சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Aug 2015

கொள்ளையடிக்கும் நிலைமைக்கு உயர்ந்த வெங்காய விலை!

ந்தியாவில் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை அடைந்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், கிலோ ரூ.100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வரும் வெங்காயம் உரிக்காமலேயே கண்ணீரை வரவழைத்துள்ளது என்றால் அது மிகையில்லை.
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என்று இரண்டு வகைகளும் நமது சமையல் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்து வருகிறது. சாதாரண காலங்களிலேயே சின்னவெங்காயம் என்னும் நாட்டு வெங்காயம் பெரிய வெங்காயத்தின் விலையைவிட ஒன்றைரை மடங்கு அல்லது இரண்டு மடங்கு அதிகமாக விற்பது வழக்கம்.இப்போது கேட்கவே வேண்டாம். மொத்தத்தில் வெங்காயத்தை,  பயன்பாட்டில் இருந்து கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கித்தான் வைக்கவேண்டுமோ என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது சந்தை நிலவரம்.

சமீப நாட்களாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நாள்தோறும் விலை உயரும் பொருட்களில் வெங்காயம்  முதலிடத்தைப் பெற்றுள்ளது. சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80 லிருந்து ரூ.100 வரை விற்கப்படுகிறது. அதே போல சின்ன வெங்காயம் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது கூடுதல் வயிற்றெரிச்சல் விஷயம். 

கடந்த சில வருடங்களாகவே வெங்காயத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்துதான் வருகிறது. ஆனால் தற்போது ஒரே அடியாக உயர்ந்து நூறைத் தொட்டு இருப்பது மக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இன்றுதான் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய உள்ளதாகவும், அதற்கான டெண்டர் கோரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் முக்கிய உணவுப் பொருளாக இருக்கும் வெங்காயம், தற்போது தேசிய பிரச்னையாக மாறியுள்ளது. வெங்காய விலையேற்றம் பொதுமக்களை கடந்த சில வாரங்களாகவே கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏற்கனவே வெங்காயத்தை இருப்பு வைத்திருந்த கடைக்காரர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளின் காட்டில் தற்போது அடைமழைதான்.

தங்கத்தின் மதிப்பைப் போல வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இது எந்த அளவுக்கு என்றால், கொள்ளையர்களின் கவனம் தங்கத்திற்கு பதிலாக வெங்காயத்தின் பக்கம் திரும்பும்  அளவுக்கு சென்றிருக்கிறது மும்பையில் நடந்துள்ள வெங்காய கொள்ளை சம்பவம்.
மும்பை புறநகர் பகுதியான வடாலா நகர் அருகேயுள்ள உள்ள பிரதீக்‌ஷா நகரில் வெங்காய மண்டி வைத்திருக்கும் அனந்த் நாயக்,  கடையில்தான் 700 கிலோ வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருட்டுப்போன வெங்காயத்தின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தற்போது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடருகிறது. மும்பையில் 700 கிலோ வெங்காயம் கொள்ளைபோன பரபரப்பு அடங்குவதற்கு முன்பே நாசிக்கில் 2000 கிலோ வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள நந்த்கான் தாலுகாவைச் சேர்ந்த பிம்பார்கெட் கிராமத்தில் வசித்துவரும் விவசாயி அபசஹீப் பவார்,தனது குடோனில் இருப்பு வைத்திருந்த 2000 கிலோ வெங்காயம் மர்ம மனிதர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரமும் போலீஸ் விசாரணைக்குச் சென்றுள்ளது.     
இந்த வெங்காய கொள்ளை தொடர்பான செய்தி பொதுமக்களிடையே மட்டுமல்லாது வெங்காய மொத்த வியாபாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நாடு முழுவதும் வெங்காய மண்டிகள் கொள்ளைக்காரர்களின் இலக்கிற்கு ஆளாகினால் என்னவாகும்?
உள்நாட்டு விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் மொத்த கொள்முதல் மற்றும் சில்லரை விலை நிலையாக இல்லாமல் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் டெல்லியில் பொது மக்களின் நலனை கருதி வெங்காயத்தை மானிய விலையில் விற்க நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளது. அதே போல  வெங்காயத்தை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்வு இன்னமும் அரசின் கண்ணில் படவில்லை போலும்.

இந்த விசயத்தில் உடனடியாகப்  போர்க்கால நடவடிக்கையாக மீண்டும் வெங்காயம் சராசரி மனிதர்களுக்கும் கிடைக்க தமிழக அரசும், மத்திய அரசும் முன்வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!



No comments:

Post a Comment