சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 May 2015

உத்தம வில்லன்களுக்கு தடை வருமா?

ற்போதைய  தமிழர் வாழ்வில் தினமும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும், கட்சி பொதுக்கூட்டமும் , நடைபெறாத நாட்களை விரல் விட்டு என்னும் அளவிற்கு அன்றாடம் மாவட்ட வாரியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள்  (மக்களுக்காகவாம்) போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அதிகமாகவே இருக்கும் என மக்களுக்குத் தெரியும். உலகிலேயே அதிகமான ஆர்ப்பாட்ட  அரசியலாளர்கள் தமிழகத்தில்தான் இருக்க வேண்டும். விமானத்தில் இருப்பவர்கள் கூட தமிழக எல்லைக்கு வந்து விட்டோம் என சொல்லும் அளவிற்கு வானுயர வைக்கப்படும் ப்ளெக்ஸ் போர்டுகளும், ஆர்ப்பாட்ட அரசியலும் தமிழகத்திற்கே சொந்தம்.

போராட்டமும், ஆர்ப்பாட்டமும்,  வன்முறையும், போலீஸ் அத்துமீறலும், துர்மரணங்களும் அரங்கேறி போராட்டத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளி விடுகின்றன. மக்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துப்  போராட்டம் என்ற பெயரில் இம்சிக்கும் `உத்தமவில்லன்`களாக மாறும் போராட்ட அரசியல்வாதிகள் என்றைக்குத்தான் திருந்துவார்களோ?!

இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கும் மறியல் போராட்டம் செய்யலாம், மாலையில் போலீஸ் பாதுகாப்போடு வீடு திரும்பலாம் என்பது எழுதப்படாத சட்டமாகவும், பொது மக்களுக்கு சொல்லப்படாத துக்க செய்தியாகவும் உள்ளது.  ஆனால்  மாற்றுத் திறனாளிகள்,கண் பார்வை அற்றோர் போராட்டம் நடத்தியது தமிழக வரலாற்றில் எழுதக்கூடாத கொடூரமான போராட்டம் ஆகும்.

போராட்டம் செய்த கண்பார்வை இல்லாதவர்களை, சுடுகாட்டிலும், திக்குத் தெரியாத காட்டிலும் இறக்கி விட்டு, அரசியல்வாதிகளிடம்  காட்ட முடியாத  வீரத்தை  அப்பாவிகளிடம் காட்டினார்கள் போலீஸார். 'தேர்தல் வரும் பின்னே... போராட்டம் வரும் முன்னே!' என அனைத்துக் கட்சிகளும் நாங்களும் `ரவுடி தான்யா`  என வடிவேலு சொல்வது போல, ஆர்ப்பாட்ட அரசியலில் நாங்களும் இருக்கிறோம் என வரிந்து கட்டி வருகின்றன. 

உலகில் எந்த மூலையில் தமிழன் கஷ்டப்பட்டாலும், இங்கிருக்கும் தமிழர்கள் கஷ்டப்பட வேண்டும் என்ற மன நிலையிலேதான் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நடத்துவதாக மக்கள் நினைக்கிறார்கள். எதிலும் அரசியல் விளம்பரம்  தேடும்  நம் அரசியல்  கட்சித்தலைவர்கள், இன்றைய போராட்டம் என நாள் குறித்து விடுவதால்  அன்றாடம் அலுவலகம் , அவசர வேலைக்கு செல்வோர் காலை  செய்தித்தாளில் எந்த இடத்தில் பேருந்து, எந்த ரயிலை மறிப்பார்களோ என பார்த்து விட்டுதான் வேலைக்கு செல்லும் அவல நிலை உள்ளது. 

அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர்,  பல மணி நேரம் பயணம்  செய்து, மிதிபட்டு, இடி பட்டு , தப்பி ஒரு வழியாக அலுவலகம் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. அலுவலக பிரச்னை,குடும்ப   வருமான பிரச்னை போன்றவற்றை எல்லாம் கடந்து அலுவலகம் வருவதற்குள், அரசியல் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் நடு ரோட்டில் பேருந்தை நிறுத்துவது, ரயிலை மறிப்பது , கப்பலை கவிழ்ப்பேன், விமானத்தை பறக்க விட மாட்டேன் என்ற  வீர வசனத்தோடு போக்குவரத்தைப் போர்க்களமாக மாற்றி, பொது மக்களுக்கு  அரசியல்வாதிகள் கொடுக்கும்  மன அழுத்தம் மிக அதிகமாகும். 

இந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கெல்லாம், தனியாக ராஜ மரியாதையோடு இருபது காரில் நகரே அதிரும் அளவிற்கு ஒலி எழுப்பி,  போலீஸ் பாதுகாப்போடு வீட்டிற்கு செல்ல முடியும். ஆனால் அப்பாவி பொதுமக்களுக்கோ,  இவர்கள் நடத்தும் போராட்டத்தால் வீடு செல்வது  மிகவும் சிரமமாகி விடும்.
ஆந்திராவில் வெறித்தனமாக கொல்லப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அதற்காக  பல்லாயிரம் பேர் பயணம் செய்யும் ரயிலை  மறிப்பதால் போன உயிர் திரும்பி விடுமா என்ன?  சென்னை, கிண்டியில் 20 தமிழர்களின் உயிருக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் 21 வயதான  வினோத்  என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இனி வினோத் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டாலும் ஆச்சர்யப்படத் தேவை இல்லை. இறந்த வினோத் குடும்பத்திற்கு இந்தக்கட்சியினர் இழப்பீடு தொகை கொடுத்தாலும், உயிர் கொடுத்து அவர் தம் குடும்பத்தினரை மகிழ்விக்க முடியுமா?
அன்றாட  இயல்பு வாழ்க்கையை   பாதிக்கும் எந்த  ஒரு கட்சியையும் மக்கள் விரும்புவதில்லை. இது வரை நடந்த ஆர்ப்பாட்டம்,மாநாடு என  கலந்து கொண்ட பொதுமக்கள்,கட்சியினர் பலர் விபத்தில் சிக்கி இறந்து போயுள்ளனர். அவர்களுக்கெல்லாம் பணம் மட்டுமே இழப்பீடாக   வழங்கி உயிருக்கு விலை கொடுத்து விட்டனர்.
இவர்கள் இருந்த சமயத்தில் தீவிரவாதிகள் சென்ட்ரல் நிலையத்தில் வைத்த குண்டு போல குண்டு வைத்தால் பாதுகாப்பு குறைவிற்கு யார் பொறுப்பு?. ஏற்கெனவே தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் இது போன்ற போராட்டம் நடத்த இந்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டது சரியா?? .  

சுமார் முப்பது வருடத்திற்கு முன் போராட்டம் என்றால், முன் வந்து நிற்கும் பொது மக்கள் இன்று….. இவர்கள் அரசியல் செய்ய நம்மை கஷ்டப் படுத்த வேண்டுமா?? என புலம்பும் நிலையிலும், மற்றொரு பிரிவினர் காசு கொடுத்தால் கொடி பிடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இது தானா போராட்டத்தின் மதிப்பு?.  
சமீபத்தில் வெளியான 'உத்தம வில்லன்' படம் வெளி வர தாமதம் ஆனதற்கு சாலை மறியல்  போராட்டம் நடத்தி  ரசிகர்கள்,  பொது மக்களுக்கு "வில்லனாகி"   விட்டார்கள். படம் தாமதமாக வெளிவர பொது மக்கள் ஏதும் காரணமாக இருந்தார்களா? பொது மக்கள் படம் வெளி வர தடை கோரினார்களா? சம்பந்தமே இல்லாமல் நடு ரோட்டில்  மறியல் செய்து மக்களை எங்களாலும் கஷ்டப்படுத்த முடியும் என ரசிகர்கள் நிரூபித்து விட்டனர்.
எந்த ஒரு கட்சியும்  கண்டனக்கூட்டம் ,"சாதனை" விளக்க கூட்டம், போராட்டம்  நடத்தினாலும் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனைப்பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வணிகப்பகுதி ,ரயில், பேருந்து நிலையம் போன்றவற்றையே குறி வைத்து தாக்கி மக்களை நிம்மதி இழக்கச் செய்கின்றனர்.   

போராட்டம்தான் என்றில்லை.... கட்சி பிரமுகர்  திருமணத்திற்கு வந்து சென்றால் கூட  போராட்டம் போலவே கட்சிகொடிகளும், ப்ளெக்ஸ் பேனரும், காது கிழிய வைக்கப்படும் கட்சிப்பாடல்களும்,  போராட்டமே தேவலை என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் "புகழை" நிலை நிறுத்தும். 
அரசு ஊழியர்களின் சங்க மாநாடுகளும் கட்சிகளையே தோற்கடித்து விடும் அளவிற்கு ஆடம்பரமாக நடக்கிறது.  மக்களின் குறைக்கு தீர்வு சொல்லும் நீதி மன்றங்கள் கூட போராட்டக் களமாக மாறியதும், அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களும் போராட்டத்திற்கு எதிராக போராட, நீதிமன்றம் இன்னமும் ஏன் வரவில்லை?  என்று மக்கள் நினைக்கிறார்கள்.  

போராட்டம் நடத்துவதற்கு பதில் சம்பந்தப்பட்ட ஆந்திர போலீஸ் அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் மனு அளிக்கலாம். உச்ச நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லலாம். இன்றைக்குள்ள அதி நுட்ப தொழில் வசதிகாலத்தில் இங்கலாந்தில் இருமினால் கூட நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். ஆகவே கட்சித்தலைவர்கள் போராட்டம்,ஆர்ப்பாட்டம் செய்ய பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தை தேர்வு செய்யாமல்   கட்சி அலுவலகத்திலேயே எல்லா போராட்ட கதையையும் நடத்தி அதை மக்களுக்கு  நேரடியாக பெரிய திரையில்  நேரடி ஒளி பரப்ப செய்ய முடியும்.

மேலும் செய்தி நிறுவனத்திற்கு செய்தி கொடுத்தாலும் மக்களின் பார்வையில் தொடர்ந்து இருக்கும். அப்படியே நாங்கள் களத்தில்தான் நிற்போம் என்று விரும்பினால் கருவேல மர கண்மாயை சுத்தம் செய்து அங்கு போராட்டம் நடத்தலாம், கூவக்கரையை பயன்படுத்தலாம்,. வறண்ட ஆற்றுபகுதியில் நடத்தலாம். அதை விடுத்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதும்,தற்கொலைக்கு முயற்சிக்கும் இடமாகவும், விளம்பர அரசியல்வாதிகளின் புகலிடமாகவும் மாற்ற வேண்டுமா?

எனவே போராட்டம் நடத்துவதற்கு என தனி இடத்தை அரசு ஒதுக்க  நீதிமன்றம் ஆணையிட வேண்டும். மாவட்டம் தோறும் போராட்டம் செய்ய இடம் ,பொதுக்கூட்டம் நடத்துமிடம் ஒதுக்கி அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.  போராட்டத்தை நேரடியாக உலகின் பல மூலைகளில் மக்கள் பார்க்கும் வகையில் எல்.இ. டி நவீன பெரிய திரையில் பார்க்க வைக்க முடியுமே? அதை விடுத்தது மக்களின் இயல்பு வாழ்வை நரகமாகும் போராட்டம் எந்த அளவிற்கு மக்களிடம் பெயரும்,புகழும் பெற்றுத் தரும் ?. 

நகரில் அன்றாட இயல்பு வாழ்கை, மக்களை பாதிக்கும் போக்குவரத்து நெரிசலை கொடுக்காத வகையில் அணைத்து கட்சிகளும் முடிவெடுக்க வேண்டும். சாலை மறியல்,ரயில் மறியல் செய்வோர் ஜாமீனில்   வெளி வர முடியாதபடி சட்ட சீர்திருத்தம் தேவை. காலையில் கைது செய்து மதியம் போலீஸ் பிரியாணி சாப்பாடு   போட்டு  மாலையில் பாதுகாப்போடு அனுப்பும் என்ற நம்பிக்கையில் பலரும் இயல்பு வாழ்க்கையை இம்சிக்கின்றனர். 
யார் பலசாலி, பெரியவர் என்ற மோதலை  கட்சிகள்  காண்பித்தால் தேர்தல் வரும் போது  மக்கள்  பலத்தை காண்பித்து  5 வருடம்  அரசியலில் ,போராட்டத்தில் இருந்து விடுதலை கொடுப்பார்கள் என்பதே  உண்மை.
மக்களுக்காகத் தான் போராட்டம் என்று சொல்லும் இவர்கள், மக்களை கஷ்டப்படுத்தி யாரைத்தான் வாழ வைக்கப்போகிறார்கள் ?  போராட்டமும்,பொதுக்கூட்டமும் முடிவுக்கு வரட்டும். போராட்டத்தால் யாருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ, நஷ்டம் மக்களுக்குத் தான் .



No comments:

Post a Comment