சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2015

நான் சமானியன் பேசுகிறேன் பாரத பிரதமர் அவர்களே!

சில‌ நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்குப் பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் ‍‘நான் நரேந்திர மோடி பேசுகிறேன்' என்று ஒரு குரல் ஆரம்பித்து (இந்தியில்தான்…!) "நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மானியத்தை விட்டுக்கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே" என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்!
சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில் பேசும்போது "இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மானியத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். இன்னும் அதிகம் பேர் மானியத்தைத் தியாகம் செய்ய முன்வர வேண்டும்" என்றார்.
சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். ‘நான் ஏன் என் எல்.பி.ஜி. மான்யத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்' என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்தக் கடிதம் அமைந்திருக்கிறது. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து நீங்களும் எழுதுங்களேன் என்று கேட்டிருக்கிறார்.
அந்தக் கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில் அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும் உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்.
எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு,
சமையல் எரிவாயு மானியத்தை நான் விட்டுக்கொடுக்க முன்வர வேண்டுமென்று, வேலை மெனக்கெட்டு, என் போனிலேயே, என் செலவிலேயே வேண்டி, விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! மகிழ்ச்சியோடு நானும் அதற்கு ஒப்புக்கொள்வேன். ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள் நடைபெற்றால் தேவலை!
# நாட்டின் சாதாரணக் குடிமகன் இதைச் செய்வதற்கு முன், இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும், அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலில் தங்கள் மானியத்தை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா?
# உங்களில் முக்கால்வாசிப் பேர் தேர்தலில் போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை அறிவித்திருக்கிறீர்கள். அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் தங்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் கிடைக்கும் சலுகைகளை விட்டுக்கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா?
# வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி ஏஞ்சலா மெர்கெல் தன் அலுவலகத்திற்குப் பணிக்குச் செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண ரயிலில் செல்வதுபோல நீங்களும், உங்களின் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கச் செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொள்ளாமல் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவீர்களா?
# நீங்கள் ஒவ்வொருவரும் அலுவலகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தும் தொலைபேசிகளுக்காக, உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக, குடும்பத்தோடு தங்கும் அரசு சொகுசு பங்களாக்களுக்காக, இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும் பயணம் செய்வ‌தற்காக, நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்காக எத்தனை கோடி ரூபாயை நாங்கள் வரியாகக் கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
# மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட, நட்சத்திர அந்தஸ்து பெற்ற தனியார் மருத்துவமனைகளில் தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே. உங்கள் சக இந்தியர்கள் சரியான மருத்துவ வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்வது போல நீங்களும் அங்கு சிகிச்சை பெறுவீர்களா?
# உங்கள் உயிருக்கு அப்படி என்ன‌ ஆபத்து வந்துவிடுமென்று இத்தனை பூனைப் படைகளையும், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும் Z+ என்றும் சொல்லிக்கொண்டு உங்கள் மந்திரிகள் திரிகிறார்கள்? அவற்றைக் குறைக்க முடியுமா?
# சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பத்தாது என்கிற நிலையில் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின் நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது, உங்களுக்கு ஏன் நாடாளுமன்ற கேன்டீன்களில் மலிவு விலையில் உணவுப் பொருட்கள்? ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும், ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும் எந்தக் குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே. கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்கக் காசில்லையே என்றா இந்த மலிவு விலை?
# உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்குக்கூட அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன்தான் காசு கொடுக்கிறான் என்பது உங்கள் ம‌னசாட்சியை என்றுமே உறுத்தவில்லையா?
# நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை. வருமான வரி, சேவை வரி, தொழில் வரி, மதிப்புக் கூட்டு வரி, சொத்து வரி, நகராட்சி வரி, வாகனப் பதிவு வரி... அப்பப்பா! சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக்கொள்ளும் இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும் விலக்குக் கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா?
# உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம் கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக்கொடுத்து இந்த நாட்டின் கவுரவமுள்ள குடிமகனாக நீங்கள் எல்லாம் மாறும் நாள் வருமா?
இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும் நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் என்றைக்கு, உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள இந்தச் சலுகைகள் அத்தனையையும் விட்டுக்கொடுக்கிறீர்களோ அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் சமையல் எரிவாயு மானியத்தை நீங்கள் கேட்காம‌லேயே விட்டுக் கொடுப்போம்!


No comments:

Post a Comment