சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jan 2015

பிட்சா டெலிவரி ஊழியருக்கு இணையம் மூலம் கிடைத்த நியாயம்!


சாமான்யர்களுக்கு ஆதரவாக இணையம் எத்தனையோ முறை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்திருக்கிறது. நிதி திரட்டி தந்திருக்கிறது. நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவில் பிட்சா நிறுவன ஊழியர் ஒருவருக்காக இது எல்லாவற்றையும் செய்திருக்கிறது. 
பணியின் போது டிப் மறுக்கப்பட்டு அவமதிப்பிற்கும் இலக்கான பிட்சா நிறுவன ஊழியருக்காக தான் இப்படி அறிமுகம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆயிரம் டாலருக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கின்றனர்.
இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் இந்த கதையில் நடந்தது இது தான்.

ஜாரிட் டான்சே அமெரிக்காவின் மாசாசூட்ஸில் உள்ள வெஸ்ட்போர்டில் இருக்கும் பேலஸ் பிட்சாவில் பணியாற்றுபவர். சமீபத்தில் டான்சே வழக்கம் போல் நிறுவனம் ஒன்றுக்கு பிட்சா டெலிவரி செய்ய சென்றுள்ளார். எப் அண்ட் ஆர் ஆட்டோ சேல்ஸ் எனும் நிறுவனத்தில் அவர் பிட்சா வழங்கி வந்த பிறகு அந்த நிறுவனத்திடம் இருந்து போன் வந்திருக்கிறது. டான்சே மீதி தொகை கொடுக்காமல் வந்துவிட்டார் என்பது தான் போன்காலில் சொல்லப்பட்ட தகவல்.

42
டாலருக்கும் கொஞ்சம் கூடுதலான தொகைக்காக இரண்டு 20 டாலர் மற்றும் இரண்டு 5 டாலர் நோட்டுகள் தரப்பட்டுள்ளன. எஞ்சிய 7 டாலர் மட்டும் சொச்சம் தனக்கான டிப் என்று நினைத்துக்கொண்டு டான்சே வந்திருக்கிறார். ஆனால் ஆட்டோ நிறுவன ஊழியர்களோ அது கொடுக்கப்படாத மீதி தொகை என்று கூறியிருக்கின்றனர்.

டான்சே மற்றும் பிட்சா நிறுவன ஊழியர்கள் இதை பணிவாக எடுத்துச்சொல்லியும் மறுமுனையில் இருந்தவர்கள் மறுத்து மீதி தொகையை கொண்டு வந்து தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.

டான்சேவும் வேறு வழியில்லாமல் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் சென்று மீதி தொகையை கொடுத்துள்ளார்.

டான்சேவுக்கு டிப் மறுக்கப்பட்டது வருத்தம் தந்தது என்பதை விட , அந்த தொகைக்காக மீண்டும் சென்றுவர வேண்டியது அதிகம் வருத்தத்தை தந்திருக்க வேண்டும். ”என்னை மீண்டும் கொண்டு வந்து தர சொல்லப்போகும் டாலர் நோட்டை ஏன் என்னிடம் முதலில் நீங்கள் கொடுத்தீர்கள் என்று புரியவில்லைஎன ஆட்டோ நிறுவன ஊழியர்களிடம் கூறியவர் விடைபெற்று திரும்பும் போது, ’எனக்கு பைத்தியம் இல்லை, இங்கு திரும்பி வருவதால் எனது நேரமும், ஆற்றலும் வீண்என தெரிவித்திருக்கிறார்.


டான்சே இப்படி கூறியதும் கடுப்பான ஆட்டோ ஊழியர்கள், அவரை மிரட்டவும் திட்டவும் துவங்கினர். அவரை வெளியே தள்ளி கதவை சாத்தவும் செய்துள்ளனர்.. மேலும் நிறுவன மேலாளருக்கு போன் செய்து இந்த முட்டாளை வேலையை விட்டு தூக்க சொல் என்றெல்லாம் வசை பாடியிருக்கின்றனர். இது போன்ற அனுபவம் சேவை துறையில் இருக்கும் பலருக்கு ஏற்படக்கூடியது தான். இத்தகைய முரட்டுத்தனமான வாடிக்கையாளர்களிடம் அவமதிப்புக்கு ஆளாகும் போது அதை பொறுத்துக்கொள்ள வேண்டும் அல்லது தனக்குள் புலம்பிக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இது இணைய யுகம் அல்லவா? அது தான் இந்த காட்சியும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு லைவ்லீக் எனும் தளத்தில் வெளியிடப்பட்டது. வீடியோவை பார்த்த எல்லோருமே டான்சேவுக்கு ஏற்பட்ட நிலைக்காக வருந்தினர். டிப் தராமல் இருப்பது ஒருவரது விருப்பம். ஆனால் அதற்காக அவமதிப்பு செய்வது என்ன நியாயம் என்று நினைத்தனர்.


இப்படி நினைத்தவர்களில் அமண்டா ரோஜர்ஸ் என்பவரும் ஒருவர். அமண்டா வெயிட்டராக பணியாற்றியவர் என்பதால் மற்றவர்களை விட அவரால் டான்சேவின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது. முதலில் அவர் , டான்சேவை தொடர்பு கொண்டு அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய 7 டாலரை அளிக்க விரும்பினார். இதற்காக டான்சே பெயரை ( வீடியோவில் பெயர் இல்லை) தெரிந்து கொள்ள ஆட்டோ நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் அந்த தொகைக்கு டான்சே உரியவர் அல்ல என்பது போல பேசியிருக்கின்றனர்.

அப்போது தான் அமண்டாவுக்கு டான்சேவுக்காக கூடுதலான தொகையை நிதி திரட்டி தந்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. உடனே இணையம் மூலம் நிதி திரட்டும் தளங்களில் ஒன்றான கோஃப்ண்ட்மீ தளத்தில், ஒரு கோரிக்கை பக்கத்தை அமைத்து நடந்த சம்பவத்தை விவரித்து டான்சேவுக்கு முடிந்த அளவு நிதி அளிக்குமாறு கேட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்தாலே  டான்சே அவர் வேலையை செய்திருக்கிறார் என்பதும், ஆனால் அதற்கு பதிலாக கேலிக்கும் அவமதிப்பிற்கும் இலக்காகி இருக்கிறார் என்பது புரியும் என குறிப்பிட்டிருந்தவர், இத்தகைய மோசமான மக்களை எதிர்கொண்டதற்காக டான்சேவுக்கு பரிசளிப்போம் என்றும் கூறியிருந்தார்.

இந்த கோரிக்கை பக்கத்தை பார்த்த பலரும் இதை ஏற்றுக்கொண்டு தங்களால் இயன்ற தொகையை அளிக்க முன்வந்தனர். அதோடு டான்சேவிடம் முறையில்லாமல் நடத்து கொண்ட ஆட்டோ நிறுவன ஊழியர்கள் செயலுக்கு கண்டனமும் தெரிவித்திருந்தனர். இந்த வீடியோவை அவர்கள் தங்கள் கருத்துக்களோடு பகிர்ந்து கொள்ள அது மேலும் பிரபலமாகி ஆட்டோ நிறுவன ஊழியர்களுக்கான கண்டனம் அதிகமானது. கூடவே டான்சேவுக்கான நிதியும் அதிகமானது. தற்போது 25 ஆயிரம் டாலர்களுக்கு மேல் குவிந்துள்ளது.

இந்த தொகையை அவரிடம் நேரில் கொண்டு போய் தர இருப்பதாக அமண்டா கூறியிருக்கிறார். அதற்கான பயண டிக்கெட்டையும் ஒருவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.


மற்றவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துவதாக அமண்டா உற்சாகமாக கூறுகிறார். அதோடு சாமான்யர்களுக்காக ஆதரவாக சகமனிதர்கள் திரண்டு ஆதரவு தெரிவிப்பதற்கும் உதாரணமாக இருக்கிறது.

இதற்கு அடிப்படையாக அமைந்த அந்த வீடியோ ஆட்டோ நிறுவனத்தின் கண்காணிப்பு காமிராவில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. முதலில் யூடியூப்பில் ஒரு பிட்சா ஊழியரின் அதிருப்தி என வெளியிடப்பட்டு பின்னர் வைல்வீக்ஸ் தளத்தில் வெளியானது. ஆனால் அதை வெளியிட்டது யார் என்பது தான் தெரியவில்லை. யாராக இருந்தாலும் சரி கவித்துவமான நீதி கிடைக்கச் செய்திருக்கிறார்.


டான்சேவுக்கு நிதி திரட்ட அமைக்கப்பட்ட இணைய பக்கம் :http://www.gofundme.com/xx9js


No comments:

Post a Comment