சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Aug 2015

சேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...? ( மினி தொடர்- பகுதி - 1 )

து ஒரு நூற்றாண்டு கால கனவு. சேது கால்வாய் திட்டம்... இத்திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லாத அரசியல் கட்சிகளே ஒரு காலத்தில் இல்லை. சுதந்திர இந்தியாவில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் தமிழக அரசியல் கட்சிகளின் அஜெண்டாவில் இந்த கோரிக்கை நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.  

சேது சமுத்திரத் திட்டத்தை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு 2004-ல் துவக்கியது. இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ஆரம்பத்தில் பிரச்னை கிளம்பினாலும், அதற்கு பொறுப்பான அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், திட்டம் நிறைவேறினால் போதும் என மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இறுதியில் குற்றச்சாட்டுகளால் முடக்க முடியாத இந்த திட்டத்தை மத நம்பிக்கை முட்டுக்கட்டை போட்டு நிறுத்தியது.
 
ராமேஸ்வரமும் இலங்கையும் ராமாயண காலத்தில் தொடர்பு உடையதாக பெரும்பான்மை இந்திய மக்களால் நம்பப்படுவதால், அப்போது ராமர் கட்டிய பாலம் (ராம சேது) கடலுக்கடியில் இப்போதும் உள்ளது என்றும், அதை உடைத்து சேது கால்வாய் திட்டம் உருவாக்க வேண்டாம் என்று பாஜகவின் ஆசிபெற்ற இந்துத்வா  அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டன. அதற்கு மத்திய அரசும், கடலியல் ஆய்வாளர்களும் எவ்வளவோ விளக்கம் சொல்லியும், இந்துத்துவ தலைவர்கள் கேட்பதாக இல்லை. இறுதியில் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று, மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அறிவுரையுடன், சேது கால்வாய் திட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.


அதற்குப் பிறகு மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு,  டாக்டர் பச்சோரி தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்தது. அவர்களும் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி, மாற்று பாதை ஒன்றை சிபாரிசு செய்தனர். ஆச்சர்யமாக தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவும், ராமர் பாலத்துக்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளது. 

திட்டம் செயலுக்கு வர வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியும், எந்த வடிவிலாவது சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் போதும் என்று கேட்டுள்ளார். அது திமுகவின் முயற்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் அதிமுக அரசு அதில் கவனம் கொள்ளாமல் உள்ளது.

தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதி மோதல்கள், வேலையில்லா திண்டாட்டத்தால்தான் உருவாகிறது. அதைத் தடுக்க வேண்டும் என்றால் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. அப்படியிருக்கும்போது மக்களின் மத நம்பிக்கையால் ஒரு மிகப்பெரிய திட்டம் நிறுத்தப்பட்ட நிகழ்வு உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே செயல்படுத்த முடிவெடுத்த இத்திட்டம், ஆய்வு... ஆய்வு என்று இழுத்துக்கொண்டே வந்து விட்டது. அப்போதே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று வறட்சி மாவட்டமாக குறிப்பிடப்படும் ராமநாதபுரம், வளமான மாவட்டமாக ஆகியிருக்கும். கடலில் மீன் வளம் பெருகி, மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கச் சென்று, இலங்கை ராணுவத்திடம் சிக்கும் கொடுமை நடந்திருக்காது. ராமேஸ்வரம், பாம்பன் போன்ற ஊர்கள் சர்வதேச நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும். மக்களின் மதநம்பிக்கையும், அதை பயன்படுத்திக்கொண்ட அரசியல்கட்சிகளாலும் இத்தனையும் தவிர்க்கப்பட்டுவிட்டது சோகம்தான்.

சேது சமுத்திர திட்டம் குறித்து ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் நீந்திப்பார்ப்போம்... 


இந்திய பெருங்கடல் பகுதியில் ராமேஸ்வ‌ர‌ம், பாம்ப‌ன் ப‌குதிக‌ளுக்கும் நாக‌ப‌ட்டின‌த்துக்கும் இடைப்ப‌ட்ட கடல் ப‌குதி பாக். நீரிணை என்றும், பாம்ப‌னுக்குப் பிறகான க‌ன்னியாகும‌ரி வ‌ரையிலான‌ க‌டல் பகுதி பாக். கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக். கடல் பகுதி கப்பல்கள் சென்று வரத் தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. ஆனால், பாக். நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற்திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள். 

இந்த பாக் நீரிணையையும், மணற்திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திரத் திட்டமாகும்.

இதேபோல் கடந்த நூற்றாண்டில் வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் இணைக்க பனாமா கால்வாயும், எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாயும் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இப்போது அவை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், பல சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களின் பயண நேரம் குறைகிறது. எரிபொருள் செலவு குறைகிறது. மேலும் அந்தந்த நாடுகளுக்கு வருமானம் பெருகுகிறது. இதுபோன்று செயற்கையாக உருவாக்கப்படும் திட்டம்தான் சேது கால்வாய் திட்டம்.
300 மீட்ட‌ர் அக‌ல‌மும், 12.8 மீட்ட‌ர் ஆழ‌‌மும் கொண்ட‌து இந்த சேது சமுத்திர கால்வாய். இந்த‌க் கால்வாய் ஏற்ப‌டுத்தும் ப‌ணிதான் சேது ச‌முத்திர‌த் திட்ட‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌டுகிற‌து. இந்தியாவின் மேற்கு, கிழ‌க்கு ப‌குதிக‌ள் இந்த‌த் திட்ட‌த்தின் மூல‌ம் ஒருங்கிணைக்க‌ப்ப‌டும். இதுவ‌ரை மும்பை, கொச்சின் போன்ற அரபிக்கடல் ப‌குதியில் இருந்து ஒரு க‌ப்ப‌ல் சென்னை வ‌ர‌ வேண்டும் எனில், அவை இல‌ங்கையைச் சுற்றிக்கொண்டுதான் வ‌ரும். இப்போதும் அப்படித்தான் வந்துகொண்டிருக்கிறது. 

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அது த‌விர்க்க‌ப்ப‌ட்டு இந்த‌ கால்வாயின் மூல‌ம் அனைத்து கப்பல்களும் இந்திய‌ க‌டல் ப‌குதி வ‌ழியாக‌வே சென்று சென்னை, விசாக‌ப்ப‌ட்டின‌ம், பார‌தீப் போன்ற‌ கிழ‌க்குப் ப‌குதியில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளை சென்ற‌டையும். நேரமும் குறையும். செலவும் குறையும். 
இதை மாற்ற என்ன வழி... நாம் ஏன் இலங்கையைச் சுற்றி இந்தியாவின் இன்னொரு பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் 1860-ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான கேப்டன் ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது. அதற்காக அவர் கடலில் ஆய்வு செய்கிறார். பாம்பனுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை தோண்டினால் என்ன என்று யோசிக்கிறார்.

இவரின் திட்டத்தை 1863-ல்  சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் ஏற்றுக்கொள்கிறார். பின்பு 1872 - ல் சென்னை துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்ஸன் ஓகே சொல்ல, ஆய்வுப்பணிகள் துவங்கி நடந்து வந்தன.
ஆங்கிலேயரின் ஆய்வுகளைப் பின்பற்றி,  நாடு விடுதலையானபின் 1955-ல் பிரதமர் ஜவகர்லால் நேரு நியமித்த ராமசாமி முதலியார் தலைமையிலான ' சேது சமுத்திரத் திட்டக் குழு' ரூ. 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது. 

அதன் பின் என்ன காரணத்தாலோ இத்திட்ட மதிப்பீடு தூங்கியது. பிறகு நீண்ட வருடங்களுக்குப் பிறகு 1983-ல்  இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது.

அதற்குப் பிறகு...?

நீண்ட காலத்திற்குப் பிறகு 1983-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நியமித்த லெட்சுமி நாராயணன் குழு, 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை தயாரிக்கிறது. அதிலிருந்த நிபுணர் குழு வேறு ஒரு ஆராய்ச்சியை செய்தது.
கடலுக்குள் மணலை தோண்டி ஆழப்படுத்துவது சிரமம். வேலை முடிய நீண்ட நாட்களாகும். அதனால், மண்டபம்- வேதாளை ஊர்களுக்கு நடுவே நிலப்பரப்பை வாய்க்கால் போல் தோண்டி, வடகடலையும் தென்கடலையும் இணைத்து விடலாம். அப்படி வேலை செய்தால் சீக்கிரம் திட்டம் நிறைவேறும் பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போல் கப்பல்களை நிறுத்தி கடத்தி விடலாம் என்ற ஒரு திட்டத்தை தயாரித்தார்கள். ஆனால் இந்த புதிய வழித்தடம் அந்தப்பகுதி மக்களை அச்சம் கொள்ள வைத்தது.

இது நிறைவேற்றப்பட்டால் பாம்பன்போல், மண்டபம் பகுதி இன்னொரு தீவாகிவிடும். அது இப்பகுதி மக்களுக்கு பெரிய கஷ்டத்தை தரும் என்று  எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இத்திட்டத்தை மத்திய அரசும் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பின் இத்திட்டம் பற்றி யாரும் மூச்சே விடவில்லை. சேதுகால்வாய் திட்டம் பரணில் போடப்பட்டது.

ஆனால், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மட்டும் அவ்வப்போது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுங்கள்...  நிறைவேற்றுங்கள் என்று அவ்வப்போது அறிக்கை,  ஆர்பாட்டம் என்று நடத்தி கொண்டிருந்தார்கள். தமிழக மக்களின் கனவு திட்டம் கடைசிவரை கனவாகவே போய்விடுமோ என்ற நிலைக்கு மக்கள் வந்தார்கள்.
இப்படியே காலம் போய்க்கொண்டிருந்தது. இருபது வருடங்கள் கடந்துவிட்டது.

2௦௦4 ல் மத்தியில், திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் திமுகவின் கைதான் ஓங்கியிருந்தது. அதனால், தன் கட்சியின் முக்கிய கொள்கையான சேதுகால்வாய் திட்டத்தை எப்படியும் ஆரம்பித்துவிட வேண்டுமென்று காங்கிரஸ் தலைமையை நெருக்கி ஒப்புக்கொள்ள வைத்தார்கள். அதற்கு சோனியா சம்மதித்தார்.

உடனே புதிய ஆய்வுக்குழு போடப்பட்டது. பாக் நீரிணையையும், மணற்திட்டையும் ஆழப்படுத்தி மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் ஒரு கால்வாய் மூலம் இணைக்கும் திட்டத்தையும், அதற்கான எஸ்டிமேட்டையும் தயாரித்தார்கள். அப்போது அதற்கு அவர்கள் கேட்ட தொகை 2427 கோடி.
இத்திட்டம் வந்தால் கடல் பகுதியில் எப்போதும் கண்காணிப்பு இருக்கும். பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும், எனப் பயந்த சில கடத்தல்காரர்களுக்கும், எல்லை கடந்து மீன் பிடிக்க செல்வதையே வேலையாக வைத்திருக்கும் மீனவர்கள் அல்லாத நபர்களுக்கும் இது  அச்சத்தை உருவாக்கியது. அதனால், சேது கால்வாய் திட்டத்துக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொரு கருத்துக்கேட்பு கூட்டத்திலும் சுற்றுச்சூழல் கெடும், மீன்வளம் அழியுமென்றும் மீனவர்கள் அச்சம் தெரிவித்தார்கள். ஆனால், அரசு தரப்போ, கடலை ஆழப்படுத்தும்போது மீன்வளம் அழியாது இன்னும் அதிகமாகும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்க ஆழப்படுத்திய பின்புதான் அங்கு மீன்வளம் பெருகியது என்றும், கடலில் எப்போதும் பாதுகாப்பு இருப்பது உங்களுக்கு நன்மை செய்யத்தான். இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் இருக்காது, இது மட்டுமில்லை, ராமேஸ்வரத்தில்  நுறு கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் மீன்பிடித்துறைமுகம் அமைத்து தரப்படும் என்றும், சேது கால்வாய் திட்டம் முழுமையடையும்போது மீனவர்களின் பிள்ளைகள் படிக்க பள்ளிகள், கல்லூரிகள், பலவேறு உப தொழில்கள் பெருகுமென்றும் சொல்லப்பட்டது.

அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் மீனவர்கள் இல்லை. இதில் ஒரு முக்கிய விஷயம், அதுவரை ராமர்பால சர்ச்சையை யாரும் எழுப்பவில்லை. இத்திட்டத்திற்கு ஆரம்பத்தில் மீனவர்களின் எதிர்ப்பு இருந்தாலும், இன்னொரு பக்கமுள்ள மீனவர்கள் இத்திட்டத்தை வரவேற்றார்கள்.

இப்படியே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று போய்க்கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த தமிழக மக்களும் இத்திட்டம் நிறைவேற வேண்டுமென்றே ஆசைப்பட்டார்கள்.

எல்லாவித எதிர்ப்பையும் கடந்து,  2004 டிசம்பர் 6 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரகுபதியை தலைவராக கொண்டு,  சேது சமுத்திரகால்வாய்த் திட்ட நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் துவக்கவிழா 2005 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. ஒரு பண்டிகைபோல கொண்டாடப்பட்ட இந்த விழாவில்,  காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். ‘’சமுத்திரத்தாயின் சரித்திரக் குழந்தை’’ என்று இத்திட்டம் போற்றப்பட்டது.

துவக்கவிழாவில் அப்போதைய மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குத்துவிளக்கு ஏற்றினார். திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார். விழா மலரை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.
பிரதமர் தொடங்கி வைத்ததுமே, கடலில் சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணியும் உடனடியாக தொடங்கியது. இதை விழாப்பந்தலில் கூடியிருந்தவர்கள் லைவாக டிவியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியை பார்த்ததும் மேடையில் இருந்த தலைவர்களும், விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விழாவில் சோனியாகாந்தி பேசும்போது, ‘’இன்று ஒரு நூற்று ஐம்பது ஆண்டுகால கனவு நிறைவேற்றப் பட்டுள்ளது.. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தொழில்நுட்பம் மிகுந்த சவாலான, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை நனவாக்க உறுதியுடன் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இம்மாபெரும் திட்டத்தால் இந்திய கடல் எல்லைக்குள் ஒரு தொடர்ச்சியான கடல்வழிப் பாதை அமைப்பதால் தேசிய அளவிலும் மாநில அளவிலும் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு, குறிப்பாக தென் மாவட்டங்கள் இத்திட்டத்தால் பெரும் பயன் அடையும். தமிழகத்தின் கடலோர பகுதியின் பொருளாதாரமும், கடல் வணிகமும் பெரும் வளர்ச்சி பெறும். 

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டம் குறித்து சில வினாக்களை எழுப்பியுள்ளது நான் அறிந்ததுதான். பவளப்பாறைகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து அச்சம் எழுப்பப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துபவர்கள் இந்த கவலைகளை நன்கு அறிந்திருக்கின்றார்கள். திட்டப்பகுதியின் சுற்றுச்சூழல் காத்து இத்திட்டத்தை நிறைவேற்றுவார்கள். 
குறிப்பாக, மீனவ சமுதாயத்தின் மீது தனிக்கவனம் செலுத்துவோம். உண்மையிலேயே  இந்த நாள் இந்திய திருநாட்டிற்கும் தமிழகத்திற்கும்  ஒரு மனநிறைவு அளிக்கும் நாள். ஒரு வரலாறு படைக்கும் நாள்...’’ என்றார்.

விழாவில் கருணாநிதி, மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், டாக்டர் அன்பு மணிராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம்.மாநில செயலாளர் என்.வரதராஜன், சி.பி.ஐ. மாநில செயலாளர் தா.பாண்டியன், முஸ்லிம்லீக் மாநில தலைவர் கே.எம். காதர்மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இப்படி கோலாகலமாக துவக்கப்பட்ட திட்டத்திற்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் அலுவலகங்கள் திறக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இப்பகுதி மீனவர்களுக்கு சில நலத்திட்டங்களையும் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். மீனவர்களின் போராட்டத்தை அடக்கி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தபோதுதான்,....

‘’சேது சமுத்திரத்திட்டத்தால் நாம் வணங்கும் ராமபிரான் கட்டி இப்போதும் கடலுக்கடியில் இருக்கும் ராமர்பாலம்(ராமசேது)உடையும் ஆபத்து, இது இந்துக்களின் நம்பிக்கையை மத்திய காங்கிரஸ் அரசும், திமுகவும் திட்டமிட்டு அழிக்க பார்க்கிறது’’ என்ற குரல் எழும்ப ஆரம்பித்தது.

பா.ஜ.க.வின் உப அமைப்புகள் கையில் எடுத்த இந்த அஸ்திரம் விஸ்வருபமெடுத்து சேதுகால்வாய் திட்டத்துக்கே ஆப்பு வைக்கும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணியில் இடம்பெற்ற திமுகவும்  சிறிதும் நினைக்கவில்லை...





No comments:

Post a Comment