சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

கொலை செய்யப்படும் டாக்டர்கள்!

பெரம்பலூரை சேர்ந்தவர் ஜேசு. இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது மனைவி பெயர் சத்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சத்யாவும் டாக்டருக்கு படித்துள்ளார். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வேலைபார்த்த இவர், தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ மேல்படிப்பு (எம்.எஸ்.) படித்து வந்தார்.

கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள கும்மாள அம்மன் தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இவர் தங்கி இருந்த அதே வீட்டில் சங்கீதா என்ற பெண் டாக்டரும் தங்கியுள்ளார். அவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மேல்படிப்பு (எம்.டி.) 2வது ஆண்டு படித்து வருகிறார்.


கடந்த 19ஆம் தேதி இரவு, டாக்டர் சத்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரவு பணி செய்தார். பணியை முடித்துவிட்டு, கடந்த 20ஆம் தேதி காலை 8.30 மணியளவில் வீட்டுக்கு வந்தார்.  அவருடன் தங்கியிருந்த டாக்டர் சங்கீதா, பகலில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக சத்யா இருந்தார். வேலை முடிந்து சங்கீதா பிற்பகல் 3 மணிக்கு வீட்டுக்கு வந்த போது, படுக்கையறையில் கழுத்தில் குத்தப்பட்ட கத்தியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார் சத்யா. அவரது பிணம் படுக்கை அறையில் சுவரோடு சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. பிணத்தின்மேல் படுக்கை போட்டு மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கொலையை விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில், இதற்கு முன்பு கடந்த மே மாதம் 6ஆம் தேதி முகப்பேர் பகுதியில் உள்ள நொளாம்பூரில், இன்ஜினியர் சங்கர் என்பவரின் மனைவி பல் டாக்டரான சங்கீதா கொலை செய்யப்பட்டார். கிளினிக்கில் இருந்த சங்கீதாவை கொலை செய்து விட்டு, 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த கொலையாளியை காவல்துறையினர் இன்னமும் தேடி வருகின்றனர். சென்னை டாக்டர்கள் சங்கீதாவும், சத்யாவும் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களை பதற வைக்கிறது.

டாக்டர் சங்கீதா கொலை வழக்கில் காவல்துறையினருக்கு இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. சங்கீதா, கொலையாளியிடம் எழுதி கொடுத்த ஒரு துண்டு சீட்டு மூலமாகவே இந்த கொலை வழக்கு விசாரிக்கப்படுகிறது. நோயாளி போல நடித்து சங்கீதாவை கொலை செய்த கொலையாளி யார்? என்று துப்பு துலங்காத நேரத்தில், மீண்டும் ஒரு டாக்டர் கீழ்பாக்கத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரை காப்பாற்றும் டாக்டர்களின் உயிருக்கு கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் மருத்துவத்துறையினர். கீழ்பாக்கத்தில் நடந்த டாக்டர் சத்யா கொலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இருப்பினும் கொலையாளிகள் யார் என்ற விவரம் காவல்துறைக்கு தெரியவில்லை. இந்த இரண்டு கொலை வழக்குகளும் காவல்துறையினருக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது.

டாக்டர் சத்யா கொலையில், அந்த குடியிருப்பில் தங்கி இருந்தவர்களிடமும், எதிர் வீட்டில் தங்கி இருந்தவர்கள், கொலை நடந்த இடத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட இரண்டு தொழிலாளகளிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களின் கைரேகைகளை பதிவு செய்து, கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

சங்கீதா கொலை வழக்கில் காவல்துறையினர் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. கொலை நடந்த இடத்தில் காவல்துறையினருக்கு கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு ஒரு துண்டு காகிதம். அதில் சரவணன், அவனுடைய வயது, மூன்று பற்களைக் கட்டுவதற்கு 12 ஆயிரம் செலவாகும், ஒரு செல்போன் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தன. செல்போனில் தொடர்பு கொண்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதிர்முனையில் பேசியவர் ஒரு விபச்சார புரோக்கர். அவரிடம் காவல்துறையிலிருந்து பேசுவதாக சொன்னதும் அவர் எதையோ உளறி இருக்கிறார். இதனால் கொலையாளி கொடுத்த செல்போன் நம்பர் போலி என்று தெரிந்தது.
அடுத்து சரவணனன் என்ற பெயரில் உள்ளவர்களிடம் விசாரிக்கப்பட்டது. இதற்காக அந்தப்பகுதி வாக்காளர் பட்டியலிருந்து சரவணன் பெயர்கள் எடுக்கப்பட்டு அவர்களிடம் பற்களை குறித்து விசாரித்துள்ளது. அதிலும் உருப்படியான தகவல் கிடைக்கவில்லை. இதனால் கொலையாளி குறித்து தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சங்கீதா கொலை வழக்கின் தலைவலியே தீராத சமயத்தில், இன்னொரு டாக்டரான சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு டாக்டர்கள் கொலை வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் சென்னை காவல்துறையினர்.

உயிரைக் காப்பாற்றும் டாக்டர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுங்கள் காவல்துறையே!



No comments:

Post a Comment