சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2015

நாய் வளர்ப்போர் கவனிக்க...!

நாய் வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கும், நாய் வளர்ப்பவர்களுக்கும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த கால்நடை சிறப்பு மருத்துவர், டாக்டர். வினோத் பிரகாசம்.

‘‘சமூக அந்தஸ்துக்காக, குழந்தைகளுக்காக என்பது போன்ற காரணங்களுக்காக நாய் வளர்க்காமல், உண்மையில் செல்லப்பிராணி வளர்ப்பில் பிரியமும், ஆர்வமும் இருப்பவர்கள் மட்டுமே நாய் வளர்ப்பது நன்று!’’ என்பதை முதலில் வலியுறுத்திய டாக்டர், அதன்பிறகு தந்தார் டிப்ஸ்.

* ஸ்டேட்டஸை வெளிப்படுத்தும் விதமாக, வெளிநாட்டு நாய் மோகத்தில், வாயில்லா ஒரு ஜீவனை தான் வாழும் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குக் கொண்டு வந்து வளர்ப்பதைவிட, கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை போன்ற அழியும் நிலையில் உள்ள நம் நாட்டு நாய் இனங்களை வளர்க்கலாம்.

* சில பிரீடர்ஸ், இங்கேயே வெளிநாட்டு நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்கிறார்கள். இவர்களில் சிலர் ஒரு நாய் 6 குட்டிகளை ஈன்றால், 4 குட்டிகளை விற்றுவிட்டு, 2 குட்டிகளை அடுத்த இனப்பெருக்கத்துக்காக வைத்துக் கொள்கிறார்கள். இதனால் குறையுள்ள நாய்கள் பிறக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் அதையும் சாமர்த்தியமாக விற்று விடுவார்கள். வாங்குவோர்தான் கவனமாக இருக்க வேண்டும்.

* வீட்டுச் சூழலுக்கு ஏற்ப நாய் வாங்க வேண்டும். பெரிய வீடு அல்லது தனி வீடுகளில் பாக்ஸர், டாபர்மேன், ஜெர்மென் ஷப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்களை வளர்க்கலாம். இவை அதிகமான உணவை உட்கொள்ளக் கூடியவை. அதனால் செரிமானத்துக்கு அவற்றுக்கு ஓடுவது, நடப்பது, விளையாடுவது என்று பயிற்சிகளும் அதிகம் தேவைப்படும் என்பதால், பெரிய சுற்றுப்புறம் அவசியம். மேலும் தோல் நோய்கள் வராமல் இருக்க சூரிய ஒளி அவசியம் என்பதால், அவற்றை இரு வேளை வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும்.
* அப்பார்ட்மென்ட்களில் பெரிய நாய்களைத் தவிர்த்து, ‘ஸ்மால் ப்ரீட்ஸ்’ என்ற அழைக்கப்படும் பக், பொமரேனியன் போன்றவற்றை வளர்க்கலாம். இவை வளர குறைந்த அளவிலான இடம் போதுமானது. அதிக சூரிய ஒளி தேவைப்படாத இவற்றை, ஒருமுறை வாக்கிங் அழைத்துச் சென்றால் போதுமானது.

* நம்மைப் போலவே நாய்களுக்கும் ஊட்டச்சத்து உணவு அவசியம். மினரல்கள், வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட் போன்றவற்றை சரிவிகித அளவில் அவற்றுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து ஒரே வகை உணவை கொடுத்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தொற்றுநோய்களில் ஆரம்பித்து, தோல் நோய்கள், அனீமியா, அனீமியாவால் உள்ளுருப்புகளின் செயல்பாடுகள் குறைவது என்று நாயின் ஆயுள் பாதியிலேயே முடிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
* நாய்களுக்கென்றே பிரத்யேக பாக்கெட்களில் விற்கப்படும் உணவுகள் மட்டுமே அவற்றுக்குப் போதாது. காரணம், மேலைநாடுகளில் குளிர்பிரதேச தட்பவெட்ப சூழலில் வளரும் நாய்களுக்காக தயாரிக்கப்படுபவை, டிரை ஃபுட். அங்கு நாய்களை வாக்கிங்கூட அழைத்துச் செல்ல முடியாது என்பதால், உடலுக்குச் சூடு தரும் வகையில் ட்ரை ஃபுட் தயாரிக்கப்படுகிறது. அதே ரக உணவு, நம் நாட்டில் வாழும் நாய்களுக்கு எப்படி செட் ஆகும்? எனவே, தண்ணீர்ப்பதம் சேர்ந்த உணவே நம் நாய்களுக்குத் தரப்பட வேண்டும். அந்த ‘டிரை ஃபுட்’ வகைகளை ஸ்நாக்ஸ் ஆக வழங்கலாம், உணவாக வேண்டாம்.

* நாய்களின் சுபாவமே எதைப் பார்த்தாலும் முகர்ந்து பார்ப்பதுதான். இதனால் நாசி வழி கிருமிகள் உள் சென்று தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், மாதத்துக்கு ஒரு முறை பூச்சி மருந்து கொடுப்பதுடன், தவறாமல் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.

* நாம் சாப்பிடும் உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கப்பட்டிருந்தால், அதை நாய்க்கு வழங்கக் கூடாது. காரணம், நாய்க்கு வெங்காயம் செரித்து வெளியேறாது உள்ளேயே தங்கிவிடும். பல நாட்களாக இப்படி சேரும்போது, அது விஷமாக மாறிவிடும். இதனால் தோல் பிரச்னை முதல் உள்ளுறுப்புகள் பாதிப்பு வரை ஏற்படலாம்.


No comments:

Post a Comment