சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Dec 2015

தமிழக அரசியலில் இன்றைய தேவை யார்?

ன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் தேர்தலை  சந்திக்க உள்ளது. கழகங்களின் ஆட்சியைப் பார்த்து விட்ட மக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர், அரசியல் மாற்றத்தையும் அதன் விளைவாக நிர்வாக சீர்திருத்தம் மற்றும்  தங்களது உரிமைகளுக்கான மரியாதையையும் பெற்றுவிட முடியும் என்று நம்புகின்றனர். 

எப்படி, பொருளாதார தாராளமயமாக்கல் இந்திய அரசியலில் தத்துவங்களை புறந்தள்ளி தனிமனித முன்னேற்றத்தை முன்னிறுத்தியதோ, அதே போல அந்த பெரும் மாற்றத்தைக் கைகொள்ளும் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இன்றைய சமூகம் சந்திக்கும் சிக்கல்களை இது வரை ஆட்சி செய்த கட்சிகள் உணர்ந்ததாக தெரியவில்லை. 

தனியார் மயமான கல்வி, இன்று ஒவ்வொரு பெற்றோரையும் கடன்காரர்களாகவும், அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் முக்கிய காரணியாகவும் மாறி இருக்கிறது. எப்படி பிறப்பின் மூலம் சாதிப் படிநிலை ஒரு காலத்தில் ஒருவரின் தலைவிதியைத் தீர்மானித்ததோ, அதே போல பிறப்பின் மூலம் வசதி படைத்தவர் ஒரு தரத்திலும், வசதி படைத்திராதவர் ஒரு தரத்திலும் கல்வி பெறும் சூழல் நிலவுகிறது. கல்வி ஒருவருடைய வாழ்கைத் தரத்தை உயர்த்தும் என்ற அடிப்படையையே இந்த நிலை கேள்விக்குள்ளாக்குகிறது.

வெறும் எண்களால் நிறுவப்படும் பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையை இந்த பூமிப்பந்தில் வாழ்வதற்கு வழியில்லாமல் செய்துவிடும் பொருளாதாரச் சார்பு கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏரிகள், குளங்கள், ஆறுகளை அழித்து ஆலைகள், குடியிருப்புகள் அமைக்க இப்போது எந்த தடையுமில்லை.  எப்படி பிராய்லர் கோழிகளை முப்பது நாளில் மருந்துகள் கொண்டு எடையேற்றி கறியாக்குகிறோமோ அதைப்போலத்தான் இது.
இந்த முன்னேற்றம் நீண்ட காலத்தில் மனித சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது. இன்னொரு புறம் சாமானியன் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்தே ஆகவேண்டிய நிலை. 

சரி... இபோது நமக்குள்ள வாய்ப்புகள் என்ன? திமுக, அதிமுக ஆகியவற்றின் ஆட்சியை பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் இந்த 50  ஆண்டுகளில் ஆட்சி முறையில் வித்தியாசமில்லை. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் இவர்களின் ஆட்சியில் ஓட்டுக்கு பணம், இலவசங்கள், டாஸ்மாக் என்று ஜனநாயகம் கேள்விக் குறியாக்கப்பட்டுவிட்டது. இந்த முறையும் இவர்களை  தேர்ந்தெடுத்தால், பெரிய மாற்றத்தை எதையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக எப்படியும் இருவரில் ஒருவர் என்று முடிவுசெய்து இப்போதுபோல் தொடர்ந்து தைரியமாகச் செய்வர். அடுத்து நமக்குள்ள தேர்வு, மக்கள் நலக் கூட்டணி, பாமக, நாம் தமிழர், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதா இவை.
பாரதிய ஜனதாவும், காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தேசியத்தலைமையின் கீழ் இயங்குபவை. ஏனைய மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தின் உரிமைகள், சிக்கல்கள் வேறானவை.  இங்கு மொழியிலிருந்து, உணவு வரை ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒரு போதும் இங்கு வெளி மாநிலத் தலைமை எடுபடாது. 

பாமக-வின் அரசியல் அதிரடியாய் இருந்தாலும், கடந்த கால சாதி ரீதியான அரசியல்,  எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை இன்னும் பெறவில்லை. மேலும் பாமக எல்லா மாவட்டங்களிலும் வலுவாக இல்லை. அதனால், வட மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினாலும் பாமகவின் ஆட்சியமைக்கும் முயற்சி வெற்றி பெறாது. 

அடுத்து நாம் தமிழர் கட்சி. ஆரம்பம் முதலே தமிழர்கள் குறித்த அக்கறையுடன் அரசியல் செய்வது, பல தரப்பட்ட மக்களை துணை இயக்கங்கள் மூலம் அரவணைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், அவர்கள் அறிவிக்காமலே, இன வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுபோல் மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதற்கான சரியான பதிலையும் செயல்பாடுகளையும் தலைமை வெளிப்படுத்தும்போது தமிழகத்தில் பெரும் சக்தியாகும் வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து, விஜயகாந்தின் தேமுதிக. அது அதிமுக, திமுக விற்கு மாற்றாக உருவெடுத்தது. ஒருகட்டத்தில் திமுக வை ஒழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் நிலை வந்ததும், இப்போது அதிமுக வை ஒழிக்க யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்திலும் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி வைத்துள்ள விஜயகாந்தினால் தனியாக ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், அவர் கட்சிக்கு விழும் ஓட்டு எதிராளியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வந்திருக்கிறது. 

கடைசியாக மக்கள் நலக் கூட்டணி. வைகோ, திருமாவளவன், இடது சாரிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி பல்வேறு பரிமாணங்களில் ஆட்சியமைக்கும் நம்பிக்கையளிக்கிறது. வைகோ சிறந்த தலைவரானாலும் அவர் தமிழக அரசியலில் வெற்றி பெற முடியாததற்குக் காரணம் அவர் தமிழக அரசியல் சூழலை உள்வாங்கவில்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. 

ஆனால் தமிழக நலனில் வைகோவின் போராட்டங்களும், அரசியலும் மிகப் பெரும்பங்காற்றியது வரலாறு. அதிகாரத்தில் இல்லாதபோதும் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு பிரச்னைக்கும் முன்னின்று அரசியல் போராட்டங்களும், சட்டப் போராட்டங்களும் செய்தது யாவரும் அறிந்தது. அவருடன் இணைந்துள்ள திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதைத் தாண்டி, அனைத்து மக்களுக்குமான அரசியல் வாதியாக பரிமளிப்பது மிகப்பெரிய பலம்.
கூடங்குளம், ஈழப்பிரச்னையில் கருத்தால் வேறுபட்டிருந்தாலும், அடிப்படையில் தமிழக நலன்களில் இடது சாரிகளின் போராட்டங்களும் முன்னெடுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. தனியார் மயமாக்களுக்கு எதிரான அரசியல், தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலுக்கு இடது சாரிகள் பெயர்போனவர்கள். இம்மூவர் கூட்டணி பல்வேறு தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 

ஆனால் கூட்டுத்தலைமை என்பது தமிழகத்தைப் பொறுத்த அளவில் புதிய முயற்சி. அந்த முயற்சி பரிசோதிக்கப்படும் அதே நேரத்தில் சிறந்த நிர்வாகத்திறமையும், வெளிப்படையான அணுகுமுறையும் கொண்ட முதன்மை-அமைச்சர் தமிழகத்தின் இன்றைய தேவை. அந்த வகையில் நமக்கும் நேர்மைக்கு பெயர்போன சகாயம் ஐஏஸ் சரியான தேர்வாக இருக்கிறார். 

இதுநாள் வரை, ஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவரே முதல்வராக இருந்து வந்துள்ளனர். அவரே ஒன்றிற்கும் மேலான துறைகளுக்கு அமைச்சராகவும் தன்னிச்சையாக முடிவெடுப்பவராகவும் இருந்திருக்கிறார். ஒருவகையில் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதில் பெரும் சிக்கல்களைக் கொடுத்துள்ளது. வெள்ள பாதிப்பின்போது அதை அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்தோம்.
ஆனால் சகாயம் போன்ற ஒருவர் முதல்வராக வரும்போது, அரசியல் தலையீடுகள், சமரசங்கள் இல்லாத முதன்மை-அமைச்சராகச் செயல்பட முடியும். வைகோ, திருமா, கம்யூனிஸ்டுகள், தேமுதிக போன்றவை அமைச்சரவையை பகிர்ந்து கொண்டு, சகாயம் அவர்களை சாரதியாக்கி தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அரசு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையீட்டை இது போன்ற முறையில் தடுத்திட முடியும். 

இது போன்றதொரு சூழலில், கட்சிக்காரர்களுக்கு காண்ட்ராக்ட், காண்ட்ராக்டில் கமிஷன், நிறைவேற்றப் படாத திட்டங்களுக்கு செலவுக்கணக்கு போன்ற பல்வேறு ஊழல் முறைகளை அரசியல் தலையீடு இல்லாமல் அழித்துவிடலாம். இந்த ஆட்சியில் தேமுதிக வாக்கும் பங்கெடுத்து அரசை வழிநடத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் நிச்சயம் பெரும் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைந்திட முடியும்.

No comments:

Post a Comment