சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jun 2015

பெற்றோர் சாட்சியாக... நண்பன் ரசிக்க...காதலியை வேட்டையாடிய மிருகம்!

இப்படி ஒரு கொடூரம் இதுவரை தமிழகத்தில் நடந்திருக்காது!
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் ஊற்றிய கலாசாரம் வரை தமிழகம் பார்த்துவிட்டது. இது அதுக்கும் மேலே! பெற்றோர் காவலுக்கு நிற்க.. நண்பன் வீடியோ எடுக்க... துள்ளத் துடிக்க காதலியை வேட்டையாடி இருக்கிறது ஒரு மனித மிருகம்.
நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ளது பரசலூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்பகதூர், எம்.சி.ஏ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞன். ராஜ்பகதூரின் தங்கை பிரியாவும் அவர்களது எதிர்வீட்டில் குடியிருந்த சரண்யாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தோழிகள். தோழியைப் பார்க்க அடிக்கடி எதிர்வீட்டுக்கு வருவார் சரண்யா. அதுதான் ராஜ்பகதூருக்கும் சரண்யாவுக்கும் காதல் பூக்கள் பூத்த தருணம்!

பார்வையில் ஆரம்பித்த காதல் ஊரெல்லாம் சுற்றவைத்தது. ராஜ்பகதூர் வீட்டுக்கு விஷயம் தெரியவர, அவர்களும் எதிர்ப்பு காட்டவில்லை. ஒருநாள் ராஜ்பகதூர் வீட்டுக்குப் போனபோது அவரது செல்போனை யதேச்சையாக பார்த்திருக்கிறார் சரண்யா. அதில் பல பெண்களுடன் ராஜ்பகதூர் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இருக்க... அதிர்ந்துபோயிருக்கிறார் சரண்யா. அழுதபடியே வீட்டுக்கு ஓடிய சரண்யா, விரக்தியில் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். எப்படியோ அவரைக் காப்பாற்றிவிட்டனர். அழுதபடியே, தன் பெற்றோரிடம் ராஜ்பகதூர் பற்றி சொல்லியிருக்கிறார் சரண்யா. ‘கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சுதுன்னு சந்தோஷப்படு... இனி அவன்கூட பேசாதே’ என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள் பெற்றோர். அதில் இருந்தே ராஜ்பகதூருடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார் சரண்யா.
சரண்யாவுக்கு உடனடியாக வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தார்கள். அவருக்கு ஒரு பையனுடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. சரண்யாவுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையின் வீட்டைத் தேடிப்போன ராஜ்பகதூர், ‘நீங்க நிச்சயம் பண்ணிட்டு வந்திருக்கும் சரண்யா என்னோட லவ்வர். நானும் அவளும் நிறைய சுத்தியிருக்கோம்... போட்டோவை பாருங்க’ என்று செல்போனில் வைத்திருந்த போட்டோக்களை காட்டியிருக்கிறார். நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது அந்தத் திருமண ஏற்பாடு. சரண்யாவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த 16-ம் தேதி ராஜ்பகதூரின் அப்பா ராஜாராமிடம் இருந்து சரண்யாவுக்கு போன். ‘‘என் பையன் செஞ்சது தப்புதான். எங்களை மன்னிச்சுடும்மா... நீ எங்க வீட்டுக்கு வா. உன் கண் முன்னாடியே எல்லா போட்டோவையும் அழிச்சுடுறோம்’’ என்று சொல்லியிருக்கிறார். சரண்யாவும் உடனே கிளம்பி ராஜ்பகதூர் வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கேதான் நிகழ்ந்திருக்கிறது அந்தக் கொடூரம்.
‘‘ராஜ்பகதூர் வீட்டுக்கு சரண்யா போனதும், ‘என் பையனை லவ் பண்ற வரைக்கும் பண்ணிட்டு இப்போ வேணாம்னு வேற ஒருத்தனை கட்டிக்குவ... நாங்க பார்த்துட்டு சும்மா இருக்கணுமா’ என்று அந்தப் பையனோட அப்பா ராஜாராம் கோபமா பேசியிருக்காரு. சரண்யா கன்னத்துல ஓர் அறைவிட்டு, ரூமுக்குள்ள தள்ளியிருக்காரு ராஜாராம். ‘போய் விளையாடுடா... இனி இவளை எவன் கட்டிக்கிறான்னு பார்க்கலாம்’ என்று அந்த ரூமுக்குள் தன் மகனை அனுப்பி கதவை சாத்தியிருக்காரு. ரூமுக்கு வெளியில ராஜாராமும் அவரோட மனைவியும் காவலுக்கு நின்னு இருக்காங்க. அந்த ரூமுக்குள்ள ராஜ்பகதூரோட கூட்டாளியான ராமராஜன் கையில் கேமராவை வெச்சுட்டு ஒரு ஓரமா உட்கார்ந்து இருந்திருக்கான். சரண்யாவை கட்டில்ல தள்ளி வேட்டையாடி இருக்கான் அந்த மிருகம். அதை கொஞ்சமும் கூசாமல் வீடியோ எடுத்திருக்கான் ராமராஜன். எல்லாம் முடிச்சுட்டு, வெளியில வந்த ராஜ்பகதூரை, அவங்க அப்பா கைகொடுத்து பாராட்டியிருக்காரு.
‘இனி நீ எவனை வேணும்னாலும் கட்டிக்கோ... இந்த வீடியோவை அடுத்த நிமிஷமே நெட்ல போடுவோம்! இங்கே நடந்ததை வெளியில யாருகிட்டயாவது சொன்னாலும் வீடியோ வெளியில வந்துடும். அப்புறம் உங்க குடும்பமே தூக்குல தொங்க வேண்டியதுதான்! முகத்தை கழுவிட்டு வீட்டுக்குப் போ’னு ராஜாராம் மிரட்டியிருக்காரு. வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் யாருகிட்டயும் பேசாம இருந்திருக்கா சரண்யா. அதுக்கப்புறம்தான் அவங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லி அழுதிருக்கா’’ என்று சொன்னார் சரண்யாவின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவர்.
இனி அமைதியாக இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்த சரண்யா குடும்பத்தினர் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ராஜ்பகதூரையும் வீடியோ எடுத்த ராமராஜனையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். ராஜ்பகதூரின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்.

‘‘ராஜ்பகதூர் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன்களில் சரண்யாவுடன் எடுத்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் இருந்தன. அது மட்டுமல்லாமல் வேறு சில பெண்களுடன் அவன் எடுத்துக்கொண்ட படங்களும் இருந்தன. சரண்யாவை வீட்டுக்கு வரவழைத்து, ‘இனி நீ எவனையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படியே பண்ணிகிட்டாலும் இந்த வீடியோவை நெட்ல போடுவோம்’ என்று ராஜ்பகதூர் பேசிய ஆடியோவும் அதில் பதிவாகி இருக்கிறது’’ என்று போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
கைதுசெய்யப்பட்ட ராஜ்பகதூர் போலீஸாரிடம், ‘‘நான் காதலிச்சவளை எப்படி இன்னொருத்தனுக்கு விட்டுத்தர முடியும்? ஊரெல்லாம் என்னோட சுத்துவா... போட்டோ எடுத்துக்குவா... கல்யாணம் மட்டும் வேற ஒருத்தனை பண்ணிக்குவாளா? நான் நாலு புள்ளைங்களோட போட்டோ எடுத்தா இவளுக்கு என்ன கசக்குது? கல்யாணம் இவளைத்தானே பண்ணிக்க நினைச்சேன். எங்க அப்பாதான் தைரியமா நீ கை வைடா பார்த்துக்கலாம்னு சொன்னாரு. அந்த தைரியத்துலதான் தப்பு செஞ்சுட்டேன். இப்போ யோசிச்சுப் பார்த்தா நான் செஞ்சது தப்புன்னு தெரியுது. அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு விட்டிருக்கணும். அப்பா பேச்சைக் கேட்டதுதான் இதுல தப்பா போயிடுச்சு’’ என்று சொல்லியிருக்கிறான்.
நடந்த சம்பவம் பற்றி பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதாவின் கணவர் பன்னீர்செல்வம் நம்மிடம் பேசினார். ‘‘எங்க ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது வேதனையாக இருக்கிறது. தப்பு செய்த அந்தக் குடும்பத்துக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுப்போம்’’ என்று சொன்னார்.
சரண்யாவின் குடும்பத்தினர் யாரும் நம்மிடம் பேசும் மனநிலையில் இல்லை.
ராஜ்பகதூர் குடும்பத்தினருக்கு போலீஸார் ஆதரவாகச் செயல்படுவதாக, சரண்யாவின் உறவினர்கள் ஆதங்கப்படுகிறார்கள். வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தத்திடம் பேசினோம். ‘‘இந்த வழக்கு பற்றி நான் வெளியில் எதுவும் பேச முடியாது. ராஜ்பகதூரின் பெற்றோரைத் தேடி வருகிறோம். நான் யாருக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை’’ என்று மட்டும் சொன்னார்.
எத்தகைய சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

No comments:

Post a Comment