சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jul 2015

மரணத்தண்டனை...மாற்றம் வருமா?

லகில் பல்வேறு காலங்களில் குற்றச் செயல்களுக்கு பல்வேறு விதமாக மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தவறான கணிப்பால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவலன் மரண தண்டனைக்கு ஆளானதும், மரண தண்டனையால் மதுரை எரிந்ததும் சிலப்பதிகாரம் சொல்லும் கதை.

நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய மருது சகோதரர்களும், வீரபாண்டிய கட்டபொம்மனும் தூக்கிலிடப்பட்ட பின், 1883 முதல் 1943 வரை பிரிட்டிஷ் அரசால் சுமார் 121 பேர் தூக்கில் ஏற்றப்பட்டனர். இவர்களில் பகத் சிங், ராஜ்குரு, உத்தம் சிங்க் போன்றோரும் அடக்கம். திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரம், பாரதியார், சுப்ரமணிய சிவா (இன்னும் பலர்) போன்றோர் மரண தண்டனைக்கு நிகரான கொடுமையான தண்டனை அனுபவித்தவர்கள். அன்று விடுதலைக்காக தூக்கில் ஏற்றப்பட்ட பலரால், இன்று நிம்மதியாக நாம் உறங்கி வருகிறோம். நம் நிம்மதியை குலைக்கும் தீவிரவாதிகள் தூக்கில் ஏற்றப்பட்டால் மட்டுமே அந்த நிம்மதி தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


இந்தியா உறங்கினாலும் குண்டுச் சத்தம் உறங்காது என்ற அளவிற்கு இந்தியாவில் இதுவரை 11 மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய 4வது ராணுவ பலம் கொண்ட நாடு இந்தியா. ஆனால், தீவிரவாத தாக்குதலால் இறந்து போனவர்களில் உலகில் 6வது இடத்தில் இந்தியா உள்ளது.   உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி தேர்தல் நடத்தும் நாடும் நம் நாடுதான். அதேவேளையில் தீவிரவாதிகளின் கொடூர முகம் தெரிவதும் இந்தியாவில்தான். ஒரு தீவிரவாதியால் அப்பாவி பொதுமக்கள் 100 பேரை ஒரு நிமிடத்தில் கொல்ல முடிகிறது. ஆனால், ஒரு தீவிரவாதியை 10  வருடங்கள் கழித்தும் தூக்கில்போட அரசியல் கட்சிகளும், சட்டமும்  திணறுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் மரண தண்டனையை தடை செய்த போதிலும், மரணத் தண்டனை வழங்கும் 58 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மும்பையில் 1993ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில்  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாகூப் அப்துல் ரசாக் மேமன் வாழ்நாளின் கடைசி நாள், வரும் ஜூலை 30 எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனைக் கொடியது என்றாலும், மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் செய்த கொடூர குற்றங்கள் அதை விட கொடுமையானதாகத் தெரிகிறது. சுமார் 253 பேர் படுகொலையும், 700 பேர் படுகாயமும், பல கோடிக்கணக்கான பொருள் இழப்பும், சமூக மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பும் கோடிக்கணக்கான முறை தூக்கில் இட்டாலும் மீண்டும் கிடைக்காது. குண்டு வெடிப்பில் இறந்து போனவர்கள் குடும்பங்கள் கடந்த 22 வருடமாக நிம்மதி இழந்து நிற்க, குற்றவாளி 22 வருடங்கள் நிம்மதியாக இருப்பது சட்டத்தை சிறுமைப்படுத்துவதோடு, இந்திய அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு, 22 உலக நாடுகளில் மரண தண்டனை  சுமார் 778 பேருக்கும், 2014ல் 607 பேருக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது.  உலகில் 98 நாடுகள் மரண தண்டனையை கை விட்டுள்ளது. இந்தியாவில் 2013ல் 72 பேருக்கும், 2014ல் 64 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, சாவை எதிர் நோக்கி வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில், 2001 நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு மற்றும் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் ஆகிய 2 பேர் மட்டுமே தூக்கில் போடப்பட்டுள்ளனர்.

நாம் எப்போதுமே வன்முறையை விரும்பாதவர்கள். பிறப்பால் இந்தியர்கள் அனைவரும் சாதுவான எண்ணம் கொண்டவர்கள்.  மன்னிக்கும் குணமும், தவறை மறக்கும் குணமும் கொண்டவர்கள். இன்றைக்கு உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு வகையான  கலவரம் வெடித்து அந்த நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் நிலையில், ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பல்வேறு மொழி, இனம், மதம் வாழும் மக்கள் மூலம் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகள் மக்களின் சகிப்புத் தன்மையால் அமைதி ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை மலர்கிறது.

நம்மை விடச் சிறிய நாடுகள் எல்லாம் வன்முறையாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், நாம் சுதந்திரமாக இருக்கின்றோம் என்றால் நம் மக்களின் அன்பும், தெய்வ பக்தியுமே காரணம். உலகில் நடக்கும் மொத்த தீவிரவாத தாக்குதல்களில்  82% பேர் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நைஜீரியா, சிரியா போன்ற 5   நாடுகளில் மட்டுமே இறந்து போகின்றனர் என்றால், அந்த சிறிய நாடுகளில் எந்த அளவிற்கு தீவிரவாதம் பரவி இருக்கிறது என்பது புரியும்.

புத்தகம் சுமக்க வேண்டிய பள்ளிக் குழந்தைகள் கையில், கண் இமைக்கும் நேரத்தில் பலரையும் சுட்டுத் தள்ளும் துப்பாக்கி கொடுத்து வன்முறை உணர்வை வளர்க்கும் கொடூர எண்ணம் கொண்ட தீவிரவாதிகள் இருக்கும் நாடுகள் இவைகள். அப்பாவி பள்ளிக் குழந்தையைக் கூட  விட்டு வைக்காத பாகிஸ்தான் தீவிரவாதிகள், பள்ளியில் நடத்திய துப்பாக்கிச் சூடு,  தீவிரவாதிகளின் கோழைத்தனத்தையும், ரத்த வெறி பிடித்து அலையும் மிருக குணத்தையும் உலகம் மறக்க முடியாதபடி செய்து விட்டன.

கடந்த 2012, 2013ல் மட்டும் உலகெங்கிலும் சுமார் 17,958 பேர் தீவிரவாத தாக்குதல்களால் உயிர் இழந்துள்ளனர் என்று சர்வதேச தீவிரவாத குற்றப்புலனாய்வு குறியீட்டு அறிக்கைகள் (Global Terrorism Index-GTI) தெரிவிக்கின்றன. 2014ஆம் ஆண்டு அறிக்கையின்படி உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தலில்   இந்தியாவிற்கு 6வது இடம் என்ற அதிர்ச்சித் தகவல் மரண தண்டனையின் அவசியத்தை நிலை நிறுத்துகிறது.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் ஹமாஸ், ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா, டெஹ்ரி தலிபான், அல்ஷபாப், போகோ ஹரம் போன்ற அமைப்புகள் மக்களை பயமுறுத்தி வரும் நிலையில், மாவோயிஸ்ட், போடோ தீவிரவாத இயக்கம், ஹிஸ்புல் முஹாதீன், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்கள் இந்தியாவின் வளர்ச்சியை முடக்கி வருகின்றன.

தீவிரவாதத்தால் எந்த நாட்டிலும் மக்களிடம் அமைதியோ, ஆட்சி  மாற்றமோ ஏற்பட்டதில்லை. தீவிரவாதிகள் தாங்கள் ஏழைகளுக்காக, மதம், நாட்டிற்காக போராடுவதாக சொல்வதற்கும் இவர்களால் கொல்லப்படும் அப்பாவிகளுக்கும் எந்த விடையும் இவர்களால் தர முடியாது.

எங்கோ ஒரு தீவிரவாதி வெடிகுண்டு வைக்க, இங்குள்ள மக்கள் ஒற்றுமை இழந்து மத ரீதியில் அடித்துக்கொண்டு சாக வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் முதல் நோக்கம். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரப் பின்னடைவும், இயல்பு வாழ்வு பாதிக்கப்படுவதையுமே தீவிரவாதிகள் விரும்புகின்றனர். இப்படி நம்மையே அழிக்கப் பார்க்கும் ஒருவனுக்கு நாம் ஏன்  இரக்கப்பட வேண்டும்? நாம் சண்டை போட்டுக்கொண்டு மோதிக்கொள்வதை வேடிக்கை பார்ப்பவனை நம் வரிப்பணத்தில் சாப்பாடும், பிரியாணியும் போட்டு தூங்க வைப்பதா நம் கடமை?

யாகூப் அப்துல் ரசாக் மேமனை தூக்கிலிடுவதோடு தீவிரவாதம் முடிவதில்லை. தீவிரவாதிகளை சீக்கிரமாக தூக்கில் ஏற்றுவதும் பயங்கரவாதத்தின் மூளையான தாவூத் இப்ராஹிமை தூக்கில் ஏற்றுவதுமே, தூக்கு கயிறுக்கு கொடுக்கும் உண்மையான கூலி.

எந்த ஒரு மத ரீதியில் செயல்படும் தீவிரவாதிக்கும் மரண தண்டனை கொடுப்பது, மக்களுக்கு அரசு செய்யும் நல்ல காரியமாகத்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பயங்கரவாதிகள் உயிரை மட்டும் பறிக்கவில்லை, மதம் மறந்து அன்பாக வாழும் சமூக உறவையும் அழித்து விடுகிறார்கள். சமூக நல்வாழ்வை மதம் என்ற பெயரில் ஒரு மனித உருவில் பிறந்த மிருகம் வேட்டையாடும்போது, அதை வேடிக்கை  பார்க்காமல் தூக்கில் இடுவதால் இந்த நாட்டில் உள்ள 121 கோடி பேர் வாழ்வும் பாதுகாக்கப்படும் என்பதே உண்மை. அதை காலம் தவறாமல் வேகமாகச் செய்வதே நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது.

கடுமையான குற்றங்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்க   வேண்டும்?

1. இவ்வளவு கடுமையான தண்டனை இருந்துமே குற்ற விகிதம் குறையாத போது மரண தண்டனை இல்லையென்றால்? கடந்த 2010 ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி  முஸ்கான், சிறுவன் ரித்திக் ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். அவரை எந்த மனிதர் மன்னிப்பார்?

2. ஒரு பெண்ணை பத்து பேர் சேர்ந்து பேருந்தில் பலாத்காரம் செய்து கொன்று விட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியும் கொடுப்பார்கள்,  ஆயுளுக்கும் சாப்பாடு போடுவார்கள் என்றால் நாட்டில் பெண்களின் நிலை?

3. மன்னிக்க முடியாத குற்றம் புரிபவர்களுக்கு சட்டம்  மன்னிப்பும், வாழ்வதற்கு தகுதியும் வழங்காது என நிரூபிக்க மரண தண்டனை வேண்டும். சட்டத்தைப் பார்த்து பயந்தாவது குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

4. தீவிரவாதியால் போன உயிர் திரும்பவும் வராதுதான். அதற்காக உயிர்கள் தொடர்ந்து பறி போவதை நிறுத்த மரண தண்டனையே தீர்வு.

5. மரணத் தண்டனை மூலம் மீண்டும் குற்றம் புரிய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை மக்களிடம் பிறக்கும்.

தூக்கு கயிறு உள்ள வரை மட்டுமே நாம் நிம்மதியாக தூங்க முடியும் என்பதை உலகில் முன்னேறிய நாடுகள் சொல்லும் உண்மை. தற்போதுள்ள சூழலில், கடுமையான தண்டனை கொடுப்பது மட்டுமே இந்தியாவில் தீவிரவாதமும், உள்ளூரில் சட்டம் ஒழுங்கும் பாதுகாக்க வழி செய்யும்.
தீவிரவாதத்திற்கு மட்டுமே தூக்கு என்றில்லாமல், தீவிரவாத செயலுக்கு இணையான நாட்டை அழிவுப்பாதையில்   அழைத்துச் செல்லும், நாட்டை கொள்ளை அடிக்கும் கும்பலுக்கும் தூக்கு கொடுக்க சட்ட சீர்திருத்தம் தேவை.   


No comments:

Post a Comment