சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2015

இன்று நாய்கள்... நாளை? - கோவளத்தில் நடந்த கொடூரக் கொலை..!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என உயிர்களில் ஏற்றத்தாழ்வுக் கூடாதென ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்குச் சொன்ன அறிவு எங்கள் அறிவு என மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால், அந்த பெருமையின் செவிட்டில் பொளேரென அறைகிறது கோவளம் ஊராட்சியில் 20 தெரு நாய்களைச் சுட்டுக்கொன்ற சம்பவம்.
கடந்த 19-ம்தேதி காலையில், கோவளம் கடற்கரையோர தெருக்களில் திரிந்த நாய்களை வேட்டையாடுபவர்களை வைத்து சுட்டுத்தள்ளி இருக்கிறார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட நாய்களில் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் என்பவரின் வளர்ப்பு நாயும் இறந்தது. இதனால் மோகன்,  ஃபுளூகிராஸ் உதவியுடன் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், கோவளம் ஊராட்சி தலைவர் ஜானகிராமன், உதவியாளர் முகமது அலி, வேட்டையாடிய செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்ட செல்வம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மோகன், “காலையில வழக்கம் போல கோவளம் கடற்கரையில டோக்கி (வளர்ப்பு நாயின் பெயர்)யோட வாக்கிங் போயிட்டிருந்தேன். திடீர்னு துப்பாக்கியால சுடுற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல சிலர் நாய்களை சுட்டுக்கிட்டு இருந்தாங்க. உடனே நான், 'டோக்கி..!'ன்னு கத்தினேன். டோக்கியும் என்னை நோக்கி ஓடிவந்தான். நான் கையை தூக்கிக்கிட்டு,'சுடாதீங்க...!'ன்னு கத்திக்கிட்டே ஓடுனேன். அஞ்சடி தூரத்துல டோக்கி வரும்போது சுட்டுத்தள்ளிட்டாங்க. அவன் இல்லாமல் வீடே வெறிச்சோடிடுச்சு. யாரும் சரியா சாப்பிடறது கூட கிடையாது’’ என்றவர், தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.     

கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமனிடம் பேசினோம்.
“கிராமசபைக் கூட்டத்துல இந்த பகுதி பெண்கள், நாய் தொல்லை இருப்பதாக புகார் சொன்னாங்க. இதனால் நான் வார்டு உறுப்பினர்களிடம் நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். ஆனால், அதை பிடிக்க வந்த நரிக்குறவர்கள் சுட்டுட்டதா சொல்றாங்க’’ என்றார்.
    
ஃபுளூ கிராஸ் பொதுமேளாளர் டான் வில்லியம்ஸ், “கோவளம் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. பிரச்னை பெரிதாகக் கூடாது என்பதற்காக இறந்த நாய்களை படகில் ஏற்றிச்சென்று கடலில் வீசிவிட்டதாக சொன்னார்கள். ஆனாலும் எட்டு நாய்களின் உடல் கரை ஒதுங்கியது. அவற்றை கைப்பற்றி இருக்கிறோம். நாய்களை சுட்ட ஜானகிராமன் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை விடமாட்டோம்.
இதுபோல பல ஊராட்சிகளில் நாய்களை சுடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்ந்தால் அவர்கள் மீதும் வழக்கு பதியப்படும்” என எச்சரித்தார்.



No comments:

Post a Comment