சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jul 2015

முடி உதிரலாம்... உயிர்?

'''ஏம்பா இந்தப் பொண்ணுங்க எல்லாரும் முகமூடிக் கொள்ளைக்காரங்க மாதிரி முகத்தை  மூடிக்கிட்டு வண்டி ஓட்டுறாங்க?' 
''இல்லம்மா... இந்தப் பொண்ணுங்க எல்லாரும் பார்க்க அசிங்கமா இருப்பாங்க... அதான் மத்தவங்க பார்த்துப் பயந்துடக் கூடாதுனு இப்பிடி மூடிக்கினு போறாங்க.''
'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் இடம்பெற்ற கலாய்ப்பு காட்சி இது. கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு முகமூடிக் கொள்ளையனைப்போல், முகத்தில் துப்பட்டாவினால் மூடியபடி, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்கள் ஏராளம். வாகனப் புகை, தூசு படாமல் இருக்க கைகளுக்குப் பாதுகாப்பாக உறை அணிந்துகொண்டு பெண்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
ஹெல்மெட் அணியாததற்கு என்ன காரணம்?  கல்லூரி மாணவிகளிடம் அக்கறையுடன் ஓர் அலசல்!

 
அகல்யா:
''நான்  டூ வீலர் வாங்கின புதுசுல ஹெல்மெட் பயன்படுத்தினேன். அப்பறம் போகப் போக ஹெல்மெட் போட்டாலே கழுத்து வலி. வெயிட் குறைவா இருக்கும் ஹெல்மெட்  வாங்கலாம்னு நிறையக் கடைகளில் தேடினேன். எல்லாமே ஒரே மாதிரிதான் இருந்துச்சு.  அது மட்டும் இல்லாம ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுறப்ப பின்னாடி வர்ற வண்டிகளைத்  திரும்பிப் பார்க்க சிரமமா இருக்கு. நிறைய தடவை கழுத்து வலியால் அவஸ்தைப்பட்டிருக்கேன்.  எடை குறைவான, அதே நேரம் தரமான ஹெல்மெட் கிடைத்தால், காட்டாயம் போடுவேன்.''  
காயத்ரி:
''வீட்ல இருந்து ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டிட்டு கிளாஸ் ரூமுக்குப் போனதும், என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், தூங்கி எழுந்து அப்படியே காலேஜ் வந்துட்டியானு கிண்டல் பண்ணுறாங்க. ஹெல்மெட் போடுறதனால முகம் எல்லாம் வியர்த்துப்போய் ஸ்கின்னே ஒரு மாதிரி ஆயிடுது.  கரும்புள்ளி, பரு தொந்தரவு வேறு. தலை முடி ரொம்பவே கொட்டுது. ஹெல்மெட் போட்டு, பாதுகாப்பாப் போகணும்னுதான் ஆசை.  ஆனா, ஹெல்மெட் போடறதுனால ஏற்படற பாதிப்பு, ரொம்பவே  எரிச்சல்!''  
ஸ்ரீ வித்யா:
''தலையில முடி அதிகமா இருக்கிறதால ஹெல்மெட் போடவே சிரமமா இருக்கு. முடி கொட்டுது.  பூ வைக்க முடியல. தலையை மட்டும் கவர் பண்ணுற மாதிரியான ஹெல்மெட்தான்  பயன்படுத்துறேன். இது பாதுகாப்பு இல்லைன்னு தெரியும். ஆனா, என்ன பண்ணுறது. தலை முழுதும் மூடும் ஹெல்மெட் பயன்படுத்தினால், பின்னால வர்ற வண்டிகளோட ஹாரன் சப்தம் சரியாக் கேட்கமாட்டேங்குது.''
பாதுகாப்பான ஹெல்மெட் தேர்ந்தெடுப்பது எப்படி? 'ஹெட் கியர் ஹெல்மெட்’ கடையின் விற்பனையாளர் திருமதி புஷ்பாவிடம் கேட்டோம்.  
''ஹெல்மெட்களில் பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் என இரண்டு வகைகள். அதில் ஃபைபரில் தயாரிக்கப்படுவதுதான் தரமான, பாதுகாப்பான ஹெல்மெட். சாலை ஓரமாக குறைந்த விலைக்கு விற்கப்படும் ஹெல்மெட்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் வகையாகத்தான் இருக்கும். இதனால், டூ வீலர் ஓட்டுபவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு உத்தரவாதமும் கிடையாது. ஃபைபர் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்களில், ISO சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கும்.
பொதுவாக வாடிக்கையாளர்கள் கூறும் குறை, 'ஹெல்மெட்டில் முன்பக்க முகக் கண்ணாடி  சீக்கிரத்திலேயே உடைந்துவிடுகிறது’ என்பதுதான். அதுபோல் இல்லாமல், இப்போது தரமான ஹெல்மெட்கள் நிறைய கிடைக்கின்றன.
நாளுக்கு நாள் அதிவேகத் திறன்கொண்ட வாகனங்கள் புதிது புதிதாக வருகின்றன.  உயிர்ப் பாதுகாப்பு மிக முக்கியம். ஒருசில சாதாரணப் பிரச்னைகளுக்காக உயிர் என்கிற மகத்தான ஒன்றைப் பற்றி அசட்டையாக இருந்துவிடக் கூடாது.''
ஹெல்மெட் அணிவது குறித்து பொது மருத்துவர் அருள் இப்படிச் சொல்கிறார்.
''ஹெல்மெட் அணிவதைப் பெரும்பாலும் பலர் தவிர்ப்பதற்கு முக்கியமான காரணம் அசௌகரியம்தான். சிலர் யூடர்ன் அடிக்கும்போது பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது என்று தவிர்க்கிறார்கள். சிலர் ஹாரன் சத்தம் சரியாகக் கேட்கவில்லை என்கிறார்கள். முக்கால் சதவிகிதம் பேர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு காரணமே முடி கொட்டிவிடும் என்கிற அழகியல் அச்சம்தான்.
ஹெல்மெட் அணியும்போது, நம் தலை மீது  அழுத்தம் ஏற்பட்டு, வியர்வை அதிகமாக வெளியேறும்.  இதனால் அரிப்பு உண்டாகும். அதிகநேரம் ஹெல்மெட் அணிந்துகொண்டே இருந்தால் 'மிலியரியா’(Miliaria) என்ற சரும நோய் வந்து தலையில் கொப்புளங்கள் உருவாகும். இரண்டாவது பிரச்னை, முடி கொட்டுதல்.
மேலே சொன்ன இரண்டு விளைவுகளும் தற்காலிகமானவைதான். அரிப்போ, கொப்புளங்களோ வந்தால் சரிசெய்துவிடலாம். முடி கொட்டின£ல், திரும்ப வளர்ந்துவிடும். ஆனால், ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்து நேரிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகள் நிரந்தரமானவை, வலி மிகுந்தவை. ஹெல்மெட் அணியாமல் போனால், விபத்து ஏற்பட்டு உடலில் நிரந்தர ஊனத்தையும் தந்துவிடலாம். தற்காலிகப் பிரச்னைகளுக்காக, நிரந்தர வாழ்க்கையையே பறிகொடுப்பது அறிவார்ந்த செயலா என்று சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நல்ல தரமான, நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்களை மட்டுமே வாங்க வேண்டும். தலையின் மேற்பகுதி மட்டும் மூடப்பட்டு கழுத்தில் ஸ்ட்ராப் மாட்டுவதுபோல உள்ள ஹெல்மெட்களைத் தவிர்க்கவும். முகத்திற்குச் சிறிதும் பாதுகாப்பு இல்லாத அதுபோன்ற ஹெல்மெட்களால் ஒரு நன்மையும் இல்லை.
நம் வாழ்க்கையில் நாம் பல்வேறு அசௌகரியங்களை பொறுத்துக்கொள்கிறோம். ஹெல்மெட் அணியும் சின்ன அசௌகரியத்தைப் பொறுத்துக்கொண்டால், பாதுகாப்பாக வண்டி ஓட்டுவது மட்டும் அல்லாமல் உங்களது மேலான, விலை மதிப்பற்ற உயிரைப் பாதுகாத்து வளமாகவும் நலமாகவும் வாழலாம்!'



No comments:

Post a Comment