சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2015

ஜனாதிபதி பதவியில் இருந்து விலக நினைத்த அப்துல்கலாம்!

பீகார் சட்டசபை கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோது, குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து அப்துல் கலாம் விலக விரும்பியதாக அவரது முன்னாள் ஊடக செயலாளர் கான் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 2005-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், சட்டப்பேரவை கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அப்போதைய பீகார் ஆளுநர் பூட்டாசிங் சிபாரிசு செய்தார். இதனை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அமைச்சரவையின் பரிந்துரை, ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்தவாறே அவர் அதில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து பீகார் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.
 
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து, பீகார் சட்டப்பேரவை கலைப்பு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஒப்புதல் அளித்த அப்துல் கலாமுக்கும் ஒரு பின்னடைவாக அமைந்தது.

இதுபற்றி அப்போது அப்துல் கலாமின் ஊடக செயலாளராக இருந்த எஸ்.எம். கான் புவனேஸ்வரத்தில் உள்ள சிக்ஷ்யா ஓ அன்சந்தன் பல்கலைக்கழகத்தில் ‘மை டேஸ் வித் தி கிரேட்டஸ்ட் யூமன் சோல் எவர்’ என்ற தலைப்பில், அப்துல் கலாமுடனான நினைவுகள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், பீகார் சட்டப்பேரவையை கலைக்குமாறு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தபோது, அதில் தயக்கத்துடன்தான் கலாம் கையெழுத்திட்டார். அவர் அந்த பரிந்துரையை நிராகரித்து இருக்க வேண்டும். ஆனால் வேறு வழி இல்லை. இரண்டாவது முறையாக அதை அவருக்கு அனுப்பினால் அவர் கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலை.

பீகார் சட்டப்பேரவை கலைப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, கலாம் தனது தவறுக்காக வருந்தினார். நான் அதை நிராகரித்து இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அத்துடன் அவர் பதவி விலகவும் விரும்பினார். இது தொடர்பாக ராமேசுவரத்தில் உள்ள தனது அண்ணனுடன் அவர் ஆலோசித்தார். அந்த நிகழ்வுக்கு பின்னர், அரசியல் சட்ட பிரச்னையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிரான நிலையை கலாம் எடுத்தார். உலகப்பூர்வமான எந்தப்பொருள் மீதும் அவர் நாட்டம் கொண்டதில்லை. சொந்தமாக ஒரு வீடு, கார், தொலைக்காட்சி பெட்டி, குளிர்பதனப்பெட்டி என எதையும் அவர் வைத்துக்கொண்டது இல்லை. தன் வாழ்வின் பெரும்பகுதியை விஞ்ஞானியாக, ஆசிரியராக கழித்த கலாம், விடுதிகளிலும், விருந்தினர் இல்லங்களிலும்தான் வாழ்ந்தார். அவர் தனக்கென வைத்திருந்தது புத்தகங்கள்தான். அதுவும் தனக்கு தேவையான புத்தகங்களை தானே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்" என்று கலாமுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.


No comments:

Post a Comment