சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jan 2015

அதிக சம்பளம்: இன்னமும் மவுசு குறையாத ஐடி துறை!


ட்குறைப்பு, அதிக நேரம் உழைப்பு, வேலைக்கு உத்தரவாதமின்மை என பல்வேறு பிரச்னைகள், ஐடி எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களிடையே சமீபகாலமாக தலைதூக்கி உள்ளபோதிலும், அதிக சம்பளம் பெறுவதில் இன்னமும் ஐடி பணியாளர்கள்தான் முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் 'அவுட் சோர்சிங்' முறையிலான பணிகளை எடுத்து செய்வதில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ, .பி.எம். போன்றவை முன்னணி இந்திய நிறுவனங்களாக திகழ்கின்றன. 


90
களின் இறுதியில் மெல்ல வளரத் தொடங்கிய இந்த ஐடி நிறுவனங்கள், கடந்த 25 ஆண்டுகளில் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் தொடங்கி, சம்பளம் வரை ஒரு யுக புரட்சியே ஏற்படுத்தின. இதனால் பொருளாதார ரீதியில் பயனடைந்த குடும்பங்கள் ஏராளம். குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்களின் குடும்பங்களில் அவர்கள் நினைத்தே பார்த்திராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. 

தொடர்ந்து உச்சத்திற்கு சென்ற ஐடி துறை, இடையில் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக பின்னடைவை சந்தித்தபோதிலும், ஓரிரு வருடங்களிலேயே மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லத்தொடங்கி, இன்னமும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் அளிப்பதில் முதலிடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பதற்கான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. 

இந்திய ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஒரு மணி நேரத்திற்கு ரூ.341.8 என்ற அளவில் ஊதியம் பெறுவதாகவும், இது மற்ற அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை காட்டிலும் அதிகம் என்றும் வேலைவாய்ப்பு மற்றும் பணியாளர்களை அமர்த்திக்கொடுக்கும் நிறுவனமான மோன்ஸ்டர் இந்தியா, வெளியிட்டுள்ள சர்வே தகவல் தெரிவிக்கிறது. 

கட்டுமானத்துறையில் மத்திய தர நிலையில் உள்ள ஒரு ஊழியர், ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ரூ. 259 பெறுகிறார். அதுவே கல்வித் துறையில் ரூ. 186.5, சுகாதாரத் துறையில் ரூ. 215, சட்டத்துறையில் ரூ. 215.6, தயாரிப்பு மற்றும் போக்குவரத்து துறையில்  ரூ. 230.9 ஊதியமாக பெறுகிறார். 

இதில் கல்வித் துறையில் பணியாற்றுபவர்தான், மேற்கூறிய மற்ற துறைகளில் பணியாற்றுபவர்களை காட்டிலும் குறைவாக, ஒரு மணி நேரத்திற்கு ரூ. 186.50 என்ற அளவிலேயே ஊதியம் பெறுகிறார் என்ற விவரமும், மற்ற துறைகள காட்டிலும் பெண்கள் கல்வித் துறையில் அதிக அளவில் பணியாற்றுவதே இதற்கு முக்கிய காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
அதே சமயம் கல்வித் துறையில் பணியாற்றும் பெண்கள்அதே துறையில் பணியாற்றும் ஆண்களை காட்டிலும் 18 சதவீதம் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர் என்ற மற்றொரு விவரமும் தெரியவந்துள்ளது. 

இந்த புள்ளிவிவரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மோன்ஸ்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் மோடி,"வளர்ச்சிக்கான புதிய அலையின் முனையில் இந்தியா உள்ளது. எதிர்காலத்தில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளும், முன்னேற்றமும் இதனால் ஏற்படும். இது வருவாய் மற்றும் ஊதியத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். 

இதனிடையே சர்வதேச மற்றும் அமெரிக்கா அளவில் நடத்தப்பட்ட இதே சர்வேயிலும், இந்தியாவைப்போன்றே பணியிடங்களில் ஆண்கள் அளவுக்கு பெண் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இங்கு ஐடி துறையில் ஆண் பணியாளர்களை காட்டிலும், பெண் பணியாளர்கள் சராசரியாக 34 சதவீதம் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். அதேப்போன்று நிதி துறையிலும் இரு பாலருக்கும் இடையே 19 சதவீத வேறுபாடு உள்ளது.

இருப்பினும் வரும் காலத்தில் நிர்வாக பொறுப்புகளில் பெண்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது என்பதால், அப்போது இதுபோன்ற ஊதிய வேறுபாடு இருக்காது என நம்பிக்கை அளிக்கிறது அந்த சர்வே அறிக்கை.

ஆக மொத்தம் வேலைக்கு உத்தரவாதமின்மை, அதிக வேலைப்பளு போன்ற பல பிரச்னைகள் தலை தூக்கினாலும், அதிக ஊதியம் என்ற ஒற்றை கவர்ச்சி தொடர்ந்து ஏராளமான இளைஞர்களை ஐடி துறையை நோக்கி ஈர்த்துக்கொண்டுதான் இருக்கும்




No comments:

Post a Comment