சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2015

அறிவித்தது அரை கிலோ... கொடுத்தது 100 கிராம்... ஆரம்பமே 'அமர்க்களம்'!

சென்னையில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க  வீடு ஒன்றுக்கு அரை கிலோ பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் 20 வீதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

இதன்படி தற்போது இந்த பணி நடந்துவருகிறது. ஆனால், அரசு அறிவிப்புக்கு மாறாக அரை கிலோ பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுக்குப் பதிலாக, வெறும் 100 கிராம் பாக்கெட் மட்டும்தான் பல இடங்களில் வழங்கப்படுகின்றது. குளோரின் மாத்திரை என்பது மருந்துக்குக்கூட கண்களில் காட்டப்படுவதில்லை. ஒரு அப்பார்ட்மென்டில் எத்தனை குடியிருப்புகள் இருந்தாலும் ஒரேயொரு பிளீச்சிங் பாக்கெட்தான் தரப்படுகிறது.

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தவரிடம், 'வீட்டுக்கு அரைக்கிலோ பிளீச்சிங் பவுடர், 20 குளோரின் மாத்திரைனு சொன்னாங்க... ஆனா நீங்க இப்படி ஒரு பாக்கெட் மட்டுமே தர்றீங்களே. எங்க அப்பார்ட்மென்ட்ல நிறைய வீடு இருக்கே?'  என்று கேட்டபோது, “அரை கிலோவா... அதெல்லாம் எனக்குத் தெரியாது. இதைத்தான் வீட்டுக்கு ஒண்ணுனு கொடுக்கச் சொன்னாங்க கொடுத்திட்டிருக்கேன். மத்ததையெல்லாம் மேலதிகாரிங்ககிட்ட பேசிக்கோங்க” என்றபடி அவர் கிளம்பிவிட்டார் அடுத்தவீட்டை நோக்கி.
சில அப்பார்ட்மென்ட்களுக்கு ஒரு துளி கூட கொடுக்கப்படாமலும் விடப்பட்டிருக்கிறது. மாநகராட்சியைப் பொறுத்தவரை, ஒரு அப்பார்ட்மென்டில் எத்தனை வீடுகள் இருந்தாலும், அது ஒவ்வொன்றும் தனித்தனி வீடு என்ற அடிப்படையில்தான் வரி வசூல் செய்யப்படுகிறது. சென்னையில் இத்தனை லட்சம் வீடுகள் என்று அவ்வப்போது மாநகராட்சி தரப்பில் சொல்லப்படும் கணக்கும் இதன்படிதான் சொல்லப்படுகின்றன.

வெள்ளபாதிப்பு சீரடைந்தபின் வீடுகளுக்கும் சுற்றுப்புற சுகாதாரத்திற்கும் அவசியமானது பிளீச்சிங் பவுடர்தான். அதிலுமா இப்படி செய்வது என வேதனைப்பட்டதை தவிர எதையும் செய்யமுடியவில்லை. சரி, இங்கே சிம்பிளாக ஒரு கணக்குப் போடுவோம். நூறு வீடுகள் கொண்ட ஒரு தெருவில் அரை கிலோ வீதம் பிளீச்சிங் பவுடர் கொடுக்க வேண்டுமென்றால், மொத்தம் 50 கிலோ கொடுக்கப்பட வேண்டும். ஆனால், கொடுக்கப்பட்டதோ... 10 கிலோ. மீதம் 40 கிலோவுக்கான தொகை யாருக்கு போகிறது?
அப்படியே நூறு வீட்டுக்கு 40 கிலோ, ஆயிரம் வீட்டுக்கு 400 கிலோ, லட்சம் வீடுகளுக்கு 40 ஆயிரம் கிலோ என கணக்கிட்டால் கிலோ 80 ரூபாய் வீதம் கிட்டத்தட்ட 32 லட்ச ரூபாய் ஆகிறது. 

லட்சம் வீடுகளுக்குத்தான் இந்தக் கணக்கு. சென்னையில் எத்தனை லட்சம் வீடுகள் இருக்கும் என்பதைக் கணக்கிட்டுக்கொண்டால் உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படாமல் இருக்காது.

குளோரின் மாத்திரைகளைப் பொறுத்தவைரை கண்களில் காட்டப்படவே இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் 20 மாத்திரைகள் என்று சொன்னார்கள். அப்படியானால், இந்த மாத்திரைகள் மூலமாக எத்தனை லட்சம் 'சேமிக்கப்பட்டிருக்கிறது' என்பதையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சென்னை முழுக்கவே வெள்ளம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பை தற்போது அரசாங்கம் செய்து வருகிறது. சாதாரண பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரை விஷயத்திலேயே இத்தனை குளறுபடி என்றால், வெள்ளத்தால் குடிசை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10,000 வெள்ள நிவாரணம், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் சேலை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இதர குடும்பங்களுக்கு ரூ.5,000 வெள்ள நிவாரணம், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இதில், பணம் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரிசி, வேட்டி, சேலைகள் நேரடியாகத்தான் வழங்கப்பட வேண்டும். இதில் எத்தனை லட்சம், கோடிகள் சுருட்டப்படுமோ என்ற இயல்பான ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணம் இயற்கை பேரிடரா அல்லது 'செயற்கை' பேரிடரா என எல்லா தரப்பிலும் பட்டிமன்றம் நடந்துவரும் வேளையில் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டுவரும் மக்களின் வெள்ள நிவாரணத்திலும் 'வழக்கமாக' நடந்துகொண்டால், அது அநியாயத்திலும் அநியாயமே.

எனவே, இந்த வெள்ள நிவாரண கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் அரசு அதிகாரிகளுடன் அரசியல்வாதிகளைக் கைகோர்க்கவிடாமல் தடுப்பது முக்கியம். அதேபோல, வெள்ளம் வந்தபோது, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் ஓடோடி வந்து உழைத்த தன்னார்வலர்களை, இந்த வெள்ள நிவாரணம் வழங்கும் பணிகளில் அதிகாரிகளுடன் இணைத்து செயல்படவிட்டால்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் நிஜமாகவே போய்ச் சேரும் என்று நம்பலாம்.


No comments:

Post a Comment