சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Aug 2015

கூடங்குளம்: அணு அரசியல்! (மினி தொடர்: பகுதி-1)

ண்மை எப்போதும் எளிமையில் இருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல! - சர். ஐசக் நியூட்டன்.

மனிதனின் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் ஏதோவொரு நுண் அரசியல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தனி மனிதர்கள், குழுக்கள், இனங்கள் என அனைத்து மட்டத்தையும் அரசியல் ஆட்டிப்படைத்து வருகிறது. சாதாரண கண்களுக்குப் புலப்படாத, மிக நுண்ணிய அணுவிலும் அரசியல் புகுந்து, உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அணு சக்தி குறித்த ஆய்வை யார் செய்ய வேண்டும் என்பதைக்கூட சர்வதேச நாடுகள் தீர்மானிப்பதில் இருந்தே இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடியும்.
அணு சக்தி என்பது எளிமையானது, சிக்கனமானது, பாதுகாப்பானது, மொத்தத்தில் மக்களுக்கானது என்றால் அதில் எதிர் கருத்துக்கள் ஏற்படுவது எதனால்? அணுவை பிளந்து மின்சக்தியை உருவாக்கும் அணு உலை நிலையங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்த அணு உலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் பலன் மக்களுக்கு நேரடியாகவே கிடைக்கத்தான் செய்கிறது. இப்படி மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு சக்தியை எல்லோரும் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?

அப்படியானால், அணு சக்தி கொள்கையை உலக நாடுகள் வகுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? வடகொரியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் அணு ஆய்வுகளை செய்யவிடாமல் தடுப்பதன் மர்மம் என்னவாக இருக்க முடியும்? அணுசக்தி துறையில் உயர்ந்து நிற்கும் நாடுகளை மட்டும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற வைப்பதன் பின்னணியில் இருக்கும் அரசியல் எது? இப்படி விடை தெரியாத கேள்விகள் ஏராளம்.
 

உலகம் முழுவதும் 437 அணு உலைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதன் மூலமாக 3,80,250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, 66 அணு உலைகள் விரைவில் செயல்படும் வகையில், அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 99 அணு உலைகள் இயங்குகின்றன. இதன்மூலமாக, அந்நாடு 98,792 மெகாவாட் மின்சக்தியை இப்போதும் உற்பத்தி செய்துகொண்டு இருக்கிறது.

ஃபிரான்ஸ் 58 அணு உலைகளையும், ஜப்பான் 43 அணு உலைகளையும், ரஷ்யா 34 அணு உலைகளையும், சீனா 26 அணு உலைகளையும் கனடா 19 அணு உலைகளையும் கொண்டிருக்கின்றன. பக்கத்து நாடான பாகிஸ்தான் 3 அணு உலைகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியா 21 அணு உலைகளில் இருந்து 5302 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 29 நாடுகள் அணு உலைகளை அமைத்து மின் உற்பத்தியை பெற்று வருகின்றன. இது தவிர, பல்வேறு நாடுகளில் இப்போதும் அணு சக்தித் துறை சார்ந்த ஆய்வுகள் மிகத்தீவிரமாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.  

இப்படி அனைத்து நாடுகளும் அணுசக்தி துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டி வரும் சூழலில், அதற்கான எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கவே செய்கின்றன. எல்ல நாடுகளின் ஆட்சியாளர்களும் அணு சக்தி துறையை மேம்படுத்த கூடுதல் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் அணு சக்தி எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழலில் அறிஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து அணு உலைகளை மூடக் கோரி போராடி வருகிறார்கள்.

அணு சக்திக்கு ஆதரவும் எதிர்ப்பும் பலமாக இருப்பது ஏன்? அணு சக்தி ஆக்கபூர்வமானது என்றால் அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? உலகின் பல நாடுகள் மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பயந்து அல்லது கொள்கை முடிவை வகுத்து அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கின்றனவே? வளர்ச்சி அடைந்த நாடுகள் அணு உலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதற்கு முடிவு செய்திருக்கும் சூழலில், மூன்றாம் உலக நாடுகள் அணு உலைகளை அதிகமாக தொடங்க முடிவு செய்வது எதற்காக? வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் மூன்றாம் உலக நாடுகளில் அணு உலைகளை அமைத்து கொடுக்க ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?
 
அணு உலைகளை படிப்படியாக மூடிவிட்டு,  மாற்று மின்சக்தி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என தங்கள் மக்கள் மீது அக்கறை காட்டும் சில நாடுகள்,  அடுத்த நாடுகளில் அணு உலைகளை அமைக்க முழு ஒத்துழைப்பையும் தொழில் நுட்பத்தையும் கொடுத்து உதவுகின்றன. ‘அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி... தனக்கு வந்தால் ரத்தம்..!’ என்கிற மனநிலையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் செயல்படுவதன் பின்னணியில் இருப்பது அரசியல்... 

சாதாரண நாடுகளுக்கு உள்ளேயும் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்தி வரும் சர்வதேச அரசியல் பற்றி அறிந்து கொள்ளாமல் அணு சக்தி நல்லதா, கெட்டதா என்கிற விவாதம் முழுமை பெறாது. இந்தியாவிலும் அணு உலைகளுக்கு எதிராக கலகக்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கும் காலகட்டம் இது! குறிப்பாக, கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது.

‘கியூபா தேசத்தாய்க்கு தனது குழந்தைகள் பிரகாசமான எதிர்காலத்தை பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், அதற்கான வெற்றியானது லட்சக்கணக்கான மனித உயிர்களைக் கொன்று அழிக்கும் அணு குண்டில் இருந்து பெறப்படுவதாக இருக்காது’- சே குவேரா

உலகம் முழுவதிலும் உள்ள அறிவியல் அறிஞர்களுக்கு அணுசக்தி குறித்த சிந்தனையை தூண்டிவிட காரணமாக இருந்தது, இரண்டாம் உலகப் போர். ஜெர்மனிக்கு எதிரான அந்த போரில், ஹிட்லரின் படைகள் அணு குண்டு பயன்படுத்தும் என்ற அச்சம் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்டது. அதனால் தாங்களும் அணு குண்டு தயாரிக்க வேண்டும் என்றும் அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும் என்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அப்போதைய அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினார். 

அதன் பின்னரே அணுக்களை பிளவுபடுத்தும் ஆய்வுகள் உலக அளவில் அதிகரிக்க தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகஷாகி நகரங்கள் மீது அணு குண்டு வீசப்பட்டு லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது எல்லாம் வரலாறு. 

அணு குண்டின் பாதிப்பை நேரில் பார்த்த பின்னர், அணு குண்டு தயாரிக்க காரணமாக இருந்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வருந்தியதையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. உலக நாடுகளின் பார்வை அணு சக்தியில் பதிய காரணம், அணு குண்டு வைத்திருக்கும் நாடுகள் மட்டுமே வல்லரசு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னையும் வல்லரசாக காட்டவாவது அணு சக்தியில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டது. 

அதனால் வளர்ந்த நாடுகளுக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்தாவது அணு சக்தி குறித்த ஆய்வை மேற்கொள்ள முண்டியடித்துக் கொண்டு முன்வந்தன. இதில் இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

அதனால், அமெரிக்காவிடம் இருந்து அணு சக்தி தொழில்நுட்பங்களை பெற்று மின்சக்தியை உற்பத்தி செய்ய இந்தியா முடிவு செய்தது. அதன்படி, நாட்டின் பல இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அணு உலைகளில் இருந்து பெறப்படும் கழிவுப் பொருளில் இருந்து அணு குண்டுகளை தயாரிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு அந்த தொழில்நுட்பம் தெரியாது என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பலவும் இந்தியாவுடன் அணுஉலைகளுக்கான ஒப்பந்தங்கள் செய்வதில் ஆர்வம் காட்டின.

கூடங்குளத்தில் அணு உலை

இந்தியாவின் தாராப்பூர் நகரில் அமைக்கப்பட்ட அணு உலைக்கு தேவையான எரிபொருளான யுரேனியத்தை அமெரிக்கா விற்பனை செய்து வந்தது. இதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வணிக ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில், 1974 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி காலத்தில் போக்ரானில் முதன் முதலாக அணு குண்டு சோதனையை இந்திய விஞ்ஞானிகள் நடத்தினார்கள். இதனை அறிந்ததும் அமெரிக்கா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றது.
‘நாங்கள் உங்களுக்கு எரிபொருள் கொடுத்ததே அணு உலைகளை அமைத்து மின் உற்பத்தி செய்ய மட்டும் தான். ஆனால், எங்களை கேட்காமல் அணு குண்டு தயாரித்து சோதனை செய்து பார்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இனிமேல் உங்களுக்கு அணு உலைக்கான எரிபொருள் சப்ளை செய்ய மாட்டோம்’ என கறார் காட்டியது. இந்தியாவின் பல இடங்களில் யுரேனியம் கிடைத்த போதிலும், பிற தாதுப்பொருட்களுடன் இருக்கும் அதனை தனியாக பிரிக்கும் தொழில்நுட்பம் வேறு நமக்கு தெரியாது. 

கோடிக்கணக்கில் முதலீடு செய்த அணு உலைகளின் இயக்கத்தை முடக்கும் விதத்தில் அமெரிக்கா செயல்படுவதை எப்படி முறியடிப்பது என இந்திய விஞ்ஞானிகள் விழிபிதுங்கி நின்றனர். பின்னர், ‘எதிரிக்கு எதிரி நண்பன்!’ என்கிற கொள்கை முடிவை எடுக்க மத்திய அரசாங்கம் முடிவெடுத்தது. 

அதன்படி, அப்போது அமெரிக்காவுக்கு சவாலாக திகழ்ந்த சோவியத் யூனியனுடன் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த நாட்டின் உதவியுடன் அணு உலைகளின் செயல்பாட்டை தொடரவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 1979ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவை கூடி சோவியத் யூனியனுடன் அணுசக்தி தொடர்புகளை வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சோவியத்துடன் வர்த்தகம், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி என இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது. 1988ல் சோவியத் குடியரசின் அதிபரான மிகைல் கார்பசேவ் மற்றும் இந்தியாவின் அப்போதைய பிரதமரான ராஜீவ்காந்தி இடையே புதிய அணு உலைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், நாட்டின் தென்கோடிப் பகுதியான கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் கூடிய இரு அணு உலைகள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்ததும் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல் குமரி மாவட்ட மக்களும் கொந்தளிக்க தொடங்கினர். காரணம், இந்த அணு உலைகளை குளிர்விப்பதற்காக குமரி மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமான பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு இருந்ததே. 

அணையில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் குமுறினர். அதே சமயம், அணு உலையை குளிர்வித்த பின்னர் வெளியாகும் சூடான தண்ணீரை கடலுக்குள் விடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இப்படி செய்தால் சுற்றுப்புறப் பகுதிகளில் மீன்வளம் முழுமையாக அழியும் என்றும் தங்களுக்கு தெரிந்த ஒரே தொழிலான மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் மீனவர்கள் எச்சரித்தனர். நெல்லை, குமரி மாவட்டங்களை பாதிக்கும் இந்த விவகாரத்தை கண்டித்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் என எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது. முக்கிய அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பலவும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடத் தொடங்கின. இந்த சூழலில் ஒப்பந்தம் போடப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு 1989ஆம் வருடம் மே மாதத்தில் குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இரு மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றதன் மூலம் மக்களின் அதிருப்தி அதிகமாகி இருப்பதை அரசு புரிந்து கொண்டது. போலீஸாரை குவித்து கூட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஆக்ரோஷமாக இருந்த மக்கள் அணு உலை அமைக்க மாட்டோம் என அரசாங்கம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியே போலீஸாரால் கூட்டத்தை கலைக்க வேண்டியதாகிப் போனது.
அதன் பின்னர், இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் தோன்றின. கம்யூனிச கூட்டமைப்பாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து சிதறியது. இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த நிகழ்வுகள் கூடங்குளம் அணு உலை விவகாரத்திலும் எதிரொலித்தது. இரு நாடுகளுமே தங்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தயக்கத்தால் அதனை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். 

சில ஆண்டுளுக்கு பிறகு இந்த திட்டம் மறுபடியும் தூசு தட்டப்பட்டது. அப்போது மக்களிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதன் பின்னணியில் இருந்த அரசியல் எது?

"என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எது என்றால், அணு குண்டுகளை தயாரிக்கும் திட்டத்தை வலியுறுத்தி பிரதமர் ரூஸ்வெல்டுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்து போட்டதுதான். ஆனாலும், சிறிது நியாயம் அதில் இருந்தது என்றால், அத்தகைய பேராபத்தை உருவாக்கும் அணு குண்டுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கி விடக்கூடும் என்பதுதான்!" - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஒரு பேட்டியில்...

ராஜீவ் மரணத்துக்கு பின்னர் கிடப்பில் போடப்பட்ட கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தத்தை, 1991-ல் மீண்டும் கையில் எடுத்த இந்திய அணுசக்திக் கழகம், அந்த இடத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலை அமைக்க அனுமதி கோரியது. இந்த திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. அணு உலை குறித்த பேச்சு கிளம்பும்போது எல்லாம் மக்கள் எதிர்ப்பை காட்டுவதும், பின்னர் திட்டம் முடங்கும்போது மக்கள் அடங்கிக் கிடப்பதும் வாடிக்கையாக இருந்தது.

இதற்கிடையே, கூடங்குளம் அணு உலை அமையப் பெற்றால் தேரிக்காடு என அழைக்கப்படும் வறட்சியான சுற்றுப்புறப் பகுதிகளில் நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அந்த பகுதியே நகரமாக மாறிவிடும் எனவும் கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. தங்களின் குழந்தைகளுக்கு உயரிய தரம் கொண்ட கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்றும், எங்கு நோக்கினும் வானுயர்ந்த கட்டடங்களும் கடைகளும் அமையும் என அப்பாவி மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.
அணு உலையால் கடல் தொழில் மட்டுமே பாதிக்கும் என்கிற கருத்து பரவியது. இதனால் மீனவ மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்தார்கள். அருகில் இருக்கும் கிராமங்களில் வசிக்கும் மாற்று சமூகங்களை சேர்ந்தவர்களை மீனவ மக்களிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சி இது என்பதை இரு தரப்பினருமே புரிந்து கொள்ளவில்லை. ஆனாலும், கூடங்குளத்தில் என்ன வகையான அணு உலையை அமைப்பது, எந்த நாட்டின் துணையுடன் செயல்படுத்துவது என்பதை மத்திய அரசு இறுதி செய்யாததால், அணு உலைக்கான திட்டம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்த சூழலில், 1997- ம் ஆண்டு மீண்டும் அணு உலை குறித்த பேச்சு எழுந்தது. அப்போது பிரதமராக இருந்த ஹெ.டி.தேவகவுடாவும், ரஷ்யாவின் போரிஸ் எல்ஸ்டினும் இணைந்து அணு உலை தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில், 1988- ல் ஏற்கெனவே ராஜீவ் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விவரங்களுடன் சேர்த்து, மேலும் சில கருத்துக்களும் சேர்க்கப்பட்டு முழுமை பெறச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தமானது அணு உலை பற்றி மட்டும் அல்லாமல், இந்தியாவுக்கு அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது மற்றும் ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ரஷ்யாவின் தொழிநுட்பத்துடன், 11,400 கோடி ரூபாய் மதிப்பில் இரு அணு உலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்ட தகவல் வெளியானதும், மக்களிடம் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. 

அணு உலையை குளிர்விக்க, குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க இருப்பதாக அறிந்த குமரி மாவட்ட மக்களும் போராட்டத்தில் குதித்தனர். பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் எடுக்க மாட்டோம் என அதிகாரிகள் அறிவித்தனர். அப்படியானால் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படக் கூடும் என்கிற அச்சம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

சமூக ரீதியாக பிரிந்து கிடந்த மக்களை ஒன்றிணைத்து, போராட்டத்தை வலுப்படுத்தும் பணியில் சமூக ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் வல்லுநர்களும் ஈடுபட்டனர். ஜார்ஜ் கோமஸ், ஒய்.டேவிட், ஸ்டீபன் விக்டோரியா, ஆண்டன் கோமஸ், மைக்கேல்ராஜ் உள்ளிட்ட பலர் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து, "அணு உலை என்பது ஆபத்தானது. கதிர்வீச்சு ஆபத்து கொண்ட அணு உலையில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் நாசகார அணு உலையை மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அவசியம்’’ என பிரசாரம் செய்தனர். 

இது தவிர, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாபதி அடிகள், விவசாய சங்கத் தலைவர் மருங்க்கூர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு இயக்கத் தலைவரான பத்மதாஸ், மீனவர் சங்கத் தலைவர் பீட்டர், முன்னாள் எம்.எல்.ஏவான குமாரதாஸ், சுப.உதயகுமாரன், புஷ்பராயன் என பல்வேறு சமூக ஆர்வலர்களும் சமுதாய மற்றும் அரசியல் கட்சியினரும் மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஏறக்குறைய இந்தப் பகுதியின் அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் அணு உலைக்கு எதிரான கருத்துடன் மக்களுக்கு ஆதரவாகவே நின்றனர்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், எதிரிம் புதிருமான அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் அமைப்புகளும் கூட, ‘அணு உலை வேண்டாம்’ என்ற கருத்தையே கொண்டிருந்தனர். மக்கள் நடத்திய போராட்டங்களில் திராவிட கட்சியுடன், இந்து முன்னணியும் பங்கேற்றது. எதிர்ப்பு கிளம்பிய போதிலும், அணு உலையை அமைப்பதற்கான பணிகளை தொடங்க அரசு திட்டமிட்டது. மக்கள் போராட்டம் வலுவடைவதை தடுக்கும் வகையில், இந்த பகுதியின் தொழில்வளம் மேம்படும் என்கிற கருத்தாக்கம் வேகமாக பரப்பப்பட்டது.
இதற்கிடையே, இந்த பகுதியில் அணு உலையை தொடங்க நிலம் கையகப்படுத்தி தருமாறு அரசை வலியுறுத்தியது, இந்திய அணு சக்திக் கழகம். விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு காட்டினர். இதனால் நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சிரமப்பட்டனர். இந்த நிலையில், மக்களின் வறுமையையும், அறியாமையையும் பயன்படுத்தி நிலத்தை எடுக்க அரசு திட்டமிட்டது. 

அதனால், ‘நிலம் கொடுப்பவர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயமாக அணு உலையில் வேலை கொடுக்கப்படும்’ என்கிற உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமே என்கிற நப்பாசையில், விவசாயிகள் தங்களின் நிலத்தை கொடுக்க முன்வந்தனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அடிமாட்டு விலைக்கு அரசு இந்த நிலங்களை எடுத்துக் கொண்டது.

929 ஹெக்டேர் நிலம், அணு உலை அமைய உள்ள இடத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அத்துடன், கூடுதலாக 150 ஹெக்டர் நிலம் குடியிருப்பு பகுதிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஏறக்குறைய 1200 ஹெக்டேர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து இந்திய அணு சக்திக் கழகத்துக்கு கொடுக்கப்பட்டது. 

ஆனாலும் மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டே இருந்தனர்.  

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. 

அணு உலைக்கு எதிரான பாடல்கள், வீதி நாடகங்கள் மூலமாக கோவை, சென்னை, புதுவை என பல்வேறு பகுதிகளிலும் அணு உலைக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். 

ஆனாலும், எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் அணு சக்தி கழகம் தீவிரம் காட்டியது.


No comments:

Post a Comment