சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jul 2015

'படிப்பு வரலையா கவலை வேண்டாம்... ஆயிரம் துறைகள் காத்திருக்கு!' - நடிகர் சிவக்குமார்

படிப்பு நன்றாக வந்தால் படியுங்கள். வரவில்லையென்றால் கவலைப்படாதீர்கள். ஆயிரம் துறைகள் உங்களுக்காக வாயிற்கதவை திறந்து வைத்து காத்து இருக்கின்றது" என்று மாணவர்களிடையே நடிகர் சிவகுமார் பேசினார்.

மல்லை தமிழ்ச்சங்கம் சார்பாக ஆண்டுதோறும் பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன் விருதுகள் பல்வேறு துறைகளில் சாதித்த தமிழர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிப் பேசினார். 

விழாவில் பெருந்தச்சன் விருது ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுக்கும், மாமல்லன் விருது மதுரை மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவரான எஸ்.எம். மணிக்கும், பெருந்தமிழன் விருது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்க்கும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, “சித்திரசார் புலி என்று அழைக்கப்பட்ட மகேந்திரவர்மனின் பெயரால்தான் விருது வழங்கி இருக்கின்றோம். இந்த மண்ணிற்கும் வீரத்திற்கும் அடையாளமாக இருந்த போதிதர்மன் பிறந்தான். போதிதர்மன் வழிவந்த நரசிம்மவர்மன் தன்னை மாமல்லன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டான். போர்கலையில் சிறந்த மாமல்லர்களை கொண்டுவந்து இந்த பட்டினத்தை பாதுகாத்தான். அந்த மாமல்லன் வாழ்ந்த இடம்தான் மாமல்லபுரம் ஆனது. 

இந்த இயற்கை பூமி பாழ்பட்டுவிடக் கூடாது என்று பாடுபட்டவர் நம்மாழ்வார். இந்த பூமி பாழ்பட்டு விட்டது என்று நினைத்து காலமெல்லாம் கண்ணீர் விட்டார். இந்த விருதுகள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்களுக்கான அடையாளமாக வழங்கப்படுகிறது. இப்பகுதியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழில் முதல் மூன்று இடங்களை பெறும் அரசுப்பள்ளிகளை தேர்வு செய்து பரிசுகளை வழங்கி வருகின்றோம்.” என்றார்.
அடுத்து பேசிய நடிகர் சிவக்குமார், “இங்குள்ள கோவில்களை ஓவியமாக வரைவதற்காக 60 வருடங்களுக்கு முன் மாமல்லபுரத்திற்கு வந்திருந்தேன். இங்குள்ள ஒரு பிராமணர் வீட்டுத் திண்ணையில் இரவில் தங்கினோம். மலைக்குகை, கடற்கரை கோவில் என அனைத்தையும் ஓவியமாக வரைந்திருக்கின்றோம். சைக்கிளிலேயே திருக்கழுக்குன்றம் சென்றிருக்கின்றோம். திருக்கழுக்குன்றம் மலையில் காலையில் கழுகு வரும் என்று சொன்னார்கள். செங்குத்தான மலையில் ஏறி அதற்காக காத்திருந்தோம். ஆனால் கழுகுவரவில்லை. நான் படித்து விளையாடிய நரசிம்ம வர்மருக்கு சொந்தமான இந்த ஊர் எனக்கும் சொந்தமான ஊர்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று 2000 வருடங்களுக்கு முன்பே கனியன் பூங்குன்றனார் பாடினார். 'கல்வியில் சிறந்தவர்களையும், செல்வத்தில் சிறந்தவர்களையும் கடவுளாக மதிக்கவும் மாட்டோம். ஏதும் இல்லாதவனை காலால் எட்டி உதைக்கவும் மாட்டோம்' என்றார். இப்போதுதான் உலகத்தை கூறு போட்டு எல்லைகளை பிரித்துவிட்டார்கள்.
உடம்பை பேணுங்கள் அதுதான் முக்கியமானது. 90 வயதுவரை யோகாசனம் செய்யலாம். பாடிபில்டிங் செய்து 80 வயதிற்கு மேற்பட்டு வாழ்ந்தவர்கள் குறைவு. ஆரோக்கியம் என்பது உடல் உறுப்புக்களை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கின்றோம் என்பதுதான். நான் காபி குடித்து 57 வருடங்கள் ஆகின்றது. படிப்பு நன்றாக வந்தால் படியுங்கள். படிப்பு வரவில்லையென்றால் கவலைப்படாதீர்கள். ஆயிரம் துறைகள் உங்களுக்காக வாயிற்கதவை திறந்து வைத்து காத்து இருக்கின்றது. 

மகாத்மா காந்தியின் மெட்ரிகுலேஷன் மார்க் 27 சதவீதம்தான், டெண்டுல்கர் பத்தாவது ஃபெயில், காமராஜர் 6 வது வகுப்புதான்… எம்.ஜி.ஆர் 4-ம் வகுப்புதான்… குழந்தைகளே உங்களுக்குள் நிறைய திறமைகள் இருக்கின்றது. மனனம் செய்வது மட்டுமே வாழ்க்கை என்று நினைக்காதீர்கள்” என்றார் பலத்த கைதட்டல்களுக்கிடையே.


No comments:

Post a Comment