சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Aug 2015

ஜனாதிபதி மாளிகை: குரங்குகள் வாங்கும் பென்சன்!

அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்து வைத்ததுபோல குறைவான வெளிச்சத்தில் இருந்தது. இடுப்பளவு உயரத்தில் இருந்து சீலிங் வரைக்கும் நீண்ட பிரெஞ்சு ஜன்னல்கள். பெரும்பாலான ஜன்னல்கள் வேலைப்பாடுகள் செய்த வெல்வெட் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டு டெல்லியின் சூரியனும், வெக்கையும் உள்ளே வராமல் தடுத்தன. புறாக்கள் ஜன்னல் விளிம்புகளில் உட்கார்ந்து சத்தமிட்டன. அண்மையில் இருந்த மரங்களிலும், கட்டடங்களிலும் குரங்குகள் நிறைய சஞ்சரித்தன. இயற்கையான வனப்பிரதேசச் சூழல் யன்னல்களை அங்காங்கே கறைபட வைத்திருந்தது. எந்த மனிதனுக்கு

இந்த யன்னல்களை கழுவும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் யோசித்தேன். அதுவரை ஒரு பெண் பணியாளரைக்கூட நான் காணவில்லை. அந்த அறையில் எதை எடுத்தாலும் அது பிரம்மாண்டமானதாகவே இருந்தது. பிரம்மாண்டமான சோபாக்கள், தடிப்பான கம்பள விரிப்புகள், ராட்சத தொங்கு விளக்குகள். அவருடைய மெய்க்காவலர்கள்கூட திடகாத்திரமாகவும், பாரமாகவும் இருந்தார்கள்.


பென்னம் பெரிய கதவுகள் வழியாக வந்துபோகும் மிலிட்டரி உடையணிந்த உதவியாளர்கள்கூட கனமான ஆகிருதிகளுடன் காணப்பட்டார்கள். எல்லாமே பெரியதாக இருந்தது, ஒரு மேசையின் முன் உட்கார்ந்து கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதரைத் தவிர. அவருடைய சிறிய உடலில் இருந்து சன்னமாகத்தான் குரல் எழும்பியது. அந்த அறையின் பரப்புக்குள், அவர் குரலை கேட்க வேண்டுமென்றால் சுற்றிவர கடுமையான மௌனம் தேவை. ஆனால் அந்தப் புறாக்கள் அவர் பேசுவதை மூழ்கடித்தன.'எல்' எழுத்துப்போல உயர்ந்த மரத்தில் வடிவமைக்கப்பட்ட அவருடைய தொன்மையான மேசை, ஒரு தூரத்து மூலையில் தள்ளப்பட்டு, இந்த ஆடம்பரங்களுக்கு மன்னிப்பு கேட்பதுபோல காட்சியளித்தது.

அப்துல் கலாம் ஆட்சி செலுத்துவது போலவே இல்லை. இந்தப்பெரிய படாடோபங்களில் அவர் சங்கடப்படுவது போலவே தோற்றமளித்தார். ஒரு கல்விக் கூடத்திலோ, ஒரு பல்கலைக் கழகத்திலோ அவர் இன்னும் கூடுதலான சௌகரியத்துடன் தன்னை உணர்ந்திருப்பார் என்று எனக்குப்பட்டது. என்னையும் ஒரு மாணவர் போலவே அவர் வரவேற்றார்.

நான் பிபிசி குழுவுடன் கடந்த ஒரு மாத காலமாக, விவரணப்படம் ஒன்று எடுப்பதற்காக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருந்தேன். உலக அழகி ஐஸ்வர்யராயின் பேட்டி அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்ததால், மூன்று மாதம் முன்பாகவே ஒழுங்கு செய்திருந்த ஜனாதிபதியின் பேட்டியிலும் கடைசி நிமிடங்களில் சிறு மாறுதல் செய்யவேண்டி நேர்ந்தது. ஒரு நாட்டின் ஜனாதிபதியிலும் பார்க்க ஒரு நடிகை பிஸியாக இருந்ததை கண்டு பிபிசி டீம் அதிசயித்தது. நாளைய பேட்டியே கடைசி. அத்துடன் வந்த காரியம் முடிந்து, நான் மறுபடியும் வாஷிங்டனுக்குப் பயணமாகி விடுவேன்.

பிபிசி குழுவில் நாங்கள் எட்டுப்பேர் இருந்தோம். எல்லாமே வெள்ளைக்கார முகங்கள், என்னுடையதை தவிர்த்து. பல பாதுகாப்பு அரண்களை தாண்டி, பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிட்ட எங்களை ஒரு வரவேற்பு அறையில் உட்காரவைத்திருந்தார்கள். அதுவே ஒரு ஜனாதிபதிக்கு தகுதியான கம்பீரத்தோடு இருந்தது. எங்கள் குழுவின் தலைவர், விவரணப் படக் கலையில் புகழ்பெற்ற பட்டி ஸ்மித் என்பவர். ஜனாதிபதியைப் பார்க்க உள்ளே போகவேண்டிய நேரம் வந்ததும் இரண்டு பாதுகாவலர்களும், ஓர் உயர் அதிகாரியும் எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் மட்டுமே ஜனாதிபதியிடம் கைகுலுக்கினேன். மற்றவர்கள் காமிராவுக்கு பின்னே நின்று கொண்டார்கள். எங்களை அழைத்து வந்த அதிகாரியின்
முகத்தில் ஆச்சரியத்திலும் பார்க்க ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

பாதுகாவலர் படக்கென்று திரும்பி,  தன் நேரம் வீணாகிவிட்டது என்பதை அப்பட்டமாகக் காட்டியபடி மறைந்துபோனார். ஜனாதிபதி என்னை சஞ்சயன் என்று உரிமையுடன் அழைத்தார்; நான் பதிலுக்கு ‘மிஸ்டர் பிரெசிடென்ட்’ என்றேன். எங்கள் சம்பாசணை தொழில் நுட்பம், இந்தியாவின் எதிர்காலம், சாதாரண மக்களின் அன்றாட சந்தோசம் இவற்றையெல்லாம் தொட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் சிருஷ்டிகர்த்தாவான ஒரு ஜனாதிபதியின் சிந்தனைகள் கவித்துவமாகவே இருந்தது என்னை வியப்பிலாழ்த்தியது.
"இங்கே பாருங்கள் சஞ்சயன், நான் நூறு கோடி மக்களைச் சிரிக்கவைக்க விரும்புகிறேன். உங்களுக்குப் புரிகிறதா? நூறுகோடி மக்கள் சிரிக்கவேண்டும். இது முடியும்."-  அவர் அதை சொன்னவிதம், அறிவை மீறிய ஒரு தேவவாக்கு போல என் காதுகளில் விழுந்தது. என் தலை என்னையறிமால் அசைந்தது. 

அவர் தன் கனவை சொல்ல ஆரம்பித்தார். "இந்தியாவைத் தொடுக்கவேண்டும். முக்கோண வடிவமான இந்தியாவை குறுக்கறுத்து ஆயிரம் புதுச்சாலைகள் ஓடவேண்டும்; இணையம் மூலமும், சாட்டிலைட் மூலமும் இந்தியா முழுவதையும் இணைக்கவேண்டும். ஒவ்வொரு நூறு கிராமத்துக்கும் ஓர் இணைய செர்வர். அதிலிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்னஞ்சல், இணைய தள வசதிகள். ஒரு புதிய EDUSAT என்ற செயற்கைகோளை விண்வெளியில் நிறுவுவதற்கான ராக்கெட் ஒன்று விரைவிலேயே ஏவப்படும். உலகத்திலேயே கல்விக்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சாட்டிலைட் இதுவாகவே இருக்கும். இதிலிருந்து லட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களுக்கு கல்வி அறிவுப் போதனைகள் ஒலிபரப்பாகும்..." என்ற கலாம்,  'ignited minds' என்றார்.
இளம் மனங்களில் ஒரு தீ பற்றவேண்டும். வெளியே வரத் துடிக்கும் இந்திய இளைஞர்களின் உச்சமான திறமைகளை விடுவிக்கவேண்டும். இந்த அரிய மனிதர், சந்தேகமில்லாமல் தன் பரிவான உள்ளத்தில் கனவுகள் காணும் ஒரு நம்பிக்கைக்காரர்.

தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினார்கள். தேநீரை சிறிய பீங்கான் கிண்ணத்தில் பருகியபடி, ஜனாதிபதி தன் மாளிகையைப் பற்றி சொன்னார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலத்து கட்டடக் கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட அந்த மாளிகையின் முதல் வைஸ்ராய் எர்வின்; கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன். என்றென்றைக்கும் அடக்கியாளலாம் என்ற எண்ணத்தில் பிரிட்டிஷார் எழுப்பிய மாளிகையில், அவர்கள் 17 வருடங்கள் மட்டுமே ஆட்சி செலுத்தினர்.

ஜனாதிபதி பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு இன்னொன்று புலப்பட்டது. இந்த கண்ணைப் பறிக்கும் சோடனைகளும், அலங்கார தூண்களும், மாளிகையும் அப்துல் கலாமின் மாபெரும் கனவுகளை தாங்குவதற்கு போதாத ஒரு சிறு குடிசையாகவே எனக்கு அப்போது தோன்றியது.

நான் விடை பெறுமுன் கேட்டேன். "மிகுந்த அழகுணர்வோடு பராமரிக்கப்படும் உங்கள் தோட்டத்துக்கு போவீர்களா? குரங்குகள் தொல்லைப் படுத்துவதில்லையா?"

"ஓ, குரங்குகள், அவை பெரிதாக என்னை தொந்திரவு செய்வதில்லை." -இப்படிச் சொல்லியவாறே தன் மேசையில் பதித்த சிவப்பு பொத்தானை ஜனாதிபதி அழுத்தினார். அந்தப் பொத்தானை அவருடைய மேசையில் ஒருவித ஒளிவு மறைவுமின்றி ஒட்டி வைத்திருந்தார்கள். அதிலே இருந்து தாறுமாறாக சென்ற வயர்கள் மேசையின் ஓரத்தில் ஸ்டேப்பிள் செய்யப்பட்டிருந்தன. ஒரு விண்வெளி விஞ்ஞானியும், மாபெரும் நாட்டின் ஜனாதிபதியுமான அவருடைய மேசையிலே ஓடும் வயர்களை மறைத்து வைப்பது அவ்வளவு கடினமான காரியமா என்று என்னை யோசிக்க வைத்தது.

"இந்தக் குரங்குகள் எங்களைத் தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள சில உபாயங்கள் உண்டு" என்றார். அப்பொழுது ஜனாதிபதி எழுதிய இரண்டு புத்தகங்களை அவருடைய உதவியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ஆங்கிலப் புத்தகத்தில் கையப்பமிட்டு என்னிடம் தந்தார். மற்றது தமிழ் புத்தகம். அதில் தமிழில் கையெழுத்து வைத்து, "இதை எழுத்தாளரான உங்கள் அப்பாவிடம் கொடுங்கள்!" என்றார்.
நான் விட்ட இடத்தைப் பிடித்துக்கொண்டு என்ன உபாயங்கள்? என்றேன். "காவல்கார குரங்குகள். எங்களுக்கு ஓயாது தொல்லை தரும் சிறிய குரங்குகளுக்கு பெயர் லங்கர். பெரிய குரங்குகளின் பெயர் மக்காக்கி. பயிற்சி கொடுத்த மக்காக்கி குரங்குகளை சங்கிலியில் கட்டி, காவல்காரர்கள் சுற்றிலும் உலாத்துவார்கள். இவற்றைக்கண்டதும் சிறிய குரங்குகள் ஓடிவிடும், கிட்ட வராது".

என் முகத்தில் தோன்றிய ஆச்சரியத்தை என்னால் மறைக்கமுடியவில்லை.  

‘காவல் காக்கும் பெரிய குரங்குகளுக்கு சம்பளம் உண்டா?’ என்றேன், பாதி நகையுடன்,  "நிச்சயமாக. ராஷ்டிரபதி பவன் ஊழியர்களின் பட்டியலில் அவற்றின் பெயர்களும் உண்டே...!"- உலகத்தின் ஆகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபதி என்னுடைய முழங்கையை பிடித்து தன் அற்புதமான தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.
கருணையே உருவான அந்த நல்ல மனிதருக்கு என்னுடைய மனக்கிலேசம் எப்படியோ தெரிந்துவிட்டது. "அவை ஓய்வு பெற்றபிறகு அவைக்கு பென்சனும் இருக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment