சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2015

மெட்ராஸ்...நல்ல மெட்ராஸ் -5

 ஏழைகளின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மூர்மார்க்கெட் 

'ஊரு கெட்டு போனதற்கு மூரு மாருகெட்டு அடையாளம்...
பேரு கெட்டு போனதற்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம்'
-என்று ஒரு சினிமா பாடல். 

இந்தத் தொடரின் தலைப்பே அந்தப்பாடலின் முதல் வரியில் இருந்து எடுக்கப்பட்டதுதான். அந்தப் பாடல் வெளிவந்த நாளில் இந்த மேற்படி வரிகளை நீக்கச் சொல்லி போராட்டம் வெடித்தது. ஒரு ஊரைக் கொச்சைப்படுத்துவது அங்கு வாழும் மக்களை, அப்பகுதியின் பூர்வ குடியினரைக் கொச்சைப்படுத்துவதாக அர்த்தம் என்று கொந்தளித்தனர். வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால், இது நான் எழுதிய கதை எனத் தொடரப்படும் பல சினிமா வழக்குகளைப் போல, அதுவும் பிசுபிசுத்துப் போனது. 

மெட்ராஸ் என்பது இந்தியாவின் பல மொழியினர், பல இனத்தவர், பல சாதியினர் பிழைப்புக்காக வந்து குவிந்த பகுதி. இதில் மசால் வடை ருசியாக இல்லை என்றாலும் கூட ''ஊரா இது?" என்று துப்புகிறார்கள். மசால் வடை போட்டவர் மார்த்தாண்டத்துக்காரராக இருப்பார்... டீக்கடை முதலாளி எர்ணாக்குளத்துக்காரராக இருப்பார். துப்பப்பட்ட எச்சில் இந்த மண்ணின் பூர்வ குடியினர் மீது விழுவதுதான் வேதனை. அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்டத்தான் வழக்கு போடப்பட்டதாக நினைக்கிறேன்.

அந்தப் பாடல் வரியில் இடம் பெற்ற மூர் மார்க்கெட் ஒரு குட்டி இந்தியாவாக இருந்தது. அங்கே பல மொழியினர், பல மதத்தினர் இருந்தனர். உண்மையில் மெட்ராஸை பூர்வீகமாகக் கொண்டவர்களைவிட மற்றவர்கள் அதிகமாக இருந்தனர். அங்கே பல பொருட்கள் விற்கப்படும். குரங்கு, கிளி வண்ணமீன், புத்தகங்கள், ஆட்டுக்கறி, அடுப்புக்கரி... சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏழைகளின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது. அங்கே ஒரு மூலிகைத் தைலம் விற்கும் காட்சியை அன்றைய பத்திரிகையில் இப்படி எழுதியிருந்தார்கள்...

ஒரு வட இந்திய சந்நியாசி மூலிகையை விற்கிறார். அவருடைய தாடி, ஜோடனை எல்லாம் பாதையில் போகிறவர்களை வசீகரிக்கக் கூடியதாக இருக்கிறது. அவரைத் தன் குருநாதர் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார் ஒருவர். குருநாதர் ஹிந்துஸ்தானி மட்டுமே தெரிந்தவர். அவர் பேசுவதை தமிழில் தாம் மொழி பெயர்க்கப் போவதாகச் சொல்கிறார்.

குருநாதர்: ஜனக் ஜனக் பாயல் பஜே
சீடர்: மகா ஜனங்களே

குரு: ஆஷிக்... ஆஷிக்.
சீடர்: வாருங்கள்... வாருங்கள்.

குரு: ஹூ கௌந்தீ?
சீடர்: இது என்ன?

குரு: சோடி பஹன்
சீடர்: சின்ன பாட்டில்.

குரு: ஜிஷ் தேஷ் மேகங்கா பக்தீஹை.
சீடர்: இதற்குள் என்ன இருக்கிறது?

குரு: ஆவோ பியார் கரேன்
சீடர்: அவுத்திக் கீரை தைலம்.

குரு: ஜான்கர்.
சீடர்: ஜலதோஷம்.

குரு: மம்தா.
சீடர்: மார்வலி.

குரு: ஜப் ஜப் பூல் கிலே.
சீடர்: அப்பப்போ உடம்பு வலி.

குரு: ஆவாரா.
சீடர்: ஆகியவற்றை.

குரு: கும்நாம்.
சீடர்: குணப்படுத்தும்.

குரு: இந்தக்ஹாம்
சீடர்: இந்த பாட்டில்.

குரு: ஏக் பூல் தோ மாலி.
சீடர்: ஒரு ரூபா பத்துக் காசு.

குரு: ராம் அவுர் ஷியாம்.
சீடர்: காலையிலும் மாலையிலும்

குரு: பர்சாத்... பர்சாத்.
சீடர்: பருகுங்கள்... பருகுங்கள்.

குரு: பூல் அவுர் பந்தர்.
சீடர்: பூலோகமெலாம் தேடினாலும்.

குரு: அம்ராபாலி... அம்ராபாலி.
சீடர்: அகப்படாது... அகப்படாது.

அவர்கள் விற்பது ஒரு மூலிகைத் தைலம். இமயமலைச் சாரலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏழை மக்கள் அதை வாங்குவார்கள். ஆனால், குரு சொன்ன இந்தி வாக்கியங்கள் எல்லாம் பழைய இந்தி படங்களின் பெயர்கள். அதற்குத் தோதாக மொழி பெயர்த்த மாதிரி வாக்கியங்களை அமைத்ததுதான் சீடனாக நடிப்பவரின் சாமர்த்தியம். 

இந்த மாதிரி கூட்டம் சேர்ந்து மூடியிருக்கிற இடங்களில் ஜேப்படி திருடர்கள் இருப்பார்கள். வியாபாரம் செய்கிறவர்களும் மோசமான பொருளை அதிக விலைக்கு விற்பார்கள் என பெரியவர்கள் எச்சரிப்பர். மோடி மஸ்தான்கள் கீரியையும், பாம்பையும் சண்டை விடப் போவதாக காலையில் இருந்து இரவு வரை போக்கு காட்டிக் கொண்டிருப்பார்கள். பாதியில் போனால் ரத்தம் கக்கிச் செத்துவிடுவாய் என மிரட்டுவார்கள். 

அங்கே திரும்பின பக்கம் எல்லாம் காசைக் குறி வைத்து மக்கள் உலவிக் கொண்டிருப்பார்கள். 'கஞ்சா பொட்லம் வேணுமா? பொண்ணு வேணுமா?' எனச் சுற்றும் ஒரு கோஷ்டி.
பாஸ்வெல் எழுதின ப்ரிஃபேஸ் டு சாமுவல் ஜான்சன் புத்தகம் வேணுமா சார்... ஒரிஜனல் எடிஷன் என்பார் இங்கிலீஷை கரைத்த குடித்த மாதிரி ஒருவர். ஏமாற விரும்புகிறவர்களுக்கு அதைவிட ஏற்ற இடம் இருக்க முடியாது. அந்த மூர் மார்க்கெட் சென்னையில் இருந்ததாலேயே அது சென்னையின் அயோக்கியர்களின் கூடாரம் என்ற சித்திரம் உருவாகிவிட்டது.
சென்னை புறநகர் ரயில் நிலையத்துக்கான 10 மாடிக் கட்டடம் கட்டுவதற்காக, அங்கு கடை நடத்தியவர்களை அப்புறப்படுத்தும் முயற்சி வெகு நாட்களாக தோல்வியில் முடிந்தது.
வாயற்ற ஜீவன்களான வனவிலங்குகளை அப்புறப்படுத்தியது போல இவர்களை சுலபமாக அகற்ற முடியவில்லை. மூர்மார்க்கெட்டுக்குப் பின்னால்தான் மாநகராட்சி நடத்திய அந்த ஜூ இருந்தது. அதை அப்புறப்படுத்தி வண்டலூர் ஜூவுக்குக் கொண்டு போய்விட்டனர். இவர்கள் காலி செய்யாமல் அடம்பிடித்த வேளையில்தான் ஒருநாள் இரவு அந்த மூர் மார்க்கெட் எரிந்தது. கட்டடம் தவிர, அங்கிருந்த ஒரு பொருளும் மிஞ்சவில்லை. 


1900 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மார்க்கெட், அன்றைய மெட்ராஸ் கார்பரேஷன் பிரிசிடென்ட்டான சர் ஜார்ஜ் மூர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1985 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மர்மான முறையில் அரசு கைப்பற்றியது. எம்.ஜி.ஆர் உடல் நலத்தோடு இருந்திருந்தால் இந்த நிலைமைக்கு நம்மை விட்டிருக்க மாட்டார் என்று மூர் மார்க்கெட்டை நம்பி வாழ்ந்த மக்கள் பேசியதை கேட்டிருக்கிறேன்.

அந்த மூர் மார்க்கெட்டுக்கும் ஜூவுக்கும் இடையில் இன்னொரு வரலாற்றுத் தடம் இருந்தது. அது நேரு விளையாட்டு அரங்கம். அந்த நாளில் அங்குதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். ஊழல் இல்லாத சுத்தமான கிரிக்கெட் போட்டி அது. கைக்கு அடக்கமான ட்ரான்சிஸ்டரை காதருகே வைத்துக்கொண்டு நடப்பார்கள். வழக்கமாகக் கிரிக்கெட் போட்டி நடக்கும் அந்த இடத்தில் ஒரு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும்? அது...




No comments:

Post a Comment