சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2015

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -1 ( புதிய தொடர்)

சென்னை என்றதும் அதன் பிரிக்க முடியாத வாசனையாக கூவம் ஆறும் நினைவுக்கு வரும். துர்நாற்றம் வீசும் சாக்கடை. மூக்கைப் பிடித்துக்கொண்டுக் கடக்கப்பட வேண்டிய கழிவுக் கால்வாய். கறுப்பு ஆறு. இப்படியாகத்தான் இந்த ஆறு இன்றைய மக்கள் மனதில் பதிந்திருக்கிறது.

ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆற்றின் வாசம் அது அல்ல; அந்த ஆற்றின் நிறம் அது அல்ல. கங்கை, காவிரி  போல அதுவும் ஓர் ஆறு. அதில் மக்கள் நீர் பிடித்தார்கள். நீர் குடித்தார்கள். குளித்தார்கள். இந்த ஆற்றுக்கும் ஓர் அருமையான கடந்த காலம் இருந்தது.


அது சாக்கடையாகவே தோன்றி சாக்கடையாகவே கடலில் கலக்கும் ஆறு என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நினைவில் தேங்கிவிட்ட இந்த ஆறு, ஒரு நாளில் சென்னை மண்ணுக்கு உயிரூட்டியது. இந்த ஆற்றின் நீரில்தான் சென்னை மக்கள் பயிர் செய்தார்கள். தமிழகத்தின் எல்லா ஆறுகளுக்கும் நேர்ந்த கதி இதற்கும் நேர்ந்தது. மழை நாளில் நீர் ஓடும். பின்னர் வெயில் நாள் முழுதுமே கானல் நீர் ஓடும்.

வி. கல்யாண சுந்தரம் ஒரு கட்டுரையில், 'இன்று கூவத்திலே ஆனந்தமாகக் குளித்துவிட்டு, திருவல்லிக்கேணி கோயிலுக்குச் சென்றேன்' என்று குறிப்பிடுகிறார். பச்சையப்பர் தன் நாட்குறிப்பிலே தினமும் காலையில் கூவம் ஆற்றில் குளித்ததைச் சொல்கிறார். மழை நாள் தவிர மற்ற நாளில் சும்மாத்தானே கிடக்கிறது என்று நினைத்து, அதிலே சென்னையின் கழிவுகளை ஓடவிடலாம் என்று யாரோ நினைத்தார்கள். கழிவுகளைச் சுமப்பதற்கென்றே பிறந்தது போல சென்னையின் அத்தனைப் பகுதிகளையும் சுற்றிச் சுற்றி ஓடியது இந்த நதியின் பிழைதான்.
பூந்தமல்லி, அரும்பாக்கம், அமைந்தகரை வரை நேராக ஓடி வந்த ஆறு சென்னையில் வரையும் கோலம், 'மெட்ராஸைச் சுற்றிப் பார்க்கப் போறேன்' என்பதாக இருக்கும். இது தவிர சென்னையில் அடையாறு ஆறு, ஓட்டேரி நுல்லா ஆகிய ஆறுகளும் ஓடின. சென்னையில் பயணிக்கும் இந்த ஆறுகள் அனைத்தும் திருவள்ளூர் பகுதியில் ஆரம்பித்து ஓடுபவை. கூவம் ஆற்றின் மொத்த நீளமே 72 கிலோ மீட்டர்தான். சிறிய குன்றுகள், மழை ஓடைகள் சேர்ந்து உருவான ஆறுகள் இவை. கூவம் ஆற்றின் ஆதி ஊற்று சட்டரை என்ற ஊரில் தொடங்குவதாகச் சொல்கிறார்கள்.

ஓட்டேரி நுல்லா,  புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு வழியாக பேசின் பிரிட்ஜ் என்று பிரயாணிக்கும் கூவம், அமைந்தகரையில் இருந்து இன்றைய ஸ்கை வாக் பின்புறம் நடந்து, பச்சையப்பன் கல்லூரியின் பின் வாசல் வழியாக ஸ்பர்டாங்க் ரோடு, தில்லையாடி வள்ளியம்மை, கிரீம்ஸ் ரோடு, ஆனந்தவிகடன் பின்புறம், காயிதே மில்லத் கல்லூரி,  சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் வழியாக வருகிறது. அங்கே இரண்டாகப் பிரிந்து ஓடுகிறது. இந்த இரண்டு ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு தீவாக இருக்கிறது. அதைத்தான் நாம் தீவுத்திடல் என்கிறோம். இந்த அழகிய தீவையும் ஆற்றையும் மனதில் கொண்டுதான் பிரிட்டீஷி இந்திய கம்பெனியின் ஏஜென்ட்டான பிரான்சிஸ் டே சென்னையிலே வர்த்தகம் செய்ய விரும்பினான் என்பார்கள்.
சென்னையில் தீவுத் திடல் அருகே செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினான். தீவுத்திடல் உருவாக காரணமாக இருந்த இந்த இரண்டு கிளைகளும், மீண்டும் நேப்பியர் பாலம் அருகே அதாவது சென்னை பல்கலைக்கழகத்தின் பக்கவாட்டிலே மெரினா கடற்கரையில் கடலில் சேர்கிறது. நாம் கூவம் ஆற்றை பாலங்கள் குறுக்கிடும் இடத்தில் மட்டுமே பார்த்துவிட்டு, அது நம் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு தடையாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டோம். சிக்னல் கிடைக்காத எரிச்சலில் இந்த ஆற்றின் குறுகலான பாலத்தையும், நாற்றத்தையும் திட்டித் தீர்க்கிறோம். சென்னை நகரம் முழுக்க எத்தனைப் பாலங்கள்... அவை சென்னையை வழி நடத்தும் பாதைகள். அது மட்டும் நல்ல ஆறாகக் காப்பாற்றப்பட்டிருந்தால் இப்போது மெட்ரோ ரயில் என்ற கோடிகளை விழுங்கும் இந்த குட்டி ரயில் தேவைப்பட்டிருக்காது.
ரோமாபுரி மன்னர்கள் இந்த ஆற்றின் வழியே வர்த்தகம் செய்ததற்கான ஆதாரங்கள் புதை ஆய்வுகளில் கிடைத்துள்ளன. ரோம் தேசத்து வைன் ஜாடிகள், நாணயங்கள் இந்த ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆற்றின் கரையில் புகழ் வாய்ந்த பல கோயில்கள் கட்டப்பட்டன. திருவீர்கோலம், வீரபத்ரசாமி கோயில், திருவேற்காடு போன்ற பல கோயில்களும் ஊர்களும் அமைந்துள்ளன. எல்லா ஆற்றங்கரை நாகரிகம் போலவே கூவம் ஆற்றுக்கும் ஒரு நாகரிகம் இருந்தது. ஆறு மாசுபட்டதும் ஆந்த ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்கள் மாசுபட்டதும் சேர்ந்தே நடந்தது. இன்று சென்னை கூவம் ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக இருக்கக் கூடும். அவர்கள் பெரும்பாலும் ரிக்‌ஷா ஓட்டுகிறார்கள், படிக்காதவர்களாக இருக்கிறார்கள், நிரந்தரம் இல்லாத கூலி வேலைகளைச் செய்கிறார்கள், ஒரு சாண் வயிற்றுக்காக சமூகம், 'வேலை' என்று ஏற்றுக்கொள்ளாத வேலைகளைக்கூடச் செய்யத் துணிகிறார்கள். ஆற்றின் தூய்மையும், அவர்களின் தூய்மையையும் காப்பாற்ற வேண்டியது நல்ல அரசு செய்ய வேண்டிய கடமை. நட்ட நடு நகரம் இப்படி இருக்கவே கூடாது.


இந்த ஆற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று அண்ணா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் 1967-ல் திட்டம் வகுத்தார். ஆற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதிலே போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பது அவர் கண்ட கனவு. அப்போது கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் கருணாநிதி முதலமைச்சர் ஆனபோது திட்டம் விரைவுபடுத்தப்பட்டது.

குமணன் துறை, குகன் துறை, பாரி துறை என்ற பெயரில் எல்லாம் கூவம் ஆற்றிலே படகுத் துறைகள் அமைக்கப்பட்டன. ஆற்றில் படகுகள் ஓடின. அதில் நானும் பயணம் செய்தேன்.




No comments:

Post a Comment