சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Oct 2015

நானும் ரௌடி தான் - படம் எப்படி?

காதலும் காதல் நிமித்தத்தால் ஏற்படும் காமெடி கலந்த ஆக்‌ஷனும் தான் நானும் ரவுடிதான்.
ரவுடிக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையையும் பார்த்து போலீசாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டு ரௌடியாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்கிறார் ஒரு சிறுவன். அந்தக் குழந்தையே விஜய் சேதுபதிதான் என்கிற ரீதியில் தன்னை மிகப்பெரிய ரௌடியாக நினைத்துக்கொண்டு வாழ்ந்தும் வருகிறார். எனினும் செய்யும் அத்தனையும் ரவுடியாகக் காட்டிக்கொள்ள வேண்டி செய்யும் வெட்டி பில்டப்புகளாகவே இருக்கின்றன.இதற்கிடையில் போலீஸ் செலக்‌ஷன் தேர்வுகளும் நடந்தேறுகின்றன.
இந்நிலையில் அவரது கண்களில் படுகிறார் அழகிய, அதே சமயம் சோகமான  நயன்தாரா. காது கேக்காத நயன்தாராவைப் பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது விஜய் சேதுபதிக்கு. காதல் மலரும் தருவாயில் நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய பிரச்னையையும் மிகப்பெரிய இழப்புமாய் விஜய் சேதுபதிக்கு ஒரு பொறுப்பைக் கொடுக்கிறார் நயன். அது என்ன அதை விஜய் சேதுபதி நிறைவேற்றினாரா இல்லையா என்பதை காமெடி கலந்த களேபரப் பின்னணியில் க்ளைமாக்ஸ் வைக்கிறது இந்த நானும் ரவுடிதான் .
நயன்தாரா படம் முழுவதும் வியாபித்துள்ளார். ராஜாராணி, மாயா, இப்படி நயன்தாராவின் நடிப்புக்கான மைல்கற்கள் லிஸ்டில் இந்தப் படத்தையும் இணைத்துக்கொள்ளலாம். ’கிஸ் பண்ணப் போறியா , அப்போ நான் சொல்றத செஞ்சிட்டு அப்பறம் கிஸ் பண்ணு’ என சொல்லி ரொமான்ஸ் உணர்வில் நெருங்கும் விஜய் சேதுபதியை குழப்பிவிடுவதும், அவ்வப்போது கத்த வைத்துவிட்டு அமைதியாக தரையைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு ’என்கிட்ட பேசினீங்களா சாரி லைட்டா காது, யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ எனக் கெஞ்சுவதுமாய் நயன்தாராவின் நடிப்பு அடுத்தக் கட்டம் . இனி டப்பிங் பேசுவோருக்கும் வேலையில்லை. நயனின் குரல் அவரது டப்பிங் குரலை விடவும் நன்றாக இருக்கிறது.
விஜய் சேதுபதி பாண்டி பாத்திரத்தில் நயன்தாராவை நினைத்து உருகுவதும், அவரை ரசித்து ஏங்குவதுமாய் குமுதாவின் ஹேப்பிக்காக நடித்தவர், இந்தப் படத்தில் காதம்பரி(நயன்தாரா) ஹேப்பிக்காக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். காட்சிக்கு காட்சி இருவரும் கை கோர்த்து கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பொருத்தம்.
ஆர்.ஜே.பாலாகி அளவான டைமிங் காமெடிகள், பன்ச்கள் என தன் பங்கை படத்திற்கு சிறப்பாக அளித்துள்ளார். பார்த்திபன் படத்தின் மற்றுமொரு சிறப்புப் பாத்திரம்.வில்லன் ரோலில் மீண்டும் ஒருமுறை மனதில் நின்றுவிட்டார்.அடேய் நான் இப்படியெல்லாம் ஒளிஞ்சுக்கிட்டதே இல்லடா, போங்கடா உங்கள மன்னிச்சுட்டேன், என அட்ராசிட்டி அலப்பரையைக் கொடுத்திருக்கிறார். ராதிகா போலீஸ்  என்றாலும் அதைக் காட்டிலும் விஜய்சேதுபதிக்கு அம்மாவாக ‘என் புள்ள கொத்தமல்லிக் கொழுந்துடி எனச் சொல்லிக்கொண்டே சில காட்சிகளே வந்தாலும் பாராட்டுகளைப் பெற்றுவிடுகிறார்.ராகுல் தாத்தா கேரக்டர் எங்கப்பா பிடித்தீர்கள் அந்த கேரக்டரை. நல்ல தேர்வு. 
சிக்கலான கதையோ, மர்ம முடிச்சுகளோ, த்ரில் வேட்டைகளோ இப்படி எதுவும் கிடையாது. எனினும் எதார்த்தமான பாண்டிச்சேரி , சென்னை பின்னணியை அப்படியே வைத்துக்கொண்டு ஆக்‌ஷன் காமெடி, காதல் படம் கொடுத்துள்ள விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகள் என்றாலும் முதல் பாதியில் இருந்த மெதுவான காட்சி ஓட்டத்தை குறைத்திருக்கலாம். பின்பாதி நல்ல வேகம் சீரியஸ் கலந்த காமெடிகள் என ஆரம்பித்த வேகத்தில் முடிந்துவிடுகிறது.
ஒரு பத்து செகண்ட் யோசிச்சா , விட்டுப்போயிடுவியா, போனா நாங்க விட்ருவமா. இப்படி காதல் ஆதங்கமான வசனங்கள் படம் முழுமைக்கும் பலம். அதற்கேற்ற அனிருத்தின் பின்னணி இசை. தங்கமே உன்ன நான் பாடல் அரங்கத்தை அதிரச் செய்துள்ளது. நீயும் நானும் பாடல் மென்மையான வருடல். எதார்த்தமான படத்திற்கு காட்சிகளை அழகாக படம்பிடித்துள்ளது ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு.
மொத்தத்தில் நயன்தாரா – விஜய்சேதுபதி கெமிஸ்ட்ரிக்காவே படத்தைக் பார்க்கலாம்.முக்கியமாக இளைஞர்கள் சாய்ஸ் ரகம் ’இந்த நானும் ரவுடிதான்

No comments:

Post a Comment