சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Mar 2015

மதுவிலக்கு சாத்தியமாகுமா ?

காந்தி பிறந்த குஜராத் மாநிலம் தவிர்த்து, சுதந்திர இந்தியாவில் மது விலக்கு அமலில் இருந்த ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான் என்றால்  நம்ப முடிகிறதா?  இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பின்னர் ஏறத்தாழ 24 ஆண்டுகள் வரை (1971ம் ஆண்டு) தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. 

ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். மதுவிலக்கு  ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல், மதுவிற் பனைக்கென்றே ஒரு அரசு நிறுவனத்தை செயல்படுத்தி, மதுவிற்பனையை அதிகரிக்க இலக்கும் நிர்ணயித்து செயல்படும் ஒரே மாநிலமாக உள்ளது தமிழகம். 

இப்போது தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த அனைத்து கட்சிகளும் ஒரே குரலில்  பேசிவருகின்றன. பூரண மதுவிலக்கு கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மதுவிலக்கை அமலாக்கக்கோரி நடைபயணம் முதல் மாரத்தான் ஓட்டம் வரை நடத்திப் பார்த்து விட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. 

மதுவிலக்குதான் எங்கள் இலக்கு என அறிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார் ராமதாஸ். காங்கிரஸ், இடதுசாரிகள் என எல்லோரும் ஒரே குரலில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.  'மது விற்பனை வளர்ச்சியையே தனது முக்கிய குறிக்கோளாக கருதும் அ.தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்' என தி.மு.க. மகளிர் அணி சொல்லும் அளவுக்கு மதுவிலக்கு கோரிக்கை உச்சகட்டத்தை எட்டிவிட்டது.

24 ஆண்டு காலம் மதுவிலக்கு அமலில் இருந்த தமிழகத்தில், மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது ஏன்? இந் திய அளவில் மது விற்பனையில் முக்கிய இடம் பிடிக்கும் தமிழகத்தில் இனி மதுவிலக்கு என்பது சாத்தியம் தானா? 

மதுவிலக்கை ரத்து செய்ய மறுத்த முதல்வர்கள் 


இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1937ம் ஆண்டு முதன் முதலில் மதுவிலக்கு அமலானது. 1944ம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்து, கள்ளுக்கடைகளை திறக்க திட்டமிட்டது ஆங்கிலேய அரசு. ஆனால் அதை ராஜாஜி கடுமையாக எதிர்த்தார். ஆனால் அதையும் மீறி 1944ம் ஆண்டு மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மீண்டும் மதுவிலக்கு அமலானது.

சுதந்திர இந்தியாவில் 1971ம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி துவங்கி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், எம்.பக்தவத்சலம், அண்ணா வரை எந்த முதல்வரும் மதுவிலக்கை ரத்து செய்ய முன்வரவில்லை. தி.மு.க. 1967ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய போது, 'அரசின் வருவாயை அதிகரிக்க மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரைத்தனர். மதுவிலக்கை ரத்து செய்தால் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் சொன்ன யோசனையை நிராகரித்த அண்ணா, 'மதுவிற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய், புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்' என்றார்.
 

மதுவிலக்கு ரத்தானது எப்படி?


ஆனால் அண்ணாவுக்கு பின்னர் தமிழக முதல்வரான கருணாநிதி மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய தி.மு.க. அரசு மதுவிலக்கை ரத்து செய்து, அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியும் சுவாரஸ்யம் தான். இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாததால், 'மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும்' என அறிவித்தது மத்திய அரசு.
'தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. எங்களுக்கும் மானியம் தர வேண்டும்' என தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்டபோது, அதற்கு மறுத்து விட்டது மத்திய அரசு. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது' என மத்திய அரசு அறிவிக்க... 'மதுவிலக்கை அமல்படுத்தியதற்கு இது தண்டனையா?  எனக்கேட்டு, தமிழகத்தில் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுவிலக்கை ரத்து செய்து, அதற்கான அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பிக்கச் செய்தார் கருணாநிதி.

பல ஆண்டு காலம் அமலில் இருந்த மதுவிலக்கு, திடீரென ரத்து செய்யப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்த, அதையும் கருணாநிதி சமாளித்தார். 'நான் சூடமாக இருக்கிறேன்: என்னைச் சுற்றி நெருப்பு இருக்கிறது; நான் என்ன செய்வது...?' என மற்ற மாநிலங்களில் மதுவிற்பனை நடக்கும்போது நான் மட்டும் என்ன செய்ய?  என சாமர்த்தியமாக பதில் அளித்தார் அவர். கருணாநிதியின் இந்த விளக்கம் அவரது முடிவை நியாயப்படுத்தியது.

டாஸ்மாக் நிறுவனத்தை துவக்கியது அரசு 

அதன் பின்னர் 1974ம் ஆண்டு மதுவிலக்கு மீண்டும் அமலானது. 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, மீண்டும் மதுவிலக்கு ரத்தானது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக டாஸ்மாக் நிறுவனம் துவக்கப்பட்டது 1983ல் தான். தொடர்ந்து 1987ல் மதுவிலக்கு அமலாகி 1990 முதல் 1991 வரையிலும் மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரான ஜெயலலிதா, முதல் கையெழுத்திட்டு மதுவிலக்கை அமலாக்கினார். 2001 வரை மதுவிலக்கு அமலில் இருந்தது.
2001ல் இரண்டாவது முறை முதல்வரான ஜெயலலிதா, மீண்டும் மதுவிலக்கை ரத்து செய்தார். மதுவிலக்கை முதல் கையெழுத்திட்டு துவக்கிய ஜெயலலிதா மீண்டும் மதுவிலக்கை ரத்து செய்த போது, அது கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அப்போது, "மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகுவதாகவும், அதனால் மதுவிலக்கை தளர்த்த வேண்டிய அவசியமாகிறது," என விளக்கம் கொடுத்தது அரசு. ஆனால் மதுவிலக்கை ரத்து செய்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், 2003ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிறுவனமான டாஸ்மாக், நேரடி மது விற்பனையை துவங்கியது. இதன் பின்னர்தான் மது விற்பனை தமிழகத்தில் கணிசமாக அதிகரித்தது. 

இந்த 12 ஆண்டுகளில் குடிப்பழக்கம் என்பது வெகுஜன கலாச்சாரத்தின் தவிர்க்கமுடியாத அங்கமாகவும் மாறிவிட்டது. இன்று தேசிய அளவில் அதிக வருவாய் ஈட்டும் பொதுத்துறை நிறுவனம் எது தெரியுமா? தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனம்தான்.

பரவலாகிய குடிப்பழக்கம் 
தமிழகத்தில் குடிப்பழக்கம் இன்று பரவலாகி விட்டது. மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள், குழந்தைகளை தவிர்த்தால் கிட்டத்தட்ட 70 சதவீதத்துக்கு மேற்பட்டோரும் மதுப்பழக்கம் கொண்டவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. பதின் பருவத்தினரிடம் கூட மதுப்பழக்கம் பரவலாகி வருவது அதிர்ச்சி தரும் செய்தி. 

மது விற்பனையும், மது குடிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அதே நேரத்தில் மதுவிலக்கு குறித்த கோரிக்கைகளும் தமிழகத்தில் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அண்மை காலங்களில் மதுவிலக்கு கோரும் போராட்டங்கள் அதிகரித்து வருவது இதைத்தான் காட்டுகிறது. சமுதாயத்தின் சகல மட்டத்திலும் மது விற்பனை, மதுவின் பாதிப்புகள் குறித்த கவலைகள் பரவலாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
அதிகரிக்கும் குற்றங்கள், சாலை விபத்துகள், குடும்ப உறவுகளில் சிதைவு, இளம் வயது மரணங்கள், அதிகரிக்கும் நோய் பாதிப்புகள் என பல பிரச்னைகளுக்கு மதுப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது என காரணம் சொல்லும் சமூக அமைப்புகள், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை அறிவித்து, தீவிரப்படுத்தி வருகின்றன.

மதுவிலக்கை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் 

இதன் நீட்சியாக தனிநபர் போராட்டங்களும் வலுத்தது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மது விலக்கை அமல்படுத்த வேண்டும் தொடர்ச்சியாக போராடினர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. 'குடிக் கொடுமையால் நானும், எனது குடும்பமும் கஷ்டப்படுவதைப் போல தமிழகத்தில் யாரும் கஷ்டப்படக் கூடாது. அதற்கு தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையுடன்  போராட்டம் நடத்தினார் 4 ம் வகுப்பு மாணவி ஜோதிமணி. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஒரு மாதத்துக் கும் மேல் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார் காந்தியவாதி சசிபெருமாள். இப்படி சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மதுவிலக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எல்லா பிரச்னைகளிலும் வெவ்வேறு போக்கை கையாண்டு வரும் அரசியல் கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள், அரசின் மதுவிற்பனைக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று ஒன்று சேர்ந்து குரல் குடுக்க துவங்கியுள்ளன அல்லது அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் தொடர்ச்சியாக மதுவிலக்கை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து வாய் திறக்காமல் இருந்த தே.மு.தி.க., அண்மைகாலங்களில் மதுவிலக்கு கோரி வருகிறது. பொதுக்குழுவிலும் கூட அக்கட்சி மதுவிலக்கு தேவை என தீர்மானம் செய்து விட்டது.

டாஸ்மாக் மதுவிற்பனையை தனது ஆட்சியில் கடைபிடித்த தி.மு.க. கூட மதுவிற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என வலியுறுத்த துவங்கி விட்டது. தமிழகத்தில் மதுவிலக்கை தி.மு.க. அமல்படுத்த முன்வருமா என்ற கேள்விக்கு, 'மதுவிலக்கு என்பது எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. எதிர்காலத்தில் மதுவிலக்கு கொண்டு வர முடியும் என்றால் அதனை அமல்படுத்த தி.மு.க. தயங்காது' என கனிமொழி சொல்லும் அளவுக்கு மதுவிலக்கு குறித்த கோரிக்கைகள் வலுக்க துவங்கி விட்டன.

மதுவிலக்கு சாத்தியமா?


மதுவிலக்கு கோரிக்கையை முன்வைப்பவர்கள், மதுவிலக்கு நிச்சயம் சாத்தியம் என்றே சொல்கின்றனர். "தமிழகத்தை  அடுத்த சில ஆண்டுகளில் சமூகப் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கிய நிலையில் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்னையாக மதுப்பழக்கம் இருக்கும். இதை தடுக்க மது விலக்கு அமல்படுத்தியே ஆக வேண்டும். மதுவிலக்க அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என சொல்கிறார்கள். இதனை நிச்சயம் ஏற்க முடியாது. கள்ளச்சாராயம் விற்காமல் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். 

இப்போது மது குடிப்பவர்களில் 10 சதவீதம் பேர் சாராயம் அருந்தலாம். எனவே மது குடிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறையும். அதன் மூலம் குற்றங்கள், விபத்துகள் எல்லாம் குறையும். அரசே மது விற்கும் போது அதை குடிப்பது எப்படி தவறாகும் என்பது தான் மது குடிப்பவர்களின் வாதமாக உள்ளது. எனவே அரசு மது விற்பனையை கைவிடும் பட்சத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்," என்கின்றனர் மதுவிலக்கு கோருபவர்கள்.


மதுவிலக்கு அமலானாலும் குடிப்பதை தடுக்க முடியாது. ஆனால் முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை என்ற குரலும் பரவலாக இருந்து வருகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய டாஸ்மாக் நிறுவன அதிகாரி ஒருவர், “ தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று. இந்தியாவில் மதுவிலக்கு அமலில் உள்ள ஒரே மாநிலம் குஜராத் என்கிறோம். உண்மையில் அங்கு முழுமையான மதுவிலக்கு இல்லை. அங்கு மருத்துவ சான்றிதழ் இருந்தால் மது கிடைக்கும். 

பணம் இருப்பவன் மருத்துவ சான்றிதழை பெற்று அதன் மூலம் பெர்மிட் வாங்கி மது அருந்துகின்றனர். ஊர் சுற்ற வருபவர்கள் குடிக்கலாம். அண்டை மாநிலம் சென்று குடித்து விட்டு வரலாம். வெளிமாநிலத்தில் 10 ஆண்டுகளும், வெளிநாட்டில் 5 ஆண்டுகளும் இருந்து விட்டு வந்தால் மது அருந்த பெர்மிட் கூட தேவையில்லை. ஏழைகளுக்கு மட்டும் சிரமம். அவர்களுக்கு ஒரே வழி கள்ளச்சாரயம் தான். அதனால் தான் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முக்கிய இடத்தை பிடிக்கிறது குஜராத். 

அண்டை மாநிலங்களில் சர்வ சாதாரணமாய் மதுபானங்கள் கிடைக்கும் நிலையில், அண்டை மாநிலங் களுக்கு சென்று மது அருந்துவதோ, அங்கிருந்து ரகசியமாக வாங்கி வந்து விற்பதோ மிக எளிதான ஒன்று. விலை குறைவு என்ற ஒரே காரணத்துக்காக புதுவையில் இருந்து ஏராளாமான மதுபானங்கள் தமிழகத் துக்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியிருக்க முழுமையான மதுவிலக்கு அமலானால் வெளியில் இருந்து மதுபானங்கள் கொண்டு வரப்படுவதையும், அங்கு சென்று குடிப்பதையும் தடுக்க முடியாது. முன்னாள் ராணுவத்தினருக்கு மது கொடுப்பதை மாநில அரசு தடுக்க முடியாது. 

கள்ளச்சாராயம் பெருகும் 


எல்லாவற்றுக்கும் மேலாக மதுவுக்கு மாற்றுவழியைத் தேடத்துவங்கி விடுவார்கள். கள்ளச்சாராயம் பெருகும். இருமல் மருந்துகளில் போதை ஏற்றும் மருந்துகளை கலந்து உட்கொள்ள துவங்குவார்கள். இவற்றை எல்லாம் தடுப்பது என்பது நிச்சயம் முடியாது. கடந்த 12 ஆண்டுகளில் போதை பழக்கத்துக்கு மிக மோசமாக பழக்கப்பட்டு விட்டனர். அவர்களை உடனடியாக மதுப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பது நடக்காது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அதன் பின்னரே விடுவிக்க முடியும். எனவே பூரண மதுவிலக்கு இப்போதைய சூழலில் சாத்தியமில்லை. மதுபானங்கள் எளிதில் கிடைக்கும் என்ற நிலையை சற்று குறைக்க வேண்டும்," என்றார்.

"மதுவிலக்கைக் கொண்டுவர அரசே தயாராக இருந்தாலும் மக்கள் இதை ஏற்க தயாராக இருக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இன்றைய சமூகத்தில் மது அருந்தும் பழக்கம் மிகச்சாதாரணமான ஒன்றாகிவிட்டது. மது இல்லாத இரவு விருந்துகளை மக்கள் கொஞ்சம் கூட மதிப்பதில்லை. ஒரு வேளை மதுவிலக்கை அமல்படுத்தினால், அப்போது கள்ளச்சாராயம் பெருகும் என்பது நிச்சயம். ஆனால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அரசுடன் சேர்ந்து மக்களும் தயாராக வேண்டும். 

குடிக்கிற ஒவ்வொருத்தரும் மனம் மாறினால்தான் குடிப்பழக்கத்தை முழுமையாக ஒழிக்கமுடியும். ஒரு மிகப்பெரிய மக்கள் எழுச்சி வந்தால்தான் மதுவிலக்கை அரசு யோசிக்கும். அதுவரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு வாய்ப்பே இல்லை," எனச்சொல்லும் டாஸ்மாக்கில் பணியாற்றிய மற்றொரு அதிகாரி, "அரசு உடனடியாக மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதிகாரிகள் சொல்வது போல் இதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் மது எளிதில் கிடைக்கும் என்ற நிலையை அரசு மாற்றி, மது மயக்கங்களில் இருப்பவர்களை மீட்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்" என்கிறார்.  

மதுவிலக்கை ரத்து செய்தால் அரசுக்கு நிதி கிடைக்கும் என சொல்லப்பட்டபோது, "கள்ளுக்கடைகளை திறந்து அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் கலால் வருமானத்தை விட, மதுவிலக்கு அமலில் இருந்தால், ஐந்து மடங்கு அதிகமாக மக்கள் வீடுகளில் பணம் மிஞ்சும். அதற்கும் மேலாக மதுவினால் அதிகரிக்கும் குற்றங்களும் குறையும்," என்றார் ராஜாஜி. அதைத்தான் நாமும் சொல்கிறோம். 

மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசு கொடுக்கும் இலவசங்களின் மதிப்பை விட பல மடங்கு மக்களி டம் மிஞ்சும். டி.வி.யும், மிக்ஸியும், கிரைண்டர்களுக்கும் பதில் பணமாக இருந்தால், மக்கள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே வாங்கிக்கொள்வார்கள்.


No comments:

Post a Comment