சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Nov 2014

நவம்பர் 15: ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே நினைவு தினம்


ஆச்சார்ய வினோபா பாவே. மகாராஷ்ட்ராவின் எளிய குடும்பத்தில் பிறந்த அவர் ரயிலில் தேர்வெழுத போய்க்கொண்டு இருந்த பொழுது அமைதி தேடி காசிக்குப் போனார். பின்னர் வங்கத்தில் போய் அமைதி தேடி அலைந்தார். வங்கத்தில் இருந்த கொரில்லாக்களுடன் இணைந்து ஆங்கிலேயே அரசுக்கு எதிராகப் போராடலாமா என்று கூட யோசித்தார். காந்தியின் பேச்சை நேரில் கேட்டிருந்தார் ; நேரடியாகப் பார்த்து பேச கூச்சப்பட்டுக் கொண்டு கடிதம் எழுதினார். சபர்மதி ஆசிரமம் நோக்கி காந்தி வரச்சொன்னார். 

அங்கே வினோபாவுக்கு அமைதி தென்பட்டது. வாழ்நாள் முழுக்கத் தீவிர பிரம்மச்சரியத்தைக் கடை பிடித்தார் அவர். "என்னைவிடக் காந்தியத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர்! எனக்கே குரு போலத்தான் பல சமயங்களில் அவர் தோன்றுகிறார் !" என்று காந்தி சொல்கிற அளவுக்கு வினோபாவே துறவு வாழ்க்கை வாழ்ந்தார். விடுதலைப்போரில் பங்குகொண்டு சிறை சென்றார். போர்க்காலத்தில் ஆங்கிலேயே அரசை எதிர்க்கும் குழுவுக்கு இவரைத்தலைவர் ஆக்கினார். 

காந்தியின் மறைவுக்குப் பிறகு நில சீர்திருத்தங்களை அமல்படுத்துகிறேன் என்று உறுதி தந்திருந்த நேருவின் அரசு அதை அந்தந்த மாநில அரசுகளிடம் கொடுத்து விட்ட நகர்ந்து கொண்டது. தெலங்கனா பகுதியில் நிலவுடைமையாளர்களின் கொடுமையும்,சுரண்டலும் மிகுந்திருந்தது. அதை எதிர்த்துக் கம்யூனிஸ்ட்கள் வழிகாட்டுதலில் எளிய மக்கள்,பெண்கள் எண்ணற்றோர் போராடினார்கள். பல நாளாக அடங்கி இருந்த கோபம் வெளிப்பட்டது. நான்காயிரம் விவசாயிகளுக்கு மேலே ஆறு வருட போராட்டத்தில் இறக்கவும் செய்தார்கள். மக்களுக்கு நிலங்களும் பெருநில உரிமையாளர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது. போலீஸ் கையில் துப்பாக்கியை முதல் முறை கொடுத்து அரசு போராட்டங்களைச் சமாளித்தது. 

வினோபாவே இந்தச் சிக்கலை காந்திய முறையில் எதிர்கொள்ள எண்ணி இப்பகுதிகளின் ஊடாக நடைபயணம் போனார். அங்கே எண்ணற்ற மக்களைச் சந்தித்தார் ; தலித் மக்கள் பலபேர் அவரைக் கண்ணீரோடு வந்து கண்டார்கள். ,"எங்களுக்கு நிலம் கிடைக்க இருக்கும் ஒரே ஒரு வழி கம்யூனிஸ்ட்கள் தான். அதனால் தான் எங்களின் வறுமை,பசிக்காக அவர்களின் பின்னே நிற்கிறோம் !" என்று சொன்னது அவரை யோசிக்க வைத்தது. 

பொச்சம்பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில்," உங்களால் நிலத்தை ஏழை மக்களுக்குத்தர முடியுமா ? " என்று கேட்டார். பல ஏக்கர் நிலம் கொண்டு ராமச்சந்திர ரெட்டி தான் நூறு ஏக்கர் தருவதாகச் சொன்னது தான் முதல் புள்ளி. தலித் மக்கள் தங்களுக்குத் தேவை எண்பது ஏக்கர் மட்டுமே என்று கம்பீரமாகச் சொன்ன பொழுது வினோபாவே அசந்து போனார் பல நடுத்தர விவசாயிகள் தாங்களும் நிலம் தர முன்வந்தார்கள். அதைப்பார்த்து தங்களின் தன்மானத்தை  காக்க பெருநில உரிமையாளர்களும் முன் வந்தார்கள். தொடர்ந்து இரண்டு மாத காலம் போன பயணத்தில் பத்தாயிரத்துக்கும் மேலே அவரால் நிலங்களைப் பெற முடிந்தது. புத்தர் பிறந்த நாளன்று பெறப்பட்ட 2,95,054 ஏக்கர் நிலங்களைப் பிரித்துத் தர வழிமுறைகள்,சட்டங்கள் வகுக்கப்பட்டன. 

தொடர்ந்து இயங்கினார் வினோபாவே. எட்டு மொழிகளைக் கற்று அந்தந்த ஊரின் மக்களின் மொழியில் உரையாடி பங்காற்றினார் அவர். மொத்தமாக அவர் வாழ்நாளில் ஒன்றரை லட்சம் கிராமங்களில் நாற்பது லட்சம் ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டு இருந்தது. இதில் இத்திட்டம் மிகச் சிறப்பாகப் பீகாரில் ராஜேந்திர பிரசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. 
 

அல்சர்,மலேரியா என்று எண்ணற்ற சிக்கல்கள் உடம்பை வருத்தினாலும் ஐந்தடி நான்கு அங்குலம் உயரம் கொண்ட அவர் இருபது மைல்கள் நடந்து நிலங்களைத் திரட்டுவதைத் தன் பணியாகக் கொண்டிருந்தார். அசாமில் பல்வேறு பழங்குடியின மக்களுக்கு இடையே சிக்கல் எழுந்த பொழுது கிராம தான திட்டத்தைக் கொண்டு வந்தார். ஒரு கிராமத்தின் எல்லா நிலங்களும் பொதுவில் வைக்கப்படும். 

அவரவரின் தேவைகளுக்கு ஏற்ப நிலங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால்,அந்த நிலத்தை விற்கவோ,அடமானம் வைக்கவோ கூடாது. இன்றும் அத்திட்டம் சிறப்பாக அங்கே செயல்பட்டு வருகிறது. ஜெபி ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திராவின் அரசை எதிர்த்து நடத்திய போராட்டத்தை விமர்சித்தார் ; அதே சமயம் எமெர்ஜென்சி வந்ததும் இந்திராவையும் விமர்சிக்கச் செய்தார். 

அவரிடம் தரப்பட்ட பல நிலங்கள் பயன்பாட்டுக்கு உகந்தவையாகவே இல்லை. பல இடங்களில் இவர்கள் போனதும் பினாமி ஆக்கி உரிமையாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார்கள். அரசுகளும் மெத்தனமாக இருந்து நில சீர்திருத்தத்தில் கோட்டை விட்டது. நாற்பது லட்சம் ஏக்கரில் அப்படியும் பத்து லட்சம் ஏக்கர் மக்களுக்கு ஒழுங்காக் பகிர்ந்தளிக்கப்பட்டது என்கிறார்கள். ராமன் மகசேசே விருது,பாரத ரத்னா ஆகிய விருதுகளைப் பெற்றதற்காக அவர் டைம் இதழின் அட்டையை அலங்கரிக்கவும் செய்தார். நோபல் பரிசு பெற்ற ரஸ்ஸல் இவரைச் சந்தித்த பொழுது ,"மனசாட்சியை மனிதர்களின் நிகழ்வுகளில் தொடர்ந்து செயல்படுத்துவதன் முக்கியத்தவத்தைக் கற்றுத்தந்த பேராளுமை !" என்று புகழ்ந்தார். 


No comments:

Post a Comment