சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Feb 2015

பட்ஜெட் 2015

வருமான வரி வரம்பு உயர்த்தப்படுமா?
இந்த வாரக் கடைசியில் தாக்கல் ஆகவிருக்கிறது மத்திய பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் மக்களும் தொழில் துறையினரும் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து கடந்த வார இதழ்களில் விரிவாக பேட்டி கண்டு எழுதி இருந்தோம். நிதித் துறை சார்ந்தவர்கள், எதிர்வரும் இந்த பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த இதழில் பார்ப்போம்.
சேமிப்பை உயர்த்த..!
இந்தியர்களின் சேமிப்பு, 2007-08-ம் ஆண்டில் நாட்டின் ஜிடிபியில் 36.8 சதவிகிதமாக இருந்தது. இது 2013-14ல் 30.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் நிதித் திட்டங்களில் செய்யப்படும் முதலீடு 11.6 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
நாட்டு மக்களின் சேமிப்பு அளவு குறைந்திருப்பது கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. இதனைச் சரிசெய்யும் விதத்தில் வரும் பிப்ரவரி 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு அதிக வரிச் சலுகை அளிக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை வரி வரம்பு அதிகரிப்பு!
இடைக்கால பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டு ரூ.2.5 லட்சமானது. புதிய நேரடி வரி விதிப்பில் (டிடிசி) நாடாளுமன்ற நிலைக்குழு, அடிப்படை வருமான வரி விலக்கை ரூ.3 லட்சமாக அதிகரிக்கப் பரிந்துரை செய்திருந்தது. அது இந்த பட்ஜெட்டில் அமல்படுத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.
ஐசிஐசிஐ புரூ.மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஒ நிமேஷ் ஷா பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து கூறும்போது, ''பட்ஜெட் எதிர்பார்ப்புகளால் 2015 ஜனவரியில் மட்டுமே சென்செக்ஸ் 2000 புள்ளி களுக்குமேல் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 4,500 கோடி டாலர் மிச்சமாகிறது. இதனை உற்பத்தி பணிகளுக்குப் பயன்படுத்தும்பட்சத்தில் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மேம்படும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக விரிவாக்கப் பணிகளுக்காக மத்திய அரசு செலவிடுவது தேக்கநிலையிலே இருக்கிறது. விரிவாக்கம் நடக்கும்பட்சத் தில் தனியார் துறையும் வளர்ச்சி காணும்.
குறிப்பாக, சாலைகள் அமைத்தால், வீடு வசதி போன்றவற்றுக்கு அரசு அதிகம் செலவிடும்போது, சிமென்ட், பெயின்ட் மற்றும் மூலப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும்.
இதனால் தனியார் நிறுவனங்கள் லாபம் அடையும். கடன் வளர்ச்சியால் வங்கிகளின் செயல்பாடும் மேம்படும்' என்றவர், பங்கு விலக்கல் குறித்து அடுத்து பேசினார்.
''பொதுத்துறை நிறுவனப் பங்குகளுக்கு அதிகத் தேவை இருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும்விதமாக, பல அரசு நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல நிறுவனப் பங்குகளைத் தங்களின் போர்ட் ஃபோலியோவில் சேர்க்க உதவும். பங்கு விலக்கல் குறித்த விரிவான அறிவிப்பை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவின் மறைமுக வரி விதிப்பில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இது 2016 ஏப்ரலுக்குமுன் அமலுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது மத்திய, மாநில அரசுகளின் பல வரிகள் ஒன்றாக்கப்பட்டு ஒற்றை வரியாக இருக்கும்.
இதன் மூலம் இரட்டை வரி தவிர்க்கப்படுவதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். இந்த மாற்றங்கள் எல்லாம் நடைமுறைக்கு வரும் விதமாக பட்ஜெட் அமைந்தால், அது நீண்ட காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு நன்மையாக அமையும்' என்றார்.
கேபிஎம்ஜி நிறுவனத்தைச் சேர்ந்த வரி நிபுணர் பரிசாத் சிர்வலா, ''முதலீட்டுக் கோணத்தில் பார்த்தால் வரும் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆம் ஆத்மிக்கு அதிகச் சலுகைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 ஜூலையில் 80சின் கீழ் முதலீடு வரம்பு ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.
இந்த 80-சின் கீழ் பிஎஃப், பிபிஎஃப், லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடன் அசல், கல்விக் கட்டணம், இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பென்ஷன் திட்டங்கள் உள்ளிட்டவை எல்லாம் சேர்ந்துதான் ரூ.1.5 லட்சத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரம்பை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
தற்போது ஐந்தாண்டு லாக்இன் பீரியட் கொண்ட வங்கி எஃப்டிகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இதை மியூச்சுவல் ஃபண்ட்  இஎல்எஸ்எஸ் போல் மூன்றாண்டுகளாகக் குறைக்க வேண்டும்.
நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (என்பிஎஸ்) திட்டத்துக்கு அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும்விதமாக மாற்றியமைக்க வேண்டும். தற்போதைய நிலையில் ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்க்ஸ் திட்டம் மூலம் (ஆர்ஜிஎஸ்எஸ்) பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் ரூ.50,000 முதலீட்டில், பாதித் தொகைக்கு ரூ.25,000தான் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. முழுத் தொகைக்கும் வரிச் சலுகை அளிக்கும் அறிவிப்பை பட்ஜெட்டில் புதிய பங்கு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மத்திய அரசு 'மேக் இன் இந்தியா’ என்கிற பிரசாரத்தைத் தீவிரமாகக் கொண்டு வருகிறது. இதன்மூலம் இன்ஃப்ரா துறைக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.
அந்தவகையில் சில ஆண்டுகளுக்குமுன் நடந்ததுபோல், இன்ஃப்ரா பாண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு ரூ.20,000 வரைக்கும் தனியே வரிச் சலுகை அளிக்க வேண்டும். இந்த வரம்பை ரூ.50,000ஆக உயர்த்தினால் அதிகம் பேர் பயன் அடைவார்கள்.
நம் நாட்டைப் பொறுத்தவரையில், அதிக ரிஸ்க் இல்லாத முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது மற்றும் பணத்தைப் போட்டு வைப்பது அதிகமாக இருக்கிறது. தற்போது நிதி ஆண்டில் வங்கிச் சேமிப்பு கணக்கு மூலம் கிடைக்கும் வட்டிக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதை இருமடங்காக ரூ.20,000ஆக அதிகரித்தால் பலரும் பயன் பெறுவார்கள்'' என்றார்.
ரியல் எஸ்டேட்!
கடந்த ஆண்டு, மனை அல்லது சொத்தை விற்றது மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயத்தைக் கொண்டு சொத்து வாங்கும்போது, ஒரு வீட்டுக்கு மட்டும்தான் மூலதன ஆதாயச் சலுகை கிடைக்கும் என்று கொண்டு வரப்பட்டது. இதனை ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி காணும்.
வீட்டின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், திரும்பக் கட்டும் வட்டிக்கு அளிக்கப்படும் சலுகையைத் தற்போதைய ரூ. 2 லட்சம் என்பதை
ரூ. 3 லட்சமாக உயர்த்துவது, போர்டபிள் ஹவுஸிங் என்கிற வாங்கக்கூடிய விலையில் உள்ள வீடுகளுக்குக் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வழங்க வேண்டும்  என்பது போன்றவை பெரும்பாலான ரியல் எஸ்டேட் புரமோட்டர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்கிற இலக்கை மத்திய அரசு முன்வைத்திருக்கிறது. அந்தவகையில் ரியல் எஸ்டேட் துறையை ஊக்கப்படுத்தும் விதமாக பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்தை வாங்காமலே ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்ஸ் (ஆர்இஐடிஸ்) மூலம் செய்யும் முதலீட்டுக்கு பட்ஜெட்டில் வரிச் சலுகை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட்!
பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் கூறும்போது, ''மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டையர்மென்ட் ஃபண்டுகளுக்குத் தனியாக ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும்.
இது நாட்டு மக்களின் சேமிப்பை அதிகரிப்பதோடு, மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும், பங்குச் சந்தைக்கும் அதிக முதலீடு வரும்' என்றார்.
பங்குச் சந்தை!
பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட முதலீடுகளுக்கான ஒழுங்குமுறை அமைப்புகளான செபி உடன், கமாடிட்டி சந்தைகளின் கட்டுபாட்டு அமைப்பான ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் (எஃப்எம்சி) இணைப்புக்கான அறிவிப்புப் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015-16-ல் பொதுத்துறை நிறுவனங் களின் பங்கு விலக்கல் இலக்கு ரூ.43,000 கோடியாக இருக்கிறது. அந்தவகையில் எந்த நிறுவனம் மூலம் எவ்வளவு நிதி திரட்டப்படும் என்கிற அறிவிப்புப் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் டிவிடெண்ட் விநியோக வரி (டிடிடி) ரத்து செய்யப்படலாம்
கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் சந்தையின் வர்த்தக அளவை கமாடிட்டி டிரான்ஸாக்‌ஷன் டாக்ஸ் (சிடிடி) பாதிப்பதாக இருக்கிறது. இந்த வரியை நீக்க அல்லது குறைக்க மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஃப்எம்சி கோரிக்கை வைத்திருக்கிறது.
தற்போது மெடிக்ளெய்ம் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு ஒரு நிதியாண்டில் ரூ.15,000க்கு வரிச் சலுகை அளிக்கப் படுகிறது. இந்த வரம்புக்குள்ளே ஹெல்த் செக் அப்க்கு ரூ.5000 அளிக்கப்படுகிறது. மருத்துவச் செலவு மிகவும் அதிகரித்துள்ள நிலையில் வரிச் சலுகைக்கான பிரீமியத் தொகையைக் குறைந்தது ரூ.25,000ஆக அதிகரிக்கப் படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
மக்களுடைய எதிர்பார்ப்பினால் ஆட்சிக்கு வந்த மோடி அரசு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்கு இந்த பட்ஜெட்டைவிட்டால் வேறு வாய்ப்பு கிடையாது என்பதை உணர்ந்து செயல்படுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்!



No comments:

Post a Comment