சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Sept 2015

வைகோவின் தேர்தல் கூட்டணி: இந்த முறையாவது வெற்றி தேடித்தருமா?

'அரசியல் வியூகம் இல்லாத இடத்தில் நேர்மை இருந்து என்ன பயன்?'  -  வைகோவுடன் 22 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றியவர்கள், இப்போது அவரை விட்டு விலகி, அவரை நோக்கி வைக்கும் விமர்சனம் இது.  கட்சியை விட்டு விலகி சென்று விட்டவர்கள், கட்சியை விட்டு செல்வதற்காக சொல்லும் ஒற்றை காரணம் அவரது 'தவறான' தேர்தல் வியூகம்.

“2001, 2006, 2011 தேர்தல்களில் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்டார். தொடர்ச்சியாக அணி மாறினார். சில சமயங்களில் போட்டியிடாமலேயே இருந்தார். இப்போது கூட நிச்சயம் வெற்றி பெற முடியாது என தெரிந்திருந்தும், மக்கள் நல கூட்டு இயக்கத்துடன் கூட்டணி என்கிறார். இயக்கத்தின் தொடர் தோல்விகள், அந்த இயக்கத்தின்  வளர்ச்சியை பாதிக்கும் என்ற அடிப்படையைக்கூட வைகோ உணரவில்லை" என வைகோவை நோக்கி சராமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் கட்சியை விட்டு வெளியேறிய நிர்வாகிகள்.

1994-ம் ஆண்டு உருவான ம.தி.மு.க., இந்த 22 ஆண்டுகளில் 4 முறை நாடாளுமன்ற தேர்தலையும், 4 முறை சட்டமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டது. இந்த 8 தேர்தலின்போது ம.தி.மு.க. எடுத்த நிலைப்பாடு எவை? அவை என்ன பலன் அளித்தது என்பது குறித்த ஓர் அலசல் இங்கே...
'என்னைக் கொல்ல சதி'

1991ல் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்த சமயம். விடுதலைப் புலிகள்தான் இதற்கு காரணம் என்பது பலரது சந்தேகமாக இருந்தது. மக்களிடமும் இது பரவியதில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்ற அடிப்படையில், தி.மு.க.வினர் மீது எதிர்ப்பு எழுந்தது. ராஜீவ் அனுதாப அலையால் தி.மு.க. 1991 சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் விடுதலைப் புலிகள் ஆதரவு எனும் நிலையில் இருந்து பின்வாங்கியது தி.மு.க. 

அதேசூழலில் வைகோவின் ரகசிய ஈழப்பயணம் கட்சிக்குள் பெரும் கலகத்தை ஏற்படுத்தியது. இதை மையப்படுத்தி கட்சிக்குள் பெரும்  சர்ச்சை வெடித்துக்கொண்டிருக்க, அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதம் புயலை கிளப்பியது.
"உங்களை தீர்த்துக்கட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் திட்டம் தீட்டியுள்ளனர். வைகோவின் ஆதாயத்துக்காக இதை விடுதலைப் புலிகள் செய்ய உள்ளனர். உங்களுக்கு பாதுகாப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்"  என கோரியிருந்தது அந்தக் கடிதம். இதை செய்தியாளர்களிடம் வெளியிட்டார் கருணாநிதி. 'என்னால் கட்சிக்கோ, தலைவருக்கோ கடுகளவும் பாதிப்பு வராது' என அறிக்கை விட்டார் வைகோ. இந்த நிகழ்வுகள் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்த,  மற்றொரு புறம்  'ஸ்டாலினை வளர்க்க வைகோவை பலியிட பார்க்கிறார் கருணாநிதி' என்ற பேச்சும் கட்சிக்குள் எழுந்தது. 

மோதல் அதிகரித்துக்கொண்டே போக, 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஒன்பது  மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறிய வைகோ, தி.மு.க.வின் கொடி, சின்னத்துக்கு உரிமை கோர, கிடுகிடுத்து போனது தி.மு.க.

எம்.ஜி.ஆர் பிரிவிற்குபின் திமுக வலுவாக எதிர்கொண்ட பிரச்னை அது. போராடிதான் சின்னத்தையும், கொடியையும் தக்க வைத்துக்கொண்டது தி.மு.க. இந்தச் சூழலில் உருவெடுத்ததுதான் மறுமலர்ச்சி தி.மு.க. என்ற கட்சி. 

'முதல் தேர்தல்... தனி கூட்டணி'

எழுச்சியுடன் துவங்கிய ம.தி.மு.க., கட்சி துவங்கிய இரண்டே ஆண்டுகளில் தேர்தலை சந்தித்தது. தி.மு.க.வில் இருந்து வெளியேறிய வைகோ, ம.தி.மு.க.வை தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக வைக்க விரும்பினார். அதற்காக பா.ம.க., மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயன்றது அக்கட்சி. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று என சொல்லப்பட்ட இந்த கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பதில் ஆட்டம் காணத்துவங்கியது கூட்டணி.
பா.ம.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்கும் தலைமை ஏற்பது யார் என்பதிலும், தொகுதி ஒதுக்கீடு செய்வதிலும் சிக்கல் ஏற்பட, பாதியில் முடிந்தது அந்த முயற்சி. இறுதியில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளை கொண்ட அணியை அமைத்து போட்டியிட்டது ம.தி.மு.க.

அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியிலும், தி.மு.க., காங்கிரஸில் இருந்து புதிதாக உருவான த.மா.கா., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியிலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியிலும், பா.ம.க., திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியிலும் போட்டியிட்டன. ம.தி.மு.க. கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வைகோ. 

ஆனால் இந்த தேர்தலில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் அனைத்திலும் ம.தி.மு.க. தோல்வியை தழுவியது.  உச்சகட்டமாக தன் சொந்த சட்டமன்ற தொகுதியான விளாத்திக்குளம், சொந்த நாடாளுமன்ற தொகுதியான சிவகாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட வைகோ, இரண்டிலும் தோல்வியடைந்தார். ம.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி புதுக்கூட்டணி அமைத்த பா.ம.க., சில சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றிக்கொண்டது.
1998-ல் அ.தி.மு.க.வுடன்...

மத்தியில் 1996ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற ஐக்கிய முன்னணி அற்ப ஆயுளில் வீழ,  1998ல் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டி வந்தது. 1996 தேர்தலில் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்த வைகோ, படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, 1998 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றார். 

அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பா.ம.க. இருந்த அந்த கூட்டணியில் 5 தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. அ.தி.மு.க., பாரதிய ஜனதாவுடன் வைகோ கூட்டு வைத்தது பெரும் சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது. அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற, ம.தி.மு.க.வும் 3 தொகுதியில் வெற்றி பெற்று, தனது தேர்தல் கணக்கை துவக்கியது. ஆனால் ஜெயலலிதா கொடுத்த நெருக்கடியில் இந்த ஆட்சி, அடுத்த ஆண்டே கலைந்து போனது. மீண்டும் 1999ல் அடுத்த தேர்தலை சந்தித்தது இந்திய நாடாளுமன்றம்.

ஓராண்டில் கசந்து போன உறவு


1999 தேர்தலில் மீண்டும் கூட்டணி மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. தி.மு.க., அ.தி.மு.க. அணிகள் இடமாறிக்கொண்டன. இதனால் தி.மு.க. அணியில் ம.தி.மு.க.வும் இடம்பெற்றது. தி.மு.க.வை விட்டு வெளியேறிய வைகோ, அடுத்த 5 ஆண்டுகளில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதுதான் வைகோவின் அரசியல் வாழ்வில் முதல் சறுக்கல்.
வாரிசு அரசியலை முன்வைக்கிறது தி.மு.க. என மேடைக்கு மேடை முழங்கி வந்த வைகோ, தி.மு.க.வுடன் உறவு வைக்க தயாரானார். தேசிய அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம்தான் இதற்கு காரணம் எனச்சொல்லி, தயக்கமின்றி தி.மு.க. கூட்டணியில் இடம்பிடித்தது ம.தி.மு.க. கடந்த கால கசப்புகளை எல்லாம் மறந்து தி.மு.க.வுடன் கைகோர்த்தார் வைகோ. இந்த முறையும் 5 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க., 4 தொகுதிகளில் வென்றது. வைகோ மீண்டும் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.

தி.மு.க. அணியில் இருந்து வெளியேறியது

1999- ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதியுடன் அறுந்து போன உறவை ஒட்ட வைத்துக்கொண்ட வைகோ, 2001 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் உறவை அறுத்துக்கொண்டு வெளியேறினார். தொகுதி உடன்பாடு இதற்கு காரணமாய் இருந்தது. தி.மு.க., பாரதிய ஜனதா, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அமைத்த இந்த கூட்டணியில், பாரதிய ஜனதாவுக்கு இணையாக ம.தி.மு.க.வுக்கு சீட் வழங்க வேண்டும் என கோரினார் வைகோ. 

ஆனால் பாரதிய ஜனதாவுக்கு 23, ம.தி.மு.க.வுக்கு 21 வழங்குவதாக சொன்னது தி.மு.க. பாரதிய ஜனதா தொகுதிகளை விட்டுத்தருவதாக ஒப்புக்கொண்டு இறங்கி வந்த போதும், தி.மு.க. - ம.தி.மு.க.விடையே இருந்த சிக்கல், கூட்டணியை உடைத்தது. தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்து தேர்தலை சந்தித்தது ம.தி.மு.க.
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக சொன்ன வைகோ, பாரதிய ஜனதா போட்டியிடும் தொகுதிகளை தவிர மற்ற இடங்களில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.  "கலைஞருடன் கூட்டணி என கட்சிப்பிரமுகர்கள் சொன்னால் தீக்குளிப்போம் என தொண்டர்கள் ஆவேசமாய் சொன்னார்கள். அவர்களின் உணர்ச்சி கொந்தளிப்பின் உச்சகட்டமாய் எடுக்கப்பட்ட முடிவு இது" என விளக்கம் கொடுத்தார் வைகோ. 

தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை திட்டித்தீர்த்தார். இந்த தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். உச்சகட்டமாய் 211 பேரில் ஒரு சிலர் மட்டுமே டெபாசிட் தொகையை மீட்டனர்.

2004ல் மீண்டும் தி.மு.க
2001 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியமைத்த சமயம். மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதா அரசு பொடா சட்டத்தை கொண்டு வந்தது. தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வது, ஆட்களை திரட்டுவது, அடைக்கலம் கொடுப்பது போன்ற குற்றங்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என்றது. கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது இந்த சட்டம். அரசியல் எதிரிகளை பழி வாங்கும் ஆயுதமாக பொடா பயன்படுத்தப்படும் என சொல்லப்பட்ட நேரத்தில், பொடாவில் கைது செய்யப்பட்டார் வைகோ. 

'விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்' எனச்சொல்லிவந்த வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசால் பொடாவில் கைது செய்யப்பட்டார். அவரோடு பலரும் பொடாவில் கைதானார்கள். 2004 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய சமயம். பிணை கூட கேட்காமல் சிறையில் இருந்து வந்தார் வைகோ. அப்போது வைகோவை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரியது தி.மு.க. சிறையில் இருந்தபோது வைகோவை நேரில் சந்தித்து பேசினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதனால் மீண்டும் தி.மு.க - ம.தி.மு.க. கூட்டணி உருவானது. 

அ.தி.மு.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணியை திமுக அமைத்தது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., இடது சாரிகள் என மிகப்பெரிய கூட்டணியாய் அது இருந்தது.  40 தொகுதிகளிலும் தான் பிரசாரம் செய்ய வேண்டும் எனச்சொல்லி, தேர்தலில் தான் போட்டியிடாமல் தீவிரமாய் பிரசாரம் செய்தார் வைகோ. கூட்டணி பலத்தை நம்பி போட்டியிட்ட  தி.மு.க. அணி, போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வென்றது. 4 எம்.பி.க்களை மக்களவைக்கு அனுப்பியது ம.தி.மு.க.

காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க., பா.ம.க. பங்கேற்றது. ம.தி.மு.க. பங்கேற்கவில்லை. ம.தி.மு.க.வின் தொகுதிகளையும் சேர்த்து கணக்கு காட்டி தி.மு.க. அமைச்சர்களை பெற்றுக்கொண்டதாக பின்னர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
'பொடா' மறந்த கதை ; மீண்டும் அதிமுகவுடன்...

2006 சட்டமன்ற தேர்தல். மீண்டும் அணிகள் மாறின. 2004ல் பொடாவில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த பின்னர், 'பாசிச வெறி பிடித்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சியை தூக்கியெறிவோம்' என பேசிய வைகோ, 2006 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கைகோர்த்தார். கலைஞரை முதல்வராக்குவோம் என முழங்கி கொண்டிருந்த வைகோ, 35 தொகுதிகள் கேட்டு, அது கிடைக்காமல் போக தி.மு.க. அணியை விட்டு வெளியேறி, அ.தி.மு.க.வில் இணைந்தார். 

ம.தி.மு.க. உருவான பின்னர் 1996, 2001 ஆகிய இரு சட்டமன்ற தேர்தல்களிலும், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தனித்து அணி அமைத்து தேர்தலை சந்தித்த ம.தி.மு.க., 2006 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக அ.தி.மு.க. உடன் அணி சேர்ந்தது. 35 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க.,  ஆறு தொகுதிகளில் மட்டுமே வென்றது.
2009 நாடாளுமன்ற தேர்தல். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறவில்லை. அதற்கான தேவையும் எழவில்லை. 4 தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டியிட்டது. ஈழப்போர் உச்சத்தில் இருந்த சமயம் என்பதால், காங்கிரஸ், தி.மு.க.வை எதிர்த்து தீவிரமாய் பிரசாரம் செய்தார் வைகோ. அதுவரை விடுதலைப்புலிகளை தீவிரமாய் எதிர்த்த ஜெயலலிதா, அந்த தேர்தலில் ஈழத்தை ஆதரித்து பேசத்துவங்கினார். 'மத்தியில் எங்கள் சொல்படி கேட்கும் அரசு வந்தால் தனி ஈழம் அமைய நான் நடவடிக்கை எடுப்பேன்' என ஜெயலலிதா பேசியது வைகோவுக்கு தெம்பை கொடுத்தது. 

தான் போட்டியிட்ட தொகுதியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார் வைகோ.  ஆனாலும் 4 தொகுதியில் போட்டியிட்ட ம.தி.மு.க.,  ஈரோட்டில் மட்டுமே வென்றது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோவே தோல்வியை தழுவினார்.

'துரோகம் செய்தார் ஜெ'; தேர்தலை புறக்கணித்தார் வைகோ
2011 சட்டமன்ற தேர்தல். 2006 சட்டமன்ற, 2009 நாடாளுமன்ற தேர்தல்களை போல அ.தி.மு.க. கூட்டணியில் தொடரவே விரும்பியது ம.தி.மு.க. அதன்படி அ.தி.மு.க.வுடன் தொகுதி பேச்சுவார்த்தையும் நடந்தது. தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியோடு பேச்சு நடத்திய அ.தி.மு.க., பல ஆண்டுகாலமாய் உடன் இருந்த ம.தி.மு.க.வை விட்டு மற்றவர்களுக்கு இடங்களை ஒதுக்கி கொடுத்தது. கடந்த 2006 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க., அதே இடங்களை எதிர்பார்த்தது.  

குறைந்தபட்சம் 20க்கு மேல் தொகுதி தேவை என எண்ணியிருந்தது. ஆனால் 6, 7 என ஒற்றை இலக்கங்களில்தான் கொடுக்க முடியும் எனச்சொன்ன அ.தி.மு.க., பேச்சுவார்த்தை முடியும் முன்னர், தான் போட்டியிடும் 160 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது ம.தி.மு.க. கடந்த காலங்களில் தனித்து போட்டியிட்டு இழப்புகளை சந்தித்த ம.தி.மு.க.,  இந்த முறை தேர்தலையே புறக்கணித்தது. 'நம்பிக்கை மோசடி செய்து விட்டார். துரோகம் செய்து விட்டார். இது நியாயமா?' என ஜெயலலிதாவை நோக்கி கேள்விகளை எழுப்பினார் வைகோ.

கவிழ்த்து விட்ட மோடி அலை

2014 நாடாளுமன்ற தேர்தல். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ம.தி.மு.க., இந்த முறை என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த நேரம். மோடி ஆதரவு அலை பாரதிய ஜனதாவை நோக்கி ம.தி.மு.க.வை இழுத்தது. நாட்டில் மோடி அலை வீசுவதாக பகிரங்கமாக அறிவித்தார் வைகோ. பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்து நட்பு பாராட்டினார். அதன் மூலம் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பிடித்தார்.  'தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இந்த அணி இருக்கும். காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவால்தான் முடியும்' என வெளிப்படையாக பிரசாரம் செய்தார்.

ம.தி.மு.க.வின் பாரதிய ஜனதா பாசம், மோடி ஆதரவு நிலை ஆகியவை கடும் விமர்சனங்களை உருவாக்கியது. ஆனால் அதைப்பற்றி கவலை கொள்ளாமல், 7 இடங்களில் போட்டியிட்டது ம.தி.மு.க. ஆனால் ஒரு இடங்களில் கூட ம.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. விருதுநகரில் வைகோவும்  தோல்வியை தழுவினார். 

2016...? அடுத்தது யாரோடு?

இப்போது 2016 சட்டமன்ற தேர்தலை ம.தி.மு.க. சந்திக்கப்போகிறது.  தி.மு.க., அ.தி.மு.க.வோடு கூட்டணி இல்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதாவோடும் அணி சேரப்போவதில்லை எனச்சொல்லி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகளோடு அணி சேருவதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது. வைகோவின் இந்த முடிவுதான் கட்சி நிர்வாகிகளை நீண்ட சிந்தனைக்குள்ளாக்கிவிட்டது. “இது தவறான முடிவு. இயக்கத்தை பாதிக்கும்” எனச்சொல்லி அடுத்தடுத்து வெளியேறி வருகிறார்கள் கட்சி நிர்வாகிகள். 

கட்சியை விட்டு வெளியேறியவர்களைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் கருத்து தெரிவித்துவிட்டு பழையபடி ஆர்ப்பாட்டம், ஆவேச பேச்சு என கிளம்பிவிட்டார் வைகோ. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments:

Post a Comment