சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jan 2015

தடைகளை நீக்கும் தாண்டிக்குடி முருகன்!

ழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
திண்டுக்கல் மாவட்டத்தில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலமுருகன் கோயில். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். வத்தலகுண்டில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.
போகர் முனிவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்து அருளியதுபோல, கற்பக மகா முனிவருக்கு கந்தக் கடவுள் காட்சி தந்தருளிய தலம் இது என்கிறார்கள்.
ஒருமுறை, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பகுதிக்கு குறிசொல்ல வந்த  பன்றி மலை சாமியார் என்ற மகான், மாட்டுத் தொழுவமாகத் திகழ்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி 'இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இடம். உடனே, இங்கு முருகனுக்குக் கோயில் கட்டுங்கள்என்றார். மக்கள், அந்த இடத்தை உடனே சுத்தம் செய்தார்கள். அங்கே, ஏற்கெனவே கோயில் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. அதையடுத்து, கற்பக மகா முனிவர் வழிபட்ட இடம் அது என்பது தெரிந்து, பூரித்துப் போனது ஊர். அந்த ஊர் தாண்டிக்குடி எனப்படுகிறது.


அதேபோல், தல வரலாறாக இன்னொன்றும் சொல்வார்கள். அகத்திய முனிவரின் ஆணைப் படி, திருக்கயிலாயத்தில் இருந்து இரண்டு மலை களைத் தூக்கி வந்தான் இடும்பன்.
அந்த இரண்டு மலைகளையும் அவன் பழநியில் வைத்துச் சற்றே இளைப்பாற, அப்போதுபாலமுருகனாக வந்த முருகக்கடவுள், ஒரு மலையின்மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதன் பிறகு, அந்த மலையை இடும்பனால் அசைக்கக்கூட முடியவில்லை. அதுவே பழநிமலை. இன்னொரு மலையை எடுத்துச் சென்றார் இடும்பன். அதுவே தாண்டிக்குடி மலை என்கிறது ஸ்தல புராணம். பழநிமலையை சிவகிரி என்றும், தாண்டிக்குடி மலையை சக்திகிரி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.
கோயிலின் மூலவர் மற்றும் உத்ஸவர் இரண்டு பேருமே கொள்ளை அழகுடன் தரிசனம் தருகின்றனர். மாதந்தோறும் கிருத்திகையில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடிக் கிருத்திகை இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, தேரில் பிராகார வலம் வரும் முருகனைத் தரிசித்தால், பிள்ளை வரம் கிடைக்கப் பெறலாம், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.  
இந்தத் தலத்தில் தைப் பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றுவட்டார ஊர்களில் இருந்து காவடி ஏந்தியும், பால் குடம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்வார்கள்.

அதேபோல், பழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
தைப்பூச நாளில், குடம் குடமாக பாலபிஷேகம் முதலான சகல அபிஷேகங்களும் நடைபெறும். ராஜ அலங்காரத்தில் முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும்!
இங்கே பங்குனி உத்திரமும், வைகாசி விசாகமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால், நம் கஷ்டமெல்லாம் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இடும்பர், சித்தர்கள், கால பைரவர், கணபதி, நவகிரகங்கள் மற்றும் நாகருக்கு என தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.  இங்கு, கோயிலுக்கு அருகில் விபூதிக்குழி உள்ளது. பூமியில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் இந்த விபூதிப் பிரசாதம் இங்கே விசேஷம்!

தினமும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.



No comments:

Post a Comment