சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Apr 2015

அமிதாப் வாங்கித் தந்த ஆட்டோ!

மிழ்நாட்டில் அமிதாப் பச்சன் கெட்-அப்போடு ஆட்டோ ஓட்டும் நபரைப் பார்த்திருக்கிறீர்களா? ‘ரோத்தே ஹுவே ஆத்தே ஹே சப்...’ என ‘முகேதர் கா சிக்கந்தர்’ படத்தின் டைட்டில் பாடலைக்கூட அனாயாசமாகப் பாடியபடி ஆட்டோ ஓட்டுகிறார் அமிதாப் கண்ணா!
சென்னை தி.நகர் தெற்கு போக் ரோட்டில் அகஸ்தியர் கோயில் ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் ஆட்டோ டிரைவர் கண்ணனின் பெயரே இப்போது அமிதாப் கண்ணாதான்.

‘‘ஆமா சார். எனக்கு அமிதாப் கண்ணானு பேரை மாத்தி வெச்சதே அமிதாப் சார்தான். 1999-லதான் அவரை முதன்முதல்ல பார்த்தேன். ஆனா, சின்ன வயசுல இருந்தே நான் அமிதாப் பச்சனோட கொலவெறி ரசிகன். அவர் நடிச்ச ஒரு படத்தைக்கூட மிஸ் பண்ணினது இல்ல. அவரைப் போலவே டிரெஸ் மாட்டிக்கிட்டு தி.நகர்ல ஒரு மெக்கானிக் ஷாப்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். என்னை எல்லோரும் அமிதாப்னு கிண்டலா கூப்பிடுவாங்க. சென்னையில அவர் படங்கள் ராஜ்குமாரி, மெலோடி, நாகேஷ் தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகும். அங்கெல்லாம் முதல்நாள் முதல் ஷோ பார்த்துட்டு சாப்பாடு, ஸ்வீட்ஸ்னு சின்னக் குழந்தைகளுக்கு இலவசமா தியேட்டர் முன்னாடி கொடுத்து பயங்கர அலப்பறை பண்ணுவேன். கொஞ்ச நாள் மும்பையில டாக்ஸி ஓட்டினேன். அவரைப் போலவே டிரெஸ் பண்ணிக்கிட்டு டாக்ஸி ஓட்டினதனால எனக்கு அங்கேயும் ஃபேன்ஸ் இருந்தாங்க. 1999-ல அவர் சென்னை வந்திருந்தப்ப, நான் இங்கேதான் இருந்தேன். அகஸ்தியர் கோயிலுக்கு அதிகாலை ஐந்து மணிக்கு சாமி கும்பிட வருவார். ஆறு மணிக்கு விடிஞ்சு கூட்டம் சேர்றதுக்குள்ள சிவாஜி சார் வீட்டுக்குப் போயிடுவார். இதை அவர் பல வருஷங்களா வழக்கமா வெச்சிருக்கார்னு தெரிஞ்சுக்கிட்டேன். அந்த வருஷம்தான் அவரை நான் பார்த்தேன். கடவுளைப் பார்த்த மாதிரி இருந்துச்சு. அவரை மாதிரியே நடு வகிடு எடுத்து சீவி கூலிங் க்ளாஸ்லாம் போட்டு போய் நின்னதும் அவருக்கு ஷாக். எனக்குத் தெரிஞ்ச இந்தியில நான் பேச...அவருக்குத் தெரிஞ்ச தமிழ்ல அவர் பேசனு செம ஜாலியா டைம் போனதே தெரியலை.  ‘‘எனக்கு சென்னையில இப்படி ஒரு வெறித்தனமான ரசிகன் இருக்கிறது  சந்தோஷமா இருக்கு பையா’’னு கட்டிப்பிடிச்சுக்கிட்டார். ‘‘உனக்கு இது என் பரிசு. ஒரு ஆட்டோ வாங்கிக்க’’னு பணத்தை எடுத்து நீட்டிட்டார். வீட்டுக்கு வந்துதான் எண்ணிப்பார்த்தேன். 50,000 ரூபாய் இருந்தது.
அதுலதான் ஆட்டோ வாங்கினேன். என்னோட ஆட்டோ நம்பர் 3890, அவர் வெச்சிருக்கிற கார்கள்ல ஒண்ணோட நம்பர்தான். ‘ஏஜே’ங்கிற லெட்டர். அமிதாப்பையும் ஜேங்கிறது ‘ஷோலே’ படத்துல அவர் பெயர் ‘ஜெய்’யைக் குறிக்கும். என்னோட செல்போன் நம்பர் அவர் பி.ஏகிட்ட இருக்கு. திடீர்னு ஒருநாள் அவர் பி.ஏ பேசுவார். சார் இன்னிக்கு நைட் அங்கே வர்றார், காலையில கோயிலுக்கு வருவார், உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்னு தகவல் வரும். போய் நிப்பேன். ‘எப்டி இருக்கே அமிதாப் கண்ணா’னு கேட்பார். அவர் செஞ்ச அந்த உதவியினால நான் சந்தோஷமா இருக்கிறதா சொன்னேன். ‘கல்யாணம் பண்ணிக்கோ’ன்னார். ‘பணம் வேணுமா’னு கேட்டார். ‘எனக்கு பணம் வேணாம் சார். உங்க அன்பு மட்டும் கடைசி வரை வேணும்’னு சொன்னேன். ‘அதுக்கென்ன... அது இருக்கும்’னு சொன்னார். பத்து தடவை மீட் பண்ணிட்டேன். முதல் தடவை எடுத்த போட்டோதான் அவர் நினைவா இருக்கு. அடுத்த தடவை வந்தா, கேமரா போன்ல ஒரு செல்ஃபி பிடிச்சுக்குவேன்’’ என்றவர் கூலிங்கிளாஸை சரிசெய்தபடி, ‘‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அவர் தலைமையிலதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு  இருக்கேன். அதுவும் சும்மா இல்லை. அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனோட ரசிகன் அமிதாப் கண்ணாவா ஏதாவது ஒரு துறையில சாதிக்கணும். சீக்கிரமே சாதிச்சு என் தலைவன் தலைமையில நான் கல்யாணம் பண்ணிக்குவேன். இதோ அடுத்த வாரம் கல்யாண் ஜூவல்லரி ஃபங்ஷனுக்கு வர்றார். நான் அங்கே போக மாட்டேன். எப்படியும் கோயிலுக்கு வருவார். அவரை நேர்ல பார்த்து, ‘கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சார்’னு சொல்லப்போறேன். நிச்சயம் என் கல்யாணத்துக்கு வருவார்னு நம்பிக்கை இருக்கு’’ புன்னகைக்கிறார் ‘அமிதாப்’ கண்ணா!



No comments:

Post a Comment