சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Sept 2015

ஹோட்டல் உணவுகள்... ஒரு அலசல்!

'உணவை வீணாக்கக்கூடாது' என்ற கொள்கையை மிகத்தீவிரமாக கடைபிடிப்பவர்கள் சில ஹோட்டல் முதலாளிகள்தான். தங்களின் ஹோட்டலில் எந்த உணவு மீதமானாலும் குப்பையில் கொட்டாமல் அதை 'ப்ரஷ்' ஆக்கி மீண்டும் சாப்பிடும் டேபிளுக்கு கொண்டுவந்து விடுவார்கள்.

சுத்தம் சோறு போடும் என்பது சொலவடை. ஆனால், சில ஹோட்டல்களில் அசுத்தம்தான் சோறு போடுகிறது. அந்த அளவுக்கு சமையலறை, ஊழியர்கள் என்று எங்கும் அசுத்தம் பரவி இருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் அலட்சியத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் அதுபோன்ற ஹோட்டல்களுக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களாலேதான் அதுபோன்ற ஹோட்டல்கள் பெருகி வருகின்றன.

உணவை வாழை இலையில் வைத்து உண்பது நமது முன்னோர்களின் பழக்கம். அப்படி உண்பவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதாக முன்னோர் நம்பினர். வாழை இலையில் உண்பதால், உணவை சக்தியாக மாற்றும் ஒரு மருதுவமுறையும்கூட. பலகாலமாக பின்பற்றப்பட்டு வந்த அந்தப் பழக்கம் இன்று ஹோட்டல்களில் இல்லை. எல்லாம் பிளாஸ்டிக் மயம். பின் எப்படி ஹோட்டல் உணவு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்?

வீட்டில் மீதமான உணவை குப்பையில் கொட்ட மனமின்றி ப்ரிட்ஜில் வைத்து, தேவையானபோது எடுத்து சூடு பண்ணி சாப்பிட்டு சலித்தவர்கள், ஒரு மாற்றத்திற்காக ஹோட்டல்களுக்கு செல்லும்போது அங்கேயும் அதே டெக்னிக்கைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பற்றி யோசிப்பதே இல்லை.


கல்யாண வீடுகளில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமானால் இருக்கும் உணவுகளில் சில 'ரெடிமேட்' வேலைகள் செய்து நிலைமையை சமாளிப்பதைப்போன்ற சம்பவங்கள், சில ஹோட்டல்களில் அடிக்கடி நடக்கும். எனவே கூட்டமாக செல்வதாக இருந்தால் முன்பே ஆர்டர் செய்துவிடுவது நல்லது.

சில ஹோட்டல்களில் முதலாளியும், ஊழியர்களும் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவை வாடிக்கையாளர் முன்பே உண்பதும் ஒரு குறியீடுதான். அதுகூட புரியாமல் அங்கே தொடர்ந்து செல்பவர்கள் முட்டாள்களாத்தான் இருக்க முடியும்.

ஹோட்டல்களில் உணவு சூடாகவும், சுவையாவும் இருந்தால் மட்டும் போதாது. சுத்தமாகவும், ஆரோக்யமனதாகவும் இருக்கவேண்டியது அவசியம். சுடுநீர் வைப்பதைத் தவிர எல்லாவற்றுக்கும் விதவிதமான பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி நமக்கு விழிப்புணர்வு இல்லை.

ஹோட்டல் நடத்துபவர்கள் மலிவு விலை காய்கறிகளையும், உணவுப்பொருட்களையும் வாங்கி சமைத்து லாபம் பார்க்க ஆசைப்படுவார்கள். அன்றைய தேதியில் மார்க்கெட்டில் எந்தக் காய்கறியின் விலை மலிவாக இருக்கிறதோ அதுதான் 'இன்றைய ஸ்பெஷல்' லிஸ்டில் முதல் இடம் பிடிக்கும்.
அவசியமே இல்லாவிட்டாலும்கூட அடிக்கடி ஹோட்டலுக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்கள், அடிக்கடி மருத்துவமனைக்கும் செல்ல வேண்டி இருக்கும் என்பது கசப்பான உண்மை. சில ஹோட்டல்களின் தரம், அங்கு சாப்பிட வரும் ஆட்களை, விலை கொடுத்து உடல் உபாதைகளை வாங்கும் நிலையை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

எல்லா ஹோட்டல்களும் 'உயர்தர உணவகம்' என்று போர்டு மட்டும் பெரிதாக வைத்துள்ளன. ஆனால், சில ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளில் எந்தத் தரமும் இல்லாத காரணத்தால் 'உயர்தர' என்ற வார்த்தைக்கே மதிப்பில்லாமல் போய்விட்டது.

போட்டிக்கு ஆளில்லாத இடங்களில் இருக்கும் ஹோட்டலுக்கு செல்வது பெரும்பாலும் கொடுமையான அனுபவத்தையே கொடுக்கும். அந்த இடங்களில் அவர்கள் தருவதுதான் உணவு. அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை. இரவு நேர பேருந்துப் பயணங்களில் இது போன்ற ஹோட்டல்களை நாம் பார்க்கலாம்.

உணவே மருந்து என்ற வாழ்க்கை முறையில் வந்தவர்கள் நாம். ஆனால், இன்று ஹோட்டல் உணவை உண்டாலே சீக்கிரம் மருந்துகளுக்கு அடிமை ஆக வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. உணவை பணம் சம்பாதிக்கும் பெரும் வியாபாரமாக பார்க்கும் ஹோட்டல் முதலாளிகளிடம் தொழில் தர்மம், சேவை மனப்பான்மை போன்றவற்றை எதிர்பார்ப்பது அபத்தம்.


முதலாளிகள் தங்களின் ஹோட்டலுக்கு அடிக்கடி வருபவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கவேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டும். பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டு உணவின் தரத்தில் கோட்டைவிடும் ஹோட்டல்களை கண்டுபிடித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோல ஹோட்டலுக்கு சென்று உண்பதில் சிரமங்கள் இருந்தாலும், பணத்துக்காக மட்டுமல்லாமல் ஹோட்டல் நடத்துவதை ஒரு சேவையாக, நேர்மையான தொழிலாக நினைக்கும் முதலாளிகளும் உண்டு. அப்படிப்பட்ட ஹோட்டல்களை தேடிக் கண்டுபிடிப்பது நமது புத்திசாலிதனம் மட்டுமல்ல ஆரோக்கியமும்கூட.


No comments:

Post a Comment