சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Sept 2015

மோடியின் ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி காலமானார்!

பிரதமர் மோடியின் ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதி நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

உலக பிரசித்தி பெற்ற வேதாந்த ஞானியும், கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனருமான 85 வயது சுவாமி தயானந்த சரஸ்வதி நேற்று (புதன்கிழமை) இரவு 10.20 மணியளவில் உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள அவரது ஆசிரமத்தில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கோவை, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சுவாமி தயானந்த சரஸ்வதி, சில வாரங்களுக்கு முன்பு ரிஷிகேஷ் அழைத்து செல்லப்பட்ட நிலையில் நேற்று இரவு மகா சமாதி அடைந்துள்ளார். இவர், பிரதமர் மோடியின் ஆன்மிக குருவாகத் திகழ்ந்தவர். சமீபத்தில் கூட இவரை பிரதமர் மோடி ரிஷிகேஷில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.


சுவாமி தயானந்த சரஸ்வதி 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு சுவாமி சின்மயானந்தரிடம் சன்னியாசம் பெற்ற இவர், 1990ல் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை நிறுவினார். இதேபோல், ரிஷிகேஷ், நாகபுரி மற்றும் அமெரிக்காவிலும் ஆசிரமங்களை நிறுவி வேதாந்தத்தைக் கற்றுக் கொடுத்தார். இங்கு பயின்ற 200-க்கும் மேற்பட்ட சன்னியாசிகளும், மாணவர்களும் உலகின் பல்வேறு நாடுகளில் வேதாந்தத்தைப் போதித்து வருகின்றனர்.

ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவ, நாடு முழுவதும் 120 இடங்களில் "எய்ம் பார் சேவா' என்ற பெயரில் இலவச விடுதிகளை 2000 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தியதுடன், ஆன்மிகம், கலை, கலாசாரம், சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவரின் ஆன்மிகச் சொற்பொழிவுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

தயானந்த சரஸ்வதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனைகட்டியில் உள்ள ஆசிரமத்தில் நேற்று நள்ளிரவு முதலே, சுவாமி தயானந்த சரஸ்வதியின் பக்தர்கள் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதியின் இறுதிச் சடங்குகள் ரிஷிகேஷில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25 ஆம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் இரங்கல்

கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமி உடல் நலக்குறைவால் ரிஷிகேசம் ஆசிரமத்தில் நேற்றிரவு காலமானார்.



அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "குருஜி , நாங்கள் உங்களை இழந்து தவிக்கிறோம். உங்கள் காலடியில் பிரணாமத்தை சமர்ப்பிக்கின்றோம். எங்களோடு எப்போதும் இருந்து ஆசி தருவாயாக!" என்று தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment