சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Jun 2015

'கை தூக்கி விட யாருமில்லை...​ஆனால் கீழே தள்ள நிறைய பேர்!' - நடிகர் ஷாம் உருக்கம்!

மீபத்தில் வெளியான 'புறம்போக்கு' ஷாம் நடிப்பில் வெளிவந்த 25-வது படம். திரையில் சாக்லேட் பாயாக கதாநாயகிகளுடன் டூயட் பாடி ரொமான்ஸ் செய்து வலம் வந்த ஷாம், '6' படத்துக்குப் பின் ஆளே மாறினார். அர்ப்பணிப்புள்ள நடிகனாக தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார். அவரது 25 வது படமாக இப்போது வந்திருக்கும் 'புறம்போக்கு' படத்தில் அழுத்தமான மெக்காலே பாத்திரம் மூலம் தன் அடுத்த இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். 

படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த பாராட்டு, அவரது முகத்தில் இன்னும் அழகை கூட்டியிருக் கிறது. முகத்தில் பளீரிடும் உற்சாகம் அவரது வார்த்தைகளிலும் தெறிக்கிறது.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் 'இயற்கை' யில் நடித்தீர்கள். இப்போது 'புறம்போக்கில் நடித்துள்ளீர்கள். இரண்டு படங்களின் அனுபவம் எப்படி ?

அப்போது எனக்கும் நடிகனாக பெரிய அனுபவம் இல்லை. அவரும் புதுமுக இயக்குநர். போகப்போக அவரைப்பற்றி நிறைய அறிந்தேன். அப்போது எங்களுக்கும் அவ்வளவு புரிதல் இல்லை. ஆனால் அவர் ஒரு முதிர்ச்சியான சிந்தனைவாதி என்பது போகப் போக புரிந்தது. அவர் நடிகர்களுக்காக கதை செய்யமாட்டார். பாத்திரங்களுக்காக நடிகர்களைத் தேடுபவர். 

ஜீவாவுக்குப்பின் மீண்டும் 2 வது படவாய்ப்பை ஜனா சார் தந்ததில் மகிழ்ச்சி. மக்களின் நாடித்துடிப்பு தெரிந்தவர் அவர். பலதுறை ஞானம் உள்ளவர். அவர் இயக்கத்தில் மீண்டும் நடித்தது  நிச்சயமாக எனக்கு மறக்கமுடியாதது.​ 10 பேரை அடித்தால்தான் கதாநாயகன் என்றில்லை. ஜனா சார் பாத்திரங்களை அவ்வளவு அழகாகச் செதுக்குவார். நான் பி.காம். படித்தவன். ஆனால் என்னைவிட அத்துறையை பற்றி அவர் அதிகம் தெரிந்துவைத்திருப்பார். 

அவர் ஹீரோக்களிடம் கதை சொல்லும் பாணி, கதாநாயகன் பாத்திரத்தை அழுத்தமாகவும் யதார்த்தமாக வும் சித்தரிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். பழகவும் எளிமையானவர். 'இயற்கை' யில் சரியாக நடிக்கவில் லையோ என்ற எண்ணம் எனக்கு எப்போதாவது தோன்றும். அந்த குறையை 'புறம்போக்கு' படம் போக்கி விட்டது.​
இது நிச்சயமாக எனக்கு மறு அவதாரம் போல அழுத்தமான அடையாளமாகியுள்ளது. ​என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாத்திரம் இது. தியேட்டரில் எனக்குக் கிடைத்த வரவேற்பையும் ஆரவாரத்தையும் பார்த்து கண்ணீரே வந்து விட்டது சந்தோஷத்தில்.

உடன் நடித்த ஆர்யா, விஜய் சேதுபதி பற்றி?

ஆர்யா, விஜய் சேதுபதி, நான், மூன்று பேரும் இப்படத்தில் ஏற்று நடித்தவை மூன்றுவித குணங்கள் கொண்ட பாத்திரங்கள். அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி. யாரும் கெட்டவர் இல்லை. நாங்கள்  மூன்று பேரும் இயக்குநரின் மூன்று பாத்திரங்களை ஆளுக்கொன்றாக சுமந்திருக்கிறோம். 

ஆர்யா என்னுடன் 'உள்ளம் கேட்குமே' படத்தில் அறிமுகமானவர். என்னுடன் அறிமுகமானவர், இன்று , இந்தளவு வளர்ந்து இருப்பதில் ஒரு சகோதரன் போல எனக்கு மகிழ்ச்சிதான். ஆர்யா ஆரம்பம் முதல் என் நண்பன்தான்

விஜய் சேதுபதி மிகவும் எளிய மனிதர். என்னிடம் மரியாதையும் அன்பும் காட்டினார். நாங்கள் பங்கேற்கிற காட்சி இல்லையென்றாலும் மற்றவர் நடிப்பை காண படப்பிடிப்புக்கு போவோம். அந்தளவுக்கு புரிதல் எங்களுக்கு. ஒரே கேரவானில் பேசி அரட்டையடித்து சாப்பிட்டு ஜாலியாக இருந்தோம். ஈகோ எதுவுமின்றி நல்ல நண்பர்களாகவே கடைசிவரை இருந்தோம்.​ பாலிவுட்டில் பல நடிகர்கள் ஒன்றாக நடிப்பது வழக்கமாக உள்ளது. அதுபோல இங்கும் வர வேண்டும் என விரும்புகிறேன்.

ஷாமை அடுத்து எந்த படத்தில் பார்க்கலாம்...

ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் 'ஒரு மெல்லிய கோடு​' வெளிவரப்போகிறது. இது ஒரு க்ரைம் கதை. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எனக்கு மனிஷா கொய்ராலா, ஸ்ருதி ஹரிஹரன் என்று இரண்டு கதாநாயகிகள். முதன்முறையாக அர்ஜுன் ​சாருடன் நடிக்கிறேன். தமிழ், கன்னடம் என இரு மொழிப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவேகமாக நடந்துவருகிறது. என் கேரக்டர் கொஞ்சம் நெகடிவ் நிழல் விழுகிற மாதிரி இருக்கும்​.​
தெலுங்கிலும் நடிக்கிறீர்களே, அங்கு வரவேற்பு எப்படி உள்ளது?

தெலுங்கில் இதுவரை 5 படங்கள் முடித்து விட்டேன். 'கிக்' , ரேஸ்குர்ரம்' படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் அடுத்து ஒரு படம் நடிக்கிறேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது

சொந்தப்படம் எடுத்தது எந்தமாதிரி அனுபவத்தை தந்தது உங்களுக்கு...மீண்டும் தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?

சொந்தப்படமான '6' படம் எனக்கு லாபம் தரவில்லைதான். ஆனால் இழப்பையும் தரவில்லை. எனக்கு பெரிய மரியாதையையும் அடையாளத்தையும் பெற்றுத்தந்தது. ஷாம் விளையாட்டுப் பையனில்லை​.​ அர்ப்பணிப்பும் தேடலும் கொண்ட நடிகன் என்கிற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. ​

'6' படம் வெளியாகும் முன்புவரை மக்களும் ரசிகர்களும் என்னைப் பார்த்த பார்வை வேறு, அதன்பிறகு  பார்க்கிற பார்வை வேறு. மரியாதையும் கவனமும் கூடி இருக்கிறது. அதனால் மீண்டும் படம் தயாரிப்பேன்​.​ அந்தப்படம்​ ​இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து​ முற்றிலும் புதுமையான, இளமையான அவதாரம் என்று சொல்லும்படி ​மாறுபட்டு இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

25 படங்கள் நடித்து முடித்துவிட்டீர்கள்...திரையுலகில் கற்றுக்கொண்ட அனுபவம் என்ன...?

பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு நடிகனாக திரையுலகில் என் பயணத்தை திருப்தியாகவே உணர்கிறேன். ஆனால் இதை நினைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விடமுடியாது. ஓடவேண்டும்; உழைக்க வேண்டும்; இன்றைக்குள்ள போட்டியில் கொஞ்சம் அயர்ந்தாலும் நம் இடத்தை தக்கவைப்பது முடியாத ஒன்றாகிவிடும். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் இந்த துறைக்கு வந்தவன் நான். குருநாதர் ஜீவா என்னை அறிமுக​ப்படுத்தினார். ஊக்கம் தந்து வளர்த்தார். அவரது திடீர் மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

இந்த துறையில் கைதுதூக்கி விட யாருமில்லை. ​ஆனால் கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க. இன்றும் நானாகத்தான் சரியா தப்பான்னு முடிவு பண்ணி நடிக்கிறேன். சிலர் கதையை நன்றாக சொல்கிறார்கள். ஆனால் எடுக்கும்போது சொதப்பிடறாங்க. அந்த படத்தையும் பரவாயில்லைன்னு எப்படி பண்ணமுடியும்? இப்போதான் கரணம் அடிச்சு எழுந்திருக்கப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் கீழே விழுற தப்பை பண்ணிக்கிட்டே இருக்கமுடியுமா? 

யாருமே படம் பண்ண வராதபோது என் சொந்தக் காசைப் போட்டு லேசா நிமிர்ந்திருக்கேன். உஷாரா இல்லேன்னா நீங்க பேட்டிக்கு கூட என்னை தேடி வர மாட்டீங்க! நடிக்கலைன்னா கூட பரவாயில்லை. தப்பான படம் பண்ணி வீட்ல உக்காரக்கூடாது. அது மகா கொடுமை. இடையில் அந்தக் கொடுமையை ரொம்பவே அனுபவிச்சிட்டேன்​.​ இனி அந்த தவறை செய்யமாட்டேன்.

பள்ளம் மேடுகள் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் சினிமாவில் இத்தனை வருடங்கள் பயணம் செய்வதே​ மகிழ்ச்சிதானே?- நம்பிக்கையும் உற்சாகமும் கலந்து குரலில் பேசுகிறார் ஷாம்.

ஆல் தி பெஸ்ட் ஷாம்!


No comments:

Post a Comment