சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Nov 2014

மறந்துபோன குதிரை வண்டிகள்...!



ம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து நிற்கும் பல விசயங்கள் காலத்தின் இயந்திர வேக ஓட்டத்தில் மெள்ள மெள்ள மறைந்து விடுகின்றன. அப்படி நம்மை விட்டு நிஜத்தில் மறைந்து, நினைவில் மறையாமல் இருப்பது குதிரைவண்டிகள்.

ஒரு காலத்தில் மிராசுதார்கள், ஜமீன்தார்களுக்கு மட்டுமே இருந்த குதிரை வண்டிகளை, சாமான்ய மக்களையும் வண்டியில் வலம் வர வைத்தது வாடகைக் குதிரை வண்டிகள்தான். ரெக்கைக் கட்டிப் பறந்து கொண்டிருந்த குதிரை வண்டிகள், நவீன மோட்டார் வாகனங்களின் படையெடுப்புக்குப் பிறகு காணாமல் போய்விட்டன.



தமிழகத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு வரை உள்ளூர் பயணத்துக்கு குதிரை வண்டி, சைக்கிள் ரிக்க்ஷா ஆகியவைதான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. நகரத் தெருக்களில் ஆட்டோக்கள் ஓட ஆரம்பித்த பிறகு குதிரை வண்டியின் பயன்பாடு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இன்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி பஸ், கால் டாக்ஸி... என நீளும் நவீன மோட்டார் வாகனங்களால் குதிரை வண்டித் தொழில் அழிந்தே விட்டது என்றே சொல்லலாம்.

தலைமுறை தலைமுறையாக குதிரைவண்டித் தொழிலில் ஈடுபட்டுவரும் திருச்செந்தூரைச் சேர்ந்த வண்டிக்காரத் தாத்தா காந்தியிடம் பேசினோம், “எனக்கு 64 வயசாகுது. 14 வயசுலயே குதிரை வண்டி ஓட்டுற தொழிலுக்கு வந்துட்டேன். 50 வருஷமா குதிரை வண்டிதான் ஓட்டிக்கிட்டு இருக்கேன். எனக்கு இதை விட்டா வேறப் பொழப்பு இல்ல. சுமார் முப்பது வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் மதுரை, தூத்துக்குடி, நெல்லை, காஞ்சிபுரம், பழனி ஊர்கள்ல உள்ள கோவில்கள்ல குதிரைவண்டி சவாரி முக்கியமான போக்குவரத்தா இருந்துச்சு. திருச்செந்தூர்லயே நூற்றைம்பது வண்டிகளுக்கு மேல இருக்கும். ஆனா, இப்போ வெறும் ஆறு வண்டிகள்தான் இருக்குது.

பொதுவா ஒரு குதிரையோட ஆயுசு சராசரியா 30 வருஷம்தான். 5 வருஷத்துக்கு ஒரு தடவ குதிரையை மாத்தணும். இல்லேன்னா குதிரை தளர்ந்து வேகம் குறைஞ்சிடும். இதுவரைக்கும் 20 குதிரைகளுக்கும் மேல மாத்திருப்பேன். இப்போ இருக்கிற இந்த குதிரைக்குப் பேருபேபி செல்லம்பேபிம்மான்னு கூப்பிட்டா கிளுக்.. கிளுக் சத்தத்தோட தலையாட்டும் அழகே தனிதான்.

இப்போ காஞ்சிபுரம், பழனி, திருச்செந்தூர் மாதிரியான பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்கள்ல மட்டும்தான் குதிரை வண்டிகள பாக்க முடியுது. ஒருசிலர் மட்டும்தான் இந்த தொழிலை நம்பி இருக்கோம்.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகள்கூட அதிகம் விரும்பறதில்ல. வெளி மாநில, வெளிநாட்டு பயணிகள்தான் குதிரை வண்டியப் பாத்ததும் ஆசையா சவாரிக்கு வராங்க. அதுலயும் சின்னக் குழந்தைகள்தான் அடம்பிடிச்சு வண்டியில ஏற ஆசைப்படும். என்னோடா பேபிம்மா தலையாட்டிக் கூப்பிடுறதும், உடம்பைச் சிலுப்பும்போது கேட்குற கிளுக்குச் சத்தமும் சிறுசுகளை ரொம்பவே ஈர்த்துடும்.

சின்னக் குழந்தைங்க... வண்டியில ஏறும்போதே எனக்குப் பக்கத்துலதான் உட்காரணும்னு அடம்பிடிப்பாங்க. குதிரை ஓடுற வேகத்தைப் பார்க்கவும், சாட்டையைச் சுழற்றினா, குதிரை வேகம் கூடி ஓடுறதை ஆசையா பார்ப்பாங்கசில பொடிசுகள் வண்டியில ஏறும்போதேதாத்தா உங்கிட்டத்தான் நான் உட்காருவேன்னு கண்டிஷன் போட்டு ஏறுவாங்க. திருசெந்தூர் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன்ல இருந்து கோவில் வாசலுக்கு வரணுமுன்னா 50 ரூபாய் கேக்குறாங்க ஆட்டோக்காரங்க. ஆனா, நாங்க பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன்ல இருந்து தேரடி, தெப்பக்குளம், கடைவீதி, சரவணபொய்கை, கடற்கரை, கோவில்வாசல்னு எல்லா இடத்தையும் சுத்திக் காண்பிச்சுட்டு 30 ரூபாய்தான் வாங்குறோம்.

வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மட்டும்ஒன்ஸ்மோர்னு சொல்லி திரும்பவும் ரவுண்டு அடிக்கச் சொல்லுவாங்க. அதுக்கு அவங்களாப் பிரியப்பட்டு 100, 200 ரூபா கொடுத்துட்டு போவாங்க. சில பேரு, என்னையும் , பேபிம்மாவையும் சேர்த்துப் போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி வைச்சிருக்காங்க. இதையே ஆரம்பத்துல இருந்து செஞ்சுப் பழகிட்டதால  வேற தொழிலுக்கும் போக முடியல. அதேசமயம் இருக்குற குதிரை வண்டிகளும் மறைஞ்சுடக்கூடாதுன்னு லாபமோ, நட்டமோ இன்னமும் இந்த தொழிலை விடாம செஞ்சுட்டு இருக்கோம்.


காலையில 8 மணியில இருந்து சாயுந்திரம் 6 மணி வரைக்கும்தான் சவாரிக்கு நிற்பேன். 6 மணிக்குப் மேல கோடி ரூபா கொடுத்தாலும் சவாரி ஏத்தமாட்டேன். 6 மணிக்கு மேல பேபிமாவுக்கு முழு ஓய்வு கொடுத்திடுவேன்.

நான் பேசுறது பேபிக்குப் புரியும், பேபி பேசுறது எனக்குப் புரியும். குதிரைக்கும் தனிப் பாஷை இருக்கு. ‘சிட்டோவைன்னு சொன்னா படுத்துக்கும், ‘பரார் பரார்னு சொன்னா வேகமாப் போகும். சாட்டைக் கம்பை வண்டிச் சக்கர நுனியில வெச்சா அந்தச் சத்தம் கேட்டு குதிரை வேகத்தைக் கூட்டிப் பறக்கும். கடிவாளத்தை இழுத்துப்பிடிச்சா வேகத்தைக் குறைச்சுக்கிட்டு அந்த இடத்துலயே நின்னுடும். கந்த சக்ஷ்டி, தைப்பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, ஆவணித் தேரோட்டம், அரசு விடுமுறை  சமயத்துல பேபிம்மா படு பிசியா இருக்கும்.

சுற்றுலாத் தலங்களில் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலா குதிரை வண்டி சவாரியை அரசு ஊக்கப்படுத்தினா குதிரை வண்டித் தொழில் அழியாம இருக்கும். காத்துல மாசும் கலக்காம இருக்கும்... காது (ஒலி மாசு)க்கும் தொந்தரவு வராதுஎன்று கோரிக்கையோடு முடித்தார் குதிரைவண்டி தாத்தா 


No comments:

Post a Comment