சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jul 2015

மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா?

மிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையுமெனில், மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இவரின் கருத்துக்கு, ஆதரவும் எதிர்ப்புமாக பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மதுவிலக்கு விஷயத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் இதுவரை கடைபிடித்து வந்த நிலைகள் என்னென்ன? மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதன் பின்னணி எல்லாம் சுவாரஸ்யமான வரலாறு. அதைப்பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுதந்திர இந்தியாவில் 1971-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி துவங்கி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், எம்.பக்தவத்சலம், அண்ணா வரை எந்த முதல்வரும் மதுவிலக்கை ரத்து செய்ய முன்வரவில்லை. மதுவிலக்கை ரத்து செய்யலாம் என பல யோசனைகள் இவர்களுக்கு சொல்லப்பட்ட போதும், அதையெல்லாம் இந்த முதல்வர்கள் மறுத்தார்கள்.

தி.மு.க. 1967-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியபோது, 'அரசின் வருவாயை அதிகரிக்க மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரைத்தனர். மதுவிலக்கை ரத்து செய்தால் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் சொன்ன யோசனையை நிராகரித்த அண்ணா, 'மதுவிற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய், புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்' என்றார்.

இப்படி சுதந்திர இந்தியாவின் முதல்வர்கள் அனைவரும் அடுத்துவரும் தலைமுறையின் எதிர்காலம் கருதி மதுவிலக்கை ரத்து செய்ய மறுத்து வந்த நிலையில், அண்ணாவுக்கு பின்னர் முதல்வரான கருணாநிதி முதன் முதலில் மதுவிலக்கை ரத்து செய்தார்.

1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய தி.மு.க. அரசு மதுவிலக்கை ரத்து செய்து, அவசர சட்டம் கொண்டு வந்தது. அப்படி ஒரு அறிவிப்பு அரசிடமிருந்து வெளியாகிவிடக் கூடாது என கொட்டும் மழையில் கருணாநிதியை தேடிச் சென்ற 80 வயது முதியவர் ராஜாஜியின் கோரிக்கை, அந்த மழையோடு மழையாக கரைந்துபோனது. 

மதுவிலக்கு அமலானதற்கு ஒரு பின்னணி ஒன்று உண்டு. இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாததால், 'மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும்' என அறிவித்தது மத்திய அரசு. 'தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. எங்களுக்கும் மானியம் தர வேண்டும்' என தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்டபோது, தர மறுத்து விட்டது மத்திய அரசு.
'ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது' என மத்திய அரசு அறிவிக்க... 'மதுவிலக்கை அமல்படுத்தியதற்கு இது தண்டனையா?  எனக்கேட்டு, தமிழகத்தில் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுவிலக்கை ரத்து செய்து, அதற்கான அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பிக்கச் செய்தார் கருணாநிதி.

பல ஆண்டு காலம் அமலில் இருந்த மதுவிலக்கு, திடீரென ரத்து செய்யப்பட பெரும் சர்ச்சை வெடித்தது. 'நான் சூடமாக இருக்கிறேன்: என்னைச் சுற்றி நெருப்பு இருக்கிறது; நான் என்ன செய்வது...?' என மற்ற மாநிலங்களில் மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் மட்டும் எப்படி மதுவிலக்கு சாத்தியமாகும்? என கேள்வி எழுப்பி தனது முடிவை நியாயப்படுத்தினார் கருணாநிதி.
அதன் பின்னர் 1974ம் ஆண்டு மதுவிலக்கு மீண்டும் அமலானது. 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, மீண்டும் மதுவிலக்கு ரத்தானது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக டாஸ்மாக் நிறுவனத்தை 1983-ல் துவக்கினார் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு அமலாகி, 1990 முதல் 1991 வரையிலும் மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 

1991ம் ஆண்டு முதல் முறை முதல்வரான ஜெயலலிதா, முதல் கையெழுத்திட்டு மதுவிலக்கை அமலாக்கினார். 2001 வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. 2001ல் இரண்டாவது முறை முதல்வரான ஜெயலலிதா, மீண்டும் மதுவிலக்கை ரத்து செய்தார். மதுவிலக்கை முதல் கையெழுத்திட்டு துவக்கிய ஜெயலலிதா மீண்டும் மதுவிலக்கை ரத்து செய்த போது, அது கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

அப்போது, "மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகுவதால், மதுவிலக்கை தளர்த்த வேண்டிய அவசியமாகிறது," என விளக்கம் கொடுத்தது அரசு. ஆனால் மதுவிலக்கை ரத்து செய்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், 2003ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிறுவனமான டாஸ்மாக், நேரடி மது விற்பனையை துவங்கியது. 

இதன் பின்னர் தான் மது விற்பனை தமிழகத்தில் கணிசமாக அதிகரித்தது. மது அரக்கன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊடுறுவத் துவங்கினான். இந்த 12 ஆண்டுகளில் குடிப்பழக்கம் என்பது வெகுஜன கலாச்சாரத்தின் தவிர்க்கமுடியாத அங்கமாகவும் மாறிவிட்டது. இன்று தேசிய அளவில் அதிக வருவாய் ஈட்டும் பொதுத்துறை நிறுவனம் என்ற அழியாப் பெயர் எடுத்தது தமிழர்களின் குடும்பங்களை அழித்துவரும் 'டாஸ்மாக் நிறுவனம்' 

இந்த சூழலில்தான் தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கத் துவங்கியுள்ளன. குடியால் தன் குடி கெட்டுவிட்டதை உணரத்துவங்கியிருக்கிறான் தமிழன். மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, காந்தியவாதி சசிபெருமாள் போன்றவர்களால் தனிநபர் போராட்டமாக துவங்கிய மதுவிலக்கை நோக்கிய போராட்டங்கள், இப்போது மக்கள் திரள் போராட்டமாக மாறி வருகிறது. 

மதுவால் ஏற்பட்ட சாலை விபத்தால் இறந்தவர்கள் இத்தனை பேர், விதவையானவர்கள் இவ்வளவு பேர், தனித்து விடப்பட்ட பெண்கள் இத்தனை, குற்றச்செயல்கள் அதிகரித்தது இவ்வளவு சதவீதம் என வெளிவந்த ஒவ்வொரு புள்ளி விவரங்களையும் மதுவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தின. 

எல்லா பிரச்னைகளிலும் வெவ்வேறு போக்கை கையாண்டு வரும் அரசியல் கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள், அரசின் மதுவிற்பனைக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க துவங்கியது இப்படித்தான்.

எந்த முதல்வரும் மதுவிலக்கை ரத்து செய்வது குறித்து யோசிக்க கூட மறுத்த காலத்தில், மதுவிலக்கை ரத்து செய்தவரும், தனது ஆட்சிக்காலத் தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கையாண்ட வருமான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மதுவிலக்கு அறிவிப்புதான் இதன் உச்சம்.

மதுவிலக்கு தொடர்பான பா.ம.க வின் உறுதி, தமிழகத்தில் தன்னிச்சை யாக கிளர்ந்தெழும் போராட்டங்கள், பத்திரிக்கைளின் தலையங்கங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவோ அல்லது திமுகவின் எதிர்காலத்தை எண்ணியோ கருணாநிதி இந்த முடிவெடுத்திருக்கலாம். 

எது எப்படியோ மதுவுக்கு எதிரான தமிழகத்தின் உரத்த குரலுக்கு அது வலு சேர்த்திருக்கிறது. தமிழகத்தில் இன்னும் மதுவிலக்கு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசாதது ஒன்றுதான் குறை. அதுவும் விரைவில் நீங்கும் என நம்பிக்கைத் துளிர் லேசாக மனதில் அரும்பியிருக்கிறது. 

மது இல்லாத தமிழகம் விடியட்டும்!

No comments:

Post a Comment