சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Aug 2015

கோப்பைக்குள் வற்றும் நதிகள்…!

துவிற்கு அடிமையாதல் மனநோய். கடந்த சில மாதங்களாக இந்த நோய் படை பரிவாரங்களோடு உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்குமான மதுபானக் கடைகள், அதன் வருவாய் மற்றும் வரிக்கணக்கு, அரசுக்கு சேருகிற தனிப்பட்ட லாபம் என ஒட்டுமொத்தப் புள்ளி விபரங்களை எல்லோரும் சல்லடை போட்டு சலித்துவிட்டார்கள்.

உலகச் சுகாதார நிறுவனம் (WHO) 2000 - 2001 ஆண்டுகளில் கொடுத்த கணக்குப்படி, இந்தியாவில் பொதுவாக ஆண்கள் 26% பெண்கள் 4%  மது குடிப்பதாகவும், 15 முதல் 19 வயது வரையிலான வளர்பருவ ஆண்கள் 1.2% இருந்ததாகவும் தெரிய வருகிறது. உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகம் போதையில் பின்தங்கி இருந்தது என்னவோ உண்மைதான். 2003ஆம் ஆண்டில் டாஸ்மாக் கடைகளை பொது நிறுவனமாக கையில் எடுத்து மலிவான விலையில், வீதி தோறும் வியாபாரம் செய்தபிறகுதான் இதன் விகிதாச்சாரம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்.
எழுபது, எண்பதுகள் வரையிலும் எந்த வகையான மது விற்கப்பட்டாலும் அதற்குப் பெயர் சாராயக்கடைதான். ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் கீற்றுக் கொட்டகையில் எங்கேனும் ஒரு கடை இருக்கும். அதுவும் யாரும் பார்த்து விடாத படிக்கு மறைத்து வைத்துக் குடிப்பார்கள். குடிப்பது என்பது சமூக விரோதச் செயல் என்ற எண்ணம் அவர்களுக்கே இருந்தது. மதுப் பழக்கம் இல்லாதவர்கள் அந்த வழியாகச் சென்றாலே ஊரின் கண்கள் ஊசிபோல் துளைத்து விடும். பெண்கள் அந்தத் தெரு பக்கமே செல்ல மாட்டார்கள். வழிதவறிக் குழந்தைகள்  போனாலும் இங்கெல்லாம் வரக் கூடாது என வீடு வரைக்கும் சேர்த்த  குடிமகன்கள் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு இரண்டு வயது மூன்று வயது பெண் குழந்தைகளைக் கூடத் தனியே விட பயமாக இருக்கிறது. பூக்கக் காத்திருக்கும் அரும்பை சாக்லெட் கொடுத்து சிதைக்கிற மனோபாவம் எத்தனை கொடுமையானது. சுயநினைவில் இருந்தால்தானே சரி, தவறுகள் புரியும். இதற்கெல்லாம் யார் காரணம் எனக் கேட்டால் 75% தயக்கமின்றி மதுகுடிப்பவர்கள் பக்கம்தான் விரல் நீட்ட முடியும்.

எந்தவிதக் கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் இல்லாமல் பிரதான சாலைகளில், உணவு விடுதிபோல் சகல வசதிகளோடு மதுக் கடைகள் இருக்கின்றன. வயிற்றுப் பசியாற  ஹோட்டல்களில் சாப்பிட்ட காலம் போய், வழிநெடுக போதைப் பசியாற வயது வித்தியாசமின்றி டாஸ்மாக்குகளில் நுழைகிறார்கள். சூழல் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப்போடும். வறுமையைக் காரணம் காட்டிதான் ஒழுக்கக் கேடுகள் அதிகம் நடக்கின்றன. பள்ளிகளில் கற்பிக்கப்படும் கோட்பாட்டுக் கல்வியை விட, இந்தச் சமூகம் பயிற்றுவிக்கும் வாழ்க்கைக் கல்விதான் நம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது. தினம் தினம் குடித்து வந்து உருட்டுக்கட்டையால் அம்மாவின் மண்டையை பிளக்கும் அப்பாவை கவனிக்கும் ஐந்துவயது மகன், எத்தனை நாட்களுக்கு பொறுமையாக இருப்பான். குறைந்தபட்சம் தன் பென்சில் பாக்ஸை தூக்கி எறிந்தாவது அப்பாவிடம் எதிர்ப்பைக் காட்ட மாட்டானா. இப்படிக் குடியினால் ஏற்படும் கேடுகளால், பிஞ்சு மனதிலும் வன்முறை குடி கொள்கிறது.
அன்றாடம் வாங்குகிற காய்கறிகளையும், பழங்களையும் உப்பு நீரில் போட்டு சாப்பிடும் நிலையில் இருக்கிறோம். குடியினால் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படுகிற தீங்கு என்ன என யோசிக்க வேண்டும். ஏன் குடிக்க வேண்டும்? என்ன கலந்திருக்கிறது. அதென்ன உடலுக்கு வேண்டிய சகல வைட்டமின்களையும், புரதச் சத்துக்களையும் உள்ளடக்கிய சத்தான பானமா? எந்தப் பொருள் வாங்கினாலும் காலாவதியாகும் நாள் பார்க்கிறோமே. அரக்க பறக்க அதிகாலை டாஸ்மாக் கடை வாசலில் துண்டைப்போட்டு இடம் பிடிப்பவர்கள் என்றைக்காவது அந்த பாட்டிலில் என்ன எழுதி இருக்கிறது எனக் கவனிக்கிறார்களா? கடைகள் மூடப்பட்டாலும் பஸ் ஏறிப்போய் அயலூரில் வாங்கிக் குடிக்கிறார்கள். கரப்பான் பூச்சி கிடந்தாலும் விரலால் சுண்டிவிட்டு மளமளவெனக் குடிக்கிறார்கள். அப்படி என்ன போதை தேவைப்படுகிறது.

மது, சிறுகுடலுக்கு சென்று கணையத்தால் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் நாளடைவில் கல்லீரலைச் சுரண்டி எடுத்து மஞ்சள் காமாலை அறிகுறியோடு, கல்லீரல் இறுக்க நோய் (cirrohis of liver) வந்து மரணம் ஏற்படுகிறது. இருதய பாதிப்பு, வாய், உணவுக்குழாய், கல்லீரல் போன்ற உறுப்புகளில் மது புற்றுநோய்களை உண்டாக்கும். முக்கியமாக ஆண், பெண் மலட்டுத் தன்மையையும் நரம்பு மண்டலப் பாதிப்பையும் மது ஏற்படுத்துகிறது. உங்கள் ஆயுட்காலத்தில் பத்து ஆண்டுகளை நீங்கள் குடிக்கும் ஆல்கஹால் எடுத்துக் கொள்கிறது என மருத்துவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.

மதுவிற்கு அடிமையானவர்களுக்கு AUD (Alcohol use disorders)  மனம் சார்ந்த ஆளுமைச் சிதைவு நோய்கள் உண்டாகின்றன. தூக்கமின்மை, மன அழுத்தம், முடிவெடுப்பதில் குழப்பம், பயமுறுத்துகிற கனவுகள், வன்முறையில் ஈடுபடுதல், தற்கொலை எண்ணம், கொலை செய்கிற குரூர எண்ணங்கள், பதட்டம், நரம்புத் தளர்ச்சி போன்றவைகள் ஏற்படுகின்றன.

மளிகைக் கடை போல பெண்கள் மதுக்கடைகளுக்கு செல்லும் இலகு இன்றைக்கு வாய்த்திருக்கிறது. திருப்பூரில் பள்ளி மாணவி, காதல் தோல்வியால் மது அருந்திவிட்டு ரோட்டில் ரகளை செய்வதும், அம்மா, அப்பா அன்பு செய்யவில்லை எனத் தஞ்சாவூரில் தள்ளாடிய பெண்ணும் நாம் வாழ்கிற சமூகத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள். சமீபகாலமாக இளம் பெண்கள் குடித்துவிட்டு நடனம் ஆடும் வாட்ஸ் அப் வீடியோக்களையும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வாசகங்களோடு வரும் முகநூல் படங்களையும் பார்த்தால் குலை நடுங்குகிறது.

பெண் உடலை வக்கிரமாகப் பார்க்கிற இந்த சமூகத்தில், குடித்துவிட்டு ஆடைகள் விலகி, பெண்கள் அலங்கோலமாகக் கிடந்தால் பாலியல் வன்முறைகளுக்கு இடமாகிப் போகுமே. போதாக்குறைக்கு, மால்களில் உயர்தர எலைட் மதுபானங்களை  விற்பனைக்கு வைக்கப் போவதாக பத்திரிகை செய்திகள் பயமுறுத்துகின்றன. ஆண்களும் பெண்களுமாய் குழந்தைகளோடு ஏ.சி. அறையில் குடித்துவிட்டு கும்மாளமடித்தால், தள்ளாடும் தமிழகத்தை யார் தூக்கி நிறுத்துவது. ஆண்களைத் திருத்தும் அன்புப் பேராயுதமும் கை நழுவிப் போன பதட்டத்தில் இருக்கையில்,  கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி எனப் பெண் பெயரிட்ட நதிகள், மதுப் புட்டிகளை இப்படிக் கையில் எடுத்துக் கோர தாண்டவம் ஆடினால், மூன்று பக்கக் கடலும் பொங்கி எழாதா?
குடிப்பழக்கத்தின் மோசமான உடல் நலக் கேடுகளுக்கு ஆண், பெண் என்கிற பேதமெல்லாம் கிடையாது. சொல்லப் போனால் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என NIH (National Institute of Alcohol Abuse and Alcoholism) அச்சுறுத்துகிறது. ஆண்களைவிட பெண்களின் உடலில், நீரின் அளவு குறைவாக இருப்பதால்,.ஆல்கஹாலின் திடத்தன்மையை  எளிதாகக் கிரகிக்க முடிவதில்லை. அதனால் ரத்தத்தில் அதிக நேரம் தங்கி விடுகிறது. மேலும், ஆல்கஹாலைச் செரிக்கக் கூடிய என்ஸைம் (AHD - Alcohol dehydrogenase) குறைவான அளவில் இருப்பதால் பெண்களுக்கு மதுவின் போதைக்கான கால அவகாசம் நீட்டிக்கிறது. 10 கிராம் ஆல்கஹாலில் (1unit) 7.1% மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. பெண்களுக்கு மலட்டுத் தன்மையையும், சீரற்ற மாதவிடாய் கோளாறுகளையும் மது ஏற்படுத்துகிறது. கருவுற்ற பெண்கள் குடிப்பதால் நிச்சயம் கருவில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படுகிறது.

கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என நீர்மோரும், பானகமும், ஆடிக் கூழுமாய் களைகட்டியிருந்த நாம் எங்கே போய்க் கொண்டியிருக்கிறோம். இயந்திரங்களின் வரத்து இல்லாத அன்றைய காலத்தில், ரத்தம் களைத்து வியர்வையாகச் சொட்ட, வயல்களில் கடுமையாக உழைத்த மக்கள் களைப்புதீர மோந்தைகளில் கள் அருந்தி உறங்கிப் போனார்கள். அதையும் 'நஞ்சு உண்பார் கள்உண் பவர்' எனவும், கள் உண்பதால் அறிவு மயங்கும். எனவே மது விசம் என வள்ளுவரும் குறள் வழி வேதனைப்பட்டிருக்கிறார்.


ஆல்கஹால் ஏற்றிய மதுவைக் குடிப்பது நம் வழக்கமே அல்ல. நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் அடையாளம் அது. அவர்கள் வாழ்கிற நாடு குளிர்பிரதேசம். உடலின் வெப்பநிலையையும் சுற்றுப்புறச் சூழலின் உறைநிலையையும் சமன்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. சின்னக் கோப்பைகளில் மருந்துபோல் துளித்துளியாக மதுவை உள் இறக்கி ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறார்கள். நாம் மிதமான தட்பவெட்பத்தில் வாழ்கிறோம். அத்துடன் இருக்கிற மரங்களையும் வெட்டிச் சாய்த்து, ஓசோனில் முடிந்த மட்டும் பெரும் ஓட்டையைப் போட்டுவிட்டோம். கடும் வெப்ப மண்டலப் பிரதேசமாக மாறியிருக்கிற இந்த நிலையில், உணவுக் குழாயை அரித்துக் கொண்டு, மூளையைச் சிதைக்கும் மது என்கிற அமிலத்தை குடிக்கிறார்கள். இப்படி, வெறும் வயிற்றில், வைக்கோல் பிரியைக் கட்டிக் கொண்டு பேரல் பேரலாக குடிப்பதால் வயிற்றிலும் ஓட்டை விழுகிறது.

சம்பாதிக்கும் காசெல்லாம் டாஸ்மாக்கில் கொடுத்து ரத்தத்தில் ஆல்கஹால் அளவை குறைக்கவிடாமல் குடித்து, மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா என்கிற சுய சிந்தனை இல்லாமல், நிதானமின்றி, கழிவுகளைப் போடும் குப்பைத் தொட்டிகள், சாக்கடைகள் மத்தியில் நாய்களோடும், பன்றிகளோடும், புழுக்களோடு புழுக்களாக நெளியும் பரிதாபத்திற்கு உரியவர்களாக குடிகாரர்கள் அருவருத்துக் கிடக்கிறார்கள்.

குடிப்பழக்கத்தினால் கொலை, கொள்ளை, பொய், திருட்டு, பாலியல் வன்முறைகள் எனப் பல்கிப் பெருகிக் கிடக்கின்றன. அப்பா இன்னைக்கும் குடிச்சிட்டு வந்து அடிப்பாரோ என மிரண்டு ஒளியும் மகளும், சுயநினைவின்றி ரோட்டில் கிடக்கும் கணவனை, சொந்த பந்தங்களின் ஏளனத்திற்கு பயந்து இரவோடு இரவாக இழுத்து வந்து வீட்டிற்குள் கிடத்தும் அடித்தட்டு மனைவியின் மனநிலையையும் யாருக்கு புரிய வைப்பது. இருசக்கர வாகனத்தில் வரவேண்டிய கணவனுக்காகவோ அல்லது மகனுக்காகவோ நள்ளிரவில் வீட்டுக்கும் வாசலுக்குமாய் அழுகையோடு அலையும் பெண்ணின் காதில், எங்கிருந்தோ கேட்கும் 108 ஆம்புலன்சின் ஹாரன் சப்தம்தான் மரண ஓலம்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கப் பழகியவர்கள் நாளடைவில் போதைக்கு அடிமையாகி மது இல்லை என்றால் வாழமுடியாதோ எனப் பதட்டப்படுகின்றனர். குடிப்பதற்கு பணம் இல்லாதபோதுதான் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கொல்லைப் புறத்திலும் பட்டப் பகலிலேயே குக்கரைத் திருடலாமா, குவளையைத் திருடலாமா எனத்  திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். போதை தலைக்கேறியதும் மனைவி, மகள் என அடையாளம் தெரியாமல் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மூளை கலங்கிப்போய் வீட்டில் உள்ளவர்களை தெருவிற்கு இழுத்து வந்து அடிப்பதும், கண்மூடித்தனமாக பொருட்களை போட்டு உடைப்பதும், படித்தவர்கள் படிக்காதவர்கள் எனச் சகட்டுமேனிக்கு ஒவ்வொரு குடிகார வீட்டிலும் அழுகையும், அடிதடிகளும் வாடிக்கையாகி விட்டது.

பள்ளி முடித்து நண்பர்களோடு வீடு திரும்பும் வழியில், வேட்டி உருவியபடி டாஸ்மாக் வாசலில் ஈ மொய்த்துக் கிடக்கும் அப்பாவைக் கண்டால் அந்த பிள்ளையின் மனம் என்ன பாடுபடும். மனம் கூசிப் போகாதா.
குடிப்பழக்கம் இல்லாத கணவரிடம், குடிக்கு அடிமையான அப்பாவோ, அண்ணனோ வந்து வம்புகள் வளர்த்தால், கணவர் கேட்கும் அவமானக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மனம் மழுங்கி மனைவி கைகட்டி நிற்கிறாள். குடிக்கும் கனவனாக இருந்தால் அதைவிட மானக்கேடு. உறவினரின் கல்யாணத்திற்கு பட்டு வேட்டியும் சட்டையுமாய் பளபளக்க வந்த கணவன் குடிக்கப் போய்விட்டானே, சபையில் மானத்தை வாங்கி விடுவானோ, சொந்த பந்தங்கள் முன்னால் மரியாதை கெட்டு நிற்கப் போகிறோமே, எந்த கெட்ட வார்த்தைகள் வரப்போகிறதோ, நிதானம் இழந்தவனோடு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டுமே என்கிற மனைவியின் பதைபதைப்பு அவனுக்கு ஏன் புரியாமல் போகிறது. சாரி சிஸ்டர் ஆபீஸ்ல பார்ட்டி. கொஞ்சம் ஓவரா போய்டுச்சு... என நண்பர்களின் கைத்தாங்களில் வீடு வந்து சேருபவனை, தோளில் சாய்த்து உள்ளே அழைத்துப் போகும் மிடில் கிளாஸ் பெண்ணின் கண்ணீர், அதிகாலையில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை எப்படி எதிர்நோக்கும்?

குடித்து மானமிழந்து மரியாதை இழந்து உடல் அழுகி கொத்துக் கொத்தாக செத்து மடிபவர்களை பார்த்தாவது அச்சம் வர வேண்டாமா? ஆதரவற்ற தாய் தந்தையரை, இளம் விதவைகளை உருவாக்கி வரும் மது அரக்கன், கைகோர்த்து மயானத்துக்கு  அழைத்துப் போகிறான். இருக்கும் இடமெல்லாம் சாராயக் குமட்டலோடும், குடலைப் பிடுங்கும் சாராய வீச்சத்தோடும் நெருங்கும் கணவனோடு எப்படி ஒரு பெண் குடும்பம் நடத்த இயலும். மனைவி மக்களால் கேவலப்பட்டு, சமூகத்தில் கூனிக் குறுகி வாழ்வதற்கு குடிப்பழக்கமே காரணம்.

அப்பா, அண்ணன், தம்பி, கணவன், மகன் என தான் சந்தித்த அத்தனை ஆண்களின் சாராய நெடியிலும் ஊறிப்போன ஒருத்தி, மது அருந்தாமலே கை கால் உதற மனநோய்க்கு ஆளாகிறாள். கடைசியில், சளைக்காமல் குடித்து குடித்து வயிறு அழுகி சாகக் கிடப்பவனையும் காப்பாற்ற வசதில்லாமல், தாலியை அடகு வைத்த அதே வட்டிக்கடை வாசலில் கண்ணீரோடு கையேந்தி நிற்கிறாள்.

பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், நலத்திட்டங்கள், இலவசங்கள் என ஒவ்வொரு அரசும் வாரி வழங்கியிருக்கிறது. கணவரின் வருமானமின்றி தன் குடும்பத்தை தானே காப்பாற்றிக் கொள்ளும் பொருளாதார வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைத்திருக்கிறது. மகிழ்வான விசயம்தான். அதற்காக குடித்துவிட்டு வரும் கணவனுக்கு தட்டு நிறைய சோறு போட்டு, ஏன்ய்யா... குடிச்சு சாகுற. குடிச்சாலும் வீட்ல வந்து குடி எனச் சொல்லிவிட்டு உள்ளுக்குள் புழுங்கி, கண்களைக் கசக்கி, விசிறி விட்டுக் கொண்டிருப்பதால் உங்கள் குடும்ப மானம் காப்பற்றப்பட போவதில்லை.


குடும்பக் கட்டமைப்புதான் நம் பலம். அது சிதையாமல் காப்பாற்றப்பட வேண்டுமெனில், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் இந்தக் குடிப்பழக்கம் வேறருக்கப் படவேண்டும். தனிமனித ஒழுக்கத்தை, சமூக விழுமியங்களை குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுங்கள். தாயும் தந்தையும்தான் குழந்தைகளின் முன்மாதிரி. அன்பைப் பருகி, குழந்தைகளை அரவணைத்து ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கினால், தன்னியல்பாக சமுதாயம் செழிக்கத் தொடங்கும். அதற்கு, சாதி, மதம், இனம், மொழி, அரசியல் பேதமின்றி மனித உயிர்களின் மதிப்பறிந்து அத்தனை குடும்பமும் களமிறங்க வேண்டும். அப்பொழுதுதான், ஒரு தலைமுறைக்கான காலத்திலாவது மது எனும் சாக்கடையை அடியோடு அகற்ற முடியும்.

மண்ணெல்லாம் மருந்தடித்து மலடாக்கி விட்டோம். ஓடிக்கொண்டிருக்கும் ஒன்றிரண்டு உயிர் அணுக்களையும் திராவகம் ஊற்றி தீய்க்கிறோம். இந்தநிலையில், கருவைச் சுமக்க வேண்டிய கருவறையில் ஆல்கஹால் சொட்ட ஆரம்பித்தால், தலைமுறையே இல்லாமல் தகித்துப் போகும் பாரதம். தண்ணீர் விட்டா வளர்க்கப் போகிறோம்? சர்வேசா!

No comments:

Post a Comment