சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Mar 2015

இதழியல் நாயகன் 'அவுட் லுக்' வினோத் மேத்தா...

மூத்த பத்திரிகையாளரும், அவுட்லுக் பத்திரிகையின் நிறுவனருமான வினோத் மேத்தா உடல்நலக்குறைவால்  காலமானார். அவரை பற்றிய சிறப்பு பகிர்வு...

"என்னுடைய நாய் இருக்கிறது பாருங்கள் அது விடாப்பிடியானது. தனக்குத் தோன்றியதை தான் செய்யும். மற்றவர்கள் எல்லாரையும் விடத் தனக்கு அதிகமாகத் தெரியும் என்கிற எண்ணம் அதற்கு உண்டு. அதனால் அதற்கு எடிட்டர் என்று பெயரிட்டிருக்கிறேன்." 

'சஞ்சய் காந்தியின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தீவிரமாக முன்னெடுத்த அதிகாரியின் பெயர் நிரோத் சவுத்ரி. எத்தனை பொருத்தமான பெயர்?' 

'சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விஸ்கியை குடித்துவிட்டு ஏழை மக்களுக்காகக் கண்ணீர் விட்டு அவர்கள் துயரங்கள் பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதுகிறேன். விலையுயர்ந்த மதுவை அருந்திவிட்டு எளியவர்களுக்காக இயங்கக்கூடாதா என்ன?"



பரபரப்பு, கச்சிதமான இதழியல், திறந்த வாழ்க்கை, கடைக்கோடி வாசகனுக்காகச் சிந்திப்பது என்று இயங்கிய வினோத் மேத்தாவின் வாசகங்கள் இவை. 

விடுதலைக்கு முந்தைய காலத்தில் ராவல் பிண்டியில் பிறந்த இவர் லக்னோவில் தான் இளமைக்காலத்தைக் கழித்தார். அதனால் தன்னுடைய நினைவலைகள் நூலுக்கு, 'லக்னோ பாய்' என்றே பெயரிட்டார். 

"அந்த நகரின் சுய எள்ளல் தான் என்னிடமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது." என்பார். 'Debonair' இதழில் நடுப்பக்கத்தில் பெண்களின் நிர்வாண படங்களையும், மற்ற பக்கங்களில் கவர்ச்சிகரமான படங்களையும் வெளியிட்டு 'இந்தியாவின் ப்ளேபாய்' என்கிற பெயரை அந்த இதழுக்கு வாங்கிக் கொடுத்தார். அந்த இதழின் ஆசிரியராகத் தீவிரமான புலனாய்வுக் கட்டுரைகள், அரசியல் நேர்முகங்கள், இலக்கியக் கட்டுரைகளை அவர் வெளியிட்டார். ஆனால், வாஜ்பேயியை நேர் முகம் செய்து முடித்து அச்சுக்கு இதழ் வந்த பிறகு வாஜ்பேய் அடித்த கமென்ட் அவரை உலுக்கியது, "நான் உங்க பத்திரிக்கையைத் தலகாணிக்கு அடியில் வெச்சு வெச்சு தான் படிச்சேன்..."
இந்த இதழ் இப்படித்தான் பெயர் வாங்கியிருக்கிறது என்று அதை விட்டு விலகினார். 

இந்தியன் போஸ்ட் இதழின் ஆசிரியராக இருந்த பொழுது பெரிய அளவில் ஆதாரமில்லை என்றாலும் 'இந்திராவின் அமைச்சரவையில் இருந்த அமெரிக்க உளவுத்துறைக்கான தகவல் சொல்லி ஒய்.பி.சவான்' என்று தலைப்புச் செய்தி போட்டார். மகாரஷ்டிரா மாநிலம் உருவாகக் காரணமான அவரைப் பற்றி அப்படி எழுதியதற்காகக் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளான மேத்தா மும்பையை விட்டே விரட்டப்பட்டார். "நான் வேறு பல சமயங்களிலும் அப்படி முழுவதும் நிரூபிக்க முடியாத விஷயங்களை வெளியிட்டு இருக்கிறேன். இந்த முறை பிசகி விட்டது!" என்று ஒப்புதல் வாக்குமூலத்தைத் தரும் மேத்தா சொல்லும் அடுத்தது தான் தொழில் ரகசியம். "கிசுகிசுவை இதழியலில் இருந்து நீக்கிவிட்டால் பாதி இதழியல் இயங்கவே முடியாது. நல்லதும், கெட்டதும் கிசுகிசுவிலேயே துவங்குகிறது." 

"என்னுடைய சண்டே அப்சர்வர் இதழின் வேன்களை எத்தனை முறை பால் தாக்கரே கொளுத்தினார் என்று கணக்கு வைத்துக்கொள்ள முடியவில்லை." என்று கண் சிமிட்டுவார். தாக்கரேவின் மரணத்துக்குப் பாலிவுட் நடிகர்கள், பிரமுகர்கள் பெரிய அளவில் துக்கம் அனுசரித்ததை , "கனவுகளின் நகரான மும்பையின் பன்முகத்தன்மையைக் காலி செய்து அதை மதவாத பரப்பாக ஆக்கிய ஒருவருக்கா இத்தனை கூப்பாடு?" என்று விமர்சித்துள்ளார். 

குடித்துக் கொண்டாடுவது, பெண் பித்தனாகத் திரிந்தது, உடலுறவு கொண்ட ஸ்விட்சர்லாந்து பெண் கருவை கலைக்க மறுத்து பிரிந்து போய் பிரசவித்த மகளை இன்னமும் தேடுவது என்று தன்னுடைய சொந்த வாழ்க்கையின் பக்கங்களை வெளிப்படுத்த அவர் தயங்கியது இல்லை. இவற்றைத் தாண்டியும் கம்பீரமாக எடிட்டர் அவர் என்கிற பெயரை அவரின் இதழியல் பெற்றுத்தந்தது.


கிசுகிசுக்கள், கள ஆய்வு, விறுவிறுப்பான நடை, அஞ்சாத விமர்சனங்கள், கேலி என்று கலந்து கட்டி அவர் எழுதிய சஞ்சய் காந்தி வாழ்க்கை வரலாறு 35 ஆண்டுகளைக் கடந்தும் நிற்கிறது. 

வாஜ்பேயின் வளர்ப்பு மருமகனான ரஞ்சன் எப்படி என்.கே.சிங், பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரோடு இணைந்து கொண்டு வாஜ்பேயி பிரதமராக இருந்த சமயத்தில் தகுதியற்ற நிறுவனங்களுக்குப் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுத் தந்தார்கள் என்று அவுட்லுக் வெளிப்படுத்தியது.  எழுநூறு அதிகாரிகள் அந்த இதழின் ஒரு டஜன் அலுவலகங்களில் ரெய்டு செய்ய வைத்தது. 

நேருவிய தாராளவாதம் மீது பெரிய நம்பிக்கை கொண்ட அவர் மதச்சார்பின்மை மீது இறுதிவரை உறுதியாக இருந்தார். தன்னை 'மதச்சார்பின்மை' வாதியாக அறிவித்துக்கொண்ட அவரைப் 'போலி மதச்சார்பின்மையாளர்' என்று வலதுசாரிகள் சொன்னதையே தனக்கான பட்டமாக ஆக்கிக்கொண்டார். 'வினோத் மேத்தா சோனியா ஆதரவாளர், காங்கிரஸ் ஆதரவாளர், தெரு நாய்க்கு கூட ஆதரவாளர், கடுமையான பி.ஜே.பி, இந்துத்துவா எதிர்ப்பாளர்.' என்று நக்கலடிக்கப்பட்ட பொழுது கூட அவர் அலட்டிக்கொண்டதில்லை. 

ஜனரஞ்சக இதழ்கள் தீவிரமான கட்டுரைகளை மட்டுமே எழுத வேண்டும் என்று ஒரு குழுவும், கமர்ஷியல் கட்டுரைகளால் கல்லா கட்ட வேண்டும் என்று இன்னொரு குழுவும் சொல்லிக்கொண்டு இருந்த பொழுது அவுட் லுக் இதழை ஆரம்பித்த அவர், "ஒரு சுதந்திரமான பத்திரிக்கையை நடத்த நீங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற வேண்டும். வாசகனை எவ்வளவு ஈர்க்கிறோமோ அந்த அளவுக்குச் சுதந்திரமாக இயங்க முடியும். நம்மைத் தேடி விளம்பரங்கள் வரும். யாருக்கும் அஞ்சிக்கொண்டோ, நடுங்கிக்கொண்டோ இருக்க வேண்டியதில்லை." என்று சொன்னதைச் சாதித்துக்காட்டினார். 

தன்னுடைய நம்பிக்கைகளுக்கு நேர்மையாக இருந்த வினோத் மேத்தா, விமர்சனங்களை இதழில் தாராளமாக இடம்பெற வைத்தார். போற்றிச் சிலாகிக்கும் கடிதங்களை விட அவரைக் குத்தி கிழிக்கும் கடிதங்களுக்கு இடம் கொடுத்து ரசித்தார். தனியாக எடிட்டிங் செய்யும் ஆசிரியர்களுக்கு நடுவில் எழுதிய நிருபரையும் உடன் வைத்துக்கொண்டு அவரின் ஆலோசனையோடு கையில் சுழலும் பேனாவால் எடிட்டிங் செய்தவர் மேத்தா. 

அருந்தி ராயின் காஷ்மீர், பழங்குடியின மக்கள் பற்றிய கட்டுரைகளைப் பத்தாயிரம் வார்த்தைகளில் ஜனரஞ்சக இதழில் அஞ்சாமல் வெளியிட்டார். ராமச்சந்திர குஹாவின் நெடிய கட்டுரைகளுக்கும் இடம் தந்தார். அவுட்லுக்கின் சிறப்பிதழ்களின் கனத்த உள்ளடக்கம் வாயைப் பிளக்க வைத்த ஒன்று. 

நீரா ராடியா டேப்களை அஞ்சாமல் வெளியிட்டது அவரே. அதில் பல பெருந்தலைகள் சம்பந்தப்பட்டு இருந்தும் அஞ்சாமல் அதை அட்டைப்படக் கட்டுரையாகப் பல வாரங்கள் தொடர்ந்து வெளியிட்டு அதிரடித்தார். தன்னுடைய நினைவலையில், "நீரா ராடியாவால் வசியமானவர்கள் இருவர். ஒருவர் ரத்தன் டாடா, இன்னொருவர் முகேஷ் அம்பானி." என்று அதிரடிக்கிறார். 

பல பெருந்தலைகளை உருட்டிய கட்டுரை ஒன்று தயாராகிக் கொண்டிருக்கும் பொழுதே அது குறித்து அவுட்லுக் எதுவும் எழுதக்கூடாது என்று கோர்ட்டில் தடை வாங்கினார்கள். அடுத்த நாள் இதழ் கடைகளில் இருக்கும், என்கிற சூழலில் "என்ன செய்யலாம் பாஸ்?" என்று அக்கட்டுரையை எழுதிய நிருபர் கேட்ட பொழுது, "பேக்ஸ் கனெக்ஷனை பிடுங்குங்கள்!" என்று சொல்லிவிட்டுக் கோர்ட் உத்தரவு வரும் வழியை அடைத்துவிட்டுக் கம்பீரமாகக் கட்டுரையை வெளியிட்டார்.

மக்கள், எள்ளல், நேர்மை ஆகியவற்றுடன் தன்னுடைய பிணைப்பை துண்டித்துக்கொள்ளாத அசல் இதழியல் நாயகனுக்கு அஞ்சலிகள்.


No comments:

Post a Comment