சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Mar 2015

மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூக்களை தொடக்கூடாதா?

மாதவிடாய் நாட்களில் பெண்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைப்பது இன்றும் பல கிராமங்களில் நடைமுறைதான். வீட்டிற்குள் வரக் கூடாது, யாரையும் தொடக் கூடாது, செடியைத் தொட்டால் தழைக்காது, கடவுளை பிரார்த்தித்தால் தண்டனை கிடைக்கும். இந்தச் சட்டமெல்லாம் நம் ஊர்களில் மட்டுமல்ல, நாடு முழுமைக்கும்தான்.

உத்ரகண்ட் மாநிலம், ரிஷிகேசில் உள்ள பையல் என்னும் கிராமத்தில், இந்த நடைமுறையினை மாற்றும் முயற்சியாக முகாமிட்டுள்ளது, ‘கூன்ஜ்’ (குரல்) என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று. மாதவிடாய் பற்றிய மூட நம்பிக்கைகளை அகற்றி விழிப்பு உணர்வையும், சுகாதாரத்தையும் அக்கிராமத்தின் பெண்களிடம் சேர்த்துக்கொண்டிருக்கிறது ‘கூன்ஜ்’.

கிராமப் பெண்களின் வார்த்தைகளில் தெரிகின்றன, இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிக்கான பலன். ‘‘எனக்கு முதலில் மாதவிலக்கு ஏற்பட்டது, 14 வயதில். அப்போது உடலில் ஏற்பட்ட அசௌகரியங்களால் சோர்வாகி இருந்த என்னிடம், ‘வீட்டிற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்க வேண்டும்’, ‘அதிகமாக நடமாடக் கூடாது’, ‘யாரையும் தொட்டுவிடக் கூடாது’, ‘இப்போது கடவுளைக் கும்பிட்டால், அவர் கோபமாகி தண்டித்து விடுவார்’ என்று கட்டுப்பாடுகளை அடுக்கினார்கள். இவையெல்லாம் சேர்ந்து, ஏதோ என் உடல் தவறு செய்கிறது என்ற எண்ணமே எனக்கு எழுந்தது’’ என்கிறார் ஆர்த்தி.

‘‘இதனாலேயே மாதவிலக்கு என்றாலே எனக்கு ஒருவித அச்சமும் வெறுப்பும் ஏற்பட்டது. ஆனால் அம்மாவோ, ‘வேறு வழியில்லை, இதுதான் பெண்களுக்கு விதிக்கப்பட்டது’ என்று மீண்டும் மீண்டும் கட்டுப்பாடுகளை வலியுறுத்தினாரே ஒழிய, அந்நாட்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் பற்றிச் சொல்லித் தர எங்களுக்கு யாருமே இல்லை. இன்னமும் எங்கள் ஊரில் பல பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் என்றால் என்ன என்று கூடத் தெரியாது.’’ என்கிறார் கோபத்துடன் சிவானி.
இவையெல்லாம் தற்போது ‘கூன்ஜ்’ன் முயற்சியால் மாறியுள்ளது. இவர்கள் அந்த கிராமத்தின் பெண்களிடம் அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எல்லாம் மடமை என்று கூறியதுடன், மாதவிடாயின் போது உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன, அந்நாட்களில் எப்படி சுகாதாரமாக இருப்பது என்பதுடன், அவர்களுக்கு ரீசைக்கிள் செய்யப்பட்ட துணி நாப்கின்களையும் வழங்கி வருகிறார்கள்.

தொண்டு நிறுவனத்தின் முக்கியச் செயற்பாட்டாளர் அனுஷ் குப்தா, ‘‘இந்தியாவில் மாதவிலக்கு என்றாலே பெண்கள் மறைக்க வேண்டிய ரகசியமாக நினைக்கிறார்கள். அதனால் அந்நாட்களில் பயன்படுத்தும் துணிகளையும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில், சரியாக உலர்த்தாமல் பயன்படுத்துவது, அதனால் தொற்றுக்கு ஆளாவது, அதையும் வெளியில் சொல்லாமல் மறைப்பது என்று சிரமங்களைப் பெருக்கிக்கொள்கிறார்கள்.’’ என்று தங்களை இந்த கிராமத்தை நோக்கி இழுத்த சூழலைச் சொல்ல, அதை மாற்ற தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைச் சொன்னார், வாலன்டியர் பிரியங்கா.

‘‘நாங்கள் இந்த நிலையை மாற்ற நினைத்தோம். ரகசியம் என்று காக்கப்பட்டதை, வெளிப்படையாகப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். மாதவிடாய் என்றால் என்ன, அப்போது உள் உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன, அந்நாட்களில் எப்படி சுகாதாரமாக இருப்பது என்பதுடன், ரீசைக்கிள் செய்யப்பட்ட துணிகளையும் அவர்களுக்கு நாப்கின்களாகக் கொடுத்து, அவற்றைப் பயன்படுத்தவும், அப்புறப்படுத்தவும் கற்றுக் கொடுத்தோம். பல காலங்களாக படுத்தி வந்த மூடநம்பிக்கையில் இருந்து, இப்போது விடுபட்டிருக்கிறார்கள் சில பெண்கள். முயற்சி தொடர்கிறது.’’ என்றார் நிம்மதியுடன்.


No comments:

Post a Comment