சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2015

அழகிரிக்கு ஜனவரியில் கட்சிப் பதவியா?

திமுக தலைவரின் மகன் என்ற தகுதியோடு மட்டும் இருந்த அழகிரிக்கு, திருமங்கலம் ஃபார்முலாவால் ஏற்பட்ட புகழுக்கு பரிசாக தென்மண்டல பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டது.
கட்சியின் அடுத்தக்கட்ட தலைவருக்கான பதவிப்போட்டியில்,  சகோதரர் ஸ்டாலினுடன் முறுக்கிக்கொண்டு அவர் மேற்கொண்ட சில செயல்கள் கட்சிக்குள்ளும்,  அவரது குடும்பத்தினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்த,  கட்சித்தலைவர் கருணாநிதியின் துணிச்சலான முடிவால் கட்டம் கட்டப்பட்டார். 

கொஞ்ச நாள் தனி ஆவர்த்தனம் செய்தவர், காலையில் ரஜினி, மாலையில் சோனியா, நள்ளிரவில் தனது ஆதரவாளர்கள் என பல சந்திப்புகளை நடத்தி கட்சிக்கு கிலி ஏற்படுத்தினார். அதை கட்சி பொருட்படுத்தாதபோது அவரே கொஞ்சம் கிலி அடைந்தார்.

வழக்கு, விசாரணை என சில சொந்த விஷயங்களால் கொஞ்சம் இப்போது அடக்கி வாசித்துக் கொண்டிருக் கிறார் அழகிரி. பரபரப்பான அரசியல்வாதியாக உலா வந்த தென்மண்டல தளபதி, இப்போது இருப்பது இந்தியாவிலா அல்லது இந்தோனேஷியாவிலா என பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு மவுனம் காத்துக்கொண்டிருக்கிறார்.

மீண்டும் கட்சிக்குள் அவரை நுழைத்து, தொண்டர்கள் புடைசூழ தென்மண்டல தளபதியாக உலா வரவழைக்கவேண்டுமென்ற சகோதரி செல்வி, சகோதரர் தமிழரசு, பேராசிரியர் அன்பழகன், கவிஞர்  வைரமுத்து என அத்தனை பேர் மல்லுக்கட்டியும் ஒரே ஒருவர் மட்டும் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அவர் ஸ்டாலின்.

அழகிரி கடைசியாக ஸ்டாலினின் நமக்கு நாமே விசிட்டை 'காமெடி டைம்' என்று கமெண்ட் அடித்ததோடு, வேறு எதைப்பற்றியும் வாய் திறக்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருக்கிறார்.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், 'தனது பிறந்தநாளான ஜனவரி 30 -ம் தேதியன்று அண்ணன் திமுகவில் முக்கிய பொறுப்பிலிருப்பார்' என அவரது விழுதுகள் கூறி வருவதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்ட பின், மகன் துரையை மதுரைக்கு வரக் கூடாதென்று ஸ்டிரிக்டாக கூறி விட்டார். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் துரையின் நண்பர் ராம்கி என்ற ராமகிருஷ்ணனை ஏன் விசாரிக்க வில்லை என்று அட்டாக் பாண்டி புது குண்டை போட,  அரண்டு போயிருந்தார் அழகிரி. ஆனால், காவல் துறையில் நன்றி மறக்காத தன்னுடைய விசுவாச அதிகாரிகள் புண்ணியத்தில், மேற்கொண்டு விசாரணையை தொடரவிடவில்லை. இருந்தாலும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அட்டாக் என்னென்ன சொல்வாரோ என்ற அச்சம் அழகிரி குடும்பத்தில் படர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அண்மையில் முடிந்த தீபாவளியன்று தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்தார் அழகிரி. மாலை, துண்டு, பரிசுப் பொருட்கள் கொடுத்து அண்ணனுடன் படமெடுக்க தம்பிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. காரணம் அண்ணன் கண் ஆபரேஷன் செய்திருந்ததுதான். இடது கண்ணில் பஞ்சு வைத்து பேண்டேஜ் போட்டிருந்தார்கள். வெளிச்சம் படக் கூடாதேன்று கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார். 

நடுநாயகமாக அவர் அமர்ந்திருக்க சில அடிகள் தள்ளி இரண்டு பக்கமும் மன்னன், உதயகுமார் கோயில் பூசாரிகள் மாதிரி நின்று கொண்டிருந்தார்கள். அவருக்கு முன்னால் போட்டிருந்த டீப்பாயில், தொண்டர்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து வணக்கம் வைக்க, பதிலுக்கு அழகிரி வணக்கம் வைத்துக் கொண்டிருந்தார்.
அதிமுக ஆட்சிக்கு பயப்படாமல், அழகிரியால் பயன்பெற்ற பல அரசுத்துறை அதிகாரிகள் வந்திருந்து அவருக்கு தீபாவளி வாழ்த்து சொன்னார்கள். குறிப்பாக முருக கடவுள் பெயர் கொண்ட ஏ.டி.எஸ்.பி ஒருவர், யூனிபார்மில் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு சென்றது அங்கிருந்த கட்சியினருக்கே ஆச்சர்யம் தந்த விஷயம்.

இப்படி இன்னும் செல்வாக்குடன் இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அப்போதிருந்த கூட்டம் இப்போது இல்லை என்பது நிஜம். வருடத்தில் ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, தீபாவளி ஆகிய தினங்களில் தொண்டர்களுக்கு காட்சி தருவதை வழக்கமாக வைத்திருக்கும் அழகிரி, இருக்கின்ற கொஞ்ச நஞ்ச தொண்டர்களை தக்கவைத்துக்கொள்ள கண் ஆபரேஷன் செய்திருந்த போதிலும், சிரமத்தை தாங்கிக்கொண்டு தொண்டர்களுக்கு அன்று அருள் பாலித்தார்.
ஸ்டாலின் அணிக்கு சென்று மாநகரச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் கோ.தளபதி, மிசா பாண்டியன் போன்றோர் இன்னும் அழகிரியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். முன்பு பொட்டு சுரேஷ் கட்டுப்பாட்டில் இருந்த அழகிரி, தற்போது மன்னன் கட்டுப்பாட்டில் இருப்பதை தொண்டர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.

''அண்ணன் நல்லவர், அவருக்கு தப்பான ஆலோசனைகள் வழங்குவது முன்பு பொட்டு, இப்போது மன்னன், உதயகுமார் போன்றோர்தான். இவர்களிடமிருந்து அண்ணன்  மீண்டால்தான், திமுகவில் மீண்டும் இணைந்தாலும் சிறப்பாக செயல்பட முடியும்" என்று நொந்தபடி பேசுகிறார்கள்.
உடல் வெயிட்டை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். நெருங்கிய ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார். சில நாட்களுக்கு முன் தன்னுடைய விசுவாசி ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதனின் நண்பரின் இல்ல விழாவுக்கு சென்று வந்தார்.
தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், கலைஞர் ஒரு முடிவு எடுப்பார். அதில் அண்ணனுக்கு ஆதரவான நிலை ஏற்படும் என்கிறார்கள் விழுதுகள். மதுரை மாநகராட்சியில் இருக்கும் 13 திமுக கவுன்சிலர்களில் மெஜாரிட்டி கவுன்சிலர்கள் அழகிரி ஆதரவாளர்கள்தான். இவர்கள் அதிமுகவுக்கு எதிராக மாநகராட்சியில் பேசுகின்ற விஷயங்கள் எதுவும் கலைஞர் டிவியில் காட்ட மாட்டார்கள். 

சமீபத்தில் மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு எதிராக காரசாரமாக பேசியதை ஒலிபரப்பினார்கள். இதன் மூலம், 'அண்ணனுக்கு தலைமையில் இன்னும் செல்வாக்கு இருக்கிறது. விரைவில் அவர் கட்சிப்பணி ஆற்ற வருவார்' என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

அனைத்து நாளிதழ்கள், வார இதழ்கள் வாசிப்பது, டிவியில் பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பார்ப்பது என்று அவருடைய அன்றாட பொழுது கழிந்துகொண்டிருக்கிறது.
 
''உங்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு என்ன சார்... பேட்டி வேண்டும்!'' என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினோம்.
உடனே லைனில் வந்தார் அழகிரி, ''இப்போதைக்கு நான் எதுவும் பேச விரும்பவில்லை. தேவைப்பட்டால் நானே கூப்பிடுகிறேன் '' என்று நம்மை ஆச்சரியப்படுத்தினார்.

அழகிரி பேசினாலும் மேட்டர்... பேசாவிட்டாலும் மேட்டர்!


No comments:

Post a Comment