சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Mar 2015

மெத்தன போக்கால் தாகம் தணிக்கும் பாட்டில் தண்ணீர்!

தண்ணீர்...! அடுத்த உலகப்போருக்கான மூலப்பொருள். ''இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என பயன்படுத்துவதற்கு இனிமையான எளிமையான தமிழ் மொழியை தண்ணீரோடு ஒப்பிட்ட நம் சமூகம். இன்று தண்ணீர் அருந்த நாம் பணம் செலவளிக்க வேண்டியுள்ளது. ஊருணியும், ஏந்தலும், குளமும், கண்மாயும் இருந்த நிலப்பரப்பு, நோயுற்றவன் உடலில் ஆங்காங்கே ஊசிகளை சொருகிய உடல்போல் ஆழ்துளை கிணறுகளை தாங்கி நிற்கும் நேரத்தில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாட இருக்கிறோம் நாம்.

''ஊரின் செல்வத்தை குறிக்கும் ஊருணி" (ஊண்–உணவு, ஊருணி–தண்ணீர். குடிக்க பயன்படும் தண்ணீர்)
தேனி மாவட்டம் எம்.சுப்புலாபுரம் கிராம மக்கள், ''ஆரம்பத்துல இங்கிருந்த ஊருணிதான் எங்களுக்கு நீராதாரமா இருந்துச்சு. இந்த ஊருணியில தான், ஊர் முழுக்க வந்து தண்ணியெடுக்கும். கொஞ்ச காலத்துக்கு பின்னாடி எங்க தலைமுறையாளுங்க எல்லாம் நீச்சல் கத்துகிட்டது இந்த குளத்துலதான். ஒரு வருசத்துல மழை பெஞ்சு இந்த ஊருணி நிறைஞ்சு தண்ணி வெளியேறிட்டா அந்த வருசம் நல்ல மழை! அதோட விவசாயமும் நல்லா இருக்கும்.

இப்படி, எத்தையோ முறை ஊருணியில இருக்குற தண்ணியால ஊரு செழிச்சிருக்கு. ஆனா, இந்த ஊருணியை முறையா பராமரிக்காததுனால கடந்த 10 வருசமா ஆகாய தாமரையா இருக்கு. ரெண்டு முறை கிராம மக்கள் செலவுல அதையெல்லாம் அப்புறப்படுத்துனோம், திரும்பவும் இப்ப வந்திருச்சு. அரசாங்கத்துக்கிட்ட முறையிட்டோம், ஆனா நடவடிக்கையில்ல. இப்ப ''ரெண்டு குழி நிலத்துக்கு தேவையான தண்ணியை போருல இருந்து வடிச்சு, தண்ணி பாய்ச்சுற குண்டல்ல சேமிச்சு, அதுல நிலத்தை பதப்படுத்தி விவசாயம் செய்யுற அளவுல தான் தண்ணி இருக்கு" என்றனர் வேதனையுடன்.

காணாமல் போன கிணறுகள்...
''நிலத்துக்கு கீழ முதல் ஐம்பதடி ஆழத்துல எப்போதும் தண்ணி இருந்துட்டே இருக்கும். போர் போடுறவங்க 500 அடி, 1,000 அடின்னு போடுறதுனால இந்த தண்ணீ போர் பைப்புக்குள்ள போக வாய்ப்பே இல்ல. சிறிய குழாயை சுத்தியிருக்குற தண்ணியும் அந்த குழாய்க்குள்ள போகாது. அதே கிணறு வெட்டும்போது, தண்ணீர் கிடைக்கும். அதோட, பக்கங்கள்ல இருக்குற ஊத்து வழியாகவும் நீர் கிணத்துக்குள்ள வந்து விழும். ஆனா, இந்த காலத்துல யாரு கிணறு வெட்டுறாங்க" என்கிறார் கிணறு வெட்டும் தொழில் செய்யும் சித்ரா.

கணாமல் போன கண்களை உடைய கண்மாய்...
நீரினை ஓரிடத்தில் தேக்கி அதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான நீரினை கண்கள் (அதாவது தண்ணீர் வெளியேறும் பாதை) வழியாக எடுப்பபதால் அந்த நீர் நிலைக்கு கண்மாய்  என்று பெயர், அல்லது பல கண்ணாறுகள் ஓரிடத்தில் இணைந்த பின் பிரியுமிடம். இன்று காணப்படும் கண்மாய்களோ, கழிவுகளின் கூடாரமாகவே இருக்கின்றன. தேனியில் உழவர் சந்தையின் அருகிலுள்ள மீறு சமுத்திர கண்மாயில் அதிகப்படியான கழிவுகளை கொட்டுக்கிறார்கள். இதனால், அந்த பகுதி முழுக்க நுர்நாற்றம் வீசுகிறது. அத்தோடு, அந்த குளத்தில் மீன் பிடிப்பவர்களுக்கு தோல் வியாதிகளும் வருகின்றன" என்கிறார்கள் அப்பகுதி வாசிகள்.

ஏங்கி நிற்கும் ஏந்தல்கள்...

தண்ணீரை தாங்கி ஆங்காங்கே நிற்கும் நிலப்பரப்புகள் ஏந்தல்கள். அவை இன்றும் தனியாய் நிற்கின்றன. குளக்கரைகளில் ஆங்காங்கே ஏந்தல்கள் காணப்பட்டாலும் அந்த இடங்களில் ஆற்று மணலை வெட்டியெடுத்ததால் அவை குழிகளாகவே காட்சியளிக்கின்றனவே தவிர ஏந்தல்களாக தற்போது இல்லை.
நீரினை பற்றி குறிப்பிடுபோதும் நம்முடைய சமீபத்திய உரிமை மீட்பான முல்லை பெரியாறு வெற்றியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். அணையின் நீர்மட்டம் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்ந்தது. ஏதோ ஆறு அடி உயர்ந்திருக்கிறது என ஜஸ்ட் லைக் தட் சொல்ல கூடிய விசியமல்ல அது.
777 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஒரு ஆள்மட்டத்திற்கு நீர் உயர்ந்தால் எப்படி கடல்போல் காட்சியளிக்குமோ, அப்படி ஒரு பிரமிப்பு அதில் இருக்கிறது. இதனால், உயர்ந்த நீரின் அளவு 1.5 டி.எம்.சி. அதை இப்படி கூறலாம், மதுரை மாவட்டத்தில் வசிக்கும் 20 லட்சம் மக்களுக்கு தினசரி 50 லிட்டர் வீதம் ஒரு வருடத்திற்கு தேவையான நீரின் அளவு.

இப்படிபட்ட உரிமையை மீட்டு, வினாடிக்கு 2,250 கன அடி  தண்ணீர் 40 நாட்களுக்கும் மேலாக தமிழக பகுதிக்கு வந்ததும், முல்லைபெரியாற்று நீரினை நம்பியுள்ள  பல கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதற்கு அந்த பகுதிகளிலுள்ள குளங்களை தூர்வாராமல் இருக்கும் பொதுப்பணித் துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்கிறார்கள் பாட்டில் தண்ணீரில் தாகம் தணிக்கும் மக்கள்.


120 வருடங்களுக்கு முன்னால் கட்டியை அணையின் பெருமையை மட்டும் பேசி அதன்பின் தென்னக மாவட்டங்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களை அறிமுகப்படுத்தாததும், கிடைக்கும் நீரினையாவது முறையாக பராமரித்து சேமிக்க நீர்நிலைகளை பாதுக்காக்காமல் இருந்து கொண்டு, தண்ணீரை காசாக்கும் இந்த அரசாங்கம், பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போன்ற செயலையே செய்கிறது!

அட, இந்த உண்மைகளை பொதுப்பணித்துறை அமைச்சரும், தன்னுடைய பெயரில் நீரையும் (பன் ''னீர்“),  தன்னுடைய ஊரில் குளத்தையும் (பெரிய ''குளம்“) கொண்டுள்ள முதல்வர் இனியாவது கவனிப்பாரா!


No comments:

Post a Comment