சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Mar 2015

நோயாளிக்கு இறுதிச்சடங்கு விளம்பரம்: ஃபேஸ்புக் தந்த அதிர்ச்சி!

ணைய விளம்பரங்கள் எந்த அளவுக்கு மோசமாக அமையக்கூடும் என்பதற்கான அதிர வைக்கும் உதாரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஃபேஸ்புக் பக்கத்தில், இறுதிச்சடங்கு சேவை தொடர்பான விளம்பரத்தை இடம்பெற வைத்து ஃபேஸ்புக் கண்டனத்திற்கு இலக்காகி உள்ளது. ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சேவையை இலவசமாக வழங்கினாலும், பயனாளிகளிடம் செய்யும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றன. 

இந்த இணைய விளம்பரங்கள் தோன்றும் விதம் இடையூறாக இருப்பதாக கூறப்படுவதை நிறுவனங்கள் பொருட்படுத்துவதில்லை. அது மட்டும் அல்ல, விளம்பரங்கள் அதிக பயன் தர வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு ஏற்ற நபர்களை குறி வைத்து பொருத்தமான விளம்பரங்களை இணைய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதாவது இணையவாசிகள் பயன்படுத்தும் சொற்கள் அல்லது பதங்களுக்கு ஏற்ப அவர்களின் தேவை புரிந்துகொள்ளப்பட்டு, அது தொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

இதற்காக நிறுவனங்கள் பலவித வழிகளை பயன்படுத்தி வருகின்றன. பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை படித்துப்பார்ப்பதையும் நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. குக்கு எனப்படும் உளவு மென்பொருள் மூலம் இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு இணையவாசிகள் பகிரும் தகவல்கள் சேகரிக்கப்படுவது தனியுரிமை மீறல் தொடர்பான விவாத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

குறிப்பிட்ட நபர் பற்றிய அந்தரங்க விவரங்கள் எதுவும் திரட்டப்படாமல் அவர்களின் இணைய பயன்பாடு பற்றிய விவரங்கள் மட்டுமே பெறப்படுவதாகவும், அவர்களுக்கு பொருத்தமான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இணைய உலகில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த போக்கின் விபரீதத்தை உணர்த்தும் வகையில் மிகவும் அதிர்ச்சியான அனுபவம் ஆஸ்திரேயாவை சேர்ந்த டேனியல் கேப் எனும் இணையவாசி ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இணைய ஆலோசகராக பணியாற்றும் 46 வயதான கேப், புற்றுநோயால் பாதிக்கப்பட்டநிலையில், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இறுதிச்சடங்கு சேவை தொடர்பான விளம்பரத்தை இடம்பெற வைத்து அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.

கடந்த மாதம் புற்றுநோய் பாதிப்புக்கு இலக்கானதை தெரிந்து கொண்ட கேப், இணையத்தில் அந்த நோய் சிகிச்சை தொடர்பான விவரங்களை தேடியிருக்கிறார்.இதனையடுத்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இறுதிச்சடங்கு சேவை நிறுவன விளம்பரங்கள் இடம்பெறத்துவங்கியிருக்கிறது. இதனால் திகைத்தவர்,  அந்த விளம்பரங்களை கிளிக் செய்து நீக்கினாலும் அவை மீண்டும் மீண்டும் தோன்றியதால் மிகவும் வேதனையடைந்து, தனது டிவிட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்து கொண்டுள்ளார்.

புற்றுநோய் பாதிப்பு பற்றி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட பிறகு இறுதிச்சடங்கு சேவை விளம்பரங்கள் தோன்றுகின்றன’ என்று அவர் டிவிட்டர் குறும்பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த விளம்பரங்களை பார்த்ததுமே திகைத்து போனதாகவும், இது உணர்வற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய இணைய தேடலை வேவு பார்த்து,  அந்த விவரங்களை கொண்டு விளம்பர நிறுவனங்களுக்கு விற்றிருப்பதாக அவர் ஃபேஸ்புக் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

கூகுளில் புற்றுநோய் அல்லது வாழ்நாள் தொடர்பான தகவல்களை தேடினால் பொருத்தமில்லாத விளம்பரங்கள் சமூக வலைப்பின்னலில் எட்டிப்பார்க்கும் என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக், பொருத்தமான சேவை மற்றும் விளம்ப்ரங்களை வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் முயற்சியை சமீபத்தில் பயனாளிகளின் இணைய தேடலுக்கும் விரிவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்படும் கருத்துக்கள் மட்டும் அல்லாமல், அதிலிருந்து கிளிக் செய்து போகும் இணைய பக்கங்கள் தொடர்பான தகவல்களையும் ஃபேஸ்புக் சேகரிக்கிறது.

இதனிடையே சம்பந்தப்பட்ட இறுதிச்சடங்கு சேவை நிறுவனம், இது தொடர்பாக அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. தங்கள் விளம்பரம் இந்த முறையில் வெளியிடப்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஃபேஸ்புக் சார்பில் இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஃபேஸ்புக்கில் வெளியாகும் தனிப்பட்ட விளம்பரங்களை நீக்கும் வசதி இருக்கிறது. அதே போல அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இது போன்ற விளம்பரங்களில் இருந்து விலகி கொள்ளவதற்கான திட்டமும் இருக்கிறது.



No comments:

Post a Comment