சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Oct 2015

மிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொல்வது உண்மையா? - ஒரு சச்சின் ரசிகனின் கடிதம்

‘‘சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய திறமைக்கு நியாயம் செய்யவில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். ‘‘சச்சின் டெண்டுல்கர் மும்பை பையனாகவே இருந்தார். இரக்கமே இல்லாத சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் மாறவில்லை. மற்ற மும்பை வீரர்களுடன் அவர் செலவிட்ட நேரத்தை விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற சர்வதேச வீரர்களுடன் அவர் செலவிட்டிருக்கலாம். சச்சின் திறமையான வீரர்தான். ஆனால், அவர் ஏதோ எங்களைப் போலவே ஆடிவிட்டார். சதங்கள் அடிப்பதில் ஆர்வமாக இருந்தாரே தவிர 200, 300, 400 ரன்கள் எல்லாம் அவர் அடிக்க முயற்சிக்கவே இல்லை. அவரை ஷேவாக் போல கிரிக்கெட்டை ‘என்ஜாய்’ செய்து விளையாடப் பலமுறை சொல்லியிருக்கிறேன்’’ என்று சச்சினைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையை வென்று தந்த கபில்தேவ்.
கபில்தேவ் சொல்வது உண்மையா?

ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடக்கவேண்டும், கவாஸ்கரின் 34 சதங்கள் என்கிற சாதனையை முறியடிக்க வேண்டும், லாராவை முந்த வேண்டும் என்று எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஆடியவரை ‘‘இதை எல்லாம் நீ செய்ய வேண்டும், இத்தனை சதங்கள் அடிக்க வேண்டும்’’ என்று சாதனைகளை நோக்கி லாடம் கட்டிய குதிரைப் போல அவரை ஓடவிட்டது யார்? கிரிக்கெட் விமர்சகர்களும், மீடியாவும், ரசிகர்களும்தானே. இந்த சாதனைகளை எல்லாம் சச்சின் முறியடித்தபோது, தனிப்பட்ட சாதனைகளுக்காக சச்சின் விளையாடுகிறார் என்று முதலில் விமர்சித்தவர்களும் அவர்கள்தான்.

20 வயது பொடியனாக நியூஸிலாந்துக்கு எதிராக அவர் ஆடிய ருத்திரதாண்டவத்தை மறக்க முடியுமா! சித்துவுக்கு காயம் ஏற்பட்டதால் முதல்முறையாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் வாய்ப்பு அளிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆக்லாந்து மைதானத்தில் பந்துகளை பிரிந்து மேய்ந்தார் சச்சின். 49 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். 15 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி அதிரடி ஆட்டம் ஆடினார். பௌலர்களைக் கண்டு பயப்படாமல் பந்துகளை நாலாபக்கமும் சிதறடிக்கும் பேட்ஸ்மேனாகத்தான் அறிமுகமானார் சச்சின். ஆனால், அவரை அதிரடியாக ஆடும் மனப்பான்மையில் இருந்து மாற்றியது அப்போதைய இந்திய அணி கேப்டன்களும், கிரிக்கெட் நிர்வாகமும்தான். ஓய்வுபெறும்போதும்கூட ‘200-வது டெஸ்ட்டோடு நீ ஓய்வுபெற்றுவிடு’ என நம்பரை சொல்லியே மிரட்டியது மீடியாவும், முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் அமைப்பும்தான்.
'100 சதங்கள் அடித்தார் சச்சின். அவ்ளோதானே..’ என்று சொல்லுவார்கள். ஆனால், சச்சினின் 100 சதங்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே அடிக்கப்பட்டவைதான். ஷார்ஜாவில் 1998-ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைய வேண்டும் என்றால் 276 பந்துகளில் 234 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை. சச்சினுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கங்குலி 17 ரன்களில் அவுட். ஒன் டவுன் வந்தவர் நயன் மோங்கியா. விக்கெட் கீப்பரான இவருடன்தான் 60 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் போட்டு நம்பிக்கை கொடுத்தார் சச்சின். அடுத்து வந்த கேப்டன் அசாருதின், அஜய் ஜடேஜா என இரண்டு சீனியர்களுமே சொற்ப ரன்களில் அவுட். வி.வி.எஸ். லக்ஷ்மணுடன் இணைந்து விளையாடி 143 ரன்கள் குவித்து ஒற்றை மனிதனாக இறுதிப் போட்டிக்குள் நுழைய வைத்து, இறுதிப்போட்டியிலும் சதம் அடித்து கோப்பையைப் பெற்றுத்தந்தார் சச்சின்.

‘‘சச்சின் டெண்டுல்கர் இருக்கிறானா, நாம் யாரும் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. ரிலாக்ஸாக இருக்கலாம்’’ என்பதுதான் அப்போது அவருடன் விளையாடிய இந்திய வீரர்களின் மனநிலை. அசாருதின், ஜடேஜா, மஞ்ரேக்கர் யாருமே விளையாட மெனக்கெட்டதே இல்லை. சச்சின் அவுட் ஆனால் இந்தியா அவுட். 2003 உலகக்கோப்பை வரை உண்மையிலேயே சச்சினை மட்டுமே நம்பி இருந்தது இந்திய அணி. அப்போது எப்படி அவர் ‘என்ஜாய்’ செய்து கிரிக்கெட் ஆட முடியும்?

பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை டெஸ்ட்டில் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலை. சடகோபன் ரமேஷ், வி.வி.எஸ். லக்ஷ்மண், டிராவிட், அசாருதின், கங்குலி என அந்தப் போட்டியில் ஆடிய இந்த ஸ்டார் பேட்ஸ்மேன்களில் 10 ரன்கள் எடுத்த டாப் ஸ்கோரர் டிராவிட் மட்டுமே. மற்றவர்கள் யாரும் சிங்கிள் டிஜிட்டடைக் கூடத் தாண்டவில்லை. இறுதி நாளில் நயன் மோங்கியாவுடன் சேர்ந்து அடித்து ஆடுகிறார் சச்சின். 18 பவுண்டரிகள் விளாசி 136 ரன்கள் குவித்து, வெற்றிக்கு இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் அவுட் ஆனார் சச்சின். அனில் கும்ப்ளே, ஜோஷி, ஸ்ரீநாத், பிரசாத் என அடுத்துவந்த சீனியர்கள் என எல்லோரும் சேர்த்து வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்தனர். சச்சினின் சதம் வீணாய்ப் போனது. சதம் அடிக்கவா அன்று விளையாடினார் சச்சின்?
உலகக் கோப்பை தொடர் தோல்விகள், தோள்பட்டை, முதுகு காயங்கள், முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்கள், கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம் என சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்கள் அடக்கம். ஆனால் ஒருமுறைகூட அவர் நிதானம் தவறிப்பேசியதில்லை. மைதானத்தில் சட்டையைக் கழற்றிவிட்டு ஓடியதில்லை, பந்து வீச்சாளர்களுக்கு கெட்டவார்த்தைகளால் பதில் சொன்னதில்லை. நடுவர்களை முறைத்துக்கொண்டு வெளியேறியதில்லை. பேட்டிகளில் எந்த வீரரையும் குறை சொன்னதில்லை.

கிரிக்கெட் இன்னும் பல சிறந்த வீரர்களை உருவாக்கலாம். பல சாதனைகள் முறியடிக்கப்படலாம். ஆனால், இன்னொரு சச்சின் டெண்டுல்கரை மட்டும் இனி கிரிக்கெட் உலகம் காண முடியாது. டென்னிஸ், கால்பந்து, தடகளம் என பல்வேறு விளையாட்டுகளில் பல காலம் கோலோச்சிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், சாதனைகள் படைக்கும் வேகத்தில் அவர்கள் சறுக்கிய வரலாற்றைப் பார்த்திருக்கிறோம். போதை மருந்து சர்ச்சைகள் முதல் பல்வேறு காரணங்களால் தடம் தெரியாமல் பல வீரர்கள் அழிந்திருக்கிறார்கள். ஆனால், சச்சினை 24 ஆண்டு காலமும் முதலிடத்தில் இருக்க வைத்தது அவர் ஆட்டத்தில் கடைபிடித்த ஒழுங்கு. சச்சினிடம் இருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் அடுத்த தலைமுறைக்கு இருக்கிறது.
ஒரு விளையாட்டு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் சச்சின். டான் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ், கர்ஃபீல்ட் சோபர்ஸ், பிரையன் லாரா, ராகுல் டிராவிட் என கிரிக்கெட் பல உன்னத பேட்ஸ்மேன்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் இவர்கள் அனைவருமே வியந்து பார்க்கும் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்... சதம் அடிக்கிறார்கள்... ஆனால் சச்சினின் ஆட்டத்தில் உள்ள நேர்த்தியை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடியாது. ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் கிளாஸ் ரகம். மேற்கிந்திய வீரர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் பந்தை முரட்டுத்தனமாக அடித்து ஆடும் ஸ்டலை பின்பற்ற, ஃபீல்டர்களுக்கு இடையில் கச்சிதமாக பந்தை தள்ளிவிடும் ஆட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சச்சின். ஸ்டிரெயிட் டிரைவ், கவர் டிரைவ், ஸ்வீப் ஷாட்... என சச்சின் அளவுக்கு நேர்த்தியாக ஆடுபவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. கிரிக்கெட்டை விளையாட்டாக அல்ல, இதயமாக சுவாசிப்பவரால்தான் இப்படி ஆட முடியும்.

சச்சின் கிரிக்கெட்டை பேட்டால் அல்ல, இதயத்தால் விளையாடியவர்!


No comments:

Post a Comment