக ரத்த அழுத்தமும், சிறுநீரகத்திலும் பித்தப்பையிலும் கற்கள் உருவாவதையும் யாராலும் தடுக்க முடியாது. தாகமும் அடங்காது. அடுத்து அதை சரி செய்ய மெட்ரோ வாட்டரைப் போலவே சில பல குறைபாடுகளுடன் இயங்கும் அரசு மருத்துவமனையை தரமானது இல்லை என்று கூறி தனியார் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை கொட்டி அழுவார்கள். இன்னும் நாலு பிரச்சினைகள் அதிகமாகும்.


தனக்கு மட்டும் நல்ல உணவு, நல்ல தண்ணீர், நல்ல வாழ்க்கை என்று சகலமும் தரமாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற நடுத்தர வர்க்கம் தான் கேன் தண்ணீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கச் சொல்லி போராட்டத்திலும் குதித்திருக்கிறது. அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை என்றோ, அனைவருக்கும் நல்ல தண்ணீரை வழங்கு என்றோ இவர்கள் போராடவில்லை. மாறாக தடை இல்லாமல் கேன் தண்ணீரை வழங்கு என்று போராடியுள்ளனர். இதற்கு பொருள் என்ன என்றால் தடை இல்லாமல் தண்ணீரை தனியார்மயமாக்கு என்பதாகும்.


இது போல நெருக்கடியான நேரங்களில் தண்ணீர் இல்லை என்றால் நூறு ரூபாய்க்கு கூட இவர்களால் வாங்க முடிகிறது என்பதை தண்ணீர் கம்பெனிகள் இந்த சீல் வைப்பு நடவடிக்கையின் போது நேரடியாகவே கண்டுகொண்டார்கள். அதன் விளைவாக இப்போது கேனுக்கு ஐந்து ரூபாயை உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்விற்கு எதிராக எந்த முணுமுணுப்பும் இல்லை. நாளையே ஒரு கேன் இருநூறு ரூபாய் என்றால் இவர்களால் என்ன செய்ய முடியும், விலையை குறைக்கச் சொல்லி அரசிடம் கோரிக்கை வைப்பார்களா ? அப்படியும் செய்யலாம். ஏனெனில் தரமான தண்ணீர், தரமான தண்ணீர் என்று தேடி அலையும் இவர்கள் தனியார் தண்ணீருக்கு அடிமைகளாகிவிட்டனர். ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்த விரும்பும் தண்ணீர் தனியார்மய கொள்கைக்கு இவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. இது தண்ணீரை சரக்காக்கத் துடிப்பவர்களுக்கு கிடைத்த வெற்றி.

                           

தென் அமெரிக்க நாடுகளில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் ஒரு போரையே நடத்திக்கொண்டிருக்கின்றனர். தண்ணீர் வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறி தனியார் தண்ணீர் கம்பெனிகளின் பைப் லைன்களை அடித்து நொறுக்குகிறார்கள். ஆனால் இங்கோ தனியார் தண்ணீரை தடை இல்லாமல் வழங்கு என்று ரோட்டில் உட்கார்கிறார்கள். இது சாதாரண தண்ணீரை குடிக்கும் ஏழைகளின் தாகத்தையும் தனியார் கம்பெனிகளிடம் விற்பதற்கு ஒப்பான செயலாகும்.உலக நாடுகளுக்கு இடையே அடுத்த போர் என்று உருவானால் அது பெட்ரோல், டீசல், அல்லது கனிம வளங்களுக்காக இருக்காது. தண்ணீருக்காகவே இருக்கும்.

தண்ணீர் மட்டுமல்ல கல்வி, மருத்துவம் வேலை உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசால் முதல் தரமாக வழங்க முடியும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்த டாடா வாட்டர் பிளஸ் இருந்தது ? அனைத்தையும் இந்த அரசு தானே வழங்கியது. அதன்பிறகு உலகமயமாக்கல் கொள்கையால், உலக வங்கியின் உத்தரவால் தான் அரசு தன் கடைமைகள் ஒவ்வொன்றில் இருந்தும் விலகிக்கொண்டு அவற்றின் இடத்தில் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்துவிட்டது. முதலாளிகளுக்காக திட்டமிட்டே தான் அரசின் சேவையும் தரமும் குறைக்கப்பட்டது. அரசு கல்வி தரமாக இல்லை, அரசு மருத்துவம் தரமாக இல்லை, அரசு தண்ணீர் தரமாக இல்லை என்றால் அதற்கு இவை தான் காரணம்.

எனவே அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்க இந்த அரசால் முடியும். அனைவருக்கும் தரமான தண்ணீரை வழங்கு தண்ணீர் கொள்ளையர்களை தடை செய் என்கிற கோரிக்கையை வைத்து போராடுவதன் மூலம் தான் அரசை அடிபணிய வைக்க முடியும். அவ்வாறு அரசை அடிபணியவைத்தால் தரமான குடிநீரையும் பெறலாம் தண்ணீர் வியாபாரிகளையும் ஒழித்துக்கட்டலாம்.

 இன்னும் " நம் இந்திய அரசுஎப்படி தனியாருக்கு சாதகமாக மாறும் என்பதை எனது முந்தைய பதிவான கீழுள்ள லிங்கினை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள்.


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !