சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Mar 2015

தமிழகத்தில் மலருமா தாமரை?

மிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி புரியத்துவங்கி, ஏறத்தாழ 50 ஆண்டுகள் நெருங்கி விட்டது. இந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகளுக்கு நேரடி போட்டியாக கூட தேசிய கட்சிகள் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தேசிய கட்சிகளுக்கு துளி வாய்ப்பை கூட தமிழகம் வழங்கி விடவில்லை. கடந்த 50 ஆண்டுகளும் திராவிட கட்சிகளுக்கிடையேயான ஆட்சிதான் நடந்து வருகிறது.
கடந்த 1967ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தோல்வியின் மூலம் பல ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விடம் ஆட்சி பொறுப்பை இழந்தது. ஆனால் அதன் பின்னர் அக்கட்சி எழவே இல்லை. அவ்வப்போது அவர்கள் 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' என சொன்னாலும், அவர்களுக்கே அதில் நம்பிக்கை இல்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு எப்படியும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை எட்டிவிட வேண்டும் என முழு மூச்சாய் செயல்பட துவங்கியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. அது நடக்குமா? தமிழகத்தில் தாமரை மலருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பார்க்கலாம். 

தமிழகத்தை குறி வைக்கும் பாஜக

பாஜகவை பொறுத்தவரை அண்மைகாலத்தில் அதன் வளர்ச்சி மிகப் பிரமாண்டமானது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் உச்சத்துக்கு சென்று விட்டது பாஜக. மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி, பல மாநிலங்களிலும் அடுத்தடுத்த வெற்றியை ருசி பார்த்து விட்ட பா.ஜ.க.வின் அடுத்த குறி தமிழகம்தான். "தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்கள் உள்ளன. ஒரு பூத்துக்கு 100 பேரை சேர்த்து விட்டால், மொத்தம் 60 லட்சம் பேரை கட்சியில் சேர்த்து விடலாம். அப்படி 60 லட்சம் பேரை கட்சியில் இணைத்து விட்டால், நாம் வலிமையான அமைப்பாக ஆகிவிடுவோம். தமிழகத்தில் பாஜக வலிமை பெறுவது என்பது அத்தியாவசியம்," என பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித் ஷா சொல்வது இதைத்தான் குறிக்கிறது.


'2016ல் ஆட்சி அமைத்தே தீருவோம்' என்ற முழக்கத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது அனைவராலும் கவனிக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் பாஜகவும், தர்மபுரியில் கூட்டணியில் அங்கம் பெற்ற பா.ம.க.வும் வெற்றி பெற்றதை தமிழகத்தில் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பாஜக நினைக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், தங்கள் கூட்டணிக்கு கிடைத்த இரண்டு தொகுதி வெற்றியும், சில தொகுதிகளில் தி.மு.க. 3வது இடத்துக்கு தள்ளப்பட்டதும், கூட்டணிக்கு கிடைத்த 19 சதவீத வாக்குகளும்தான் தமிழகத்தை நோக்கி பாஜகவை திருப்பியுள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழகத்தை ஏன் பாஜக குறி வைக்க வேண்டும்? இந்த கேள்விக்கு, "இந்தியாவில் எங்கெல்லாம் கட்சி வலுவிழந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் அக்கட்சியை வலிமைப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் தேசிய கட்சிகளுக்கு துளி வாய்ப்பும் கூட கொடுக்காமல் இருக்கும் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் வியப்பேதும் இல்லை " என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. 
 
பா.ஜ.க.வின் திட்டம் தான் என்ன?

"தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி எளிதில் கட்சிக்கு அடித்தளம் விடலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. "தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பாஜக வளர்ந்து வருகிறது. கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் தான் உறுப்பினர் சேர்க்கையில் கவனத்தை செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் மொத்தம் 64 ஆயிரத்து 78 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தலா 100 பேரை சேர்த்து, மொத்தம் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோரை சேர்த்து விட வேண்டும் என்பது தான் எங்கள் திட்டம். இதன் மூலம் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்துவதோடு, ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர். 

இதற்கான வேலைகளை பாஜக கடந்த நவம்பர் மாதமே துவங்கிய போது, டிசம்பர் இறுதியில்தான் இந்த வேலைகள் வேகமெடுத்தது. அதற்கு காரணம் அமித் ஷா. டிசம்பர் இறுதியில் இவரது வருகைக்கு பிறகு தான் இந்த வேலைகள் எல்லாம் சற்று வேகமெடுத்தன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், 'தமிழகத்தில் எத்தனை உறுப்பினர்களை சேர்த்திருக்கிறீர்கள்?' என கேட்டு தெரிந்து கொள்கிறார். இந்த பணியில் வேகமில்லை என அமித் ஷாவுக்கு தெரியவர... மீண்டும் தமிழகம் வந்து சென்றுள்ளார் அமித்ஷா.

அமித் ஷா எனும் சூத்திரதாரி
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து நம் ஆட்சிதான் என அறிவித்து, அதற்கான வேலைகளை துவக்கி விட்டது பாஜக. இதற்கு சூத்திரதாரி அமித் ஷா. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதை நோக்கி பயணிக்க வகுக்கும் திட்டங்கள் எல்லாம் இவரின் திட்டங்கள்தான். இவரது கணக்கும், புள்ளி விவரங்களும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அசரடிக்கிறது. "நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலையிலேயே நம்மால் 19 சதவீத வாக்குகளைதான் பெற முடிந்தது. அதற்கு காரணம் கட்சி அமைப்பு ரீதியாக பலவீனமாக இருப்பது தான். 60 லட்சம் பேரை நாம் சேர்த்தால் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தார் என ஒன்றரை கோடி வாக்குகளை நாம் பெற முடியும். அப்படி வாக்கு வாங்கினால் தமிழகத்தில் நம் ஆட்சி தான்," என அமித் ஷா சொல்லும் போது, ஏதோ தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்று விட்ட மாதிரி கை தட்டி ஆர்ப்பரிக்கின்றனர் பாஜகவினர். அமித் ஷாவின் பலம் இது தான். கட்சியை ஆட்சியில் அமர்த்தி விட முடியும் என நிர்வாகிகளை முழுமையாக நம்ப வைத்து விடுகிறார் அவர்.

"தேசியத் தலைவர் அமித்ஷா இவ்வளவு குறைந்த கால அவகாசத்தில் எந்த மாநிலத்துக்கும் இரு முறை வந்ததில்லை. இந்த முறை அமித் ஷா கோவை வருவதற்கு முந்தைய தினம், ஒரே நாளில் 45 ஆயிரம் பேர் தங்களை கட்சியில் இணைத்துள்ளனர். எனவே அமித் ஷாவின் தமிழகம் வருகை, 60 லட்சம் உறுப்பினர் சேர்க்கை என்பதை எளிதாக்கி விடும். அடுத்து ஒரு கோடியை நோக்கி நாம் பயணிப்போம். தமிழகத்தில் ஆட்சியும் அமைப்போம்" என பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சொல்வதும் அமித் ஷாவின் கணக்கைதான்.

தமிழகத்தில் மலருமா தாமரை?

2016ல் எங்கள் ஆட்சிதான் எனச் சொல்லும் பாஜகவின் கணக்கு சரி தானா? பாஜகவின் கணக்கு பலிக்குமா? என்றால் கேள்விக்குறி தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

"தமிழகத்தில் மொத்தம் 64 ஆயிரத்து 78 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தலா 100 பேரை சேர்க்க வேண்டும் என சொல்கிறார் பாஜக தலைவர் அமித் ஷா. இதன் மூலம் 60 லட்சம் பேரை சேர்த்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என்றும் அவர் சொல்கிறார். ஆனால் தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் முகவருக்கு கூட ஆளில்லாத நிலையில்தான் பாஜக உள்ளது. எனவே வாக்குச்சாவடிக்கு 100 பேரை சேர்த்ததாக ஏதோ கணக்குக்கு சொல்லலாமே தவிர, அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்" என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
தமிழகத்தில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து பல காலம் ஆகிவிட்டது. திராவிட கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் தேசிய கட்சிகள் பயணித்து வருகின்றன. தமிழகத்தில் திராவிட கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நெருக்கடிக்குள்ளாவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே பலமுறை இப்படியான பிரச்னைகளை இரு கட்சிகளும் கடந்து வந்து விட்டன. அப்போதெல்லாம் தேசிய கட்சிகள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று விடவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக முன் வைக்கப்பட்ட தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளும் கூட ஆட்சி அதிகாரத்துக்கான போட்டியில் பங்கேற்க முடியவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் அந்த இரு திராவிட கட்சிகளும் அத்தனை அழுத்தமாய் பதிந்து விட்டன. அந்த வகையில் பாஜகவின் வருகை சலசலப்பை ஏற்படுத்தலாமே தவிர, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நாடாளுமன்ற தேர்தலில் 19 சதவீத வாக்குகள் என்பது பாஜகவின் வாக்குகள் மட்டுமல்ல. தே.மு.தி.க. (5.19 சதவீதம்), பா.ம.க. (4.49 சதவீதம்), ம.தி.மு.க. (3.54 சதவீதம்) ஆகிய கட்சிகளின் வாக்குகளும் சேர்த்து தான் 19 சதவீதம். பாஜக தனித்து பெற்ற வாக்குகள் வெறும் 5.56 சதவீதம் மட்டும்தான். ஆனால் எந்த தொகுதியிலும் ஜெயிக்காத தி.மு.க. பெற்ற வாக்குகள் 23.91 சதவீதம். நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை இருந்ததால் இந்தளவு பாஜக கூட்டணி வாக்குகளை பெற்றது. இதை ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலும் உறுதி செய்தது. இதில் தே.மு.தி.க. ஆதரவுடன் போட்டியிட்ட பாஜக பெற்ற வாக்குகள் 5015. அதாவது 2.26 சதவீதம் மட்டுமே. ஆனால் தேர்தலில் தோல்வியை தழுவிய தி.மு.க. பெற்றது 55 ஆயிரத்து 45 வாக்குகள். அதாவது 24.89 சதவீதம். பாஜகவை விட 11 மடங்கு அதிகம். இதுதான் தமிழகத்தின் நிலைமை. 

பெரியார் மண்ணில் காவிக்கறையா?

அமித் ஷாவின் வருகையையும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கையையும் மற்ற கட்சிகள் அலட்சியமாக பார்க்கவில்லை. காந்தி நினைவு தினத்தன்று திராவிட இயக்கங்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தலித் கட்சிகள் என தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கரம் கோர்த்து பாஜகவை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது எனச்சொல்லியது இதைத்தான் காட்டுகிறது. 
"பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் வன்முறை வெடித்தது. அப்போது இந்தியாவில் அமைதியாக இருந்த மாநிலம் தமிழகம். தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியை அகற்றி, ஆட்சியமைப்போம் என பாரதிய ஜனதா சொல்கிறது. இந்த மண்ணில் யாரும் காவிக்கறையை பூசி விட முடியாது. ஒருபோதும் வடக்கே இருந்து வரும் காற்று, தமிழகத்தை ஆள வாய்ப்பில்லை" என சொன்னார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.
"அமித்ஷா அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். பெரியார் மண்ணுக்கு வருகிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தீப்பிடிக்காத ஒரு மண் தமிழ் மண் தான். அரசியல் பக்குவம் நிறைந்த மண் தமிழகம். இங்கு பாசிஸ சக்திகள் அடியெடுத்து வைக்க முடியாது. 2016 தேர்தலை அவர்கள் குறி வைக்கிறார்கள். பெரியார் மண்ணில் பாஜக வலுவடைவது என்பது நடக்காது. நடக்க அனுமதிக்கவும் கூடாது" என்கிறார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
"தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்றி, நாங்கள் எங்கள் ஆட்சியை அமைப்போம் என சொல்கிறார்கள். விலை போகும் மக்கள் தமிழகத்தில் நிறைய இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் சொல்கிறார்கள். இதை எதிர்த்து நாம் ஒன்றிணைய வேண்டும். தேசிய இயக்கம், பகுத்தறிவு இயக்கம், இடது சாரிகள், சமூக விடுதலைக்கான இயக்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து இவர்களை எதிர்க்க வேண்டும். எந்த சூழலிலும் பாஜக தமிழகத்தில் கால் பதிப்பதை நாம் அனுமதிக்க கூடாது" என்கிறார் தா.பாண்டியன்.

தமிழகம் யார் பக்கம்?

தமிழகத்தில் பாஜக தன்னை நிலை நிறுத்துக்கொள்ள மக்களிடம் சொல்லும் இரு விஷயங்கள். ஒன்று ஊழலற்ற ஆட்சி. இரண்டாவது வளர்ச்சியை நோக்கிய மாற்றம். "திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் சிறப்பாக இல்லை. எனவே ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சியை முன் வைத்தால், அது இளம் வாக்காளர்களிடம் இது பெரிய வரவேற்பை பெற்றுத்தரும். அதன் மூலம் ஆட்சியை பிடித்து விடுவோம்" என சொல்கிறது பாஜக. 

தற்போது அனைவரும் பா.ஜ.க.வை உற்று நோக்க துவங்கியுள்ளனர். பாஜகவின் இந்த கணக்கு சரிதானா? திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற்றம் பெறுமா? என்பதை எல்லாம் இப்போதே கணிப்பது என்பது முடியாத காரியம். ஆனால் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், இந்திய அளவிலும் கூட பாஜக மெல்ல மெல்ல வளர்ந்துதான், மத்தியில் அதிகாரத்துக்கு வந்தது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.



No comments:

Post a Comment