சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 May 2015

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா? - மினி தொடர் (பாகம்- 3 )

போஸ் ஹால்வெல் எனும் ஆங்கிலேய தளபதியின் சிலையை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத் தினார். அதற்கு அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததும் உண்ணா நோன்பு இருந்தார். அரசு கொஞ்ச காலத்துக்குத் தண்டனையைத் தள்ளி வைப்பதாகச் சொல்லி உடல்நலம் மோசமடைந்து இருந்த நேதாஜியை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்து லாகூருக்கு தப்பி, காபூல் சென்ற போஸ் அங்கிருந்து ரஷ்யா சென்றார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவி எமிலிக்கு பெர்லினில் இருந்து கடிதம் எழுதினார்.

நேருவும் காந்தியின் அழைப்பை ஏற்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். கிழக்கு ஆசியாவை கதிகலக்கி விட்டு ஜப்பான் எட்டும் தூரத்தில் நின்றுகொண்டு இருந்தபொழுது ராஜாஜி முதலிய தலைவர்கள் ஜப்பானிய தாக்குதலை அகிம்சை முறையில் எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று பர் தோலி தீர்மானம் இயற்றப்பட்டது. படேல், ராஜேந்திர பிரசாத் மட்டுமே அதற்கு எதிராக இருந்தார்கள். கட்சியின் எல்லாப் பதவியிலிருந்தும் காந்தி தன்னை விடுவித்துக்கொண்டார். நேரு இருபத்தி இரண்டு வருடங்களாக அகிம்சையில் உறுதி கொண்டிருக்கும் தான் இன்றைக்கு வேறு வழியில்லை என்றால், வன்முறையைக் கைக்கொள்வதைத் தவிர வழியில்லை என்று எழுதினார். காந்திக்கும், காங்கிரசுக்கும் வேறுபாடுகள் இல்லை என்று அழுத்திச் சொன்னார்.

காந்தி இந்த மாதிரியான சூழலில்தான் புகழ்பெற்ற ’நேரு தான் என்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசு. தண்ணீரை குச்சியைக் கொண்டு அடித்து விலக்க முடியாது. எங்களைப் பிரிப்பதும் அதைப்போலதான்... நான் போன பிறகு அவர் என்னுடைய மொழியைப் பேசுவார்.’ என்ற வாசகத்தை உறுதிபடச்சொன்னார்.

போஸ் ஜெர்மனியில் ஹிட்லரை சந்தித்தார். அயல்நாட்டில் இந்தியாவுக்கான அரசை உண்டாக்க வேண்டும் என்கிற அவரின் கோரிக்கையை ஹிட்லர் கவனிப்பதாகச் சொல்லியிருந்தார். ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரிப்பன்ட்ராப் உடன் நடந்த பேச்சுக்களில் அவர் காந்தியைக் குறிப்பிட்டபொழுது, ‘அவர் சமரசம் செய்துகொள்கிற வெள்ளையரின் முகத்தில் அறைந்தது போலக் கதவை மூடாத நபர்.’ என்று நேதாஜி சொன்னாலும், அயலுறவு மந்திரியோ காந்தியை முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றார்.

இதே தருணத்தில் பெர்லினில் யூத இன ஒழிப்புத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. போஸ் எமிலியுடன் மண வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். இனக்கலப்புத் திருமணங்களுக்கு எதிராக இருந்த நாஜிக்கள் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். போஸும் மறந்தும் நாஜிக்களின் அட்டூழியங்கள் பற்றியோ, ஜப்பானின் கடுமையான வன்முறைகள் பற்றி வாய்திறக்கவில்லை. இந்திய விடுதலை மட்டுமே அவரின் இலக்காக இருந்தது.

ஜெர்மனி சோவியத் ரஷ்யாவைத் தாக்கியது, ரூஸ்வெல்ட்- சர்ச்சில் இருவரும் இணைந்து, ‘சுயாட்சியும், இறையாண்மையும் அடிமைப்பட்ட மக்களுக்குத் திரும்பத் தரப்படும்.’ என்றவையும் ஜெர்மனிக்கு எதிரான மனப்போக்கை இந்தியாவில் உண்டாக்கும் என்பதை உணர்ந்தார். ஹிட்லரை ஒரு வழியாகச் சந்தித்த பொழுது நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானை சென்றடைந்து தன்னுடைய திட்டங்களை அவர் செயல்படுத்துவது சரியாக இருக்கும் என்று ஹிட்லர் பரிந்துரை செய்தார். போஸ் அதையே முன்னெடுத்தார். 

இந்தக் காலத்தில் நேரு மிகக்கடுமையாக இப்படிப் பேசினார், ‘ஹிட்லரும், ஜப்பானும் நரகத்துக்குப் போக வேண்டும். என்னுடைய வாழ்க்கையின் இறுதிவரை அவர்களுக்கு எதிராகப் போரிடுவேன். திரு. சுபாஸ் சந்திர போஸ், அவரின் படைகள் ஜப்பானோடு இந்தியாவுக்குள் நுழைந்தால் அவரையும் எதிர்ப்பேன். நல்லெண் ணத்தோடு போஸ் தவறாகச் செயல்படுகிறார். உலகின் மிக ஆதிக்கம் நிறைந்த சக்திகளுடன் அவர் இணைந் திருக்கிறார்.’ என்று பேட்டி அளித்தார்.
போஸ் ஜெர்மனியை விட்டு கிளம்ப முடிவு செய்தபொழுது அவரின் இரண்டு மாத மகளுக்கு முத்தங்கள் கொடுத்து பிரியா விடைபெற்றார். நாட்டுக்கான போராட்டம் அவர் முன்னால் பெரிதாக நின்றது. அடுத்து அம்மாவின் இறப்பு செய்தி வந்து சேர்ந்தபொழுதும் அதைப் பற்றிப் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டார்.

கிரிப்ஸ் மிஷன் என்கிற பெயரில் சமரசம் பேச வந்த ஆங்கிலேய அமைச்சர் கிரிப்ஸ் பேச்சுக்குக் காங்கிரஸ் மற்றும் பிற ஆட்களுடன் பேசினாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போனது. காந்தி அதை ‘பின்தேதி இடப்பட்ட காசோலை’ என்று அதை வர்ணித்தார். நேரு கிரிப்ஸ் அவர்களைச் சந்தித்து, ‘இப்படி விடுதலை என்பதைப் பற்றிப் பேசக்கூடத் தயாராக இல்லாத நீங்கள் எதற்கு வந்தீர்கள். அடுத்த விமானத்தில் உங்கள் நாட்டுக்குத் திரும்புங்கள்’ என்று கடுமையாகச் சொல்லிவிட்டு வந்தார்.

வேறு எந்த வெளிச்சமும் இல்லாத நிலையில் காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை அறிவித் தார். ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஜப்பான் பிரதமர், ‘எல்லா வகையிலும் போஸ் அவர்களின் போராட்டத்துக்கு உதவுவதாக’ அறிவித்தார். போஸ் ‘நாங்கள் கிழக்கு ஆசியாவில் இருந்து படை திரட்டிக்கொண்டு வருகிறோம். நீங்கள் நாட்டுக்குள் இருந்து கிளர்ச்சி செய்யுங் கள். இந்திய ராணுவமும் புரட்சியில் ஈடுபடட்டும்.’ என்று வானொலியில் அறைகூவல் விடுத்தார்.
போஸ் தன்னுடைய ராணுவத்தில் பெண்களுக்கு என்றொரு தனிப் பிரிவை உருவாக்கினார். சிங்கப்பூரில் வானொலியில் இருந்து ‘தேசப் பிதா காந்தியிடம் இந்திய விடுதலைக்கான புனிதப் போரில் உங்களின் நல்லெண்ணம், ஆதரவை நோக்குகிறோம்’ என்று பேசினார். போரில் வென்றால் ஆட்சியமைக்க காங்கிரஸ், காந்தி ஆகியோரின் உதவி தேவை என்று அவருக்குத் தெரியும். படைப்பிரிவுகளுக்குக் காந்தி, நேரு, ஆசாத் ஆகியோரின் பெயரை இட்டிருந்தார்.

பர்மாவை மட்டும் கைக்குள் வைத்துக்கொண்டால் போதும் என்று ஜப்பானிய ராணுவம் எண்ணிக்கொண்டு இருந்தபொழுது, இந்தியாவை உள்நாட்டுக் கிளர்ச்சியின் உதவியோடு கைப்பற்றுவோம் என்று போஸ் நம் பினார். இம்பால், கோஹிமா வீழ்ந்த பின்பு மழையாலும், விமானப் படை தாக்குதலாலும், ஜப்பானிய தளபதி தவறாகச் செயல்பட்டதாலும் தோல்வியைப் போஸின் படைகள் சந்தித்துப் பின்வாங்க நேரிட்டது. அப் பொழுதும் ஜான்சி ராணி படைப்பிரிவின் பெண்கள் பத்திரமாகத் தப்பிப்பதையும், மற்ற படை வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு விமானத்தில் தைபேவில் ஏறிய போஸ் விமானம் வெடித்து இறந்ததாகச் சொல்லப்பட்டது.

செய்தி கேட்ட நேரு கண்ணீர்விட்டு அழுதார். ‘வீரம் மிகுந்த வீரர்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய எல்லாப் போராட்டங்களில் இருந்தும் சுபாஸ் தப்பிக்கொண்டார்.’ என்று கதறினார். கைது செய்யப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்களின் வழக்கு விசாரணை செங்கோட்டையில் நடந்தபொழுது இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு நேதாஜியின் கனவுப்படையின் வீரர்களைக் காக்க வழக்கறிஞர் உடை அணிந்தார் நேரு. 

நேதாஜியின் மரணத்துக்குப் பிந்தைய பிறந்தநாளில் பேசிய நேரு, ‘நானும் அவரும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் இணைந்து விடுதலைப் போரில் பங்காற்றினோம். பேரன்பால் எங்கள் உறவு நிறைந்திருந்தது. என்னுடைய தம்பி அவர். எங்களுக்குள் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தது என்றாலும், விடுதலைக் காகப் போராடிய தீரமிகுந்த போராளி அவர்.’ என்று குறிப்பிட்டார். ஜப்பானிடம் சென்று சேர்ந்தாலும் தன் னுடைய தனித்துவம், விடுதலைச் சிந்தனையை இழக்காதவர் போஸ் என்றும் புகழாரம் சூட்டினார். காந்தி போஸின் ஐம்பதாவது பிறந்தநாளின்பொழுது, ‘சுபாஸ் என்னுடைய தொலைந்து போன மகன். அவர் வேறொரு கப்பலில் பயணம் செய்ய முடிவு செய்துவிட்டார்.’ என்றார். நேரு தன்னுடைய அத்தனை ஆண்டுகால நட்பில் ஒரு இடத்தில்கூடப் பொதுவெளியில் போஸை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியது கிடையாது.
நேரு, போஸ் இருவரும் சோசியலிசப் பார்வை கொண்டவர்கள், கட்சியில் ஒரே சமயத்தில் உயரங்களைத் தொட்டவர்கள். பல்வேறு சமயங்களில் இணைந்து பணியாற்றியவர்கள். ஆனால், அவர்களைப் பிரிக்கிற புள்ளியாகக் காந்தியுடனான உறவு இருந்தது. போஸ், நேரு இருவரும் இணைந்து இந்திய அரசியலை தீர்மானிக்கலாம் என போஸ் எண்ணினார். நேரு காந்தியோடு கடுமையாக முரண்பட்டு அவரை விமர்சித் தாலும் எப்பொழுதும் அவரை விட்டு நீங்க மறுத்தார். மோதிலாலின் மரணத்துக்குப் பிறகு காந்தி அவருக் குத் தந்தையானார். காந்தி எரவாடா சிறையில் உண்ணாநோன்பு இருந்தபொழுதும், அவர் மரணமடைந்த பொழுதும் நேரு கேவிக் கேவி குழந்தையைப்போல அழுதார்.

போஸ் உணர்ச்சிகளை ஓரம் வைத்துவிட்டு தன்னுடைய அரசியல் மதிப்பீட்டில் காந்தியைக் கூர்மையாக அணுகினார். அவரை ‘பாபுஜி’ என்றுதான் போஸால் அழைக்க முடிந்தது. காந்தி மீது மரியாதை இருந்தாலும் அவர் மீது கடுமையான பார்வையும், தேவைப்படுகிற பொழுது முறித்துக்கொண்டு புரட்சி செய்கிற தைரியமும் போஸிடம் இருந்தது. நேரு அப்படிப்பட்டவராக இல்லை. அவர் காந்தியுடன் வெகுவாகப் பிணைக்கப்பட்டிருந்தார். அது அரசியலின் போக்கை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியது.
அரசாங்கத்தின் உளவுத்துறை கோப்புகளில் சில தற்போது வெளியாகி அதில் நேதாஜியின் அண்ணனான சரத் போஸ் அவர்களின் மகன்களான சிசிர் போஸ், அமியா போஸ் உளவு பார்க்கப்பட்டு இருப்பது வெளிப்பட்டு இருக்கிறது. அவர்களுக்குப் போஸின் மனைவி எமிலி தன்னுடைய குடும்பச்சூழல், பெண் குழந்தையை வளர்க்கப் பட்டபாடு ஆகியவை பற்றி எழுதிய கடிதங்களை உளவுத்துறை முன்னரே பிரித்துப் படித்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இருபது வருடங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்த உளவில் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்பதும் அடக்கம். இவை நேருவின் அனுமதி இல்லாமல் நடந்திருக்கச் சாத்தியமில்லை? ஏன் இப்படி நேரு நடந்து கொண்டார்?

இதற்கு இருவகையான விளக்கங்கள் தரலாம். அதற்கு முன்னர் போஸின் மரணத்தில் உள்ள முடிச்சுக் களைச் சுருக்கமாகக் காண வேண்டியிருக்கிறது. போஸ் இறந்துபோனதாக ஜப்பானிய அரசும், இந்திய அரசும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தாலும், போஸின் மரணத்தின்பொழுது காந்தி ‘என் மனதின் குரல் போஸ் இன்னமும் உயிரோடு இருப்பதாகவே சொல்கிறது!’ என்றார். சின்ஹா எனும் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியாவின் அயலுறவுத் துறை அதிகாரி கிளப்பிய சர்ச்சைகள், புயல்கள் வெகு பிரசித்தம்.

இந்திய அரசு அமைத்த ஷாநவாஸ் குழு போஸ் விமான விபத்தில் இறந்ததாகச் சொல்ல, அதை ஏற்க முடியாது என்றும், போஸ் எங்கோ தப்பிப்போயிருக்கிறார் அதை மறைக்க அரசு முனைகிறது என்கிற ரீதியில் போஸின் சகோதரரும் அக்குழுவின் உறுப்பினருமான சுரேஷ் போஸ் அந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். அடுத்து இந்திரா காந்தி காலத்தில் அமைக்கப்பட்ட ஜி.டி.கோசலா குழுவின் முன்னால் சின்ஹா தோன்றி வாக்குமூலம் அளித்தார். போஸ் சோவியத் ரஷ்யாவுக்குத் தப்பிப்போன தாகவும் அவர் ஸ்டாலி னின் சைபீரிய வதை முகாம்களில் கைதியாக இருப்பதாக ரஷ்ய உளவாளிகள் தனக்குத் தகவல் தந்ததாக அவர் வாக்குமூலம் தந்தார்.

குஸ்லோவ் எனும் இந்தியர்களுக்கு 1934. வரை பயிற்சியளித்த ரஷ்ய உளவாளி போஸ் யாகுட்ஸ்க் சிறையில் அறை எண். 450ல் அடைப்பட்டிருப்பதைச் சொன்னதாக அடித்துச் சொன்னார். மேலும் 1949-ல் துவங்கி ஜெர்மனி, ரஷ்யா என்று பல்வேறு நாடுகளுக்கு நேருவிடம் இருந்து பணம் பெற்றுப் பயணம் செய்து பல்வேறு தகவல்களைத் திரட்டிய அவர் ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் கார்ல் லியோனார்ட் எனும் ரஷ்யாவில் சுற்றிய உளவாளியும் போஸ் ரஷ்யாவில் இருப்பதாகச் சொன்னதையும் கமிஷன் முன்னர் சொன்னார். 

நேருவிடம் இதே விஷயத்தை எடுத்துச் சொல்லியபொழுது அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனவும், ரஷ்ய தூதுவராக இருந்த ராதாகிருஷ்ணன் இந்தச் சிக்கலை ‘மீண்டும் கிளப்பினால் உன் பதவிக்கு ஆபத்து!’ என்று அச்சுறுத்தியதாகச் சொன்ன சின்ஹா அடுத்துச் சொன்னது அதிர்ச்சி ரகம்.

1963-ல் போஸ் இறந்ததாகச் சொல்லப்படும் விபத்து நடந்த தைஹோகு ரன்வேயை பல்வேறு கோணங் களில், வகைகளில் படம்பிடித்தார். ஒரு அதிர்ச்சி தரும் விஷயத்தைக் கவனித்தார். போஸ் இறந்த பிறகு எடுக்கப்பட்ட படங்களில் எதிலும் பிரேமில் கீளுங் நதி தெரியவே இல்லை. ஆனால், விமானம் விழுந்த இடத்தைக் கீளுங் நதியில்லாமல் படம் பிடிக்கவே முடியாது என்று அவருக்கு உறுதியானது. கமிஷன் இவை எதையுமே கண்டுகொள்ளாமல் போஸ் விமான விபத்தில் இறந்தார் என்று அறிக்கை தந்தது. 
அடுத்து அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷன் சொன்னது மேலும் தலைச்சுற்றலை கிளப்பியது. இச்சிரோ ஒகுரா எனும் ஜப்பானியா வீரரின் சாம்பல் தான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது, அது போஸின் சாம்பல் அல்ல. போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று கமிஷன் சொல்லியது. அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்க மறுத்து ஆறு ஆண்ட கால உழைப்பில் உருவான அறிக்கையை நிராகரித்து விட்டது.

இப்பொழுது நேரு விஷயத்துக்கு வருவோம். காவ், முல்லிக் என்று உளவுத்துறையின் பெருந்தலைகள் வழிகாட்டுதலில் சரத் போஸ் மகன்களான சிசிர் போஸ், அமியா போஸ் கண்காணிக்கப்பட்டு உள்ளார்கள். ஆனால், நேரு அரசால் சரத் சந்திர போஸ் கண்காணிக்கப்பட்டதாகக் காட்டும் ஆதாரங்கள் இல்லை. அவர் விடுதலைக்குப் பின்னர் இரு ஆண்டுகள் வாழவும் செய்தார். தூதுவர்களாக இவர்களுக்குப் பதவி தரவும் நேரு முன்வந்ததைச் சிசிர் போஸின் மகனே ஒப்புக்கொள்கிறார்.

நேரு நேரடியாக ஒரே ஒரு சமயத்தில் மட்டும் அமியா போஸ் பற்றி அயலுறவுத் தூதுவர் சுபிமல் தத்துக்குக் கடிதம் எழுதிக் கேட்கிறார். நவம்பர் 26, 1957, எழுதப்பட்ட அக்கடிதத்தில், ‘அமியா போஸ் ஜப்பான் செல்வ தாக என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். அவர் நம் தூதரகத்துக்குச் சென்றாரா? அந்த ரேகொஜி (போஸ் அஸ்தி இருப்பதாகச் சொல்லப்படும் ஆலயம்) சென்றாரா என்று அங்கே இருக்கும் உங்கள் தூதுவரிடம் விசாரித்துச் சொல்லுங்கள்.” என்று கேட்டுள்ளார். ‘இல்லை!’ என்பதே பதிலாக வந்துள்ளது. பல்வேறு இந்திய தேசிய ராணுவ வீரர்களை அவர் சந்தித்தது நேருவுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கலாம் என்கிறார் அமியா போஸின் மகன் சுகாதா போஸ். போஸ் ஆய்வு பீரோவை நிறுவவே அவர்களைச் சந்தித்தார் என்று சொல்கிறார்கள்.

நேரு ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், ஜி.பி.பந்த், படேல் என்று வலதுசாரிகள் பலரை சமாளிக்க வேண்டியிருந் தது. போஸ் திரும்பி வந்திருந்தால் இருவரும் இணைந்து அவர்களைச் சந்தித்திருக்கக் கூடும் என்பது ஒரு வாய்ப்பு. இன்னொன்று நாம் முன்னரே பார்த்ததுபோல மிகவும் உணர்ச்சிகரமான, தனித்த செயல்பாட்டுப் போக்கை கொண்ட நேதாஜி நேருவை விட்டு நீங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். அப்பொழுது அவர் பிரிந்து கிடந்த சோசியலிஸ்ட்கள், இடதுசாரிகள் அனைவரையும் இணைத்து நேருவை எதிர்கொண்டிருக் கலாம். அதிலும் நேருவைவிட எட்டு வருடங்கள் இளையவர் என்பதால் நேருவுக்குச் சரியான போட்டியாக அவர் இருந்திருக்கக் கூடும். ஸ்டாலினுடன் இணைந்து நேரு அவரைக் கொன்று இருக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்வதை நம்ப முடியவில்லை. 

காரணம் இந்திய அரசாங்கத்தின் மீதும், நேரு மீதும் அபிமானம் ஸ்டாலினுக்கு இல்லை. இந்திய கம்யூ னிஸ்ட்களை ஆயுதம் ஏந்தி இந்திய அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டியது ஸ்டாலின்தான். கம்யூனிஸ் ட்களை இரும்புக்கரம் கொண்டு நேரு அரசு ஒடுக்கியது. நேருவுக்கு ஸ்டாலினுடன் இணக்கமான உறவை விடச் சந்தேகமே அதிகம் இருந்திருக்கும் என்று கருத வேண்டியிருக்கிறது.

போஸ் பற்றி ஏதேனும் குறிப்புகள், செய்திகள் இவர்களுக்குக் கிடைக்கிறதா என்று நேரு அறிய விரும்பி யிருக்கலாம். நேருவுக்குப் போஸ் திரும்பி வருவதில் அச்சங்கள் இருந்திருக்கிறது என்பது சுரத்துள்ள வாதம். ஆனால், நேரு அவரின் வாரிசுகளைப் பார்த்தும் பயந்தார் என்பதைவிட, கம்யூனிஸ்ட் சார்பு கொண்டு அவர்கள் இயங்குகிறார்களோ என்கிற அச்சமும், இந்திய தேசிய ராணுவ வீரர்களைச் சந்தித்து மீண்டும் ஒரு அரசியல் எழுச்சியை ஏற்படுத்த முனைகிறார்களோ என்கிற சந்தேகமும் அரசுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லவேண்டி இருக்கிறது.

ரஷ்யாவில் போஸை ஏதேனும் செய்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துவதுபோல, போஸின் ஆவணங் கள் அனைத்தையும் அரசு வெளிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபொழுது ,’அது மற்ற நாடு களுடனான உறவை பாதிக்கும்.’ என்று மோடி அரசு பதிலளித்துள்ளதை கவனிக்க வேண்டும். 

முகர்ஜி கமிஷன் முன் தாக்கல் செய்யப்பட்ட கோப்புகள் 12014/9/79-DIII(S&P); 12014/5/80-ISDIII ,S.14/1/88-T, S.21/51/76-T காணவில்லை என்று வேறு சொல்கிறது அரசு. இவை போஸ் எங்கே இருந்தார், அவர் விமான விபத்தில் இறந்தாரா என்பவை குறித்த விஷயங்கள் அடங்கிய கோப்புகள். போஸ் வாழ்ந்த காலத்திலும் வாழ்க்கைக்குப் பிறகும் மர்மங்களின் மன்னனாகத் திகழ்கிறார். அரசு போஸ் தொடர்பாக வைத்திருக்கும் 250 ப்ளஸ் கோப்புகளை விடுவித்தால் தெளிவு பிறக்கலாம். வேறென்ன சொல்ல?



No comments:

Post a Comment