சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Feb 2015

''முறத்துல புடைக்க தெரிஞ்சாத்தான் பொண்ணு கட்டுவாங்க...!'

நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் 'மொறத்தை' தான் தென் மாவட்டங்களில் 'சொளவு' என்று அழைத்து வருகிறார்கள். வீடுகளுக்கு நவீன பொருட்கள் நிறைய வந்துவிட்டாலும் முறத்துக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் பெண்களுக்கு மொறத்தோடு நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்த முறத்தை பற்றி விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்த பஞ்சர்வணத்திடம் பேசினோம். முறத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் அதை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது வரை அழகாக எடுத்துச் சொன்னார் பஞ்சவர்ணம்.

"சொளவு பார்ப்பதற்கு முக்கோண வடித்துல இருக்கும். நெல், பயறு, சோளம், கேப்பை, சிறுதானியங்கள்னு எதுவானாலும் போட்டுப் புடைக்கலாம். சொளவின் அடிப்பக்கத்த ரெண்டு புறமும் பிடிச்சுக்கிட்டு நடுவுல தானியத்தைப் போட்டு சொளவை தூக்கிப் பிடிக்கணும்.

சொளவை மேல தூக்கும்போது கட்டைவிரல் தவிர மற்ற நாலு விரலையும் விட்டுப் பிடிக்கணும். சொளவு மேலபோயிட்டு வர்றதுனால தானியங்களும், இதோடு கலந்திருக்குற கல், குச்சிகள், தேவையற்ற கழிவுகள் ஒருபக்கமும், தானியம் ஒரு பக்கமும் தனித்தனியாப் பிரிஞ்சுடும். நாலஞ்சு தடவ தூக்கிப் பொடச்சதும் தானியத்தைப் பரசிப் பாத்தாலே உமி, சின்னச்சின்ன கற்கள், தூசுகள் தனித்தனியாத் தெரியும். உடனே பொறுக்கி எடுத்திடணும்.


வீட்டுல உலையை வெச்சுட்டு பொறுமையா பக்கத்து வீடுகளில் கதை பேசிக்கிட்டே அரிசி பொடைப்போம். பொடைச்சு முடிக்குறதுக்குள்ள தண்ணி கொதி வந்துடும். அப்புறம் அரிசியை போட்டு கொஞ்ச நேரத்துல வெந்துடும். அயலாரோட பேசுன மாதிரியும் இருக்கும். வேலையும் செஞ்ச மாதிரி இருக்கும்.

எனக்கு அறுபது வயசு ஆகுது. கல்யாணமாகி புருஷன் வீட்டுல காலெடுத்து வெச்ச அடுத்தநாளே, என் மாமியார் சொளவைக் கொடுத்து பொடைக்க கொடுத்திட்டாங்க. கிராமத்துல ஒரு பொண்ணு துணி துவைக்கிறது, வீட்டு வேலை செய்யுறது, பாத்திரம் தேய்க்குறது, வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுறது இதையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கணும். அதேமாதிரி சொளவுல பொடைக்கத் தெரிஞ்சுருக்குறதும் ரொம்ப முக்கியம்.

முன்பெல்லாம் முறை மாப்பிளைகளுக்கும், பக்கத்து கிராமங்கள்ல உள்ளவங்களுக்கும்தான் பொண்ணுகள கல்யாணம் செஞ்சு கொடுப்பாங்க. வீட்டு வேலைகளோட, தானியங்கள அறுவடை செய்யுற வேலைகளும் இருக்கும். ஒரே நாளில் ஒரு மூட்டையை பொடைச்சு முடிக்கிற பொண்ணாத்தான் பார்த்துக் கட்டிக்குவாக. பொண்ணு கறுப்பா சிவப்பான்னு பாக்குறதவிட பொண்ணு பாக்க வரும்போது, பொண்ணுக்கு பொடைக்கத் தெரியுமான்னுதான், அந்தகாலத்து மாமியார்களோட முதல்கேள்வியா இருக்கும். பொடைக்கத் தெரிஞ்சாத்தான் அந்தப் பொண்ணைக் கட்டுவாக.

இந்த சொளவை ஒரு தடவ வாங்கிட்டா, பத்து வருஷம் வரை உழைக்கும். ஆனா அடிக்கடி சொளவைக் கவுத்தி போட்டு மாட்டுச்சாணம் தேய்க்கணும். அப்பத்தான் சொலவுல ஓட்டை விழாமல் இருக்கும். இப்போ கிராமத்துல கூட சொளவுக்குப் பெயிண்ட் அடிக்கற கலாசாரம் வந்துடுச்சு.
தானியங்களைப் பொடைக்க மட்டுமில்லாம, கீரைகளை சொளவுல மொத்தமா போட்டு உருவுறது, மீனைக் கருவாடு போடுறதுது, ஆட்டுக்கறியை உப்புக்கண்டம் போடுறதுன்னு பல வேலைகள செய்வோம். இதேமாதிரி தீபாவளி நேரத்துல பலகாரங்களை சுட்டு அடுக்கி வைப்போம். அறுவடை சமயத்துல தூசுகள விரட்டியடிக்கவும் பயன்படுத்துவோம்.

இந்த நாகரிக காலத்துல சொளவை பிளாஸ்டிக்ல செஞ்சு பாத்திரக்கடைகள்ல விக்குறாங்க. ஆனா பிளாஸ்டிக் சொளவை விட மூங்கில் பட்டைச் சொளவுதான் சிறந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த சொளவ, இப்போ உள்ள பொண்ணுகளுக்கு எப்படி பிடிக்கணும்னு தெரியுமா? அத பிடிச்சிக்கிட்டு எப்படி பொடைக்கணும்னு தெரியுமா?" என்று கேட்டார்.

நாம் விழிபிதுங்கி நின்றோம். நவீன கருவிகளின் வரவால் நாம் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த அம்மி, உரல், குழவிக்கல்லை எல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதேமாதிரி சொளவும்(முறம்) அரிதாகி விடுமோ என்று எண்ணிகொண்டே வந்தோம்.



No comments:

Post a Comment