சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jul 2015

'மரணக் கடைகள்' என நிரூபித்துள்ள 'மதுபானக் கடைகள்'!

லகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக போராடி வரும்   நிலையில், மாநிலச் சாலைகளே மரண தண்டனை கொடுக்கும் இடமாக மாறி மக்களின் அன்றாட வாழ்வில் 108 அவசர வண்டியின் சத்தம் கேட்காத நாளில்லை என்று சொல்லும் அளவிற்கு விபத்தின் எண்ணிக்கையும், மரணச் செய்தியும் பல குடும்பங்களை அழித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள 53 பெநகரங்களில் சாலை விபத்தில் முதலிடமாக, டெல்லி 2199 பேரும், இரண்டாமிடமாக சென்னையில் 1046 பேரும் விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 5.3% பள்ளி, கல்லூரிகள் அருகில் நிகழ்ந்துள்ளன.  சிங்காரச் சென்னை 'சீக்கிரம் சாவைக் கொடுக்கும்' சென்னையாக, போதையில் உயிர் எடுக்கும் இடமாக மாறி விட்டது. பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்பவர்கள் பாடப்புத்தகம் சுமப்பதற்கு பதில், 'பாட்டில் சரக்குகள்' சுமக்கும் அவல நிலைக்கு தமிழகம் மாறி வருகிறது.


இந்தியாவில், மக்கள் தொகையில் முதலிடம் பெற்று 20 கோடி பேர் உள்ள உ.பி. சாலை விபத்தில் முதலிடமாக உள்ளது. மக்கள் தொகையில் 7வது இடத்தில் 7.2 கோடி பேர் உள்ள தமிழகம் சாலை விபத்தில் இரண்டாமிடமாகவும், மூன்றாமிடமாக மகாராஷ்டிராவும் உள்ளது. மக்கள் தொகை மற்றும் சாலை விபத்திற்கும் விகித அடிப்படையில் பார்த்தால் தமிழகமே விபத்தில் முதலிடம் பெறுகிறது. சென்ற வருடம் உத்திர பிரதேசத்தில் 16,000 பேரும், தமிழகத்தில் 15,000 பேரும்  சாலை விபத்தில் இறந்து போயுள்ளனர்.  உ.பி., தமிழகம் இரண்டு மாநிலங்களிலுமே சாராய விற்பனையும் அதிகம் என்ற உண்மையும் நமக்கு விபத்தின் காரணத்தை அறிய வைக்கிறது.


மது குடிப்பவரின் உயிர் மதுவால் அழிவதோடு, மது அருந்தி வாகனம் ஒட்டுபவரால் எதிரே வரும் அப்பாவியின் உயிரும் பறி போகிறது.    இந்தியாவில் 25% மரண விபத்துக்கள் மதுவால் ஏற்படுகிறது,  புற நகரில் நடக்கும் 99% விபத்திற்கு மதுவே காரணம் என்ற  உண்மைச் செய்தியை தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை  (NCRB) தெரிவிக்கின்றது. விபத்துக்கு முதல் காரணம் அதிவேகம், இரண்டாவது முக்கிய காரணம் முந்திச் செல்லுதல், மூன்றாவது காரணம் மது.  மரண விபத்திற்கு காரணமான மூன்றாமிடத்தில் இருக்கும் மது முதலிடம் வரப்போகிறது என்ற செய்தி அபார வளர்ச்சியில் உள்ள டாஸ்மாக் விற்பனை மூலம் விரைவில் அறிந்து கொள்ள முடியும்.

ஆண்டுக்காண்டு பெருகி வரும் விபத்துக்களில் தமிழகம் இரண்டாமிடம் பெறும் நிலையில் டாஸ்மாக் விற்பனை ரூ.50,000 கோடிகள் என நிர்ணயிக்கப்பட்டு தமிழன் உயிருக்கு 'விலை' வைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சரக்கு சில்லறை விற்பனை ஆரம்பிக்கப்பட்ட 29.11.2003 முதல் கடந்த பத்து வருடங்களாகவே  தமிழகம் சாலை விபத்தில் முதலிடம் பெற்று சாவிலும் டாஸ்மாக் சாதனைகள் தொடர்கிறது. ஆயத் தீர்வை, டாஸ்மாக் மது விற்பனை  மூலம் அரசுக்கு 2003-04ல் கிடைத்த வருவாய் ரூ.3639 கோடிகள். 2012-13ல் கிடைத்த வருவாய் ரூ.21,680 கோடிகள். சுமார் 500 மடங்கு வளர்ச்சி பெற்று தமிழர்களின் வாழ்வை அழித்து வருகிறது.

2008ஆம் ஆண்டு முதல் 2012 வரை மரணத்தை ஏற்படுத்திய சாலை விபத்துக்களில் குடிபோதையில் வாகனம் ஒட்டியவர்கள் 52,000 பேர். இவர்களில் வெறும் 700 பேரது ஓட்டுனர் உரிமம்  நிரந்தரமாக  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவர்களால் செத்துப்போன உயிர்கள் பல ஆயிரம், அரசுக்கு இழப்பீடு பல கோடிகள் என்பது   நீதிமன்றம் மறுக்க முடியாத உண்மை.

மது அருந்தி விட்டு மந்திரியை பார்க்க கூடாது, காவல் நிலையம் செல்ல முடியாது, அரசு அலுவலகம் செல்லக் கூடாது. ஆனால், பொதுமக்கள் லட்சம் பேர் வந்து செல்லும் சாலையில் தறி கேட்டு வண்டி ஓட்டலாம். ஒரு தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் மரியாதை சாலையில் வந்து செல்லும் நடுத்தர மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.

டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடாத நீதிமன்றம் நம் தலையை ஹெல்மெட்டால் மூடச் சொல்லி சட்டம் போடுகிறது.  நாம் என்னதான் நீதி அரசர் சொன்ன தலைக்கவசம் அணிந்து, நீதி அரசர் இனிமேல் சொல்லப்போகும் கால் மூட்டு கவசம், கிட்னி பாதுகாப்பு கவசம் என கிரிக்கெட் வீரர் போல அனைத்து கவச  குண்டலங்களையும் அணிந்து நல்ல முறையில் வீடு திரும்ப இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு சாலையில் வண்டி ஓட்டினாலும், மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் போதையில் எதிரே வந்தால், நம் உயிர் நல்ல முறையில் இருப்பது டாஸ்மாக் போதை ஆசாமியின் கையில் தானே உள்ளது.

இரு சக்கர வாகனத்தின் முன்னே சிலர் ஸ்டிக்கரில் முருகன் துணை, ஆதி சிவன் துணை, பெருமாள் துணை என ஒட்டியிருப்பார்கள். குடிகார தமிழனோ, 'டாஸ்மாக் சரக்கே துணை' என்று எழுதும் அளவிற்கு குடித்து விட்டு குலை நடுங்க வைக்கும் அளவிற்கு நடக்கும் பைக் ரேசும், அசுர வேக ஆட்டோவும், எமனின் எருமை வாகன வடிவாக வரும் லாரியும், வீடு திரும்பும் வரை நிம்மதியில்லை என்று சொல்லும் அளவிற்கு குடிகார வாகன ஓட்டிகளின் ஆதிக்கம்  அதிகரித்துள்ளது.

2010 முதல் 2012 வரை மரணத்தை ஏற்படுத்திய 29,000 வழக்குகளில் வெறும் 250 பேரது ஓட்டுனர் உரிமம் மட்டுமே நீதிமன்றத்தால் நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் டாஸ்மாக் மது விற்பனையாகும் நிலையில், 226 பேர் மட்டுமே குடித்து விட்டு விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக பறிமுதல் செய்து தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பது, மது அருந்தி வாகனம் ஓட்டினால் சட்டம் எந்த அளவிற்கு 'கடுமையான' அளவில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

மது அருந்தி வண்டி ஒட்டிய கே.பி.என். வண்டி ஓட்டுனரை சக பயணிகள் போலீசாரிடம் ஒப்படைத்தும் அவரது ஓட்டுனர் உரிமம், தண்டனை என்னவானது என்பது போலீசாரின் 'கடமை' உணர்வை  காண்பித்து விட்டது.

டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பும், வாகன விபத்தின் அதிகரிப்பும்  ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே தெரிகிறது. டாஸ்மாக் குடியால் ஏற்பட்ட கடனும், அதனால் தற்கொலையும் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் சர்க்கரை நோய், கோடீஸ்வர யோகம் பெற்ற மருத்துவமனைகள், கொலை, கொள்ளைகளில் டாஸ்மாக் சரக்கின் பங்கு 100% என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இந்தியாவில் 70% விபத்துக்கள் குடி போதை ஆசாமிகளால் ஏற்படுகிறது என்ற புள்ளி விபரம் மதுக்கடைகள் 'மரணக் கடைகள்' என்பதை நிருபித்து வருகின்றன. தெருவெங்கும் குடிகார கடைகளைத் திறந்து வைத்து விட்டு, 'குடி குடியைக் கெடுக்கும்' என்று விளம்பரம் செய்வதும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில்   போதையில் வண்டி ஒட்டி வரும் குடிபோதை ஆசாமியிடம் தப்பிக்க ஹெல்மெட் அணியச் சொல்வதும், நம் உயிர் குடிகார ஆசாமியின் கையில் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது .

நீதிமன்றம் என்ன செய்யலாம்...

1. டாஸ்மாக் கடையின் அருகில் வாகனம் நிறுத்த தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் குடிபோதை ஆசாமிகளின் வாகனம் ஓட்டும் எண்ணிக்கை குறையும். குடிபோதையில் வண்டி ஓட்டினால் அபராதத்தை 50 ஆயிரமாக உயர்த்தலாம். மேலும் வண்டியை பறிமுதல் செய்து ஒரு வருடம் நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கலாம்.

2. இரவில் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுவதால் இரவில் மதுக்கடைகளை மூடலாம். மாலை 6 மணிக்கு மேல் ஷேர் ஆடோக்கள் இயங்க தடை விதிக்கலாம்.

3. டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் கட்டாய விடுப்பு கொடுக்கலாம்.

4. வண்டியின் வேகம் 50 கி.மீ.க்கு மேல் செல்ல முடியாதபடி வாகனத்தை வடிவமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.  வேகத்தை குறைக்கச் சொல்லும் சட்டம்  அதிவேகம் கொண்ட வாகனத்தை வடிவமைக்கும் நிறுவனத்திற்கு தடை விதிக்கலாமே?

5. பெருகி வரும் வாகன எண்ணிக்கையை முறைப்படுத்தியும், சாலையின் ஓரமாக அரசுப்பேருந்து நிறுத்தும் வகையில் இட வசதியும் ஏற்படுத்த வேண்டும்.

மதுவால் பல குடும்பங்கள் கடன் பட்டு, நோய்வாய்ப்பட்டு  காணாமல்  போய் விட்டன. நீதிமன்றம் மதுவை ஒழிக்க முடியாத நிலையில்    குடிக்காத அப்பாவிகளின் உயிரைக்கொல்லும் போதை வாகனம் ஓட்டுனர்களிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

டாஸ்மாக் சரக்கு, குடிப்பவருக்கு மட்டுமல்ல குடிக்காத அப்பாவிகளுக்கும் எதிரி தான் என்பது விபத்துக்கள் சொல்லும் உண்மை. 



No comments:

Post a Comment