சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Nov 2015

சோதனைகளில் சாதித்த இம்ரான் கான் - சிறப்பு பகிர்வு..

உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். அவரின் பிறந்த தினம் நவம்பர் 25.

92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது. இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன் எலும்பு முறிவால் விலகி இருந்தார். பேட்டிங் நம்பிக்கை சயீத் அன்வரும் உலகக்கோப்பையில் ஆட வரவில்லை. ஜாவித் மியான்தத் மற்றும் இம்ரான் இருவருக்கும் காயங்கள் உலகக்கோப்பை முடிகிற வரை கூடவே ஒட்டிக்கொண்டு தொல்லை கொடுத்தன.


அணியை ஸ்ட்ரிக்ட்டான தலைமைஆசிரியர் போலத்தான் நடத்தினார் இம்ரான். சரியாக ஆடாவிட்டால் தனியாக கதவை சாற்றிவிட்டு டோஸ் விட்டு உசுப்பேற்றுவார். ஆனால்,முதல் ஐந்து போட்டியில் நடந்தது என்னவோ வேறு ! மேற்கிந்திய தீவுகளிடம் பத்து விக்கெட்டில் தோல்வி,பரமவைரி இந்தியாவிடம் 43 ரன்களில் தோல்வி,தென் ஆப்ரிக்காவிடம் இருபது ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். ஒரு போட்டியை தத்தி தத்தி டை செய்தார்கள். இன்னொரு போட்டியில் வெறும் 74 ரன்களில் சுருண்டு இருந்தார்கள். எதோ மழை வந்து புண்ணியம் கட்டிக்கொண்டது. அடுத்த ஐந்து போட்டிகளில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதி என்கிற நிலை !

இம்ரான் கான் அணியினரை அழைத்தார் ,”நாம் ஒரு ஓரத்துக்கு தள்ளப்பட்ட புலிகள் போலத்தான் இப்பொழுது உணரவேண்டும். புலிகள் ஒதுங்குவது ஒழித்துகட்டத்தான் ! இறங்கி அடிப்போம் ! வெற்றி நமதே !” என்று கர்ஜித்தார். எண்பதுகளில் கிரிக்கெட் பாணியில் அணியின் ஆட்டத்தை அமைத்துக்கொண்டார்கள். முதல் நாற்பது ஓவர்களில் பெரிதாக விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு மெதுவாக ஆடுவார்கள், இறுதி பத்து ஓவரில் துவம்சம் செய்து வெல்வார்கள். இப்படி ஆடியே அரையிறுதியை தொட்டது அணி !

அதுவரைக்கும் அணியில் சொதப்பிக்கொண்டு இருந்த இன்சமாமை தூக்கி விட வேண்டும் என்று எல்லாரும் முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர் கண்கள் கலங்கி இம்ரான் அறைக்குள் வந்தார் ,”எந்த போட்டியிலும் நான் ஒழுங்காக ஆடவே இல்லை ! அப்படியே ஊருக்கு கிளம்பறேன். வேற நல்ல ப்ளேயரை போட்டுக்குங்க கேப்டன் !”

இம்ரான் சுருக்கம் விழுந்த முகம் விரிய இன்சமாமை பார்த்து இப்படி உறுதியாக சொன்னார் ,”உன்னை முல்தானில் இருந்து கூப்பிட்டு வந்தது நீ ஆடி ஜெயிக்க வைப்பேன்னு தான் ! நடுவில எல்லாம் அனுப்ப முடியாது. நீ அரையிறுதியில் ஆடுறே ! நாம உன்னால ஜெயிக்கிறோம் ! போ ரெடியாகு !”. கேப்டன் பேசிவிட்டால் எதிர்த்து பேச முடியாது ! கூடாது.

நியூசிலாந்து அணியுடனான அந்த போட்டியில் பாகிஸ்தான் பவுலிங் செய்தது. 262 ரன்கள் அடிக்கப்பட்டு இருந்தது. அதை சேஸ் செய்ய பாகிஸ்தான் களம் புகுந்த பொழுது இந்த அணி தேறாது என்று முடிவு செய்து எதிரணியின் க்ரோவ் காயம் படாமல் இறுதிப்போட்டியில் ஆட அறையில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டார். அது பெரிய தவறாக முடிந்தது என்பது இறுதி பத்து ஓவரில் தான் புரிந்தது. முதல் நாற்பது ஓவரில் 140 /4 என்றே ஸ்கோர் சிரித்துகொண்டு நின்றது. இறுதிப்போட்டியில் நாம் தான் என்று நியூசிலாந்து அணி குதூகலித்து கொண்டிருந்தது. இன்சமாம் இல்லை என்று அடித்து ஆடி நிரூபித்தார். முப்பத்தி ஏழு பந்துகளில் அறுபது ரன்கள் அடித்து அணியை இறுதிபோட்டிக்கு கூட்டிக்கொண்டு போனார் அந்த அதுவரை சொதப்பல் மன்னர் !
 
 

அதுவரை சிங்கம் போல ஆடிக்கொண்டு இருந்த இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் சர்ச்சைக்குரிய மழையால் பாதித்த அரையிறுதி போட்டியின் உதவியோடு வந்திருந்தது. பாகிஸ்தான் இந்த முறை முதலில் பேட் செய்தது. ரமலான் மாதத்தின் பதினெட்டாவது நாள் அன்று. 87,182 பேர் நிரம்பியிருந்த எம்.சி.ஜி. மைதானத்தில் போட்டி துவங்கியது. முந்தைய அதே பாணி நாற்பது ஓவரில் வெறும் 150 ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இன்சமாம் மற்றும் வாசிம் அகரம் இறுதி பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட நூறு ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 249 க்கு உயர்த்தினார்கள். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் சுலபமாக சரிந்து விழுந்தது. லாம்ப் மற்றும் பேர்ப்ராதர் எனும் இரண்டு பேர் மட்டும் தண்ணிக்காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

இம்ரான் கான் முப்பத்தி ஐந்தாவது ஓவரில் வாசிம் அக்ரமை மீண்டும் அழைத்தார். “எனக்கு வேண்டியது வெற்றி மட்டுமே !” என்று சொல்லித்தான் பந்து தரப்பட்டு இருந்தது. எதோ மாயாஜாலம் போல அந்த இரண்டு பந்துகளில் அற்புதம் புரிந்தார் அக்ரம். இரண்டு இன்ஸ்விங்கர்கள் இரண்டு விக்கெட்கள். அவ்வளவு தான்,கொஞ்ச நேரத்தில் வாலையும் மடக்கி கோப்பையை பாகிஸ்தானின் நாற்பது வயது புலி இம்ரான் தூக்கிய பொழுது தேசமே கொண்டாட்டத்தில் மூழ்கிப்போனது. கேன்சர் மருத்துவமனை கட்ட பணம் திரட்டிய திருப்தியோடு அணியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார் அவர். ஏனோ எல்லாரின் கண்களும் கலங்கியிருந்தன. இம்ரான்கான் பிறந்த தினம் நவம்பர் 25

No comments:

Post a Comment